Sunday 28 September 2014

The Moon and Sixpence -நிலாவும் ஆறுகாசும்

மிஞ்சி மிஞ்சிப் போனால் நாம் நேசிக்கும் கலைக்காக என்ன செய்வோம்.கொஞ்ச நேரம் ஒதுக்குவோம். அவ்வளவுதான் செய்வோம் இல்லையா?

”அப்படியில்லை நான் கலைகாக எதையும் செய்வேன்” என்கிறான் சாமர்ஸெட் மாம் (Somerset Maugham) எழுதிய

The Moon and Sixpence (நிலாவும் ஆறுகாசும்) நாவலில் வரும் நாயகன்.

நான் புரிந்து கொண்ட நாவலின் கதைச் சுருக்கத்தை எழுதுகிறேன்.

// நான் ஒரு எழுத்தாளன்.

எனக்கு திருமதி ஸ்ட்ரிக்லேண்ட் கொடுத்த பார்ட்டியில்தான் சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்டைத் தெரியும்.அவருக்கு இலக்கியம்
மீது ஆர்வமில்லை.கொஞ்சம் பேசினார். ஆனால் திருமதி ஸ்ட்ரிக்லேண்ட்க்கு என் மேல் எழுத்தாளன் என்ற மரியாதை இருந்தது.

அடுத்து ஒரு மாதத்தில் திருமதி ஸ்ட்ரிக்லேண்டிடம் இருந்து அழைப்பு வந்தது.

”என்னை என் கணவர் விட்டுச் சென்று விட்டார்.அவர் இன்னொரு பெண்ணுடன் பாரீஸுக்குப் போய்விட்டார். நான் கடிதம் எழுதினால் என்னுடன் வாழமுடியாது என்று சொல்கிறார். எங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனும் பெண்ணும் உண்டு. இந்த சமயத்தில் விட்டுப் போனால் எப்படி நாங்கள் வாழ்வோம்.அதனால் நீங்கள் பாரீஸுக்குச் சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை வருமாறு நயமாக பேசி அழைக்க வேண்டும்” என்றார்.

நான் பாரீஸுக்கு சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை பார்த்து விசாரித்தால் அவர் எந்தப் பெண்ணையும் கூட்டி வரவில்லை என்று சொன்னார்.

தான் ஒவியம் வரைவதற்காக குடும்பத்தை விட்டுவிட்டதாகச் சொன்னார். நான் கேட்டேன்.

“என்னது ஒவியம் வரைவதற்காகவா.நாற்பது வயதுக்கு மேல் நீங்கள் எப்போது ஒவியம் கற்றுக் கொண்டீர்களா”

“நான் இரவில் ப்ரிட்ஜ் விளையாடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கற்றுக் கொண்டேன்.”

“அது பொழுது போக்குதானே.அதற்காக குடும்பத்தை விட்டா வருவீர்கள்.”

“இனிமேல் ஒவியம் வரையாமல் என்னால் இருக்க முடியாது.அதை மட்டுமே செய்வேன்.நீங்கள் போகலாம்” என்றார்.

நான் லண்டன் திரும்பி திருமதி.ஸ்ட்ரிக்லேண்டிடம் விசயத்தைச் சொன்னேன். அவர் அழுதுவிட்டு அடுத்தப் பிழைப்பை பற்றிய சிந்தனையில் மூழ்கினார்.

அடுத்து ஐந்து வருடங்கள் நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை மறந்துவிட்டேன்.

பின் லண்டன் வாழ்க்கையை விட்டு பாரீஸுக்கு செல்லும் போதுதான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது கூட நானாக கேட்கவில்லை.

மிஸ்டர் டிர்க்கும் அவர் மனைவியும் என்னிடம் சொன்னார்கள்.

