Monday 7 March 2016

கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு

31/01/2016  பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.
அப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.
பாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.
அக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கிறது என்று சொன்னேன்.
நூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.
ஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா? என்றேன்.
ஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.
அதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்
“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.
கிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.
அது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.
கிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.
அதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.
எப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.
எழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.
எப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு
தேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.
ஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.
சமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.
ஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்றொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா?
அல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா?
ஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.
இப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
பாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.
அவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.
’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு
தாலம் வெளியீடு
எழுதியவர் கிருஷ்ண கோபால்.

பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை

அன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.
ஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.
மனைவி விளக்கப் போனார்.
“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.
எப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.
மொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.
ஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.
சதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.
அப்போது பாடலில்
// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.
ச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...
நானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.
ஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.
’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.
இசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது
“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.
ஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.
பாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.
மனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”
“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”
“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”
“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”
“படிக்கலையா என்ன?”
“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”
“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”
“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”
“இதென்ன உளறலா இருக்கு”
“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.
மறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.
அங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.
கேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.
“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப உடன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”
“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.
கூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.
என் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.
அதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.
அடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.
அப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.
“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”
அதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.
அப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.
குளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.
அதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் பரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.
ஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.
“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.
புத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.
உற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.
அப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
வெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.
“ஏ பிள இங்க வா”
“என்ன”
“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”
என்று சிரித்தேன்
“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்

இரும்புக் கொல்லனின் காமம்...

அந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.
அன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.
காமம் தலைக்கேறிற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.
மகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.
“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.
அடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.
மண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா? என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.
“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.
”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால் மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.
ஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.
உடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
ஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.
கொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.
“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.
“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.
அடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.
மூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.
“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”
அவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா? உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா? என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா? தேவையே இல்லை.
இன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.
நல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா? இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.
ஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.
அதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.
இது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.
இரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.
தீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.
அங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
அவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.
அவள் ஆச்சர்யத்துடன்
“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா? என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.
இதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.
பசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.
இரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
அந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.
அவன் கைகளை நெருப்பு சுடவில்லை.
ஆனால் சுட்டது.
சுட்டுக் கொண்டிருக்கிறது.
பின்குறிப்பு:
எப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.

கறாரான பெண்கள்...

சில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.
மத்திமமாக அமர்ந்து கொள்வார்கள்.
அன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான்.
பொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின் கண்களும் லாக் ஆகிவிடும்.
இவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.
அவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.
அதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.
ஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.
என்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.
சிரிக்கவில்லை. இறுக்கமாய் இருந்தார்.
நல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.
இப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.
அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.
அன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.
பள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.
அந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.
அங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.
சிறுமி போகாமல் நிற்க
பாட்டி "பராவயில்லை உக்காரும்மா" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.
அன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.
மறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.
விசாரிக்கும் பொது "பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.
அந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.
அன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.
"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா " என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.
"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார்த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்"
என்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.
பத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.
அதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'

சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.
அன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.
முஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.
சிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.
இதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.
இதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.
ஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.
மக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.
கீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... " இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.
ஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.
கீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.
ஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.
இது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
அதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.
என் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.
எனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார்.
மாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.
பாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.
அசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.
தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.
அவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.
திரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.
இதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.
அரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,
வேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.
சர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,
தற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.
யோசிக்க வைக்கிறார்.
அன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் "நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது
அன்னம் மிரண்டு நிற்க
அங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்
"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா"
என்னும் இடம் சிலிர்பூட்டுகிறது.
இலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது
சாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.

ஈகோவை மீட்டுக் கொள்ள...

