Wednesday 28 May 2014

முன்னுரை வந்தது வண்டியிலே...

முன்குறிப்பு:இதில் வரும் அனைத்து சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல...
அந்த வாசகர் எழுத்தாளரைக் காண காத்திருந்தார்.
கையில் உயர்ரக மதுபோத்தலை வேறு உயர்த்திப் பிடித்திருந்தார்.
எழுத்தாளர் மனசெல்லாம் நிறைந்து வாசகரை வரவேற்றார்.
பேசிய கொஞ்ச நேரத்திலேயே எழுத்தாளர் பண உதவி கேட்க,வாசகர் உடனே அதை சாங்சன் செய்ய,எழுத்தாளர் கண்ணீர்மல்குகிறார்.உடனே வாசகரும் உருகுகிறார் இப்படி,
“இதுல என்ன தல இருக்கு”
“அட போப்பா என்னை இந்த தமிழ் இலக்கிய உலகம் எப்படி புறக்கணிக்கிறதென்று உனக்கு தெரியாது.உன்னுடைய அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே”
“ஒண்ணும் வேண்டாம் தல”
“நோ வாசகா.எதாவது உனக்கு செய்யனும்.உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீ எனக்கு கொடுக்கிற காசு பணத்த அதவிட எனக்கு பிடிச்சிருக்கு.உன் ஆச என்ன சொல்லு”
“ஒண்ணுமே இல்ல தல”
“அட சொல்லுப்பா”
“அது வந்து ஒரு புக்கு எழுதி பப்ளிஷ் பண்ணனும்.அதுல நல்ல புகழ் அடையனும்.அதுக்கு நீங்க உதவி செஞ்சா வசதி”
“அட இவ்வளவுதான.வா தண்ணியடிக்கலாம்”
“தல புக்கு பத்தி”
“அட வாப்பா வாசகா கோப்பையை நிரப்பு.தண்ணியடிக்கலாம்”
வாசகன் கோப்பையை நிரப்ப, ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டனர்.
இரண்டு ரவுண்ட் போனதும்.
வாசகனுக்கு போன்.
கட் செய்தான் அதை.மறுபடியும் மறுபடியும் போன் அடிக்கிறது.எரிச்சலில் எடுக்க, மறுமுனையில் வாசகனின் மனைவி
“என்னங்க என்னங்க எனக்கு பயமாயிருக்கு”
“என்னாச்சும்மா.. எதாவது பிரச்சனையா”
“ஏதோ நடக்குதுங்க.நீங்க டேபிள்ள பேப்பரும் பேனாவும் வெச்சிருந்தீங்கல்ல.அதுல பேனா மட்டும் தன்னாலேயே பேப்பர்ல ஏதோ எழுதிகிட்டிருக்கு.பேய் பூதமா இருக்குமோ”
வாசகன் திடுக்கிட்டான்.எழுத்தாளனை பார்த்தான்.
எழுத்தாளர் ஆலிவ் காய்களை ஃபோர்க்கினால் குத்தி குத்தி தின்று கொண்டிருந்தார்.புன்னகைத்தார்.
“வாசகா உன் மனைவியை பயப்பட வேணான்னு சொல்லு.என்கிட்ட சேர்ந்தால் அது மாதிரிதான்.அங்கே ரெடியாகிக் கொண்டிருப்பது உன்னுடைய படைப்பு”
வாசகன் ஆசுவாசமாகி மனைவியை சமாதானப்படுத்தினான்.
“நீ பயப்படாத.எல்லாம் தலயோட திருவிளையாடல்.அந்த ’தன்னால எழுதிற பேனாவ’ தடுக்காத.அத அப்படியே எழுத விட்டுடு”
