Sunday 28 September 2014

The Moon and Sixpence -நிலாவும் ஆறுகாசும்

மிஞ்சி மிஞ்சிப் போனால் நாம் நேசிக்கும் கலைக்காக என்ன செய்வோம்.கொஞ்ச நேரம் ஒதுக்குவோம். அவ்வளவுதான் செய்வோம் இல்லையா?

”அப்படியில்லை நான் கலைகாக எதையும் செய்வேன்” என்கிறான் சாமர்ஸெட் மாம் (Somerset Maugham) எழுதிய

The Moon and Sixpence (நிலாவும் ஆறுகாசும்) நாவலில் வரும் நாயகன்.

நான் புரிந்து கொண்ட நாவலின் கதைச் சுருக்கத்தை எழுதுகிறேன்.

// நான் ஒரு எழுத்தாளன்.

எனக்கு திருமதி ஸ்ட்ரிக்லேண்ட் கொடுத்த பார்ட்டியில்தான் சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்டைத் தெரியும்.அவருக்கு இலக்கியம்
மீது ஆர்வமில்லை.கொஞ்சம் பேசினார். ஆனால் திருமதி ஸ்ட்ரிக்லேண்ட்க்கு என் மேல் எழுத்தாளன் என்ற மரியாதை இருந்தது.

அடுத்து ஒரு மாதத்தில் திருமதி ஸ்ட்ரிக்லேண்டிடம் இருந்து அழைப்பு வந்தது.

”என்னை என் கணவர் விட்டுச் சென்று விட்டார்.அவர் இன்னொரு பெண்ணுடன் பாரீஸுக்குப் போய்விட்டார். நான் கடிதம் எழுதினால் என்னுடன் வாழமுடியாது என்று சொல்கிறார். எங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனும் பெண்ணும் உண்டு. இந்த சமயத்தில் விட்டுப் போனால் எப்படி நாங்கள் வாழ்வோம்.அதனால் நீங்கள் பாரீஸுக்குச் சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை வருமாறு நயமாக பேசி அழைக்க வேண்டும்” என்றார்.

நான் பாரீஸுக்கு சென்று சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட்டை பார்த்து விசாரித்தால் அவர் எந்தப் பெண்ணையும் கூட்டி வரவில்லை என்று சொன்னார்.

தான் ஒவியம் வரைவதற்காக குடும்பத்தை விட்டுவிட்டதாகச் சொன்னார். நான் கேட்டேன்.

“என்னது ஒவியம் வரைவதற்காகவா.நாற்பது வயதுக்கு மேல் நீங்கள் எப்போது ஒவியம் கற்றுக் கொண்டீர்களா”

“நான் இரவில் ப்ரிட்ஜ் விளையாடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கற்றுக் கொண்டேன்.”

“அது பொழுது போக்குதானே.அதற்காக குடும்பத்தை விட்டா வருவீர்கள்.”

“இனிமேல் ஒவியம் வரையாமல் என்னால் இருக்க முடியாது.அதை மட்டுமே செய்வேன்.நீங்கள் போகலாம்” என்றார்.

நான் லண்டன் திரும்பி திருமதி.ஸ்ட்ரிக்லேண்டிடம் விசயத்தைச் சொன்னேன். அவர் அழுதுவிட்டு அடுத்தப் பிழைப்பை பற்றிய சிந்தனையில் மூழ்கினார்.

அடுத்து ஐந்து வருடங்கள் நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை மறந்துவிட்டேன்.

பின் லண்டன் வாழ்க்கையை விட்டு பாரீஸுக்கு செல்லும் போதுதான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது கூட நானாக கேட்கவில்லை.

மிஸ்டர் டிர்க்கும் அவர் மனைவியும் என்னிடம் சொன்னார்கள்.

டிர்க் என்னுடைய நண்பர் நல்ல ஜனரஞ்சகமான ஒவியர்.அவர் ஒவியங்கள் ’கலை’ என்ற அளவில் மதிக்கப்படாமல் இருந்தாலும் கூட நிறைய விற்கும்.

டிர்க்கும் அவர் மனைவியும் அன்பானவர்கள். டிர்க்கையும் அவர் ஒவியங்களையும் சார்லஸ் மதிப்பதே இல்லையாம்.

