Saturday 22 November 2014

கடவுளும் பலூனும் ...

கடவுள் பலூனை என் கையில் கொடுத்தார்.
”ஊதி, நூலால் கட்டி வை!.பார்க்க அழகாக இருக்கும்.நின்று நிதானமாக ரசி!” என்றார்.
நான் ஊதினேன்.
சமூகம் சொன்னது “இந்த பலூனை எவ்வளவு பெரியதாக ஊதுகிறாயோ அவ்வளவு அழகாக இருக்கும்.அதை ஆனந்தமாக ரசிக்கலாம்” என்றது.
நான் வெறித்தனமாக அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து ஊதினேன்.பலூன் பெரிதாய்ப் போய்க் கொண்டிருந்தது.
”ஆஹா அவன் எவ்வளவு அழகா ஊதுறான் பாரு” என்றார்கள் . இன்னும் ஊதினேன்.இன்னும் ஊதினேன்.
தன்னம்பிக்கை வகுப்பெடுப்பவர் சொன்னார்” இன்னும் ஊதலாம்” என்று. இன்னும் ஊதினேன்.
வித்தியாசமாக எதையாவது செய்து பலூனைப் பெரிதாக்க நினைத்தேன்.
நானே பலூனுக்குள் புகுந்து, ஆம்! பலூனுள் புகுந்து ஊதினேன்.
பெரிதாக பெரிதாக கர்வம் வந்தது.
என் பலூன் பெரியது என்று தம்பட்டம் அடிக்க வேண்டும் போல இருந்தது.
இதையெல்லாம் தாண்டி கடவுள் சொன்னது ஞாபகம் வந்தது “பார்க்க அழகாக இருக்கும்” நான் பார்க்க வேண்டும்.என் அழகிய வண்ண பலூனைப் பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன்.
பலூனை விட்டு வெளியேறப்போனேன்.வாசலை அடைத்த அடைப்பே நான்தான் ஆனதால், அசைந்தால் பலூன் காற்று வெளியேப் போனது.பதற்றமாக மறுபடியும் உடலால் பலூன் வாசலை அடைத்தேன்.
மாட்டிக்கொண்டேன்.வெளியேப் போக முடியாது.
போனால் பலூனில் ஒரு துளிக் காற்றுக்கூட இருக்காது.,”காற்றில்லா பலூன்காரன்” என்று காறித்துப்புவர்கள்.
இப்போது என்ன செய்ய? என்ன செய்ய? வேறு வழியே இல்லை. என் பெரிய பலூனை, நான் பார்த்து ரசித்து அனுபவிக்க முடியாத பலூனை அப்படியே வாசல் பக்கம் நின்று அடைத்து காற்றைப் பிடித்துக் கொண்டேன்.என்னால் அதை தள்ளி நின்று பார்க்கமுடியாத நிலை.
பலூன் வழியே வெளியே உலகம் தெரிந்தது.
அங்கே பலர் அளவாக ஊதி பல வண்ண பலூன்களை ரசித்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது ஏதோ தவறு செய்துவிட்டேன் என்று தோன்றியது.
ஆழ்மனத் தோன்றலை வேக வேகமாக வெளிமனது மணலிட்டு மறைத்தது.
நான் ஆவேசமாக “என்னால விளையாட முடியாமப் போகலாம், பார்த்து ரசிக்கமுடியாமல் போகலாம்.ஆனால்என்னுடைய பலூன்தான் ரொம்ப்ப் பெரிசு” என்று கத்துவதைக் கேட்காமல் அவரவர வேலையை செய்து கொண்டிருந்தனர்.
சலிப்பில் இந்த்ப் பக்கம் திரும்பினேன்.
அங்கே புதிதாய் வந்த பலர்ஆர்வத்துடன் ,
கடவுளிடமிருந்து பலூன் வாங்கி ஊதிக்கொண்டிருந்தனர்.

ஃபேஸ்புக் நன்மைகள்...