“சரிங்க நீங்க சொல்றபடியே கேக்குறேன்.ஆனா அந்த பொல்லாத பேனா ஒரு மாதிரி பின்னி பின்னி எழுதுதுங்க”
”அது பின்நவீனத்துவம் எழுதுது.அப்படித்தான் பின்னும் பயப்படாதம்மா “ என்று சொல்லி போனை வைத்தான்.
வாசகனுக்கு புல்லரித்தது.எழுத்தாளர் காலில் விழுந்து அழுதான்.
“ஐயா!உங்களுக்கு என்ன நன்றி சொல்வேன் ஐயா.உங்களோட ஐரோப்பிய பயண செலவ கூட நான் ஏத்துக்கிறேன் தல” என்றான்.
அப்போது வாசகனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.
தன்னை ஒரு அறிவு பிம்பமாக காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாகிவிட்ட பதிப்பக உரிமையாளரிடமிருந்து வந்தது.
“பாஸ் உங்க வீட்ல உங்க பேனா தனியா எழுதுறதா கேள்விப்பட்டேன்.கண்டிப்பா அத என் பதிப்பகத்துக்கு குடுத்திருங்க.நான் தான் அத பப்ளிஷ் பண்ணுவேன்.கொஞ்சம் செக்ஸ் அதிகமா இருக்கிறது மாதிரி உங்க பேனாகிட்ட சொல்லிருங்க.சரியா.பேனாவுக்கு காண்டம் போடக் கூடாதென்று குஷ்வந்த் சிங்கே சொல்லியிருக்கிறார்”
எஸ்.எம்.எஸ்ஸை பார்த்ததும் வாசகனுக்கு தலை சுற்றியது.
எழுத்தாளருக்கு பலமுறை நன்றி சொல்லி வீட்டுக்கு சென்றான்.
அங்கே வீட்டில் பேனா அந்த இருநூறு பக்க படைப்பை எழுதிமுடித்திருந்தது.வாசகனுக்கு திருப்தி.தன்னுடைய படைப்பு புத்தகமாவது பற்றி மிக்க மகிழ்ச்சி.
அப்போது காலிங் பெல் அடிக்க,கதவை திறந்தான்.
தெருவில் ஒரு மீன்பாடி வண்டி நின்றிருந்தது. அதை பெரிய டார்ப்பாயைப் போட்டு மூடியிருந்தார்கள்.
வண்டியின் சொந்தக்காரர் வந்து வாசகனிடம் சொன்னார்.
“உங்க படைப்பு முடிஞ்சதா.என்ன எழுத்தாளர் அனுப்பி வெச்சார்”
“முடிஞ்சது ப்ரோ.என்ன விசயம்”
“நீங்க ரெண்டு பேரும் தண்ணியடிக்கும் போதே எழுத்தாளர் ரூம்ல அவர் பேனா தன்னாக்குல எழுதுன முன்னுரையாம் இது.இத உங்க படைப்புக்கு முன்னாடி போட்டுக்கச் சொன்னார்.
வாசகன் உணர்ச்சிப் பெருக்கால் தேம்பி தேம்பி அழுதான்.
“எழுத்தாளருக்கு நன்றி சொன்னதா சொல்லுங்க,எங்க அவரு எழுதின முன்னுரைய பார்ப்போம்”
“இருங்க” என்று சொல்லி மீன்பாடி வண்டிக்காரர் டார்ப்பாயை நீக்கினார்.
கிட்டத்தட்ட ஒரு டன் அளவிற்கான பின் நவீனத்துவ முன்னுரை அந்த வண்டியில் வாசகனைப் பார்த்து சிரித்தது.
வாசகன் மயங்கி விழுந்தான் 

