Tuesday 24 September 2013

சக்கிலிய பிராமண உருமாற்றம் - முத்துப்பட்டன் கதை

பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டு காலககட்டத்தில்தான் முத்துப்பட்டன் கதை நடந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் நா.வானமாமலை சொல்கிறார்.

முத்துப்பட்டன் என்பவன் ஏழு அண்ணன்களுக்கு பிறகு எட்டாவதாக பிறக்கிறான்.பிராமண குலத்தில் பிறக்கிறான்.ஆச்சாரமாய் வளர்கிறான்.

ஏனோ அவனுக்கு அண்ணன்களை பிடிக்கவில்லை.ஆகையால் அவர்களை விட்டு விலகி மற்றொரு சிற்றரசரிடம் வேலை செய்கிறான்.

சில ஆண்டுகள் பிறகு முத்துப்பட்டனின் ஏழு அண்ணன்களும் அவனைத் தேடி வருகின்றனர்.முத்துப்பட்டனை சமாதானப்படுத்தி அழைத்து சென்று கொண்டிருக்கும் போது,ஒரு குளத்தில் நீர் எடுக்க வந்த பொம்மக்கா திம்மக்கா என்று இரண்டு சக்கிலிய பெண்களைப் பார்த்து முத்துப்பட்டன் காதல் கொள்கிறான்.

அவர்களிடம் பேச்சு கொடுக்கிறான்.அந்தப் பெண்கள் பயந்து வீட்டிற்கு சென்று அவர்கள் தந்தை வாலபகடையிடம் பிராது கொடுக்கிறார்கள்.

வாலபகடை அரிவாளுடன் ஆவேசத்துடன் வரும் போது, பொம்மக்கா திம்மக்கா மேலுள்ள காதலால் மூர்ச்சையுற்று முத்துப்பட்டன் தரையில் கிடக்கிறான்.

வாலப்ப்கடை முத்துப்பட்டனைப் பார்த்து மனமிரங்குகிறான்.

எப்படி பிராமணன் சக்கிலியக்குடியில் பெண்ணெடுப்பது சாத்தியம் என்கிறார் வாலப்பகடை.

காதல் இருந்தால் எல்லாம் சாத்தியமே என்கிறான் முத்துப்பட்டன்.

வாலப்பகடை முத்துப்பட்டன் தன் குல அடையாளத்தை விட்டு விட்டு நாற்பது நாட்கள் சக்கிலியனாய் வாழ்ந்து காட்டினால் மட்டுமே நம்பிக்கை வருமென்றும்,அதன் பிறகே தன் மகள்களை திருமணம் செய்து தர முடியுமென்றும் சொல்கிறான்.

குடுமியையும் பூணூலையும் அறுத்தெறிந்து,முத்துப்பட்டன் சக்கிலியனாய் வாழ்கிறான்.இதற்கிடையில் முத்துப்பட்டனின் அண்ணன்மார்கள் அவனை சிறை வைக்கிறார்கள்.

முத்துப்பட்டன் அவர்களிடமிருந்து தப்பி ஒடி வாலபகடையிடம் வந்து சேர்கிறான்.வாலப்பகடை மகிழ்ந்து தன் இரண்டு மகள்களையும் முத்துப்பட்டனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

மாமனார் வீட்டில் சந்தோசமாக இருக்கும் முத்துப்பட்டனுக்கு சோதனை வருகிறது.வாலப்பகடை வைத்திருக்கும் மாடுகளை கவர்ந்து கொண்டு ஊத்துமலை வன்னியரும்,உக்கிரங்கோட்டை வன்னியரும் செல்கின்றனர்.

மாட்டை திருடுபவர்களிடம் போரிட்டு வீரமரணம் அடைகிறான் முத்துப்பட்டன்.

இந்தக் கதையை திருநெல்வேலி மாவட்டத்தில் வில்லுப்பாட்டாக பாடுகின்றனர்.

சொரிமுத்து ஐயர் கோவில் என்ற கோவிலில் இந்தக்கதையை முத்துப் புலவர் என்றொருவர் பரம்பரை வழியாக பாடிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் பல கோவில்களில் இந்தக் கதையை பாடுகிறார்கள்.எல்லாக் கோவில்களிலும் பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் சக்கிலியர்களே.