ஃபேஸ்புக்கின் பெரிய அட்வாண்டேஜில் சில...
1.அழகானவர்களிடம் பழக முடிகிறது.
அதிலும் அழகான எதிர்பாலினர்.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் அவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போதோ, மார்க்கெட்டிலோ நட்பாக சிரிக்கக் கூட முடியாது.அவர்களுடைய அழகைப் பார்த்தே நமக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
அதுவும் இந்தியப் பெண்கள் போன்ற ’சுருள்குணம்’ கொண்டவர்களிடம் எளிதில் பேசிவிட முடியாது.
நம் நாட்டில் பார்ட்டி போன்ற கலாச்சாரங்களும் கிடையாது. ஃபேஸ்புக்கால் மட்டுமே இந்த பழக்கம் சாத்தியமாகிறது.
2.பணக்காரர்களிடம் பழக முடிகிறது.
பெரிய பெரிய பங்களா வைத்திருப்பவர்கள், இரண்டு மூன்று கார்கள் வைத்திருப்பவர்கள், விளையாட்டு சாமான் போல இரண்டு முன்று ஸ்கூட்டிகளை வீட்டின் கொல்லைப் பக்கம் கட்டிவைத்திருப்பவர்கள்.
அமெரிக்கா அடிக்கடி சென்று வருபவர்கள்.
மூன்று கிரவுண்ட் நிலத்தில் வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள்,
சரவணா ஸ்டோர்ஸில் அரைக்கிலோ தங்கம் அட் எ டைம் வாங்குபவர்கள் போன்றவர்களிடம்,
என்னை போன்ற லோடு சைக்கிளை உருட்டிச் சென்று ”மூன்று ரூவாய்க்கு பச்சைமிளகாய் கொடுங்க” என்று கேட்கும் சாமான்யர்களால் பழக முடிகிறது.
அட! இவ்வளவு பணமிருந்தும் சாதரணமாத்தானே பழகுறான்கள் என்று கண்டுகொள்ள உதவி செய்த இடம் ஃபேஸ்புக்.
3.அந்தஸ்தானவர்களிடம் பழக முடிகிறது.
பெரிய அரசியல்வாதிகள், ஊடக மொதலாளிகள்,
அறிவின் உச்சத்தைக் கொண்டுள்ள, உலகில் எல்லாம் தெரிந்த வக்கீல்கள்,
தவறே செய்யாத கடவுளுக்கு அடுத்தபடியாக நாமெல்லோரும் கட்டாயம் கும்பிடும் பெரிய பெரிய டாக்டர்கள்,
போலீஸ் அதிகாரிகள்,
பெரிய பெரிய வியாபாரிகள் போன்றவர்களிடம் பேஸ்புக்கின் உதவியால் எளிதாக பழக முடிகிறது.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் ஒரு வக்கீலிடமோ அல்லது டாக்டரிடமோ பேச முடியுமா? அவர்கள் பேச வந்தால் நாமே தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கி விடுவோம்தானே.
4.அறிவாளிகளுடன் பேச முடிகிறது. பழக முடிகிறது.
எழுத்தாளர்கள் சமுதாயச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற எண்ணத்தை தகர்த்த இடம் ஃபேஸ்புக்.
“அட ! இவர்களும் நம்மை போல ஆட்கள்தான்” என்று எல்லொரும் தெரிந்து கொண்டு பழக ஆரம்பித்தோம் ஃபேஸ்புக்கின் உதவியால்.
பல இடங்களில் அவர்களை விட நாம் அறிவாளிகள் என்பதைக் கண்டு கொண்ட இடமும் ஃபேஸ்புக்தான்.
இப்படி ஃபேஸ்புக் உண்மையான சமத்துவத்தை நமக்கெல்லாம் காட்டி அடக்கமாக நம்மை மகிழ்விக்கிறது.
வாழ்க ஃபேஸ்புக் 

இலக்கியம் தாண்டுதல்...

நிச்சயமாக எழுத்தாளர்களில் படைப்புகளில் அடுக்குகள் உண்டுதான்.
ராஜேஷ்குமார், அனுராத ரமணன்,பாலகுமாரன், தி.ஜா, சு.ரா, பிரமிள் என்பது மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடுக்கு இருக்கும்.
இதில் சில எழுத்தாளர்களை கடந்து செல்லலாம், ஆனால் தாண்டக் கூடாது.அது பேரிழப்பை கொடுத்து விடும் (இலக்கியத் தன்மை அளவில்).
ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் ஒருவன் கடந்து போகலாம், அதாவது வாசித்து நன்கு தெரிந்து செரித்து பின் கடந்து விடலாம். ஆனால் வாசிக்காமலேயே தாண்டுவது என்பது வாசகனுக்குத்தான் இழப்பு.
அந்த இரு இதிகாசத்தைத்தில் இருக்கும் இலக்கியத் தன்மையால் அதை அப்படி தாண்டமுடியாதது என்கிறோம்.
ஆனால் கவனியுங்கள் கடந்துவிடலாம்.அதையே வாசித்துக் கிடக்கத் தேவையில்லை.
பொன்னியின் செல்வனும்,சிவகாமியின் சபதுமும் அப்படித்தான். மொழிநடையும் கதை சொல்லும் விதமும் அற்புதமானவை.அதை நிச்சயமாக தாண்டக் கூடாது.ஆனால் வாசித்துக் கடந்து சென்று விடலாம்.
இப்போது ஆனந்தவிகடனில் ப்ரியாதம்பி பல்வேறு பெண்களின் நிலையை தெளிவுற எழுதுவதாக நினைக்கிறோம்.
ஆனால் பாலகுமாரன் இதையெல்லாம் எப்போதோ அழகாக எழுதி விட்டார்.
”கைவீசம்மா கைவீசு” நாவலில் வரும் ஆசிரியை கிளைமேக்ஸில் பேசும் வசனத்தை விடவா ஒரு பெண்ணியக் குரலை ஆவேசமாக பேச முடியும்.நிச்சயமாக பாலகுமாரனைக் கடக்கலாம்.ஆனால் தாண்டக்கூடாது.
சில இலக்கியங்களை கடக்கலாம். தாண்டக் கூடாது....

அடுத்தவர் மனதை பாதிக்கும்...