Sunday 18 May 2014

வெஸ்டர்ன் பிலாஸபி...

அன்று நான் Pascal's wagers என்ற எளிய லாஜிக் ஒன்றை எழுதியிருந்தேன். அதை எளிதாக விளக்க பாஸ்கல் குறிப்பிட்ட அதே கடவுள் நம்பிக்கை உதாரணத்தையே கொடுத்திருந்தேன்.
நண்பர்கள் அந்த லாஜிக்கை விட்டுவிட்டு, உதாரணத்தை எடுத்துக் கொண்டு,கடவுள் நம்பிக்கை,கடவுள் நம்பிக்கை சார்ந்த தத்துவங்கள் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.நான் யாருடைய அறிவையும் குறைத்து எடை போடவில்லை.ஆனால் நாம் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்ல வருகிறேன்.
நமக்கு வெஸ்டர்ன் பிலாசபி என்ற தத்துவம் பற்றிய ஆர்வமே கிடையாது.
எப்படி ஆங்கிலத்தைப் பேச ஏ,பி,சி,டி படிக்க வேண்டுமோ,அது போல தத்துவம் பேச,விவாதிக்க ஒரு அடிப்படை அறிவு வேண்டும்.அந்த அடிப்படை அறிவே நமக்கு இல்லை.எதாவது ஒன்றைச் சொன்னால் இதைத்தான் நம் முன்னோர்கள் எல்லாமே பரம்பொருள் என்று சொல்லிவைத்தார்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிப் போய்விடுகிறோம்.
அது நம் வாழ்க்கைக்கு,நம் சமூகத்தை முன்னெடுத்து செல்ல எந்த விதத்திலும் உதவி செய்யாது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
Francis Bacon இருக்கிறார்.அவர் என்ன செய்தார்? எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக ஏன் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தைப் பற்றி மட்டுமே நிறைய தத்துவங்களை சொல்லியிருக்கிறார். வில் டூரண்ட் இதுவரை உலகை மாற்றிய பத்து பர்சனாலிட்டிகளுக்குள் ஒருவராக பேக்கானை சேர்க்கிறார்.
அவரைப் பற்றி நம்மூர் காலேஜ் மாணவனுக்கு தெரியுமா? தெரியாது. காலேஜ் மாணவனை விடுங்கள்.நம்ம ஊர் அறிவு ஜீவிகளுக்கு. தெரியாது.
நம்ம ஊர் எழுத்தாளர்களுக்கு? தெரியாது.
தெரிந்தாலும் அதை அவர்கள் பரவலாக்க மாட்டார்கள்.பரவலாக்க விரும்புவதில்லை.பரவலாக்க ஆர்வமில்லை.
சிம்பிள் உதாரணமாக ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் மகாபாரத்தை திரும்ப எழுதுகிறார்.பிரமாண்டமாய் எழுதுகிறார்.இதனால் எதாவது பயனிருக்கிறதா?
நிற்க.
ஜெயமோகன் எழுதுவதை நீ எப்படி பயன் பயன் இல்லாதது என்று சொல்லலாம்.அது படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்ல வருகிறீர்களா?
மறுபடியும் நிற்க.
ஜெயமோகன் ஏன் மகாபாரத்தை எழுதுகிறார்? ஏன் இந்திய எழுத்தாளர்கள் எல்லோரும் மகாபாரத்தையும் ராமாயணத்தையும் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.ஏனென்றால் இந்தியர்கள் வெளி உலகம் அறிய விரும்பா மடையர்கள்.அவர்களிடம் எளிதாக செல்லுபடியாகும் சரக்கு இந்த இரண்டு இதிகாசங்கள்தான்.
ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்கள் எல்லோருக்கும் அத்து படி.அதனால் அதையே திரும்ப திரும்ப மாற்றி மாற்றி வெவ்வேறு பார்வையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.இதே இந்தியர்கள் மேலைநாட்டுத் தத்துவத்தை கற்க ஆரம்பித்தால்.( நம் நாட்டுத் தத்துவம்தான் நமக்கு தெரியுமே.எல்லாமும் ஒரே பொருளில் அடங்குகிறது.அது பரம்பொருள்) அது பற்றியே பேசிப் பழக ஆரம்பித்தால்,