சார்லஸ் தான் வரைந்த ஒவியங்களை யாரிடமும் காட்டுவது கூட இல்லையாம். எளிமையான ஒரு அறையில் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு (நாற்காலி வாங்க அவரிடம் பணம் இல்லை) வரைவார். அவர் பெரிய அறிவாளி.கலைஞன் என்றெல்லாம் ஒவியர் டிர்க் சொன்னார்.

அவர் மனைவியோ “சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் திமிர் பிடித்தவன்.எனக்கு அவரை பிடிக்காது என்றார்.

நான் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டைப் பார்க்கப் போனேன்.அவர் என்னை அதிகம் மதிக்கவில்லை.

ஒவியர் டிரிக்கை மதிக்கவே இல்லை.

ஒருமுறை சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டுக்கு கடுமையான ஜுரம் வர, நானும் ஒவியர் டிர்க்கும் அவரைத் தூக்கிக் கொண்டு திருமதி டிர்க்கிடம் அனுமதி பெற்று, அவர்கள் வீட்டிலேயே சிகிச்சையும் பணிவிடையும் செய்தோம்.

திருமதி டிர்க்கும் நன்றாக கவனித்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து சார்லஸ் ஸ்டிர்க்லேண்ட் தெம்பாக கிளம்பும் போது,

திருமதி டிர்க் சார்லஸுடன் போக விரும்புவதாக சொன்னார். அவர் சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்டை காதலிக்கிறாராம்.

நானும் ஒவியர் டிர்க்கும் ஆடிப்போய்விட்டோம். ஒவியர் டிர்க் சொன்னார் “சார்லஸ் கூட சென்றால் நீ ஏழ்மையில் வருந்துவாய்.ஆகையால் இந்த வீட்டிலிருந்து நான் செல்கிறேன். நீயும் சார்லஸும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று சொல்லி வெளியேறினார்.

ஆனாலும் ஒவியர் டிர்க் தன் மனைவியை குறை சொல்லவில்லை நேசித்துதான் வந்தார்.

ஒருநாள் திருமதி டிர்க் ஆசிட் குடித்து தற்கொலை செய்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டு பதறி ஒடினேன்.

சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பதறவில்லை.அலெட்சியமாக இருந்தார். “நீதான் அந்தப் பெண்ணின் மனதை கெடுத்தாய்” என்றேன்.

“நான் கெடுக்கவில்லை.அவள் என்னை விரும்பினாள். அவளை வைத்து ஒரு நிர்வாண ஒவியம் வரைய வேண்டியதிருந்தது.எனக்கு பிடிக்கவில்லையென்றால் நான் திரும்ப அனுப்பிவிடுவேன் என்று சொல்லிதான் அவளை என்னை காதலிக்க அனுமதித்தேன்.எனக்கெல்லாம் அவள் மேல் காதல் கிடையாது” என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்”

“நீ என்னை வெறு. வெறுக்காமல் போ.ஆனால் திருமதி டிர்க் ஏற்கனவே இத்தாலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதனால் கர்ப்பமாகி, தந்தையால் வெறுக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றவள். காப்பாற்றியவன் என்ற பெயரில்தான் ஒவியர் டிர்க்கை கல்யாணம் செய்திருக்கிறாள். அவளுக்கு பெரிய விருப்பமெல்லாம் இல்லை.அதைத் தெரிந்துகொள் “ என்றார்.

“நான் உன்னை வெறுக்கிறேன்” என்றேன்.

ஆனால் ஒவியர் டிர்க்கின் மனைவியை சார்லஸ் வரைந்த ஒவியம் கலை அளவில் அற்புதமானது. தன்னிகரில்லாதது. அற்புதமானது.  சார்லஸை நான் வெறுப்பதினால் அது கலையில்லை என்று என்னாலும் ஒவியர் டிர்க்காலும் சொல்ல முடியவில்லை.

அடுத்து சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் பாரீஸை விட்டு மர்லேஸ் நகரம் சென்று விட்டார். அங்கு கொஞ்சநாள் எடுபிடி வேலை செய்து ஒரு குண்டரிடம் அடிவாங்கி ஆஸ்திரேலியா செல்லும் படகில் கூலி ஆளாக வேலை பெற்று டாகிதி (Tahiti) தீவை அடைகிறார்.