வீட்டுக்கு வந்தால் கசகசவென்றிருந்தது.
சவரம் செய்யலாமே, என்று செய்து கொண்டிருக்கும் போது மீசை வெட்டும் கத்திரிக்கோல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். தேடினால் கிடைக்கவில்லை.
உள் அறையில் அம்மாவும் பொண்ணும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு, கற்றுக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.
துரிதமாக செயல்பட்டேன்.
சமைலறைக்கு வந்து பால் வெட்டும் கத்திரியை எடுத்து வேக வேகமாக மீசையை ட்ரிம் செய்தேன்.
அதன் பிறகு அதை நன்றாக கழுவினேன்.அதன் பின் அதன் மேல் லிக்விட் டெட்டால் போட்டுக் கழுவினேன்.
அதன் பின் அடுப்பில் குளியலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் முக்கி எடுத்து, மறுபடி அதை டிஸ்யூ பேப்பரில் துடைத்து அதே இடத்தில் வைத்து விட்டேன்.
ஷெர்லாக் ஹோம்ஸ் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது.
சிறுவயதில் அம்மா குத்துவிளக்கு பொருத்துவார்.
விளக்கை நாம்தான் நிறைவேற்ற வேண்டும்.அதுவாகவே நிறைவேறினால்( அணைந்தால்) அது அபசகுனம் என்பது அம்மாவின் நம்பிக்கை.
சில சமயம் மறதியால் அதுவாகவே நிறைவேறியிருக்கும்.
அப்போது அம்மா பதட்டமாக வருவார்” விளக்கு அதுவா நிறைவேறிட்டோ” என்பார்.
நான் முந்திக் கொண்டு “இல்லமா நான்தான் இப்பத்தான் நிறைவேத்தினேன்” என்று சொல்வேன்.
என்ன சொல்லவருகிறேன் என்றால் சில விசயங்களை அந்த இடத்திலேயே தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும்.
அதுவும் அடுத்தவர் மனதை பாதிக்கும் சின்ன சின்ன விசயங்களை அப்படியே மறைத்துவிடுதல் ரொம்ப நல்லது.

இரண்டு வருடங்கள் பார்க்க முடியாது...

யாரையாவது பிரிந்து போகவேண்டும் என்ற நிலைமையைக் கண்டு அளவுக்கு அதிகமாக அஞ்சுவேன்.
சிறுவயதில்,முழுவருடப் பரீட்சைக்கு அக்கா தம்பி தங்கைகள் முறைப்பெண்கள் என்று திருச்செந்தூர் ஆச்சி வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அவரவர் ஊருக்கு திரும்பும் போது என் கண்களில் கண்ணீர் நிறையும்.அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.அரைமணி நேரம் முன்பு சிரித்து விளையாண்ட அறையில் இருந்து ”ஹூம்கூம்” என்றொரு வெறுமைச் சத்தம் கேட்டது மாதிரி இருக்கும்.
புத்தகங்கள் மூலம் மட்டுமே இது மாதிரி செண்டிமெண்ட் உணர்வுகளிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.அல்லது வந்தது மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஹைதிராபாத்திலிருக்கும் போது பக்கத்து வீட்டின் ஆண் வெளிநாடு போவதான செய்தியை நான் கேட்டேன்.அவர் மட்டும்தான்.குடும்பம் இங்கே இருக்கும்.அந்தப் பிரிவே என்னை டிஸ்டர்ப் செய்தது.அந்தப் பெண்ணைப்(அவர் மனைவி) பார்க்கும் போதெல்லாம் பேசும் போதெல்லாம் பிரிவை தாங்குவது எப்படி? என்ற அட்வைஸை மறைமுகமாகவோ நேரடியாக வழங்க ஆரம்பித்தேன்.
“அது அங்கப் போய் முதல் போன அவர் போட்டு பேசினதும் நார்மலாகிரும்”
“அதான் ஸ்கைப் இருக்கில்ல.முகத்தையேப் பாத்து பேசலாமே”