ஆனால் முத்துப் புலவர் பாடும் கோவிலில் மட்டும் இந்த பொம்மக்கா திம்மக்கா என்பவர்கள் ஒரு பிராமணனின் மகள்கள் எனவும்.காட்டில் தொலைந்து போகிறார்கள் எனவும்.அவர்களையே வாலப்பகடை எடுத்து வளர்க்கிறான் எனவும் கதை சொல்கிறார்.

அதனால் முத்துப்பட்டன் காதலித்த பெண்கள் சக்கிலியர்கள் அல்ல பிராமணப் பெண்களே என்று புலவர் நிறுவுகிறார்.

பேராசிரியர் வானமாமலைக்கு இது ஆச்சர்யம்.முத்துப்பட்டனின் கதையின் அடிப்படையே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளைச் சொல்வதுதான்.

உதாரணமாக வாலப்பகடை முத்துப்பட்டனிடம் இப்படை சொல்கிறான் உண்ர்ச்சிகரமாக

நாயல்லவோ எங்கள் குலம் ஒ நயினாரே
நாற்றமுள்ள விடக்கொடுப்போம் ஒ நயினாரே
செத்தமாடறுக்க வேணும் ஒ நயினாரே
சேரிக்கெல்லாம் பங்கிட வேணும் ஒ நயினாரே
ஆட்டுத்தோலும் மாட்டுத்தோலும் அழுக வைப்போம் நயினாரே
அதையெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போம்
செருப்பு தைப்போம் வாரறுப்போம்
அதை எடுத்து கடைக்கு கடை கொண்டு விற்போம்
சாராயம் கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியந்தான் நயினாரே.

மேலும் இன்னொரு இடத்தில் முத்துப்பட்டனின் அண்ணகள் கேட்கிறார்கள்.முத்துப்பட்டன் உணர்ச்சிகரமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை சொல்கிறான்.

1.தம்பி! செத்தமாட்டை சாப்பிடும் சக்கிலியன் வீட்டில் பெண்ணெடுக்கலாமா?
அண்ணே !நல்ல மாட்டின் பாலையெல்லாம் உறிஞ்சி நாளெல்லாம் குடிச்சிபுட்டு,செத்த மாட்டத்தான சக்கிலியனுக்கு கொடுக்குறீக.

2.தம்பி! வயல்ல புழுவையும் பூச்சியையும் வயல் நண்டையும் புடிச்சி ஆய்ஞ்சி திங்குற சக்கிலியன் வீட்டுல் பெண்ணெடுக்கலாமா?
 அண்ணே ! வயலுக்கு மேல வெளயுற நெல்லு எல்லாத்தையும் வக்கனையா வழிச்சி தின்னு, நண்டையும் புழுவையும் தானே      சக்கிலியனுக்கு நாம கொடுக்குறோம்.

இது போன்ற உணர்ச்சிகரங்கள் இருக்கும் கதையில் எப்படி பொம்க்காவும் திம்மக்காவும் பிராமணர்களாக இருக்க முடியும் என்று பேராசிரியர் நா.வானமாமலை முத்துப் புலவரிடம் பழகி விசாரிக்கிறார்.

கொஞ்சம் தயங்கி முத்துப் புலவர் சொல்கிறார்.இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் இளமையாக இருக்கும் போது அவரிடம் வந்த உயர்சாதியினர் “எப்பா பிராமணன் சக்கிலிச்சிய கட்டிக்கிறதும், பழகுறது கேட்க நல்லாவா இருக்கு,இங்குன கோவிலுக்கு நாலு பெரிய மனுசங்க வந்து போறானுங்க,அவங்களுக்கு கூச்சமாயிருக்காத இது மாதிரி தரங்கெட்ட கதகளக் கேட்க.பாட்ட மாத்தி சொல்லு,கதையை கொஞ்சம் மாத்து” என்று முத்துப் புலவரை வற்புறுத்தியிருக்கிறார்கள்.

முத்துப்புலவர் என்ன செய்வார்.பணம் வேண்டுமே வயிற்றை நிரப்ப. ‘மொள்ளாலிகள்’ ஆசைப்பட்ட மாதிரியே பொம்மக்காவையும் திம்மக்காவையும் சக்கிலிச்சியில் இருந்து பிராமணத்திகளாக மாற்றிவிட்டார்.

உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கங்களை பழங்கதைகளுக்குள்ளாகவும் புகுத்தி விட்டனர்.புகுத்தி கொண்டிருக்கின்றனர்.கவனமாய் இருக்க வேண்டும் என்று நா.வானமாமலை சொல்கிறார்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.உயர்ஜாதி அல்லாத மக்கள் ஆடி மாசம் பயபக்தியுடன் கொண்டாடும் கொடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போக்கு பொதுவாக நம்மிடம் இருக்கிறது.

ஆத்தாவை கிண்டல் செய்வது.அம்மனுக்கு கூழ் ஊத்துவதை கிண்டல் செய்வது.கருவாட்டுக் குழம்பை கிண்டல் செய்வது,கோயிலுக்கு படையல் போடுவதை கிண்டல் செய்வது போன்றவைகளை சொல்லலாம்.

அன்று இந்துமதக் கலைகளஞ்சியம் என்ற புத்தகம் வந்திருப்பதாக ஒரு செய்தியில் படித்தேன்.அதை நான் இன்னும் வாசிக்கவில்லை.ஆனால் எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது.

அந்தப் புத்தகத்தில் வைதீகமான இந்து மதமே உண்மையான இந்து மதம் என்று நிறுவி இருப்பார்களோ என்று.

ஏனென்றால் பெரும்பான்மையான இந்துக்கள் அவர்கள் சொந்த வழிபாடு என்று நிறைய் முறைகளை வைத்திருக்கிறார்கள்.சொந்தக் கதைகளை என்று நிறைய வைத்திருக்கிறார்கள்.

அவற்றில் எல்லாம் பிராமணத்தன்மையும் வைதீகத்தையும் புகுத்த சதா முயற்சிகள் நடந்து வருகின்றன.

கோவில்களில் பலியை தடுக்க அரசு இட்ட ஆணையை எந்த சாமியாரைக் கேட்டு போட்டது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

என் கவலை என்னவென்றால் அவரைப் போன்ற சைவ வைணவ ஆச்சாரியார்கள் சொல்வதே இந்து மதம் என்று நாம் நினைத்து விடக் கூடாது என்பதுதான்.

இந்து மதத்தின் கட்டமைப்பு மந்திரங்களில் ஆச்சாரங்களில் இல்லை. அவரவர்க்கு வழிபடும் உரிமையை கொடுக்கும் அந்த தன்மையில் இருக்கிறது.

அதை நேரடியாக அழிக்க முடியாதவர்கள், இந்த முத்துப்பட்டன் கதையை அழித்தது மாதிரி மறைமுகமாக வருகிறார்கள்.

கவனம் தேவை. 

Saturday 21 September 2013

பாண்டியனும் யானையும்...

வடிவேலு காமடியில் பொண்ணு பார்க்க போன இடத்தில் மாப்பிள மொக்கசாமி வந்திருக்காக, மற்றும் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக வாம்மா மின்னல் என்று சொன்னவுடன் “சல்லென்று” மின்னலாக அந்த பெண் போகும் காட்சி எல்லோருக்கும் தெரிந்ததே.( எப்படி ஜனரஞ்சக்மா தொடங்கினேன் பாத்தீங்களா).

அது போல பாண்டிய மன்னன் போரில் ஜெயித்து ஊருக்குள் யானைமேல் விஜயம் செய்யும் போது, பெண்கள் எல்லோரும் பாண்டிய மன்னனை ரசிக்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் ரசிப்பதற்கு முன்னால் மன்னனை சுமந்த பெண் யானை கடந்து விடுகிறது.

உடனே பெண்களுக்கு யானை மீது கோபம் வந்து விடுகிறது. “ஏம்மா யானை கொஞ்சம் ஸ்லோவாத்தான் போயேன்.பொம்பளன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்.இப்படி வேகமா போனா என்ன அர்த்தம்” என்று கோபிக்கிறார்கள்.

இது முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடலில் வருகிறது.

பாடல்:

எலா மடப்பிடியே
எம்கூடல் கோமான்

புலா அல் நெடுநல்வெல்
மாறன்-உலா அங்கால்

பைய நடக்கவும்
தேற்றாயால் நின்பெண்மை

ஐயப் படுவது 
உடைத்து.