ஒருநாள் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நின்றது விட்டது.
எனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்தேன். கொஞ்சம் வயதானவர்.
காயில் சுற்ற வேண்டும் என்று கழட்டிக் கொண்டு போய் விட்டார்.
மறுபடி இரண்டு நாள் கழித்து எடுத்து வந்தார். அப்போதும் fan சரிவர சுற்றவில்லை. மறுநாள் எடுத்து வருகிறேன் என்றார்.
நான் மாலை ஆறு மணிக்கு மேல் கொண்டு வரும்படி சொன்னேன்.
"ஈவினிங் நான் வரமாட்டேன்"
"ஏன்"
"இல்ல எனக்கு வேற வேலை இருக்கு"
"வீட்ல ஆள் இருக்கும் போதுதான நீங்க வரமுடியும் அண்ணே. சும்மா வாக என்று வற்புறுத்தினேன்.
மாலை வேளையில் அவர் நீர் அருந்துவார் என்பது என் யூகம்.
மறுநாள் மாலை என் சந்தேகத்தை தெளிய வைத்து விட்டார்.
மேலே ஏறி விசிறியை மாட்டும் போதே ஸ்கிரூவ் டிரைவர், திருகாணி வயர் எல்லாம் கிழே விழுகிறது.
நான் எடுத்து கொடுக்க கொடுக்க கிழே விழுகிறது.
விசிறி மட்டும் சுற்றவில்லை.
அவர் மறுபடி ஓடிபோய் காப்பசிடர் வாங்கி வந்து போட்டார்.
அதைப் போடும் முன் அதே மாதிரி மேலே இருந்து கை தவறி அனைத்து பொருட்களையும் விட்டார். அவரை பொறுத்தவரை அது தீர்த்த நேரம். எதுவும் ஓட வில்லை.
நான் அவரை ஒன்றும் சொல்லாமல் வேலை நடக்க உதவி செய்தேன். ஆனால் மனைவி குறுக்கே புகுந்தார்
"என்னங்க காத்தாடியே சுத்த வைக்க மாட்டேன்கிறீங்க" என்று சிரித்தார்.
மெக்கானிக் பொறுமையாக பதில் சொன்னார்.
இன்னும் கிண்டலாக இரண்டு மூன்று வாக்கியங்களை மனைவி சொல்ல மெக்கானிக் கொஞ்சம் அசடாக சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.
எப்படியோ விசிறி சுத்த ஆரம்பித்தது. மெக்கானிக் போய் விட்டார்.
அவர் போனதும் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
"ஏன் பிள்ள சிரிக்கிறே"
"இல்ல இல்ல" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தார்"
"சொல்லிடுட்டு சிரி"
"இல்ல அவர நான் கிண்டல் செய்தது அவரு மனச பாதிசுட்டு போல. பேன் சுத்த ஆரம்பிச்ச உடனே டக்குன்னு எண்ணப் பாத்து பெருமையா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சார் பாருங்க" என்று மறுபடி சிரித்தார்.
"ம்ம்ம் "
"பொண்ணு கிண்டல் பண்ணிட்டான்னு அவ்வளவு ஈகோ அவருக்கு. அவரு வெற்றிகரமா ரிப்பேர் செய்துடாராம், உடனே என்னை டக்குன்னு பாத்து ஒரு வெற்றி சிரிப்பு. சரியான காமெடி" என்று சொல்லி சிரித்தார்.
"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருந்தத நா கவனிக்கவே இல்லையே பிள்ள" என்றேன்.
"இல்ல அது சுத்தினதும் பெருமையா அப்படி என்னப் பார்த்து பாத்து " என்று மறுபடியும் சிரிப்பு.
"தயவு செய்து லூசாயிராத" என்று சொல்லி சிரித்து வைத்தேன்.
ஒரு பெண் கிண்டல் செய்வதை ஆண் அதிகமான ஈகோ சிதைப்பாக எடுத்துக் கொள்கிறான்தான் போல.
எப்படியாவது வெற்றி பெற்று
அல்லது
அவளை மறுபடி அடக்கி
அவன் ஈகோவை மீட்டுக் கொள்ள முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறான்.
துரியோதனன் மாதிரி

ஆசிரியர்களின் யுத்தி

சில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த சார் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.
கொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.
ஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.
அப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.
சுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.
அதே கதைதான் இங்கும்.
மின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.
ஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.
அந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.
கால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.
மற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.
2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.
அவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.
'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா" என்பார்.
அப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.
ஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.
அவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.
முக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.
கையில் பிரம்பு இருக்கும்.
நிச்சயமாக பலருக்கு தெரியாது.
தெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.
அவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.
ஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.
சில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.
ஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.
அனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.
அதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இருக்கும்.
பாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.
தூக்கமே வராதுங்குறேன்

சரணடைதல் மட்டுமே

காதலர் தினம் வருகிறது.
சமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.
அதன் படி
பார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்ளங்காலை அமுக்கி விடும் போது
அவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,
அதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து
ஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.
பெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.
அதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.
இதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு வரும்.
எப்படி காலை கரும்புவது?
என்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.
ஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்
வெட்கம்,
அருவருப்பு,
'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு
சரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.
செயல்படுத்திப் பாருங்கள்

ஒண்ணுக்கு..