டிர்க் என்னுடைய நண்பர் நல்ல ஜனரஞ்சகமான ஒவியர்.அவர் ஒவியங்கள் ’கலை’ என்ற அளவில் மதிக்கப்படாமல் இருந்தாலும் கூட நிறைய விற்கும்.

டிர்க்கும் அவர் மனைவியும் அன்பானவர்கள். டிர்க்கையும் அவர் ஒவியங்களையும் சார்லஸ் மதிப்பதே இல்லையாம்.

சார்லஸ் தான் வரைந்த ஒவியங்களை யாரிடமும் காட்டுவது கூட இல்லையாம். எளிமையான ஒரு அறையில் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு (நாற்காலி வாங்க அவரிடம் பணம் இல்லை) வரைவார். அவர் பெரிய அறிவாளி.கலைஞன் என்றெல்லாம் ஒவியர் டிர்க் சொன்னார்.

அவர் மனைவியோ “சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் திமிர் பிடித்தவன்.எனக்கு அவரை பிடிக்காது என்றார்.

நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பார்க்கப் போனேன்.அவர் என்னை அதிகம் மதிக்கவில்லை.

ஒவியர் டிரிக்கை மதிக்கவே இல்லை.

ஒருமுறை சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டுக்கு கடுமையான ஜுரம் வர, நானும் ஒவியர் டிர்க்கும் அவரைத் தூக்கிக் கொண்டு திருமதி டிர்க்கிடம் அனுமதி பெற்று, அவர்கள் வீட்டிலேயே சிகிச்சையும் பணிவிடையும் செய்தோம்.

திருமதி டிர்க்கும் நன்றாக கவனித்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து சார்லஸ் ஸ்டிர்க்லேண்ட் தெம்பாக கிளம்பும் போது,

திருமதி டிர்க் சார்லஸுடன் போக விரும்புவதாக சொன்னார். அவர் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை காதலிக்கிறாராம்.

நானும் ஒவியர் டிர்க்கும் ஆடிப்போய்விட்டோம். ஒவியர் டிர்க் சொன்னார் “சார்லஸ் கூட சென்றால் நீ ஏழ்மையில் வருந்துவாய்.ஆகையால் இந்த வீட்டிலிருந்து நான் செல்கிறேன். நீயும் சார்லஸும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று சொல்லி வெளியேறினார்.

ஆனாலும் ஒவியர் டிர்க் தன் மனைவியை குறை சொல்லவில்லை நேசித்துதான் வந்தார்.

ஒருநாள் திருமதி டிர்க் ஆசிட் குடித்து தற்கொலை செய்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டு பதறி ஒடினேன்.

சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பதறவில்லை.அலெட்சியமாக இருந்தார். “நீதான் அந்தப் பெண்ணின் மனதை கெடுத்தாய்” என்றேன்.

“நான் கெடுக்கவில்லை.அவள் என்னை விரும்பினாள். அவளை வைத்து ஒரு நிர்வாண ஒவியம் வரைய வேண்டியதிருந்தது.எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் திரும்ப அனுப்பிவிடுவேன் என்று சொல்லிதான் அவளை என்னை காதலிக்க அனுமதித்தேன்.எனக்கெல்லாம் அவள் மேல் காதல் கிடையாது” என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்”

“நீ என்னை வெறு. வெறுக்காமல் போ.ஆனால் திருமதி டிர்க் ஏற்கனவே இத்தாலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதனால் கர்ப்பமாகி, தந்தையால் வெறுக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றவள். காப்பாற்றியவன் என்ற பெயரில்தான் ஒவியர் டிர்க்கை கல்யாணம் செய்திருக்கிறாள். அவளுக்கு பெரிய விருப்பமெல்லாம் இல்லை.அதைத் தெரிந்துகொள் “ என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்” என்றேன்.

ஆனால் ஒவியர் டிர்க்கின் மனைவியை சார்லஸ் வரைந்த ஒவியம் கலை அளவில் அற்புதமானது. தன்னிகரில்லாதது. அற்புதமானது.  சார்லஸை நான் வெறுப்பதினால் அது கலையில்லை என்று என்னாலும் ஒவியர் டிர்க்காலும் சொல்ல முடியவில்லை.