அதன் பிறகு என் மனைவி என் ஆர்வத்தை மென்மையாக சுட்டிக்காட்டியப் பிறகு வெட்கம் கொண்டேன். ஏனென்றால் இரண்டு பேர் பிரிகிறார்கள் என்றால் அதுபற்றி யோசித்து யோசித்து சோர்ந்து போய்விடுவேன்.
குவைத்திலிருந்து இந்தியா திரும்பும் போது என் லேப்டாப்பை சீட்டில் வைத்து விட்டு விமானத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன்.ஒருவர் வேகமாக ஒடிவந்து எனக்கு அதைச் சுட்டினார்.அவருக்கு நன்றி சொல்லி, அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பிளம்பர்.குவைத்தில் வேலை பார்க்கிறார்.இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்குப் போவாராம். நான் நிஜமாவா சொல்றீங்க நிஜமாவா சொல்றீங்க என்று கேட்டேன்.ஆம் என்றார்.
போதுமே எனக்கு.. கவலை தொற்றிக் கொண்டது. இதோ இவர் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் ஊருக்குப் போகிறார்.
ம்னைவி குழந்தைகளைப் பார்த்து என்ன செய்வார்.அப்படியே குதித்துக் கட்டிக் கொள்வாரா.மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொள்வாரா.
இத்தனை காலம் குழந்தைதனத்தை ஒளித்து பொறுப்பாக குடும்பம் நடத்திய மனைவி கணவனைக் கண்டதும் “ஏங்க காலெல்லாம் ஒரே வலி.முதுகுல ஒரே வலி.இதப் பாருங்க இவன் மேலே விழுந்துட்டான்.விரல் கிழிஞ்சிட்டு. சரி நீங்க அங்க டென்சன் ஆகக்கூடாதுன்னு நா சொல்லல” என்றெல்லாம் கொஞ்சுவாரா?
இவர் ஊருக்கு சென்றதும் அவர்களுடைய முதல் கூடல் எப்படி இருக்கும்.ஆனந்தமாக மனவிடுதலையாக இருக்குமா? ஒரு புளியங்காயைக் கடிக்கும் கிளீச்சை இருவரும் மனதாலும் உடலாலும் உணர்வார்கள்தானே.பிரிவதும் சேர்வதும் பற்றி மனிதனின் ஐம்புலன்களும் மூளையும் கொள்ளும் உணர்வுகள்தான் வாழ்க்கையின் முதுகெலும்பா?
இப்படியெல்லாம் யோசிக்கும் போது, அந்த பிளம்பர் தன் லீவை முடித்து அடுத்த இரண்டு வருட சர்வீஸுக்கு கிளம்பும் நாளுக்கு முந்தைய நாளைப் பற்றிய சிந்தனை வந்தது.
அதைப் பற்றி யோசிப்பது அச்சம் தருவதாய் இருந்தது.அவர்களுக்குள் நடக்கும் அந்த இரவில் காமம் இருந்திருக்குமா? ஒரு துளி அளவுக்கு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் “இதுதான் என்னால் உனக்குக் கொடுக்க கூடிய பெஸ்ட்” என்ற அளவில் ஒருவரை ஒருவர் பகிர்ந்திருப்பார்கள். பரஸ்பரம் கொஞ்சி அழுதிருப்பார்களா? அந்தக் கண்ணீர் எல்லாம் கங்கை காவிரி மாதிரி புனித நதிகள் இல்லாமல் வேறென்ன?
மறுநாள் என்ன நடந்திருக்கும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்து நின்றிருப்பார்கள்.அப்புறம் கைகளை விட்டிருப்பார்கள். இனி அடுத்த ஸ்பரிசம் இரண்டு ஆண்டுகள் கழித்துதான்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட கணவனும்.
செல்களால் ஆன திசுக்களால் ஆன சதையையும் எலும்பையும் கொண்ட மனைவியும்.
அவர்களுக்குள் மாபெரும் வெளியை அனுமதித்து கலங்கி பிரிகிறார்கள்.
ஒவ்வொரு விநாடியும் உலகில் இது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது அல்லவா