காலையில்
குளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.
இன்றும் அப்படியே கிளம்பினேன்.
கோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.
அம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.
கோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.
ஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.
"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி(?) செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.
நல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.
இதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.
கோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.
பக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதில் ரசிக்க யோசிக்க நிறைய இருக்கும்.
அப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.
நானும் புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.
பட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது "இவள் என் மனைவி" என்று பெருமிதமாய் இருக்கும்.
அப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.
மெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.
ஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.
அப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.
அதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் " ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது " என்றாள்.
அந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.
"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.
இப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.
அச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.
எங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்று அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.
கோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.
மறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.
ஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.
எனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.
"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.
அதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.
அவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.
திடீரென்று கூட்டதில் காணாமல் போய் விட்டாள்.
எங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.
"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா ?இல்லையா? உன் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.
அப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.
அச்சிறுமி கண்ணில் பட்டாள்.
அங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.
எப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.
இவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்
"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட" என்றேன்.

911 க்கு போன் போடுங்க

பொதுவாகவே Single Mom என்று தெரிந்தால் ஆண்கள் அன்பை பொழிய ரெடி ஆகிவிடுவான்கள்.
அப்படி வெளிநாட்டில் தங்கி இருக்கும் நம் ஊரை சேர்ந்த ஒரு Single Mom க்கு பலர் அன்பு காட்ட ரெடி ஆக இருந்திருக்கிறார்கள்.
அதனால் அதையெல்லாம் மறுத்து இருக்கிறார்.
ஆண்கள் பொதுவாக உள்ளப்பூர்வமானவர்கள் அல்ல அவர்கள் உடல் தேவையானவர்கள் என்ற கருத்து அப்பெண்ணுக்கு அழமாக இருந்திருக்கிறது.
அதனால் யாரையும் கிட்ட நெருங்க விடவில்லை.
இருந்தாலும் ஆண்கள் வித்தியாசமாக அப்ரோச் செய்யும் விதம் சிரிப்பாய் இருக்குமாம்.
அப்பெண்ணின் நம்பரை 'அவர் நண்பன்' அவன் நண்பனான ஒரு ஹிந்திகாரரிடம் கொடுத்திருக்கிறான்.
"ஏதாவது பார்ட் டைம் வேலை இருந்தால் சொல்லு இது என் நட்புதான்" என்று.
அந்த ஹிந்திக்காரர் சரி Single Mom தானே என்று அன்பு பெருகி அடிகடி போன் செய்திருக்கிறான்.
தெரியாத எண் என்பதால் இப்பெண் எடுக்கவில்லை.
திரும்ப திரும்ப வரவே சலித்த படி எடுத்திருக்கிறார்.
அங்கே மறுமுனையில் ஹிந்திகாரரின் மனைவி தன கணவர் மொபைலில் அடிக்கடி இந்த நம்பரில் அழைத்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு போன் செய்திருக்கிறார்.
ஹிந்திகாரரின் மனைவிக்கு ஹிந்தி தவிர வேறு மொழி தெரியாது.
இந்த பெண்ணுக்கு ஹிந்தி அறவே தெரியாது.
அங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' ஹிந்தியில் நீ யார் என்னவென்று விசாரிக்க இப்பெண் முழித்திருக்கிறார்.
திரும்ப திரும்ப 'ஹிந்திகாரரின் மனைவி' போனில் கத்தி இருக்கிறார்.
இந்த அப்பாவி பெண்ணோ அவர் ஏதோ உதவி கேட்பதாக நினைத்துக் கொண்டார்.
'47 நாட்கள்' திரைபடத்தில் வெளிநாட்டில் வைத்து ஜெயபிரதாவை சிரஞ்சீவி கொடுமைபடுத்துவதைப் போல எதிர் முனையில் பேசும் பெண்ணை அவர் கணவன் கொடுமை படுத்துவதாகவும் அவர் தெரியாமல் தன் நம்பருக்கு பேசுவதாகவும் நினைத்துக் கொண்டு இரக்கபட்டு இருக்கிறார்.
ஆங்கிலத்தில் பொறுமையாக அப்பெண்ணுக்கு
"ஹலோ மேடம் நீங்க 911 போன் செய்யுங்கள். அவர்கள் உதவி செய்வார்கள்" என்று திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.
அங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' யோ மானாவாரியாக திரும்ப திரும்ப அழைத்து திட்டி இருக்கிறார்.
இது தெரியாமல் இப்பதிவின் நாயகி "ஹலோ மேடம் பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க " என்று அப்பாவியாய் சொல்லி இருக்கிறார்.
அன்று இரவு முழுவதும் 'ஹிந்திகாரரின் மனைவி' க்கு வருந்தி இருக்கிறார்.
போலீசிடம் 'ஹிந்திகாரரின் மனைவி' நம்பரை கொடுத்து விடலாமா அவர்கள் உதவி செய்வார்களே என்று ஒரே குழப்பமாய் குழம்பி இருக்கிறார்.
திரும்பவும் அதே நம்பரில் இருந்து போன். உடனே எடுத்திருக்கிறார்.
அங்கே ஹிந்திகாரன்
"சாரி என் மனைவிக்கு என் மேல அன்பு அதிகம். நான் உங்க மேல இதுவா இருக்கேன்னு நினைச்சுட்டு கோபத்துல பேசி இருக்கிறா?"
" நீர் என் மேல எதுவா இருக்கிறீர்"
"இல்ல பேசலாம்னுட்டு. நீங்க வேலை தேடுறதா உங்க நண்பர்தான் நம்பர் கொடுத்தார். எனக்கு உங்கள ரொம்ப ..... "
"இனிமேல் நீயோ உன் மனைவியோ போன் செய்தா போலீஸ் கிட்ட போவேன்" என்று கத்தி விட்டு போனை வைத்திருக்கிறார்.
அன்று இரவு அப்பெண் தூங்கும் போது அவர் ஹிந்திகாரன் மனைவிக்கு அப்பாவியாய் சொன்ன அட்வைஸ் அனைத்தும் சுற்றி சுற்றி வந்து கும்மி அடித்ததாம்.
"ஹலோ மேடம்.. பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க "

ஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...

'வாழ்க்கை கதை' மீது அதிகாக ஆர்வம் கொண்டிருகிறாள் என் மகள்.
மாயஜாலம், அரசன் காலத்து கதை இவற்றை எல்லாம் விட அன்றாட வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்தால் ரசனையாக கேட்கிறாள்.
நான் ஆரம்பித்தேன்.
"உனக்கு என்ன வயசு?"
"ஆறு"
"ஆறு கூட மூண கூட்டினா என்ன வரும்"
"நைன்"
"ம்ம்ம். அப்பாவுக்கு நைன் வயசா இருக்கும் போது ராத்திரி பாத்து மணிக்கு நாகர்கோவில்ல, வீடு கதவ யாரு தட்டினாங்க"
"ம்ம்ம்"
"டக் டக் டக் .... டக் டக் டக்.. அப்புறம் காலிங் பெல் டின் டயுன் டின் டியூன்"
"யாரு"
"தாத்தா (என் அப்பா) இருக்காங்க, இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு. என்ன நாங்க இருந்த இடத்துல தெருல லைட்டே கிடையாது. அப்படியே இருட்டா இருக்கும். சைக்கிள்ள கடை அடிச்சுட்டு தாத்தா கூட வந்தா குகைக்குள்ள வந்தா மாதிரி இருக்கும். அப்படியே குண்டசா ஓட்டிட்டு வருவோம். சில சமயம் நாயெல்லாம் துரத்தும் அதுல ஒரு நாய் உண்டு அடிக்கடி கால் பக்கம் வந்து குறைக்கும். நாங்க சைக்கிள்ள இருந்தது கிட்டே கால வீசுவோம். அடிவாங்கிட்டு ஓடும் . அத நாங்க 'செருப்படி சுந்தரம்' அப்படின்னு கூபிடுவோம்".
"ம்ம்ம்"
"ஆஹா கதைய விட்டு போறேன் பாரு செல்லம். ஆமா நாங்க இருந்த இடம் அமைதியா இருட்டா இருக்கும். அப்பா கதவ யாரோ தட்டினாங்களா?"
"யாரு"
"ஒரு அக்கா வயசு 25 இருக்கும். சேலை கட்டி இருந்தாங்க. முகமெல்லாம் வியர்வை. பயந்து போன முகம்"
"என்னம்மான்னு தாத்தா கேட்டாங்க"
"ஒரு பையன் என் பின்னாலே வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். அதான் இங்க வந்துட்டேன்"
"ம்ம்ம்"
"உடனே தாத்தா என்ன பண்ணுனாங்க சட்டைய போடுட்டு ஒரு டார்ச் லைட்ட எடுத்துகிட்டு அந்த அக்காவ வீட்ல விடப போனாங்க"
"ம்ம்ம்"
" அப்போ நானும் தாத்தாவோட போனேன்"
"உங்கள தாத்தா கூட்டுட்டு போனாங்களா"
"ஆமா நான் தாத்தா அந்த அக்கா மூணு பெரும் போனாம். ஒரு மேட்டுல ஏறி நடந்து போனோம். வழியில செடியில நிறைய பூச்சிய பாத்தேன். அப்படியே மரம் செடி கோடி எல்லாம் தாண்டின பிறகு ஒரு ஒன்ரை கிலோ மீட்டர் நடந்த பிறகு அங்க ஒரு சின்ன ஒட்டு வீடு இருந்திச்சி. அதுதான் அந்த அக்கா வீடு. போய் விட்டாச்சு"