விளக்கம்:
என் தோழியே! 
என் அழகிய இளம் பெண் யானையே!
எங்கள் அரசற்பெருந்தகை
பகைவரின் சதையில் பாய்ந்த வேல்தனை,
கொண்டிருக்கும் பாண்டிய மன்னன்
உன் மீதேறி உலா வரும் போது
உனக்கு மெல்ல நடக்கவும் தெரியவில்லையென்றால்,
உன் பெண்மை சந்தேகப்படும் படி உள்ளது.

இந்தப்பாடலில் என்னை கவர்ந்த வார்த்தை பாடலின் முதலில் தொடங்கும் “எலா”. ”எலா” என்றால் என் தோழியே என்று அர்த்தம்.

இருப்பினும் தென்னிந்திய சைவ சிந்தாந்த கழகம் 1971 இல் வெளியிட்ட “கழகத்தமிழ் கையகாராதி” புத்தகத்தை புரட்டி அர்த்தம் பார்த்தேன்.அதில் 

/எலா -நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்./ என்று இருந்தது

நான் இந்த “எலா”என்ற வார்த்தை திருச்செந்தூர் தூத்துகுடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் பக்கத்தில் கேட்டிருக்கிறேன்.என் அம்மா பேசி கேட்டதில்லை.ஆனால் ஆச்சி பேசி கேட்டிருக்கிறேன்.

“எலா இங்க வாலா”
”எலா எங்கனலா ஒழிஞ்சி போயிட்ட.தொவையல் அரைச்சியா இல்லியா.”

அது ரொம்ப லோக்கலான ஒரு மொழி என்று அதை பின் வரும் சந்ததியினர் விட்டுவிட்டனர்.

இது பற்றி அம்மாவிடம் போன் செய்து கேட்டபோது. இந்த “எலா” என்ற வார்த்தையை ஆசாரி (விஸ்வகர்மா) ஜாதியினர் அதிகம் உபயோகிப்பார்கள் ஆறுமுகநேரியில் என்றார்.

ஆக “எலா” என்பது ஒரு சுத்த தமிழ்.இனிப்பான தமிழ்.இது மாதிரி எத்தனை வார்த்தை நம்ம மொழிய விட்டு நம்ம கூச்சத்தால “அப்ஸ்காண்ட்” ஆச்சோ தெரியல.

அது மாதிரி இதில் இருக்கும் இன்னொரு வார்த்தை “பைய”. ”பைய” என்றால் மெதுவாக என்றர்த்தம்.

குமரி மாவட்டத்தில் “பைய” என்றுதான் சொல்வார்கள்.

“யல பைய செய்யேம்ல இல்லனாக்கி ஐயம்மா போயிரும்” ( மெல்லச்செய் இல்லையெனில் கெட்டதாய் போய்விடும்).



Thursday 19 September 2013

சின்னப்பையனும் கணக்கும்...

கணிதம் எனக்கு ஒரு பிரச்சனையானது மூன்றாம் வகுப்பில்தான்.

மல்டி டிஜிட்ஸ்ஸை சிங்கிள் டிஜிட்டால் பெருக்குவது எனக்கு பிரச்சனையில்லை( 1481 x 3)ஆனால் மல்டி டிஜிட்டை மல்டி டிஜிட்டால் பெருக்குவது ( 567 x 67 ) அந்த வயதில் சுத்தமாக புரியவில்லை..

மேத்ஸ் மிஸ்ஸான மலர் மிஸ்ஸுக்கும் எனக்கும் ஒவ்வாமை வந்தது அந்த கணக்கில்தான்.

கணக்கு என்றால் பயம் வந்ததும் அதில் இருந்துதான்.

நான்காம் வகுப்பில் (ஃப்ராக்சன்ஸ்)பின்னம் புரியவே இல்லை.

1,2,3 போன்ற நம்பர்களோடு டீல் செய்துகொண்டிருந்த என்னை இந்த 1/2,1/4 போன்ற நம்பர்கள் துன்புறுத்தின.

நான்காம் வகுப்பு முழுவருட பரீட்சை எல்லாம் எழுதிமுடித்த பிறகு, ஒரு மதியம் எனக்குள் ஒரு ஃப்ளாக்ஷ் அடித்தது.

1/2 என்றால் அரை ஆப்பிள்.1/4 என்றால் கால் ஆப்பிள்.ஒன்றை இரண்டாக பிரித்தால் அரை வருகிறது. அதனால்தான் ஒன்றை மேலே போட்டு இரண்டை கீழே போட்டிருக்கிறார்கள்.

