Monday 7 March 2016

நாலு வயசு பொண்ணு...

”ஒரு நாலு வயசு பொண்ணு அன்னைக்குதான் முதல் முதலா செஸ் போர்டும் காயின்ஸும் பாக்குறா”
“ம்ம்ம்”
“அதுல ராஜா ராணி குதிரை யானை மந்திரின்னு எல்லாம் அவளுக்குப் பிடிச்சிருந்தாலும். சிப்பாய ரொம்ப பிடிச்சிருது. சிப்பாய் தலை மொட்டையா இருக்குது. அத அந்தப் பொண்ணு விரலால தடவி தடவி விளையாடுறா?
“ம்ம்ம்”
“அம்மா செஸ்ஸ ஹால்ல வெச்சிட்டு சீக்கிரம் தூங்க சொல்றாங்க. அந்தக் குட்டிப்பொண்ணுக்கு அதவிட்டு பிரிய மனசே இல்லை. இருந்தாலும். பெட்ல கிடந்த எல்லா காயின்ஸையும் எடுத்து ஒரு பையில போட்டு அத ஹால்ல வெச்சிட்டு வந்துர்ரா”
“ம்ம்ம்”
“நைட்டு ஒரு மணி இருக்கும். ரூம் எல்லா இருட்டா இருக்கு. அப்ப இந்தபொண்ணுக்கு கனவு வந்தா மாதிரி இருக்கு. கனவுல யாருன்னா ஒரு சிப்பாய். அந்தச் சிப்பாய் அழுது”
“ஏன் அழுது”
“என் கூட உள்ளவங்கள எல்லாம் ஹால்ல வெச்சிட்ட.ஆனா நான் மட்டும் கட்டில்ல மாட்டிக்கிட்டேன்னு அழுது”
“ம்ம்ம்”
“அந்தப் பொண்ணு டக்குன்னு எந்திரிச்சிப் பாக்குறா?. இருட்டு. ரூம் முழுக்க இருட்டு. அவளோட அப்பாவுக்கு தூங்கும் போது ரூம் முழுசா இருட்டா இருக்கனும். என்ன கனவுன்னு முழிக்கிறா. அப்போ அவ கையில அது தட்டுப்படுது. அது ஒரு சிப்பாய் காயின். இருட்டுல அவளுக்கு கண்ணு தெரியல. ஆனாலும் அவ விரலால தடவிப் பாத்ததுல அந்த மொட்ட மண்டைய வெச்சி அது சிப்பாய்ன்னு கண்டுபிடிச்சிர்ரா”
”ம்ம்ம்”
“இப்ப பொண்ணு அந்த சிப்பாய அதோட நண்பர்கள் கூடவே சேத்திரனும்னு நினைக்கிறா.ஆனா எப்படி சேக்குறது. மத்த காயின்ஸ் எல்லாம் ஹால்ல இருக்கு. வீடு முழுசா இருட்டா இருக்கு. அப்பா அம்மா எழுப்பினா திட்டுவாங்க.”
“ம்ம்ம்”
“இதனால அவளே இருட்டுல தடவி தடவி ஹாலுக்கு போய் அந்த சிப்பாய மத்த காயின்ஸ் கூட வெச்சிட்டு வர முடிவு பண்ணிட்டா. எந்திருக்கிறா. இருட்டு. பயமா இருக்கு. வாழ்க்கையில் இது மாதிரி விஷயத்த முதல் முதல்ல இப்பதான் செய்றா. அவ அடிக்கடி பார்த்த காஞ்சனா 1 , காஞ்சனா 2, மாயா படமெல்லாம் ஞாபகத்துக்கு வருது. இருந்தாலும் சிப்பாய் பாவம்ன்னு நினைக்கிறா”
“ம்ம்ம்”
“மெல்ல பெட்ரூம கதவ சத்தமில்லாம திறந்துட்டு வெளிய வர்றா. ஹால்ல அவ ஒட்டி வெச்சிருந்த ஒரு ரேடியம் ஸ்டிக்கர் மட்டும் சின்னதா வெளிச்சமா இருக்கு. ஆனா அதனால உபயோகமில்ல. அவ உடம்பெல்லாம் நடுங்குது. அப்படியே வர்றா பாரு அவ தலையில டப்புன்னு ஒண்னு அடிக்குது. அம்மாஆஆஆ”
“என்னாச்சு”
“பயந்துர்றா.ஆனா அப்புறம் அது புதுசா வாங்கின மூங்கில் கூடை ஊஞ்சல்ன்னு தெரிஞ்சிக்கிறா. அந்த மூங்கில் கூடைய விட்டு நடக்கும் போது அவ கால்ல அவ விளையாடிட்டு போட்ட பொம்மை ஒண்ணு மாட்டி கால் சறுக்கி தொபக்கடீர்ன்னு விழுறா”
“ம்ம்ம்”