உணர்வை கொல்லும் அறிவு...

சில பல இடங்களில் அறிவுத்தனம், நல்ல உணர்வுகளை கொன்று விடும் ? அதற்கு இரண்டு எக்சாம்பிள் கொடுக்க விரும்புகிறேன்
உதாரணம் ஒன்று :
அம்மா சில விடுமுறை தினங்களில் நன்றாக சமைத்திருப்பார்.எல்லோரும் வீட்டில் இருக்கும் போது நல்ல சுவையான உணவை கொடுத்து விட வேண்டும் என்ற அன்பு அதில் இருக்கும்.
அதற்காக மெனக்கெட்டிருப்பார்.முந்தின நாளே திட்டமிட்டிருப்பார்.
ஒவ்வொரு உணவிற்கும் உப்பை போடும் போது பார்த்து போட்டிருப்பார்.காய்கறிகளை சரியான அளவில் வெட்டியிருப்பார்.
வடை பொரித்திருப்பார்.பொரிக்கும் போது ஒன்றிரண்டு எண்ணெய் துளிகள் முகத்தில் தெறித்திருக்கிலாம்.இல்லை வயிற்றில் பட்டு எரிச்சலை கொடுத்திருக்கலாம்.இருந்தாலும் நல்ல உணவு செய்யவேண்டும் என்ற ஆவேசத்தில் செய்வார்கள் இல்லையா? அப்படி செய்திருப்பார்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்தாயிற்று.
நாங்கள் எல்லோரும் உட்கார்ந்திருப்போம்.அம்மா பரிமாற ரெடியாக இருப்பார்.பிள்ளைகள் தான் சமைத்த உணவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,கணவர் சமையலை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையாயிருப்பார்.
ஆனால் அங்குதான் எங்கள் அறிவு வேலை செய்யும்.
சோற்றை தட்டில் போட்டும் போடாதுமாக நான் ஆரம்பிப்பேன் “யப்பா வாஜ்பாயிக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.நீங்க அதுக்கு சப்போர்ட்டா”.
உடனே அப்பா “என்னயிருந்தாலும் அவங்களுக்கு மதவெறி உண்டு.வெளிய அமைதியா காட்டிப்பாங்க.அத பாத்து ஏமாறக் கூடாது” என்பார்.
உடனே நான் அண்ண்ன்கள் தம்பி எல்லோரும் ஒரு கட்சியிலும், அப்பா இன்னொரு கட்சியுமாக பிரிந்து ஆர்கியூ செய்வோம்.மிகக் கடுமையாக சாப்பிட சாப்பிட கத்திக் கொண்டே இருப்போம்.நானெல்லாம் கையை காலை நீட்டி ஒரு மாதிரி ஒநாய் மாதிரி கூவி கத்தினா மாதிரி உரக்க பேசுவேன்.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா “சாப்பாடு எப்படியிருக்கு? ருசியாயிருக்கா?. நல்லாயிருக்கா,நல்லாயிருக்கா?,உருளைக்கிழங்கு கரெக்டா உப்பு பிடிச்சிருக்கா?பருப்பு குழம்புல புளி கரெக்டா சேர்த்திருக்கேனா? இப்படி பல கேள்விகளை கேட்டு,அதை நாங்கள் சுத்தமாக கண்டு கொள்ளாமல் அரசியலையே பேசி பேசி கத்திக் கொண்டிருப்பதை வெறுமே கேட்டுக் கொண்டியிருப்பார்.
காலையிலிருந்து கஸ்டப்பட்டு உணவு சமைத்திருக்கிறார்.அது பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல் அறிவை வளர்க்கிறோம் என்று அரசியல் பேசிக்கிடப்பது உணர்வைக் கொல்லுதல்தானே...
உதாரணம் இரண்டு :
அமெரிக்காவில் நானும் ஒரு நண்பர் ஒன்றும் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம்.ஒரு மாதம் பிறகு இன்னும் இரு நண்பர்கள் பக்கத்து வீட்டில் தங்கினர் (எங்கள் கம்பெனிதான்).
அவர்கள் இருவரும் அப்போதுதான் குடும்பத்தை விட்டு வந்ததவர்களாகையால் கொஞ்சம் கலக்கமாக இருந்தனர்.ஒருநாள் அவர்களே விருந்தொன்று தயார் செய்து எங்களை அழைத்தார்கள்.நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு இசை கேட்டுக்கொண்ட்டே அரட்டை அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
அதில் புதிய நண்பருக்கு அவருடைய ஐந்து வயது மகளைப் பற்றிய ஊர் நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆசை.அவர் அதைப் பற்றி பேச நினைக்கிறார்.ஆனால் அவர் ஒருவரியை பேசும் போது ”நண்பர் ஒன்று” தன் அறிவால் இடமறிக்கிறார்.
இப்படியாக
“லைஃப்ஃபே அப்படித்தான் பாஸ்.போகும் போது ஒண்ணுமே கொண்டு போகப்போறதில்ல”
“குடும்பத்த பிரியறது கஸ்டம்தான்.நம்ம அறிவ யூஸ் செய்யனும் பாஸு..கொஞ்சம் யோசிக்கனும்.
“ஒருநாளைக்கு எவ்வளோ அலவன்ஸ் கொடுக்கிறாங்க.அதெல்லாம் இப்படி செண்டிமெண்ட் பாத்தா முடியுமா”
இரண்டாம் நண்பர் தன் மகளைப் பற்றிய நினைவுகளை ஆர்வத்தோடும் அக்கறையோடும் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவரும் போது, முதலாம் நண்பர் எதார்த்தமாக பேசி உணர்வுகளை கொல்லுகிறார் பாருங்கள்.
அந்த இடத்தில் தன் மகளைப் பற்றி சொல்ல விருப்பப்படும் நணபர் பேசும் போது குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டல்லவா இருக்க வேண்டும்.தன் மகள் மேல் எவ்வளவு பாசம் இருந்தால் அவர் பொதுவாக எல்லோரும் கூடும் ஒரு பார்ட்டியில் இவ்வளவு செண்டிமெண்டாக வெட்கத்தை விட்டு உருகி திரும்ப திரும்ப அது பற்றியே மனம் விட்டு பேச முன்வருவார்.
இந்த இடத்தில் ”நண்பர் ஒன்று “ செய்ததும் உணர்வை கொல்லுதல்தானே.
கடைசியாக நாம எப்போ இது மாதிரி அறிவ வெச்சி அடுத்தவங்க கொன்னிருக்கோம்ன்னு நினைச்சா,
இதோ இரண்டு நிமிசத்துக்கு முன்னாடி அப்படிங்கிற பதில்தானே கிடைக்கும்

Push Pull கதவு..

எந்த கதவில்
Push Pull எழுத்துக்களைப் பார்த்தாலும்
பதட்டம் வந்துவிடுகிறது.
இன்னும் ஒரு விநாடியில்
நான் என்ன செய்ய வேண்டும்.
இழுக்க வேண்டுமா?
தள்ள வேண்டுமா?
முடிவெடுக்க சிந்திக்கையில்
கதவு என் முகத்தருகே வந்து ”ஹலோ” என்கிறது.

விருது...

இங்கே
விருதின் மூலம் தனிநபரை அடையாளப்படுத்தும் அங்கீகரப்படுத்தும் டிரண்டெல்லாம் போய்,
”பிரபல தனிநபர்களுக்கு” கொடுப்பது மூலம் விருதுகள் அடையாளம் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் டிரெண்ட் நிலவுகிறது,
சொன்னால் ”ஜெலுசில் குடி” என்பான்கள் சொக்கன்கள்