"ம்ம்ம்"
"அந்த அக்கா அவுங்க அம்மா அப்பா எல்லாரும் தாத்தாவுக்கு நன்றி சொன்னாங்க. தாத்தா அவுங்கள எல்லாம் மெல்லமா திட்டினாங்க"
"ம்ம்ம்"
"மறுபடி வரும் போது நான் என் அப்பா கைய பிடிசிகிட்டு வந்தேன். அப்போ எப்படி இருந்தி தெரியுமா தாத்தாவ பாக்க"
"எப்படி"
" அப்படி சூப்பர் ஹீரோ மாதிரி இருந்திச்சி. அப்படியே பாசமா"
"ம்ம்ம். ஆமா தாத்தாவுக்கு எல்லாமே தெரியும். நீங்கதான்" ( முகத்தில் அளவிட முடியாத சிரிப்பு)
"மண்ட கிண்டஎல்லாம் ஒடச்சுருவேன். எனகென்ன பிள்ள கொறச்சல்"
"இல்லப்பா அப்படி சொல்லல" என்று சிரித்தாள்.
" ஹா ஹா... ம்ம்ம். அது ஒரு நல்ல பீல் இல்ல. அந்த பீலா சொல்லத்தான் இந்த சம்பவம்"
" ஆமா நல்ல பீல் இருக்கும் இல்ல"
"சரி இப்ப இந்த சம்பவத்துல இருந்து உனக்கு ஒரு கேள்வி. அந்த அக்காவ ஒரு பையன் துரத்தினான். எதுக்கு துரத்தினான்?. நீ சொல்லு பாக்கலாம்"
"ம்ம்ம்... வந்து... அந்த அக்காவோட சும்மா பயங்காட்டி விளையாடுறதுக்கு"
"இருக்கலாம்"
" அப்படி இல்லன்னா அந்த அக்கா கிட்ட இருக்கிற பணம் செயின் எல்லாம் புடுங்குறதுக்கு"
"இருக்கலாம். இது நல்ல பார்வை"
"அல்லது அந்த பைய்யனே ஒரு பேயா இருக்கலாம். அந்த அக்காவ சாப்பிடுறதுக்கு துரத்தி இருக்கலாம்"
"இருக்கலாம்.வேற"
"அவ்வளவுதான் டாடி"
இந்த இடத்தில என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆறு வயது சிறுமிக்கு அந்த ஆண் பாலியல் கொடுமை செய்யத்தான் துரத்தி இருப்பான் என்றும், அதுதான் முதல் காரணமாக இருக்க கூடும் என்று எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று யோசித்தேன்.
அப்படி யோசிக்க வேதனையாக உணர ஆரம்பித்தேன்.
எவ்வளவு கொடுமையான உலகம் இன்னும் இவளுக்கு தெரியாமல் இருக்கிறது.
அந்த கொடுமையான உலகத்தில் நானும் ஒரு புள்ளி என்ற குற்ற உணர்ச்சியும் வராமல் இல்லை.
அதை எப்படி அறிமுகபடுத்துவது.
தெரியாமலே இருந்து விடட்டுமா?
இந்த பார்வையில் சிந்திக்க அவள் மேல் அளவிட முடியாத அன்பும் கனிவும் வாஞ்சையும் வந்தது.
அவளை இழுத்து பக்கத்தில் வைத்து
"நீ ஒன்னு கவனிச்சியா. இப்பல்லாம் அப்பாதான் உனக்கு முத்தம் தரேன். அனா நீ எனக்கு குடுக்கவே மாட்டிக்கிற"
"ஐயே போங்க" என்று எழுந்து ஓடினாள்.