“எது மேல விழுறா. அவுங்க வீட்ல அடுக்கி வைச்சிருக்கிற நியூஸ் பேப்பர் மேல விழுந்து பேப்பர் எல்லாம் சரிஞ்சாச்சு. அவளுக்கு புரியுது. ஏன் அம்மா விளையாடிட்டு பொம்மைய எல்லாம் சரியா எடுத்து வைய்யின்னு திட்றாங்கன்னு புரியுது”
“ம்ம்ம்”
“எப்படியோ அந்த சிப்பாய எடுத்து ஹால்ல இருக்கிற மத்த காயின்ஸ் கூட வெச்சிட்டு வேகமா ஊஞ்சல் பக்கம் வரும் போது கால்ல பாம்பு மாதிரி ஏதோ சுத்துது”
“என்னாச்சு”
“தெரியல இருட்டுல கால உதறிட்டு வேகமா பெட்ல வந்து படுத்துகிட்டு அவ அம்மா கட்டிபிடிச்சிக்கிறா.அவ முகமெல்லாம் வேர்த்து போச்சு. இருந்தாலும் அந்த் சிப்பாய அதோட பிரெண்ட்ஸ் கிட்ட சேத்து விட்டது அவளுக்கு ஜாலியா இருக்கு”
”ம்ம்ம்”
“அடுத்த நாள் காலையில சிப்பாயப் போய் பாக்குறா. அங்க சிப்பாய் அதோ பிரெண்ட்ஸ் கூட இருந்தது. இவளுக்கு பெருமையா இருக்கு. அப்படியே அந்த சிப்பாய உள்ளங்கையில எடுத்து கிட்ட வெச்சிப் பாக்குறா. அப்போ சிப்பாய் பேசுது”
“பேசிச்சா”
“ஆமா ”ரொம்ப தேங்ஸ்” அப்படின்னு சொல்லிச்சி.நிச்சயமா சொல்லிச்சி. அது அவளுக்கு மட்டும் தெரியும்.”
“ம்ம்ம்”
“சிப்பாய் நன்றிச் சொன்ன உடன துள்ளிக் குதிச்சி ஊஞ்சல்ல ஜாலியா ஆடுறா. அங்க பேப்பர் எல்லாம் சிதறிக்கிடக்குது. அப்பதான் அத கவனிக்கிறா?
“என்ன கவனிக்கிறா?”
“அவளோட மஞ்சள் கலர் ரிப்பன் ஒண்ணு அந்த பேப்பர் அடியில கிடக்கிறது, பேப்பர் சரிஞ்சதால வெளிய வந்து காத்துல ஆடிகிட்டு இருக்கிறத”
“அப்போ ரிப்பன்தான் அவ கால சுத்துன பாம்பா?
“ஆமா. ரிப்பன் சுத்துனத பாம்புன்னு நினைச்சிருக்கா. அவளுக்கு அவ பயத்த நினைச்சு வெக்கமா போச்சு. அந்த ரிப்பன ரொம்ப நாள் தேடிகிட்டு இருந்தா. அது பேப்பர் மலைகுள்ள போயிருக்கு. நேத்து அவ விழுந்ததுல பேப்பர் சரிஞ்சி ரிப்பன் கிடைச்சாச்சு. அம்மாகிட்ட போய் காட்டினா. அத துவைச்சி அடுத்தநாள் ஸ்கூலுக்கு தலையில கட்டிகிட்டு போனா”
“ம்ம்ம்”
“அப்படி அவ தனியா போகும் போது “ரொம்ப தேங்ஸ்” அப்படின்னு ஒரு குரல் கேட்டது” இவளுக்கு எங்க இருந்து கேட்டதுன்னே தெரியல. முழிக்கிறா. ஆனா அது காது பக்கமிருந்து கேக்குது”
“ம்ம்ம்”
“நான் தான் மஞ்ச கலர் ரிப்பன். என்ன கண்டுபிடிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ். அந்த பேப்பர்க்குள்ளவே காணாம போயிருவேன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நல்ல வேளையா நீ வந்து காப்பாத்தின”
“ம்ம்ம்”
“இவளுக்கு ஆச்சரியம்.நீ பேசுவியா ரிப்பன் அப்படின்னு கேக்குறா?”
“ம்ம்ம்”
“ஏன் சிப்பாய் பேசும் போது நான் பேசக்கூடாதான்னு?’ ரிப்பன் பதிலுக்கு கேட்டுச்சாம்.
பேசலாம் பேசலாம்ன்னு இந்தப் பொண்ணு ஸ்கூலுக்கு பிரிஸ்கா சந்தோஷமா மனநிறைவா மலர்ச்சியா போனாளாம்

No comments:

Post a Comment