அடுத்து சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பாரீஸை விட்டு மர்லேஸ் நகரம் சென்று விட்டார். அங்கு கொஞ்சநாள் எடுபிடி வேலை செய்து ஒரு குண்டரிடம் அடிவாங்கி ஆஸ்திரேலியா செல்லும் படகில் கூலி ஆளாக வேலை பெற்று டாகிதி (Tahiti) தீவை அடைகிறார்.

அங்கே சென்று ஒவியம் வரைந்து கொண்டே இருக்கிறார்.தீவில் வசிக்கும் அநாதைப் பெண்ணான அட்டாவை திருமணம் செய்து கொண்டு குடிசைவிட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கிறார்.

அட்டாவே உழைத்து சம்பாதிப்பாள். சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் எது பற்றியும் கவலைப்படாமல் குடிசையில் இருந்து ஒவியம் வரைந்து கொண்டே இருப்பார்.

ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, ஏழு கிலோமீட்டர் நடக்கவைத்து ஒரு டாக்டரைக் கூட்டி வருகிறாள் அட்டா.

டாக்டர் பரிசோதித்து விட்டு சார்லஸ் ஸ்டிர்க்லேண்டுக்கு தொழுநோய் வந்திருப்பதாக சொன்னார். சார்லஸ் அதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை. ஒவியம் வரைந்து கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து டாக்டர் அந்தப் பக்கம் வேலையாக போல சார்லஸின் குடிசையை எட்டிப் பார்கலாம் என்று எட்டிப் பார்க்கிறார்.

குடிசை உள்ளிருந்து மோசமான வாடை வீசுகிறது. தொழுநோய் அழுகல் வாடை.

குடிசை சுவரெங்கும் தாகிதி தீவின் அடர் மரங்கள்.அதைப் பார்க்கும் போது காட்டில் இருந்த உணர்வை அடைகிறார் டாக்டர்.

சார்லஸ் இறக்கும் தருவாயில் பாயில் முனகிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அட்டா வருகிறாள்.” இப்போது ஒருவருடமாய் அவருக்கு கண்பார்வையில்லை” என்கிறாள்.

டாக்டர் திகைத்து நிற்கிறார்.

சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்ட் இறந்துவிடுகிறார்.அவர் ஆசைப்படி அந்த ஒவியக்குடிசையை அட்டா எரித்து விடுகிறார்.

சார்லஸின் இல்லாமைக்கு பின் அவர் ஒவியம் லட்சககணக்கில் விலை போகிறது. //

இப்படியாக உருக்கமான நாவலை முடிக்கிறார் சாமர்ஸெட் மாம். இதைப் படித்து முடிக்கும் போது கலையின் மேல் ஒரு மனிதனுக்கு இருக்கும் வெறியின் தீவிரம் புரிகிறது.

இப்படியும் மனிதர்கள் கலை நேசித்திருக்கிறார்கள். அல்லது இப்படி நேசிப்பவர்களிடமிருந்துதான் உண்மையான ஆர்ட் வெளிவருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

ஏனோ இந்த நாவலைப் படித்து முடிக்கும் போது எனக்கு எழுத்தாளர் பிரமிள் நினைவுக்கு வருகிறார். பிரமிளுக்கும் பாரீஸ் சென்று ஒவியராவதுதான் சிறுவயது லட்சியம் என்று படித்திருக்கிறேன்.

இந்த நாவல் முழுக்க கற்பனை கதையல்ல. புகழ்பெற்ற பிரஞ்சு ஒவியரான பால் காகின் (Eugène Henri Paul Gauguin ) வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நாவல்.

பால் காகின் தன் 40 வது வயதில் தன் பங்குதரகர் வேலையை விட்டுவிட்டு ஒவியராகிறார்.