சாப்பாட்டுக் கடை

என்னுடைய ”கனவு ஹோட்டலில்” என்ன செய்வேன் என்றால்...
1.மதியம் சாப்பாடு, காலை இட்லி, தோசை மட்டும்தான் கிடைக்கும்.
2.இட்லி தோசையில் வெரைட்டி எல்லாம் கிடையாது.இட்லியும் சாதா தோசை மட்டும்தான்.
3.ஒவ்வொரு உணவின் செய்முறையும் விளக்கமாக ஒரு புத்தகத்தில் அச்சிட்டப்பட்டிருக்கும்.அளவு முதல் கொண்டு அதில் இருக்கும். ஐநூறு சாப்பாட்டுக்கான மீல்ஸுக்கு எவ்வளவு சாம்பார் தேவைப்படுகிறதோ, அந்த அளவு. அப்புறம் இவ்வளவு துவரம் பருப்பு. இவ்வளவு கிலோ இன்ன இன்ன காய்கறிகள் என்று அதில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.
4.உணவின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருப்பதால், அந்த அடிப்படையில் தினமும் மீல்ஸின் விலை ஏறி இறங்கும்.ஒரே விலைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் என் ரெஸ்தாரந்துக்கு வரத்தேவையில்லை.
5.ஆயிரம் இட்லி என்றால் அவ்வளவுதான்.அதற்கு மேல் ஒரு இட்லி கூட அவிக்க மாட்டேன்.
6.எக்ஸ்டிரா மாவு வந்தால் அதை அடுத்தநாள் குளிரூட்டி உபயோகிக்க மாட்டேன்.அந்த இட்லி தோசை மாவுகள் அன்றன்று அழிக்கப்படும்.அந்தத் தகவலை போர்டில் எழுதி போடு பார்வைக்கு வைப்பேன்.அதற்கான செலவு இட்லி விலையில் ஏற்றப்படும்.
7.காய்கறி விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மாற்றிப் போடுவதில்லை.ஒரே ரெசிப்பிதான்.அந்த விலையும் விலையில் ஏறும்.
8.உணவை வீணாக்கினால் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம்.அதில் அவருக்கு அட்வைஸ் இருக்கும் 
9.ஊறுகாய்கள் மிஞ்சியது அழிக்கப்படும்.தயிரின் தரம் பலமுறை சோதிக்கப்படும்
10.மொத்ததுல உணவோட தரம் மாறாமல் இருக்கும். விலை மாறும்.

என்னைப் புகழுங்கள்...

”என்னைப் புகழுங்கள்” என்றான்.
”புகழும் அளவுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லையா” என்று கெஞ்சினான்.
”ஒரு வார்த்தை என்னை அங்கீகரித்தால் என் மனம் மகிழ்ச்சியடையுமே” என்றான்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.”உன்னைப் புகழக்கூடாதென்றில்லை.எங்கள் மனதில் காழ்ப்பில்லை.எரிச்சல் இல்லை.இதோ நாங்கள் வாய் நிறைய சுவீங்கம் சவைத்துக் கொண்டிருக்கிறோம் எப்படி புகழ்ந்து பேசுவது” என்றோம்.
“அப்படியானால் புகழ்ந்து எழுதலாமில்லையா” என்றான் அவன்.
“நாங்கள் எங்கள் தொடைகளை வறட் வறட் என்று சொறிந்து கொண்டிருக்கிறோம்.எப்படி எழுதுவது” என்றோம்.
அவன் எங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் அந்த சூவிங்கம் சவைக்கும் ஒசையிலேயே எங்களை மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டோம்.
தொடையைச் சொரியும் சத்ததிலேயே எங்களை பரஸ்பரம் புகழ்ந்து கொண்டோம்.
ஒருவருக்கொருவர் வண்ணப் புகைப்படங்கள் பரிமாறி புகழ்ந்து கொண்டோம்.
அவன் எங்களையே வெறித்து கொண்டிருந்தான்.
அவனிடம் தவறாமல் நலம் விசாரித்து மட்டும் வைத்துக் கொண்டோம்.எங்காவது பார்த்தால் அப்படி ஒரு சிநேகப் புன்னகை அவனுக்கு கொடுப்போம்.
ஒருநாள் அவன் அடையாளத்துகாக புழுங்கி நசுங்கி கரைந்து இறந்துப் போனான்.
அவன் அங்கீகாரத்துக்காக அழுத கண்ணீர் கன்னம் ஒரமாய் வரைந்திருந்த கோலத்தின் கோலத்தை குறித்துக் கொண்டோம்.
”அய்யோ செத்தே போய்விட்டானா” என்று அழுதோம்.
மாலை மரியாதையுடன் தோண்டிய குழியில் புதைத்து விட்டு வந்தோம்.
கொஞ்ச தூரம் சென்றதும் மறுபடியும் வந்து சரியாய் புதைத்திருக்கிறோமா என்று காலால் மிதித்து சோதனை செய்து கொண்டோம்.
அதுவரை ஒற்றுமையாய் இருந்த நாங்கள் சூவிங்கத்தை துப்பி தொடை சொறியவதை விட்டு விட்டு,தத்தம் அறையைப் பூட்டிக் கொண்டு அவன் படைப்பையும், அவனையும் புகழ்ந்து நெகிழ்ச்சியானஅஞ்சலிக் கட்டுரைகள் எழுதினோம்.
திருப்தியாய் தூங்கப் போகும் போது இன்னொரு திறமைசாலி வந்து
”என்னைக் கொஞ்சம் அடையாளப்படுத்துங்களேன்” என்று காலில் விழுந்தான்.
நாங்கள் பாக்கெட்டில் இருந்து சூவிங்கம்மை வெளியே எடுத்து பிரித்தோம்.

பிரபலங்களின் நட்பழைப்பு...

