Thursday 21 June 2012

கதை போல ஒன்று - 4அ

எங்க ஊர்ல தட்டான் பூச்சியை , புட்டான் என்றுதான் சொல்லுவோம்.

புட்டானில் எனக்கு தெரிந்த புட்டான் மூன்று.

கேள்விபட்ட புட்டான் ஒன்று.

தெரிந்த புட்டான் மூன்று வருமாறு ...

- ஊசிப்புட்டான்

- அப்புறம் விரலில் பாதி இருக்கும்
பச்சை புட்டான்.

- அப்புறம் கையை விரித்தால் அதில் முக்கால் வாசி இருக்கும் நீலப்புட்டான்.

கேள்வி பட்ட புட்டான் பெயர் “ மலையங்கோப்ளஸ்”.

அது பற்றி பல வியப்புகள் விவரணங்கள் உண்டு. ஒரு சிறிய பட்டம் அளவுக்கு பெரிய “ மலையங்கோப்ளஸ்” உண்டு என்பது போன்ற பீலாக்களூக்கு அளவே இல்லை.

ஊசிபுட்டான் சத்தில்லாத புட்டானாம், அதனால் அதை விட்டு விடுவோம்.(அதை பார்க்கவும் முடியாது லேசில்).

நீல புட்டானை பிடிக்கவே முடியாது.

இதில் ரொம்ப பாவம் விரலில் பாதி சைஸ் இருக்கும் பச்சை புட்டாந்தான்.

காலை அல்லது மாலையில்தான் அது நிறைய வரும்.

எதாவது குத்து செடியில் உட்காரும் புட்டான்களின் பின் பவ்யமாக ஒற்றை கையை பாம்பு படம் போல சாய்வாய் குவித்து, ஒரே வீச்சாய் வீச வேண்டும்.கைக்குள் குறுகுறுவென்று கிச்சலம் காட்டி கிடைக்கும் புட்டானை துளையிட்ட அட்டைபாக்ஸில் போட்டு வைத்து கொள்வோம்.

ஒரு அரை டஜன் புட்டானாவது சேர்ந்த பிறகு நானும் நண்பனும், ஆளுக்கு மூன்று மூன்று புட்டானாய் பிரித்து கொள்வோம்.

பின்னர் ”குண்டுபின்” இருக்கிறதல்லவா ? அதை எடுத்து புட்டானின் உடம்பில் நறுக்கென்று சதை பகுதியில் சொருகி, காற்றில் பறக்க விடுவோம்.

வலி கொடுத்த அலைகழிப்பிலும் , வேதனையிலும் புட்டான் ராக்கெட் மாதிரி மேலே போகும்.

போய் சர்ரென்று கீழே விழும். யார் புட்டான் அதிகம் மேலே போகிறது என்று போட்டி.

இப்போது நினைத்தால் புட்டானின் வலியை துல்லியமாக உணர முடிகிறது. அந்த “நறுக்” கை நினைத்தால் உடல் கூசுகிறது.

ஓருநாள் என் இரண்டு வயது பெண்ணுக்கு காற்று இருக்கும் பாலத்தீன் ”கதா ஆயுதம்” வாங்கி கொடுத்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து அவள் சத்தமே காணோமே என்று பார்த்தால், வராண்டாவில் கறுப்பு நிற சிறிய கடிக்காத (நாங்கள் அதை பிள்ளையார் எறும்பு என்போம்) எறும்புகளை தன் கதா ஆயுதத்தால் அடித்து அடித்து கொன்று கொண்டிருந்தாள்.

முகம் பல்பாக ஒளிர்ந்தது அவளுக்கு, எறும்புகளை கொல்லும் போது.

No comments:

Post a Comment