தாகிதி தீவின் பண்பாட்டை ஒவியமாக தீட்டி புகழ்பெறுகிறார்.

நாவலின் நாயகன் தொழுநோய் வந்த போதிலும் கலையை விடாமல் இருப்பது அவன் மேல் நமக்கிருக்கும் எரிச்சலை நீக்கி  விடுகிறது. மறுபடி நாவலை வாசிக்கும் போது அவனிடம் எந்த எதிர்மறையும் பார்க்க முடியவில்லை.

நா.தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மறக்க முடியாது நாவல் இது. அற்புதம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


Friday 26 September 2014

லித்துயானியா... ரூபர்ட் புருக் எழுதிய குட்டி நாடகம்...

ருபர்ட் பூரூக் 1915 ஆம் வருடம் (?)எழுதிய “லித்துயானியா” என்ற நாடகத்தைப் படித்தேன்.அதன் கதைச் சுருக்கம் வருமாறு.

கொடுமையான, 

பனி பொழியும் குளிர்காலத்தை  எதிர்பார்த்திருக்கும் காட்டின் தனி வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள்.

கதவைத் திறந்த ஐம்பது வயதான அம்மாவும் அவளுடைய இளம் மகளும் பசித்திருக்கும் வழிப்போக்கன் ஒருவனைப் பார்க்கிறார்கள்.

அவன் வாலிபனாயிருக்கிறான். அவனை உபசரித்து உணவும், குளிர்காயத் தீயும் கொடுக்கிறார்கள்.அவன் சாப்பிடும் போது நிறைய பேசுகிறான்.குடும்பத்தலைவரைப் பற்றி விசாரிக்கிறான். அப்பா வெளியே காட்டுக்கு சென்றிருப்பதாக மகள் கூறுகிறாள். 

அப்போது அப்பாவும் வருகிறார்.வழிப்போக்கன் உற்சாகமாக அப்பாவை விசாரிக்கிறான். தான் காட்டில் தொலைந்து போய்விட்டதாகவும் வழிதெரியாமல் குளிரில்  நடுங்கியதாகவும், இந்த தனிவீட்டைப் பார்த்து ஆர்வத்துடனும் பசியுடனும் வந்ததாகவும். இந்த வீடு தன்னை ஏமாற்றவில்லை என்றும். நல்லவிதமான உபசரிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறான். 

தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகவும் சொல்கிறான்.காட்டுகிறான்.

”நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்” என்று கேட்க, குடும்பத்தினர் மரமாடி அறையில் அவனுக்கு படுக்கை கொடுக்கிறார்கள். அவன் மேலேப் போய் அயர்ந்து தூங்குகிறான்.

அவன் தூங்கப்போனதும் மகளும் மனைவியும் அப்பாவை “எதாவது கொண்டுவந்தீர்களா சாப்பிட” என்று கேட்கிறார்கள். “முயல் கூட கிடைக்கவில்லை” என்று சலித்துக் கொள்கிறார்.

”நீங்கள் ஒரு சொங்கி.உங்களால் எதுவும் முடியாது” என்று பசியுடன் மனைவியும் மகளும் அப்பாவைத் திட்டுகின்றனர்.அப்பா நான் தனியாகப் போய் இன்பமாக வாழப்போகிறேன்.நான் ஏன் உங்கள் இருவருக்கும் சம்பாதித்து போட வேண்டும் என்று திட்டுகிறார்.

பேச்சு வழிப்போக்கனைப் பற்றி வருகிறது. “அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இந்தக் காட்டில் ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகிறான். அவன் திருடன்தான். மறைந்திருக்கு இடம் தேடி இங்கு வந்திருக்கிறான். எத்தனை பேரின் வாழ்க்கையைக் கெடுத்து சம்பாதித்த பணம் அது.அதனால் அவனைக் கொன்று அந்தப் பணத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அப்பா கத்துகிறார்.