அங்கே சென்று ஒவியம் வரைந்து கொண்டே இருக்கிறார்.தீவில் வசிக்கும் அநாதைப் பெண்ணான அட்டாவை திருமணம் செய்து கொண்டு குடிசைவிட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கிறார்.

அட்டாவே உழைத்து சம்பாதிப்பாள். சார்லஸ் ஸ்ட்ரிக்லேண்ட் எது பற்றியும் கவலைப்படாமல் குடிசையில் இருந்து ஒவியம் வரைந்து கொண்டே இருப்பார்.

ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, ஏழு கிலோமீட்டர் நடக்கவைத்து ஒரு டாக்டரைக் கூட்டி வருகிறாள் அட்டா.

டாக்டர் பரிசோதித்து விட்டு சார்லஸ் ஸ்டிர்க்லேண்டுக்கு தொழுநோய் வந்திருப்பதாக சொன்னார். சார்லஸ் அதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை. ஒவியம் வரைந்து கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து டாக்டர் அந்தப் பக்கம் வேலையாக போல சார்லஸின் குடிசையை எட்டிப் பார்கலாம் என்று எட்டிப் பார்க்கிறார்.

குடிசை உள்ளிருந்து மோசமான வாடை வீசுகிறது. தொழுநோய் அழுகல் வாடை.

குடிசை சுவரெங்கும் தாகிதி தீவின் அடர் மரங்கள்.அதைப் பார்க்கும் போது காட்டில் இருந்த உணர்வை அடைகிறார் டாக்டர்.

சார்லஸ் இறக்கும் தருவாயில் பாயில் முனகிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அட்டா வருகிறாள்.” இப்போது ஒருவருடமாய் அவருக்கு கண்பார்வையில்லை” என்கிறாள்.

டாக்டர் திகைத்து நிற்கிறார்.

சார்லஸ் ஸ்ட்ரிக்ட்லேண்ட் இறந்துவிடுகிறார்.அவர் ஆசைப்படி அந்த ஒவியக்குடிசையை அட்டா எரித்து விடுகிறார்.

சார்லஸின் இல்லாமைக்கு பின் அவர் ஒவியம் லட்சககணக்கில் விலை போகிறது. //

இப்படியாக உருக்கமான நாவலை முடிக்கிறார் சாமர்ஸெட் மாம். இதைப் படித்து முடிக்கும் போது கலையின் மேல் ஒரு மனிதனுக்கு இருக்கும் வெறியின் தீவிரம் புரிகிறது.

இப்படியும் மனிதர்கள் கலை நேசித்திருக்கிறார்கள். அல்லது இப்படி நேசிப்பவர்களிடமிருந்துதான் உண்மையான ஆர்ட் வெளிவருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

ஏனோ இந்த நாவலைப் படித்து முடிக்கும் போது எனக்கு எழுத்தாளர் பிரமிள் நினைவுக்கு வருகிறார். பிரமிளுக்கும் பாரீஸ் சென்று ஒவியராவதுதான் சிறுவயது லட்சியம் என்று படித்திருக்கிறேன்.

இந்த நாவல் முழுக்க கற்பனை கதையல்ல. புகழ்பெற்ற பிரஞ்சு ஒவியரான பால் காகின் (Eugène Henri Paul Gauguin ) வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நாவல்.

பால் காகின் தன் 40 வது வயதில் தன் பங்குதரகர் வேலையை விட்டுவிட்டு ஒவியராகிறார்.

தாகிதி தீவின் பண்பாட்டை ஒவியமாக தீட்டி புகழ்பெறுகிறார்.

நாவலின் நாயகன் தொழுநோய் வந்த போதிலும் கலையை விடாமல் இருப்பது அவன் மேல் நமக்கிருக்கும் எரிச்சலை நீக்கி  விடுகிறது. மறுபடி நாவலை வாசிக்கும் போது அவனிடம் எந்த எதிர்மறையும் பார்க்க முடியவில்லை.

நா.தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மறக்க முடியாது நாவல் இது. அற்புதம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


No comments:

Post a Comment