பிரபலங்களிடமிருந்து நட்பு அழைப்பு எதாவது வந்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது.
நட்பாக சேர்ந்து இரண்டு நாட்களில் என் பதிவுகளைப் படித்து இவன் ஒரு திமிர் பிடித்தவன், லூசு, அரைகுறை, வாய்ச்சவுடால் என்றெல்லாம் புரிந்து கொள்வார்கள்.
பலர் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். ஆனால் சில பிரபலங்கள் அன்பிரண்டு செய்துவிடுவார்கள்.இப்போது எனக்கு தர்மச்சங்கடமாயிருக்கும்.எங்காவது நேரில் அவர்களைப் பார்த்தால் பேசனுமா?பேசக்கூடாதா?சிரிக்கனுமா?சிரிக்கக்கூடாதா?
ஒரு பிரபல புத்தகக்கடைக்கார கவிஞர் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டார்.காரணமே இப்போது வரைக்கும் எனக்குத் தெரியாது.இத்தனைக்கும் யாருக்குமே லைக் போடாத நான் அவர் சுவருக்கு சென்று பொறுப்பாக லைக் போட்டு வருவேன்.காரணம் புத்தகக் கடை வைத்திருப்பவர்களை எல்லாம் நான் எடுத்தெறியவே மாட்டேன்.குறுக்க நெடுக்க பார்த்தே ஆகவேண்டும் அவர்களை.
இன்னொரு சினிமா ஆர்வலர்,சினிமா விமர்சகர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்.ஆனால் நல்லவர்.அவரும் அப்படியே அழைப்பு விடுத்தார்.அதன் பின் அன்பிரண்டு செய்துவிட்டார்.சென்னையில் தன் சொந்த ஆர்வத்தில் நிறைய மாற்றுத் திரைப்படங்கள் திரையிடுகிறார்.எனக்கு அங்கெல்லாம் சென்று அதைக் காண ஆசை.ஆனால் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டாரே.அதன் பின் எப்படி அவர் திரையிடலுக்குப் போக.
இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் யாருமே நட்பு வட்டத்தில் இல்லாமல் போய்விடுவார்கள்.அதற்கு முதலிலேயே நட்பு அழைப்பை நிராகரித்து விடுவது.ஒருவேளை அவர்கள் காரணம் கேட்டால் (கேட்கமாட்டார்கள்) “தெரியலையே நீங்க கொடுத்தீங்களா? அப்படியா? கை தவறி அமுக்கிட்டேனா?” என்றெல்லாம் சொல்லி சமாளிப்பது என்று நினைத்திருக்கிறேன்.
என் மனம் சொல்லத்தான் செய்கிறது விநாயக முருகன், யுவகிருஷ்ணா போன்ற சிங்கங்கள் எல்லாம், பிரபலங்களை எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள்.எப்படி அன்பைப் பெறுகிறார்கள்.அது போல நடந்து கொள் என்று.
எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் கலை கைகூடவே மாட்டேன் என்கிறது...  

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல் ?

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல்
ஷேக்ஸ்பியர்,பெர்னாட் ஷா,ஜியார்ஜ் ஆர்வெல்,கபிலர்,திருவள்ளுவர்
போன்ற இலக்கியர்கள்
எப்படி பிரபலங்கள் ஆனார்கள்
என்பதுதான்
என் ஆழ்மனதில் துடித்துக் கொண்டிருக்கும்
நெடுநாளைய சந்தேகம்.

Gabriel's Horn

Graph என்பதை நான் என்றாவது ஃபீல் செய்திருக்கிறோமா?
Graph தெரியாதவர்களே கிடையாது.ஆனால் உணர்ந்திருக்கிறோமா என்பது முக்கியம்.
கணிதத்திலும் அறிவியலிலும் உணர்வு முக்கியம்.இந்தியர்களுக்கு இந்த உணர்வு குறைவு என்பது என் சொந்தக் கருத்து.
பள்ளி நாட்களில் நம் உணர்வை அறிவையை தூண்டி கிளர்ச்சி செய்யக் கூடிய பல அறிவின்பத்தை ஏனோ தானோ என்று படித்து கடந்து விடுகிறோம்தானே.
அது மாதிரி சக்கையாக படித்து வெளியே வரும் டாப்பிக்களில் முக்கியமானது Graph ஆகும்.
Graph ஐ ஒரு பள்ளிச் சிறுவன் ரசித்து புரிந்து உணர்ந்து செய்தால் நிச்சயம் அவனால் பிற்காலத்தில் தன் கணித அறிவியல் கற்பனைகளை விரிக்க முடியும்.
Graph ஐப் பார்ப்போம். Y=1/X என்ற சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இந்த சமன்பாட்டை Graph யின் துணையோடு வடிவமாக்க முடியும். உதாரணமாக
Y=1/X என்ற சமன்பாட்டில் எக்ஸ்க்கு ஒவ்வொரு மதிப்பாக கொடுத்து புள்ளி ஜோடிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
1.எக்ஸ்க்கு 1 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(1) = 1... அப்படியானால் X,Y = (1,1)
2. எக்ஸ்க்கு 2 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(2) = 0.5... அப்படியானால் X,Y = (2,0.5)
2. எக்ஸ்க்கு 3 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(3) = 0.333... அப்படியானால் X,Y = (3,0.333)
2. எக்ஸ்க்கு 4 என்ற மதிப்பைக் கொடுத்தால் வொய் என்னவாகும்... Y=1/(4) = 0.25... அப்படியானால் X,Y = (4,0.25)
நான்கு புள்ளி ஜோடிகளான (1,1) (2,0.5) (3,0.333) (4,0.25) கிராஃப் தாளில் குறிக்க வேண்டும்.
கிராஃப் ஷீட்டில் எக்ஸ் அச்சில் ஒன்று இரண்டு மூன்று நான்கிருக்கும். வொய் அச்சிலும் அப்படியே.
(1,1) என்பதை எப்படிக் குறிப்போம். வலது கை ஆட்காட்டி விரலை வைத்து எக்ஸ் அச்சில் உள்ள ஒன்றைத்(1) தொட வேண்டும். இடது கை ஆட்காட்டி விரலை வைத்து வொய் அச்சில் உள்ள ஒன்றைத்(1) தொட வேண்டும்.
இரண்டு வரல்களையும் தாளைதடவியபடி மேலே முன்னேற வேண்டும்.இரண்டும் வெட்டும் இடத்தில் (1,1) என்று குறிக்க வேண்டும். இப்படியே மிச்ச மூன்று புள்ளிகளையும் குறித்து அதை இணைத்து பார்த்தால் ஒரு வடிவம் கிடைக்கும்.
ஆக Y=1/X என்ற அல்ஜிப்ரா குறியீடை வடிவமாக மாற்றிவிட்டோம்.
இப்படி உலகில் எந்த சமன்பாட்டையும் வடிவமாக( இருப்பரிமாண, முப்பரிமாண) மாற்ற முடியும். அந்த வடிவத்தையும் சமன்பாடாக மாற்ற முடியும். இதைத்தான் Graph சிறுவயதில் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
இனி வருவது உபரித்தகவல்கள்...
1.இந்த Y=1/X என்பது ”தட்டையான நாதஸ்வரத்தை” (கவனிக்க ”தட்டையான”) நீளவாக்கில், பாதியாக வெட்டி வடிவத்தைக் கொடுக்கிறது. (புரஃபைல் போட்டோ பார்க்கவும்). ஆங்கிலத்தில் Trumphet வடிவம் என்கிறார்கள். நாதஸ்வரமா Trumpet என்று கேட்காதீர்கள்.