அப்பா இப்படி சொன்னதும், அம்மா சட்டென்று ஒரு கூர் கத்தியை எடுத்துக் கொடுத்து கொடுத்து “ நல்ல யோசனை. இவனை தீர்த்துக்கட்டினால் கேட்க யாருமில்லை.பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தை எளிதாக கடந்து விடலாம்” என்கிறாள்.

அப்பா கத்தியைத் தூக்கிக் கொண்டு மர ஏணியில் நடந்து செல்கிறார்.அம்மாவும் பெண்ணும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பரபரப்பாக நிற்கிறார்கள். அப்பா மாடி ஏறிவிட்டு திரும்ப ஏணியில் இறங்கி வருகிறார். அப்பாவை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர் கத்தியில் கறையில்லை.

“நீங்கள் ஒரு கோழை. சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாத முட்டாள். நிச்சயம் வரும் குளிர்காலம் நம்மை கொண்டு போய்விடும்” என்று மகள் கத்துகிறாள்.

“என்னால் சுயநினைவில் அவனைக் கொல்ல முடியவில்லை.அதனால் அவன் பணத்தில் கொஞ்சம் எடுத்துப் போய் வோட்கா சாப்பிட்டுவிட்டு வருகிறேன். குடித்து விட்டு வந்து அவனைக் கொல்கிறேன்” என்று சொல்லி கிளம்புகிறார்.

இங்கே அம்மாவும் பெண்ணும் அப்பாவுக்காக காத்திருக்கிறார்கள். சீக்கிரம் வந்து சீக்கிரம் வழிப்போக்கனைக் கொன்று நல்லது செய்வார் என்று பேசிக் கொள்கின்றனர். அப்போது மேலிருந்து அந்த வழிப்போக்கன் இறங்கி வருகிறான். ஏதோ பேசிவிட்டு மறுபடியும் தூங்கப் போகிறான். நன்றாக தூங்கிப் போகிறான்.

அப்பாவுக்காக காத்திருந்த ,’அம்மாவும் பெண்ணும் ’அப்பா நெடுநேரமாகியும் வராதது பற்றி கவலை கொள்கிறார்கள். அந்த அந்த  அரிக்கேன் இருட்டில் அவர்கள் மனம் மட்டும் எதிர்ப்பார்ப்போடு இருந்தது.

குறிப்பிட்ட நேரமாகியும் வரவில்லையே என்ற எரிச்சலில் மகள் சொல்கிறாள் “அம்மா நான் இந்தக் கோடாலியை எடுத்துக் கொள்கிறேன்.நீ உன் பாவாடையின் கீழ்புறத்தை வைத்து அவன் மேல் போட்டு முகத்தை அமுக்கு. நான் கொன்றுவிடுகிறேன்” என்று சொல்கிறாள்.

அம்மாவும் பெண்ணும் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறிப்போகிறார்கள். அதன் பிறகு ஹா என்று கத்தும் குரல் கேட்கிறது.அதன் பின் அடங்கிவிடுகிறது.

அம்மாவும் பெண்ணும் தரைதளத்துக்கு வந்தவுடன், மகள் கோடாலியை எடுத்து வீசுகிறார்ள்.அதில் ரத்தம் இருக்கிறது.

அம்மா புலம்புகிறாள் “ நீ நெஞ்சழுத்தம் மிக்கவள்தான், நான் என் பாவாடையை வைத்து தூங்கிக் கொண்டிருப்பவனின் முகத்தில் அழுத்தினால், நீ கோடாலியை அவன் தலையில் போட்டுக்கொண்டே இருக்கிறாயே. அவன் அடி வாங்க வாங்க அவன் தாயைக் கூப்பிட்டான் தெரியுமா? என்று சொல்லி அழுகிறாள்.