இந்த எழுத்தாளர்கள் எல்லாம் அந்த தத்துவங்களைப் பற்றி திரும்ப திரும்ப எழுதுவார்கள்.ஏன் மேலை நாட்டுத் தத்துவம்தான் பெரிசா? நம் பாரத நாட்டில் விளைந்த தத்துவங்கள் எல்லாம் சும்மாவா? என்ற கேள்வி வரலாம்.
தற்போது நம் நாட்டுக்கு முக்கிய தேவை இந்த மேலை நாட்டுத் தத்துவங்கள்தாம். வெஸ்டர்ன் பிலாஸிபில் ஒருவர் சொன்னதை மற்றவர் கொண்டாடுவதில்லை.ஆனால் ஆராய்கிறார்.அது பற்றிய இன்னொரு பார்வையை வைக்க அதுவும் தத்துவமாய் விரிகிறது.இன்னொருவர் அதை வேறுவிதமாக பார்க்க அது இன்னொரு தத்துவமாய் ஆகிறது.
ஆக மீண்டும் பார்ப்பது.மீண்டும் மீண்டும் சரி பார்ப்பது.இதெல்லாம் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
அறிவியலையும் கணிதத்தையும் கலந்தே தத்துவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கால்குலஸைக் கண்டுபிடித்த லிப்னிஸ் ஒரு தத்துவ அறிஞர்.அனலிட்டிக்கல் ஜியோமெட்டிரியைக் கண்டுபிடித்த டிஸ்காரட்டஸ் ஒரு தத்துவ அறிஞ்ர்.லாஜிக்கைப் பற்றிய அறிவியலை பரவலாக்கிய பெட்ரண்ட் ரசல் தத்துவ அறிஞர்தானே.இவர்களின் எந்த வாக்கியமும் வெற்று வாக்கியமில்லை.
சராசரி இந்திய பிரஜைக்குள் இன்னும் குடிக்கொண்டிருக்கும் ஆழமன மூடநம்பிக்கைகளை போக்க இவர்களைப் போன்ற மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்களால்தான் முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய மரபு பற்றியெல்லாம் அதிகம் பேசும் நம்ம ஊர் எழுத்தாளர்கள் ஏன் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் பற்றி அதிகம் எழுதுவதில்லை.
ஏனென்றால் உணர்ச்சிகரமாக,உணர்வுபூர்வமாக,நெஞ்சைத் தொடுவது மாதிரி எழுதும் எழுத்தாளர்களுக்கு மேலை நாட்டு தத்துவமே தெரியாது.ஏன் அவர்களுக்கு தெரியாது? அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவர்களுக்கு அடிப்படை கணித மற்றும் அறிவியல் அறிவு வேண்டும்.அவர்களுக்கு ஏன் அடிப்படை அறிவியல் மற்றும் கணித அறிவு இல்லை.ஏனென்றால் அவர்கள் அகடெமிக்கை சரிவர கற்றவர்கள் இல்லை. ஏட்டுச்சூரைக்காயை கல்லாமல் வெளிவந்தவர்கள்.
ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.சாரு நிவேதிதாவை எடுத்துக் கொள்ளுங்கள்,பாலகுமாரனை எடுத்துக் கொள்ளுங்கள்.இவர்களுக்கு எல்லாம் நன்றாக எழுத வரும்.ஆனால் அறிவியல் தெரியாது.கணிதம் தெரியாது. எப்படி இவர்களால் தங்கள் எழுத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.முடியவே முடியாது.
ஆகையால்தான் இவர்கள் இந்திய மரபு,மகாபாரதம்,தனிமனித விடுதலை,வாதை,சோழப்பரம்பரை என்று எழுதி நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள்.
நான் அவளை critique of dialectical reason புத்தகத்தை படி என்றேன் என்பார் சாரு. சரி அந்தப் புத்தகத்தை பற்றி நாலுவார்த்தை ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றால் எஸ்கேப்பாகிவிடுவார் ( அபிலாஷ் சந்திரன் ”சாருவின் இந்தத் தன்மை” பற்றி நல்ல பத்தி எழுதியதை நினைவு கூர்கிறேன்).இதைத்தான் தமிழ் சுவாரஸ்ய எழுத்தாளர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.