2.இந்த தட்டை நாதஸ்வரத்தை முப்பரிமாண வடிவமாக்கிக் அதன் பரப்பளவையும், கன அளவையும் அளந்து காட்டியவர் விஞ்ஞானி டாரிசெலி (Torricelli)
3.அப்படி அவர் பரப்பளவையும் கன அளவையும் கண்டுபிடிக்கும் போது சுவாரஸ்யமான முரண்பாட்டைக் கண்டார்.
4.நாதஸ்வரத்தின் பரப்பளவை தொகைநுண் கணிதம் (Integration) உதவியோடு கண்டுபிடிக்கும் போது அதன் பரப்பளவு (surface area) முடிவற்றதாக அளக்கமுடியாததாக வருகிறது ( infinity)
5.அதே நாதஸ்வரத்தின் கனஅளவை(volume) தொகைநுண் கணிதம் வழியாக கண்டுபிடிக்கும் போது அந்த கனஅளவு அளக்கக் கூடியதாக இருக்கிறது.
6.ஒரே பொருளின் பரப்பளவு அளக்கமுடியாத முடிவற்றதாகவும், ஆனால் அதன் கனஅளவு அளக்கக்கூடியதாகவும் ஆகும் போது அது சுவையான கணித முரண்பாடாக( Paradox) ஆகிவிடுகிறது. அந்த Paradox பெயர் Gabriel's Horn அல்லது Gabriel's Trumpet Paradox ஆகும்.
7.அதாவது அந்த நாதஸ்வரத்துக்கு பெயிண்ட் அடிக்க அடிக்க வந்து கொண்டே இருக்கும். முடிவே இருக்காது பரப்பளவுக்கு... ஆனால் உள்ளே நீரை ஊற்றினால் அதற்கு அளவு இருக்கும் 
8.அது யார் கேப்ரியல் என்று கேட்டால் பைபிளில் வரும் தேவ தூதர் ஆவார். நியாத்தீர்ப்பு நாளுக்கான எக்காளத்தை(Horn) ஊதுவதற்காக காத்திருப்பவர் (?) என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் தூதனாவார்.

ஆண்கள் தினம்...

போன ஜெனரேசனில் ”கற்பு” என்கிற விசயத்தை வைத்து பெண்களை அடிமையாக வைத்திருந்தோம்.
இப்போது அது செல்லுபடியாக வில்லை.
இந்த ஜெனரேசனுக்கு “தாய்மை” என்ற விசயம் இருக்கிறது.அதை வைத்து பெண்களை அடிமைகளாக தந்திரமாக வைத்திருக்கிறோம்.
ஆனால் அதையும் கடந்து விடுவார்கள் போலிருக்கிறதே.
நம் அடுத்த ஜெனரேசன் ஆண்கள் எதை வைத்து, எந்த போலி கற்பிதத்தை வைத்து பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பார்கள்.?
யோசித்தீர்களா ?
ஆண்களாகிய நாம் இந்த “ஆண்கள் தினத்தில்” இது பற்றி யோசித்து எதாவது முடிவெடுத்தே ஆகவேண்டும்.
அடுத்த ஜெனரேசன் கே.ஜி பாடத்திலும் Father is the head of the family என்றுதான் குழந்தைகள் வாசிக்க வேண்டும்...
வாருங்கள் ! ஒன்று கூடுவோம் ஆண்களே !