“நான் ஒருதடவை அடித்த பிறகு எனக்கு வேறு வழியில்லை அம்மா. அடித்துக் கொண்ட்டேதான் இருக்க வேண்டியதாயிருக்கிறது. என்னால் நிறுத்த முடியவில்லை. அவன் துன்பத்தைப் பற்றி நினைக்க எனக்கு நேரமோ மனமோ இல்லை” என்று சொல்கிறாள்.

இப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத்திறந்தால் அப்பா. அப்பாவுடன் ஒட்கா விற்கும் கடைக்காரரும் வருகிறார். அப்பா உற்சாகமாக வருகிறார். அம்மாவிடம்  “இந்த ஒட்கா கடைக்காரர் ஒரு விசயம் சொல்வார்  கேட்டுக் கொள் “ என்று அந்த குடிபோதையிலும் மகிழ்ச்சியாக சொல்கிறார்.

ஒட்கா கடைக்காரர் சொல்கிறார். 

”என் கடைக்கு ஒருவன் வந்தான். அவன் பதிமூன்று வயதில் இந்த ஊரைவிட்டு ஒடிப்போய்விட்டானாம். இப்போது திரும்பியிருக்கிறான். அவனுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது. 

உங்கள் மகன் பதிமூன்று வயதில் ஒடிப்போய் விட்டதாக அடிக்கடி சொல்வீர்களே. அவன்தான் திரும்பி என் கடைக்கு வந்திருக்கிறானாம். எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் உங்களின் மகனைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அவனிடம் உங்கள் வீட்டைப் பற்றிச் சொன்னேன்.”

அவன் சொன்னான்.

“நான் வழிப்போக்கனாக எங்கள் வீட்டுக்கு செல்லப் போகிறேன். ஒருநாள் இரவு வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை” நான்தான் உங்கள் மகன்” என்று சொல்லி என் தாய் தந்தை தங்கையை சேர்ந்து விடுவேன். அதன் பின் மகிழ்ச்சியாக என் வாழ்க்கை ஒடும். இதைத்தான் குடிக்க வந்த உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சொல்ல

அப்பா மகனைத்தேடி மாடிப்படியில் ஏறுகிறார். கிழே அலறியபடி “கொன்றுவிட்டீர்களா” என்று கத்துகிறார்.

“என் மகன் மகன் “ என்று கதறுகிறாள் அம்மா. மகளும் அழுகிறாள்.

“நான் என் பாவாடையை வைத்து அவன் மூச்சை நிறுத்தும் போது கூட அவன் அம்மாவைத்தானே நினைவு கூர்ந்தான் “ என்று சொல்லியபடி அம்மா மயங்கிவிழுகிறாள்.

இருட்டில் விளக்கு ”அப்படியே” எரிந்து கொண்டிருந்தது...

Monday 15 September 2014

பேசும் பொம்மைக்கிளிகள்

முதன் முதலில் பேட்டரியால் இயங்கும் விளையாட்டு சாமான் என்று என் மகளுக்கு எதை வாங்கிக் கொடுத்தேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

கண்டுபிடித்துவிட்டேன்.

நுங்கப்பாக்கம் பாலம் பக்கம் ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தின் கீழ்தளத்தில் ? ஒரு காம்பெளக்ஸ் இருக்கிறது. அங்கே சிடிக்கள், செண்ட் பாட்டில்கள் மற்றும் பல வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கும்.

அங்கே உலக சினிமாக்கள் சிடி வாங்குவதற்காக போயிருந்தேன்.ஒன்றிரண்டு வாங்கிக்கொண்டிருந்த போது என் பக்கத்தில் நின்ற வயதானவரின் நட்பு கிடைத்தது.