காதல் விளக்கங்கள்

பெண்களுக்கு உண்மையான பாலியல் சுதந்திரம் கிடைத்த பிறகுதான்,
அது சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்ட பிறகுதான்.
ஆண்கள் மாதிரி பெண்களும் இயல்பாக சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்த பிறகுதான்,
அதை ஒரு நல்ல குற்றமில்லாத உணர்வாக ஏற்று கொண்ட பிறகுதான்
காதலை தெளிவாக Define செய்ய முடியும்.
அதுவரை
சொல்லப்பட்டு வரும் காதல் விளக்கங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
அல்லது
கண்ணைக் கட்டி கொண்டு
யானை தடவி
கருத்து சொன்னது போல விஷயமாகும்

தமிழ்ச் சொல் பொம்மைகள்...

ஒரு ஊர்ல ஒரு பூதம் இருந்துச்சாம்.
அது நாலு பேர குகைல அடைச்சு வைச்சுட்டு விட மாட்டேன்னு சொல்லிச்சாம்.
அவுங்க பேரு என்ன தெரியுமா?
முதல் ஆளு பேரு 'மெட்டு'
இரண்டாவது ஆள் பேரு 'மொட்டு'
மூணாவது ஆள் பேரு 'மேட்டு'
நாலாவது ஆள் பேரு 'மோட்டு '
நாலு பேரும் பூதம் கிட்ட ரொம்ப கெஞ்சினாங்க " பூதம் பூதம் எங்கள விட்டுரு பூதம்"
"இல்ல விட மாட்டேன் சென்னைல ஒரு ஒண்ணாங் கிளாஸ் படிக்கிற பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ உங்க நாலு பேரு பெயரையும் எழுத்து பிழை இல்லாம எழுதினாதான் உங்கள விடுவேன்"
"பூதம் அந்த குட்டிப் பொண்ணு எழுதுறத நாங்க எப்படி பாக்கிறது"
"இதோ இந்த மாயக் கண்ணாடி மூலமாதான்"
அப்போ அங்க கண்ணாடியில ஒரு குட்டி பொண்ணு ரெட்டை ஜடை போட்டுட்டு, செல்லம் மாதிரி எக்ஸாம் எழுத உக்காந்திருக்கு.