என்னுடைய ஆவல் என்னவென்றால் மேலை நாட்டுத் தத்துவங்கள் எளிமையாக தமிழுக்கு வரவேண்டும்.அதை நம்மை போன்ற இளைஞர்களால் செய்ய முடியும்.
சுஜாதா என்னும் தமிழின் ஒரே வீரேந்திர சேவாக் ( எல்லா திசைகளிலும் சிக்சர் அடிப்பவர்) இன்னும் 30 வருடங்கள் அதிகம் வாழ்ந்திருந்தால் அவரே நமக்கு அதை செய்து கொடுத்துப் போயிருப்பார்.அல்லது பிரமிள் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்தாலும் அது நடந்திருக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களில்லை.
ஜெயமோகனுக்கோ,சாருவுக்கோ அல்லது எஸ்.ராவுக்கோ இது பற்றியெல்லாம் எழுதுவதற்கான அறிவும் இல்லை.தெம்பும் இல்லை.அவர்களை நிறுவிக் கொள்வதற்கே அவர்களுக்கான நேரம் சரியாக இருக்கிறது.
ஆனால் அடுத்த கட்ட ”முகநூல் எழுத்தாளர்கள்” என்று அறியப்படும் அபிலாஷ்,விநாயக முருகன்,பூ.கோ.சரவணன்,வா.மணிகண்டன்,யுவகிருஷ்ணா,அதிஷா போன்றவர்கள்,
இன்னும் அறிவியலை,கணிதத்தை ஒழுங்காக படித்த தமிழ் மீது ஆர்வமிருக்கும் மாணவர்கள்,
இளைஞர்கள்,
புத்தக கண்காட்சிக்கு ஒல்லியான கவிதை புத்தகம் போடும் எழுத்தாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து மேலை நாட்டு தத்துவங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும்.
உடனே கச்சம் கட்டிக்கொண்டு குண்டு குண்டு புத்தகங்களை மொழிபெயர்க்க சொல்லவில்லை.
சின்ன சின்ன கட்டுரைகளின் சாராம்சத்தை எழுதலாம்.சின்ன மேலைநாட்டுத் தத்துவ லாஜிக்காக இருந்தாலும் அதை முகநூலில் பகிர்ந்து கொள்ளலாம்.அதுபற்றி நாலு பேர் படிப்பார்கள்.
இன்று அரிஸ்டாட்டிலைப் பற்றி எழுதிவிட்டாயா? நாளை நான் ஹெகலைப் பற்றி எழுதுகிறேன்.நான் மட்டும் மட்டமா? நான் பூக்கோ பற்றி எழுதுகிறேன்.இப்படிப்பட்ட ஒரு போட்டி முகநூலில் உருவாக வேண்டும்.
ஒருவருடத்தில் முகநூல் தமிழர்களில் 5000 பேராவது மேலை நாட்டுதத்துவங்களின் அம்சத்தை வடிவேலு ஜோக்குகளை ரெஃபரன்ஸ் கொடுப்பது போல கொடுத்து பேசலாம்.
“அட நீங்க சொல்றதப் பாத்தா பெர்க்லி சொல்ற இந்த வாக்கியமாதிரில்லா இருக்கு” என்ற ரீதிக்கு வந்து விடலாம்.
தேவை தன்னம்பிக்கை மட்டுமே.
5000 தமிழர்களுக்கு மேலை நாட்டு தத்துவங்களில் அடிப்படை தெரியும் போது,அதிலிருந்து 50 பேர் புத்தகங்கள் எழுதுவார்கள்.அதிலிருந்து 5 பேர்கள் “விஷ்ணுபுரம்” மாதிரி குண்டாக மேலைநாட்டு தத்துவ புத்தகத்தை தொகுப்பார்கள்.
ஒரு வித அறிவுப் பசியும் வெறியும் பரவும்.கல்லூரிகளில் இது பற்றி விவாதிப்பார்கள்.பள்ளிகளில் பேசுவார்கள்.
வேறு வழியில்லாமல் தமிழ் எழுத்தாளர்கள் இது பற்றி எழுதாமல் முடியாது என்று அறிவியல் கணிதம் டியூசன் கற்றுக் கொண்டு எழுத வருவார்கள்.
இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன்.
வெஸ்டர்ன் பிலாசபி என்றவுடன் ஏதோ ஜீன்ஸ்,பர்கர், எல்லாம் வேஷ்டி, சோற்றை அழித்தது மாதிரி அழிக்க வந்தது என்ற எண்ணத்தை இந்திய குருமார்கள் உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.அதை நம்பத் தேவையில்லை என்பது வாதம்.
இப்போதைக்கு நமக்கு தேவை பகுத்தறிவாலும்,கணித அறிவியலாலும் கட்டமைக்கப்பட்ட மேலைநாட்டுத் தத்துவங்கள்தாம்.
வேலையைத் தொடங்குவோமாக.

உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்...


உங்களையறியாமல் இந்துத்துவா எண்ணங்கள் உங்களிடம் இருந்தால்,

கீழ்கண்ட வாக்கியங்களில் சிலவற்றோடு பொருந்தி போவீர்கள்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். தவறு இருக்கலாம்.

-ஜெயமோகன் ரொம்ப பிடிக்கும்.அவர் எழுத்துக்களை அதிகமாக புகழ்வீர்கள்

-அசைவம் உண்பதை அருவருப்பாக,மனித தன்மையற்ற செயலாக பார்ப்பீர்கள்

-சிவன் திருமால் எல்லாம் பெரிய டீசண்டான சாமியாகவும், பேச்சி,சுடலைமாடன்,அய்யனார் எல்லாம் கொஞ்சம் சுமாரான சாமியாகவும் தெரியும்.

-அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை கேசுவலாக கிண்டலடிப்பீர்கள்

-அருந்ததிராயை பிடிக்காது.

-அ.மார்க்ஸ்,ஞானி போன்றவர்களை பிடிக்கவே பிடிக்காது

-விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும்.அம்பேத்காரை பிடிக்காது.அம்பேத்காரை பிடிக்காது என்று வெளிப்படையாக உங்களுக்கே தெரியாது.அது உங்கள் ஆழ்மனதில் இருக்கும்.

-இடஒதுக்கீடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.இடஒதுக்கீடு இல்லாவிட்டால் 1000 பேர் பாதிக்கபடுவர்.இருந்தால் 2 -பேர் பாதிக்கபடுவர் என்ற அறிவெல்லாம் உங்களுக்கு வரவே வராது. சும்மா பிளேனா என் சித்தி பையனுக்கு 1000 மார்க் இருந்துச்ச்சி ஆனா சீட் கிடைக்கல என்று அற ஆவேசம் கொள்வீர்கள்.

-கம்யூனிசம் பற்றி அட்சர சுத்தமாக எதுவும் தெரியாது.ஆனால் கர்நாடக சங்கீதம் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள்.

-பாபர் மசூதி இடிப்பு பற்றி ஆவேசமாக எல்லாம் பேச மாட்டீர்கள்.வி.எஸ் நய்பால் ஸ்டைலில் வரலாறு பேசுவீர்கள்.

-சமஸ்கிருதம் மேல் உங்களை அறியாமல் பற்று இருக்கும்.தமிழில் நாலாயிர திவ்விய பிரபந்தமும்,தேவாரமும் மட்டும் பிடிக்கும்.

-தமிழில் அர்ச்சனை செய்வது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.அது பற்றிய போராட்டங்களில் சமஸ்கிருதம் வெற்றி பெறுவதை ரசிப்பீர்கள்.ஆனால் வெளியே அது பற்றி பேச மாட்டீர்கள்.

-தினமும் காலையில் ஹிந்து படிப்பீர்கள்.தமிழிலி தினமணி படிப்பீர்கள்

-அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று திராவிட கழகம் போராடினால்,” உங்களுக்குதான் கடவுளே கிடையாதே.பிறகு ஏன் இந்த போராட்டம்” என்று லூசுத்தனமாக பேசுவீர்கள்.