அவர் பழைய உலக சினிமா ஒன்றின் கதையை சொன்னார்.சரியாக ஞாபகமில்லை “ ஒரு சிஸ்டர் இருக்காங்க, இறைப்பணி என்ற மக்கள்த் தொண்டு செய்றாங்க.போர் சமயத்துல அவுங்க நடுநிலமையோட அவுங்க வேலைய செய்ய முடியாம போக அவுங்க தன் சிஸ்டர் வேலையை அல்லது இறைத்தொண்டர் வேலையையே விட்டுட்டு வந்துர்ராங்க” என்று சொன்னார்.

அருமையாக இருந்தது.அவரிடம் பேசினேன். அவர் ரிட்டைர்ட் வாத்தியார் என்றும் மகள் வீட்டில் பொழுது போகாமல் இருப்பதாகவும் சொன்னார்.அவரிடம் பேசித் திரும்பும் போதுதான் அந்தக் கிளியைப் பார்த்தேன்.

மஞ்சளும் சிகப்பும் கலந்த வெல்வெட் கலந்த உடலைக்கொண்ட பேசும் பொம்மைக் கிளி அது. அதை பார்த்த உடன் அதன் உடலை வருடச்சொல்லும் உயிர்ப்பைக் கொண்டிருந்தது.

நான் போய் விலை விசாரித்தேன். 350 ரூபாய் என்றார். பின் விலையைக் குறைத்து 250 ரூபாய்க்கு வாங்கினேன். பேட்டரியைப் போட்டு கிளியின் முன்னால் பேசச்சொன்னார்.

நான் “ஹலோ” என்றேன். அந்தக் கிளியும் “ஹலோ” என்றது.

நான் “ ஆமா அப்படித்தான்” என்றேன். அந்தக் கிளியும்” ஆமா அப்படித்தான்” என்றது.

அதற்கென்று எந்த சொந்த சிந்தனைமுறையும் கிடையாது.ஆனால் நாம் சொன்னதை அது திரும்பச் சொல்லும். அப்படிச் சொல்வதைக் கேட்க உண்மையிலே சொல்வது போன்றுதான் இருக்கும்.

அதை வைத்து என் மகள் விளையாடுவதை விட நான் தான் அதிகம் விளையாடினேன். யாரும் இல்லாத சமயத்தில் சில நயம் கெட்ட வார்த்தைகளைச் சொல்வேன். அதுவும் சொல்லும்.

அதன் பின் எப்படியோ அந்தக் கிளி உடைந்து போய்விட்டது. மறுபடியும் அந்தக் கிளியை வாங்கப் பிடிக்கவில்லை.என் மகளும் அந்த வயதைக் கடந்து விட்டாள்.நானும் எனக்காக பேசும் கிளி பொம்மையை வாங்க முடியாது.

இனி எப்படா அந்த பேசும் பொம்மைக் கிளி பொம்மையைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது அந்தக் கவலையில்லை. ஃபேஸ்புக்,பிளாக்,இலக்கியம் அனைத்திலும் எழுத்தாளர்கள் அது மாதிரி பேசும் பொம்மைக்கிளிகளை நிறைய வளர்க்கிறார்கள்.

அந்த பேசும் பொம்மைக்கிளிகள் எழுத்தாளர்கள் சொல்வதை அப்படியே சொல்லும். அப்படியே அட்சரம் பிசுகாமல் பேசும்.

அது மாதிரி பேசும் பொம்மைக் கிளிகளை அதிகம் வளர்ப்பவர் மனுஷ்யபுத்திரன்.

அடுத்து சாரு நிவேதிதா. சாரு நிவேதிதா வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள் அனைத்தும் அப்படி அழகாக பேசும்.

அடுத்து ஜெயமோகன் வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள்.இவைகள் ஞானச்செருக்கோடு கூடிய பாவனையை வெளிப்படுத்தும்.

பாலகுமாரனின் பேசும் பொம்மைக்கிளிகளோ அன்பாகவே பேசும்.

இது மாதிரி என்னுடைய பேசும் பொம்மைக்கிளிகளை ரசிக்கும் ஆர்வம் தீர்ந்தது...