மிஸ் எழுத சொல்றாங்க
1."பசங்களா ! பேப்பர்ல நா சொல்றத எழுதுங்க. 'மெட்டு'
உடனே குட்டி பொண்ணு யோசிக்கிறா. 'மெட்டு' . சட்டுன்னு முடிஞ்சிருது. அப்ப அதுக்கு ஒரு கொம்புதான் வரும்.
துணைகால் வருமா?வராதா?. 'ஒ' சத்தம் வந்தாதான் துணைகால் வரும். இங்க 'மெட்டு' ல 'ஒ' சத்தம் வரலியே. அப்ப ஒத்த கொம்புள்ள பொம்மை மட்டும்தாம்". 'மெட்டு' சரியா எழுதிட்டா.
2.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மொட்டு'
குட்டி பொண்ணு யோசிக்கிறா .இது சட்டுன்னு முடிஞ்சிருது . அப்ப ஒத்த கொம்பு வரும். ஒ சத்தம் வருது. துணைகால் வரும்.
அப்ப இது ஒத்த கொம்புள்ள ஒத்த கால் உள்ள பொம்மை." 'மொட்டு' சரியா எழுதிட்டா
இத அந்த மாயக்கண்ணாடியில பாத்துகிட்டு இருந்த நாலு பேருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
பூதம் மட்டும் அமைதியா இருந்துச்சாம். இன்னும் இரண்டு வார்த்தை இருக்கே.
3. அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க "மேட்டு"
குட்டி பொண்ணு யோசிக்கிறா ' இது சட்டுன்னு முடியல. நீளமா இழுக்குது. அப்ப ரெண்டு கொம்பு வரும்.
ஆனா துணைக்கால் வருமா? 'ஒ' வரலியே அப்ப வராது. இது ரெட்டை கொம்பு கால் இல்லாத பொம்மை. அப்ப 'மேட்டு'. சரியா எழுதிட்டா.
இப்ப கடைசி வார்த்தை. இத அந்த பொண்ணு சரியா எழுதிட்ட நாலு பேருக்கும் விடுதலை. எழுதலன்னா பூதம் விடாது.
ஒரே பரபரப்பு நாலு பேருக்கும்.
4.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மோட்டு'
குட்டிப் பொண்ணு ரொம்ப நேரம் யோசிக்கிறா. 'இது நீளமா வருது. அப்ப ரெண்டு கொம்பு வரும் . துணை கால் வரும். ஏன்னா 'ஒ' சத்தம் வருது.
அப்ப இது ரெட்டகொம்புள்ள ஒத்தகால் பொம்மை. 'மோட்டு' சரியா எழுதிட்டா.
அன்னைக்கு சாயங்காலம் குட்டி பொண்ணு பள்ளிக்கூடம் விட்டு வீட்ல இருக்கும் போது நாலு பேரு வந்தாங்க.
"என் பேரு 'மெட்டு' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'லிப்ஸ் ஸ்டிக்' மிட்டாய்.
"என் பேரு 'மொட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்'
"என் பேரு 'மேட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'நாகின்' சீரியல் சிடி. நல்ல பாம்பு மாதிரி டான்ஸ் ஆடிக்கோ.
"என் பேரு 'மோட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'வாட்டர் கலர் பாக்ஸ்'
எழுத்து பிழை இல்லாம எழுதினா இவ்வளவு பரிசு கிடைக்குமா அப்படின்னு குட்டிபொண்ணு ஜாலியா டான்ஸ் ஆடினா.
அவள சுத்தி அந்த நாலு பேரும் ஜாலியா டான்ஸ் ஆடினாங்க.
இத பாத்த பூதமும் ஜாலியாகி ஜங் ஜங்குன்னு குதிச்சு குதிச்சு ஆடிச்சாம். smile emoticon smile emoticon

செண்டிமெண்ட் ரத்தத் திலகம்..