-ரஜினிகாந்த கமல் போன்றவர்களை அவர்களுடைய உயர்ஜாதி பிறப்புக்காக பிடிக்கும் என்பதை வெளியே சொல்ல மாட்டீர்கள்.அது உங்களுக்கே தெரியாது.ஆனால் ஆழ்மனதில் கிடக்கும்.

-சர்தார் வல்லபாய் பட்டேல்,திலகர் எல்லாம் சூப்பர் தலைவர்கள் என்பீர்கள்.

-திருமாவளவன் போன்ற ஆளுமைகளின் சமூகத்தேவையை பற்றி ஆராய மாட்டீர்கள்.சும்மாவேனும் அவருடைய ஒரு சில தவறுகளை வைத்து மட்டமாக திட்டுவீர்கள்.

-இந்து மதத்தின் முட்டாள்தனமான பழக்கவழக்கத்திற்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பீர்கள்.

-ஜாதி அபிமானம் அதிகம் இருக்கும்.எஸ்.சி, எஸ்.டி எல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைக்கிறார்கள் என்று தாழ்ந்த குரலில் சொல்வீர்கள்.

-பாலகுமாரனின் உடையாரை கொண்டாடுவீர்கள்.

-மதானி பலவருடம் சிறையில் கிடக்கும் அநியாயத்தை பற்றி யாராவது எழுதினால் அதை வாசிக்காமலே கடந்து விடுவீர்கள்.அது பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமே இருக்காது.

-சினிமாவில் ஹீரோ எதாவது நல்லதாக செய்யப்போகும் போது பின்னால் ஒலிக்கும் சமஸ்கிருத சங்கீத வார்த்தைகளை கேட்டால் உங்களை அறியாமலே அது ஒரு உயர்வு என்று நினைத்துக் கொள்வீர்கள்.

-ஆனந்த விகடன்,குமுதம் போன்ற மறைமுக இந்து ஆதரவு இதழ்கள் உங்களுக்கு பிடிக்கும்.

-காந்தி ஒரு உயர் ஜாதிக்காரர் என்பது பற்றி பெருமை உங்களுக்கு மனதிற்குள்ளே உண்டு.ஆனால் வெளியே சொல்ல மாட்டீர்கள்.

-காஞ்சி பெரியவர் போன்றவர்களின் ஜாதி வெறியை நாசூக்காக மறந்து அவரை கொண்டாடுவீர்கள்.

-புட்டபர்த்தி சாய்பாபாவை,ரமணரை பெரிய மகான் என்று தெய்வமாக கும்பிடுவீர்கள்.அவர்கள் சாதரண மனிதர்கள்தாம் என்று சொன்னால் தைய்யோ முய்யோ என்று குதிப்பீர்கள்.

-கஷ்மீர் விவகாரம் பற்றி,அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் பற்றி எதுவும் தெரியாது உங்களுக்கு.

-சோ.ராமசாமிதான் சிறந்த அரசியல் விமர்சகர் என்று நினைப்பீர்கள்.

-வி.பி.சிங் அறவே பிடிக்காது.

-ஒரு இஸ்லாமியர் தொப்பி வைத்து,தாடி வைத்து உங்களருகில் அமர்ந்தால் மனத்துக்குள் பதட்டம் கொள்வீர்கள்

-பெந்தகொஸ்தே கூட்டங்களை மிக நக்கலாக பார்ப்பீர்கள்.ஏன் இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி கதறுகிறார்கள் என்று இரக்கமாக ஒரு நிமிடம் யோசிக்க மாட்டீர்கள்.கிறிஸ்டின் மிசனரீஸ் எல்லாம் மோசமானது என்ற எண்ணம் ஆழ உங்கள மனதில் இருக்கும்.

-மோடியை பிடிக்கும் உங்களுக்கு.மோடி செய்த கொலையெல்லாம் மறந்து விடுவீர்கள்.அவரால் மட்டுமே நல்ல ஆட்சி செய்ய முடியும் என்று நினைப்பீர்கள்."