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே' என்று ரத்த திலகம் படத்தில் வரும் பாடல் பிடிக்காத மனிதனே இருக்க முடியாது.
அந்த திரைப்படம் பிடித்த காரணத்தினால் எனக்கு அது ரொம்ப உருக்கமாய் இருக்கும்.
குமாரும் கமலாவும் கல்லூரியில் பரஸ்பரம் செல்லமாக சண்டையிட்டு கொள்ளும் நண்பர்கள்.
ஒருநாள் குமாரின் டைரியின் மூலமாக அவன் தன்னை காதலிப்பதை கமலா அறிந்து கொள்கிறாள்.
சாவித்திரியும் சிவாஜியை காதலிக்கிறார்.
ஆனால் மறுநாளே அவர் பிறந்த ஊரான சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை.
"குமார் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்ட நேரம் பிரியிர நேரமா இருக்கே" என்று கமலா நெகிழ்கிறார்.
மறுநாள் கூடிப்பிரியும் விழாவில் பாட வேண்டிய பாடல் வரிகளின் ஆரம்ப வரிகளான
'பசுமை நிறைந்த நினைவுகளே' வரியை சிவாஜி பாடுகிறார்.
'பாடித்திரிந்த பறவைகளே' என்ற வரிகளை சாவித்திரி பாடுகிறார்.
விழாவில் இருவரும் அப்பாடலை உருக்கமாக பாடுகிறார்கள்.
சாவித்திரி சீனாவுக்கு போகும் முன் சிவாஜியை பார்த்து கண்கலங்குகிறார். சிவாஜியும் அப்படியே.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கொள்கிறார்கள்.
அன்பிலே 'குமார்' என்றும் 'கமலா' என்றும் குரல் நடுங்க அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள்.
இந்த தழுவலுக்குப பிறகு அவர்கள் இருவரும் யாரையும் வாழ்கையில் தழுவ வில்லை.
சாவித்திரியும் சிவாஜியும் பிரிகிறார்கள்.
அப்போது இந்தியா சீனா போர் மூளப் போவதாக சிவாஜிக்கு தகவல் வருகிறது. இப்பக்கம் சாவித்திரி சீனன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு உளவு சொல்கிறார்.
சிவாஜி பெரிய ராணுவ அதிகாரி ஆகி பணியாற்றுகிறார். யுத்த களத்தில் சிவாஜி கைதி ஆகிறார்.
அங்கிருந்து தப்பித்து செல்லும் போது சாவித்திரி ஒரு புதரில் மயங்கி சோர்ந்து கிடப்பதை பார்க்கிறார்.
கமலா என்று அவர் மனம் ஒரு நொடி நெகிழ்கிறது. ஆனால் தேச துரோகி என்று வெடித்து சாவித்திரியை ஏசுகிறார்.
சாவித்திரி சொல்ல வருவதை கேட்கவே இல்லை. முடிவில் சாவித்திரி சொல்கிறார்
"குமார் இதயமில்லாதவர்கள் கண்கள் சொல்வதை மட்டும்தான் நம்புவார்கள். நீங்கள் இதயமுள்ளவர். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்து நான் சொல்வதை கேளுங்கள். இத்தனை நாள் உங்களுக்கு வந்த ரகசிய தகவல் அனைத்தும் நான் சொன்ன உளவுதான்."
இதைக் கேட்ட சிவாஜி சாவித்திரியை உருக்கமாக அணைக்க போகிறார். சாவித்திரி அந்த அணைப்பை ஏற்று கொள்ளவில்லை. விலகி விடுகிறார்.
இருவரும் அவரவர் நிலைமையை நினைத்து அழுகிறார்கள்.
சிவாஜி கையில் இருக்கும் ரொட்டி துண்டுகளை சாவித்திரியிடம் நீட்டுகிறார். கொடுமையான பசியில் இருக்கும் கமலா அதை வாங்கி வேகமாக தின்கிறாள்.
குமார் அது பார்த்து அழுகிறான்.
அப்போது அங்கே மாறு வேடத்தில் வரும் சீனத்து கணவன் கமலாவை சுட்டுக் கொள்கிறான். சிவாஜி திரும்ப அவனை அழிக்கிறார்.
ஒடிச் சென்று தன தோழியான, பிரிவதற்கு முந்தைய நாள் காதலை ஏற்றுக் கொண்ட, ஒரே ஒரு முறை அன்பிலும் அன்பாக அணைத்து கொண்ட சாவித்திரியை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்.
இருவர் கண்களும் இன்பத்தால் சிரிகின்றன.
அனால் இம்முறையும் இது தற்காலிகமான சந்திப்புதான் என்ற வேதனை இருவர் முகத்திலும் வருகிறது.
விசும்புகிரார்கள்.
இதற்கு முன் இருவரும் ஆனந்தமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.
ஒருவருடம் முன்னர் இப்பாடலை இருவரும் பாடிக் கொண்டிருக்கும் கல்லூரிக் காலங்களில் இப்படி ஒரு இடத்தில் மறுபடி சிந்திப்போம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.
வாழ்க்கையில் காதல் எப்படி முக்கியமோ அப்படியே கடமையும் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்படி இரு நாடுகளுக்கு இடையேயான போர் அவர்கள் காதலை நட்பை பிரிக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனாலும் என்ன? மனம் அப்படியேதானே இருக்கிறது.
"விமானம் இல்லாவிட்டாலும் சிறகுகள் துணை கொண்டாவது உங்களை பார்க்க வருவேன்" என்பாள் கமலா.
ஆம் அவர் அவள் அன்பு சிறகுகளால் எப்படியோ குமாரை பார்த்து விட்டாள் தானே.
இப்போது அவள் குண்டடி பட்டு உடல் வலியால் துடித்தாலும் மனத்தால் காதல் நிரம்ப குமார் மடியில்தானே வீழ்ந்து கிடக்கிறாள்.
குமாரும் கமலாவும் கனிவோடு பார்த்துக் கொள்கிறார்கள்.
கமலா இதோ தூங்கப் போகிறாள்.
அப்போது சிவாஜி சொல்கிறார்
"பசுமை நிறைந்த நினைவுகளே"
கமலா பதிலுக்கு
"பாடித்திரிந்த பறவைகளே" என்று சொல்லி கண்களை மூடுகிறாள்.
காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம் என்பதை குமாரும் கமலாவும் உணர்ந்து கொள்ளும் நேரம்
பார்க்கும் எனக்கும் அது புரிந்து விடுகிறது.
பிசைந்து பிழிகிறது அன்பு.