புரிந்தது புரிந்துவிட்டது.

முதன் முதலில் கணிதம் மேல் ஆர்வம் வர அந்த புரிதலே காரணமாய் இருந்தது.

என் மேத்ஸ் புக்கை எடுத்துப்பார்த்தேன். எல்லா பின்ன நம்பர்களையும் ஆழமாக புரிந்து கொண்டேன்.7/8 என்றால் ஏழு மடங்கை எட்டு மடங்கால் பிரித்தால் என்ன வரும்? இது மாதிரி யோசித்து கொண்டே இருந்தேன்.

அட அது நல்லாத்தான் இருந்தது அந்த ஃபீலிங்.

எந்த ஒரு கணிதமும் பிராக்டிக்கல் சென்ஸ் இல்லாமல் உருவாவதில்லை என்ற தெளிவை பெற்றேன்.

இப்போதும் நன்கு கற்றவர்கள் கூட கேட்பார்கள்

இந்த “மாடர்ன் அல்ஜிப்ரா,காம்ளக்ஸ் நம்பர்” சப்ஜக்டெல்லாம் படித்தால் பிராக்டிக்கலா அதுல என்ன யூஸ்.

ஏழாம வகுப்பில் எனக்கு டார்வின் சுந்தர் என்ற நண்பன் உண்டு. ஃப்ரீ பீரியட்களில் எனக்கும் டார்வின் சுந்தருக்கும் பிடித்த பொழுதுபோக்கு என்னவென்றால் ரஃப் நோட்டில் ஸ்கொயர்களை எழுதுவது.(25 x 25 = 625, 35 x 35 = 1225) என்று ஒன்றிலிருந்து வரிசையாக எழுதி கொண்டே போவோம்.

கிட்டதட்ட ஆயிரம் நம்பர்கள் வரை எழுதினோம்.

நண்பர்களோடு பழக்கமாவது போல் நம்பர்களோடு பழக்கமானது அப்படித்தான்.

வர்க்கமூலம்(ஸ்கொயர் ரூட் ) கண்டுபிடிப்பதும் எங்கள் பொழுது போக்காய் இருந்தது.

எட்டாம் வகுப்பில் ”பொன் உமாபதி” நட்பு கிடைத்தது.

கணக்கு புத்தகத்தில் ”அவுட் ஆஃப் சிலபஸ்” என்று பரிட்சைக்கு வராத ஆனால் கண்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விவாதிப்போம்.”பை” 22/7 டிவைட் செய்து கொண்டே இருப்போம்.

அதுவும் நல்ல பொழுது போக்காய் அமைந்தது.

எட்டாம் வகுப்பில் எனக்கு அண்ணன்கள் Trignomentary சொல்லித்தந்தார்கள்.

சைன் தீட்டா, காஸ் தீட்டா, தான் தீட்டா என்று சொல்லவே பெருமையாய் இருந்தது.

புரிந்தே படித்தேன்.

பத்தாம் வகுப்பில் என் முதல் மன்திலி பரிட்சையில் இருந்து பப்ளிக் எக்ஸாம் வரையில் நூற்றுக்கு நூறு எடுத்தேன். ஆம். ஒரு மார்க் கூட குறையவில்லை.அதை என்னுடைய பெரிய சாதனை என்று நண்பர்கள் புகழ்வார்கள்.

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் லீவு விடுவார்கள்.அந்த லீவில் எனக்கொரு ஆர்வம் தோண்றியது.

மேத்ஸில் புதிதாக எதையாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதுதான் அது.

இப்போ நம்பர் தியரி இருக்கு, ட்ரிக்ணாமெண்டரி இருக்கு அதுமாதிரி ஏன் நாமளும் கணக்கில் புதுசா எதையாவது கண்டுபிடிக்க கூடாது.

யோசித்தேன் யோசித்தேன் யோசித்தேன்.

- சைக்கிள் ஒட்டிகொண்டு போகும் போது ஏற்றத்தை பார்த்தால் ஒரு சலிப்பும் இறக்கத்தை பார்த்தால் ஒரு ஜாலியும் வருகிறதே. இதை வைத்து ஏதுனா மேத்தமெட்டிக்கல் மாடல் உருவாக்க முடியுமா?

-சில பேருக்கு நல்லா ஒவியம் வரைய வருது, சில பேரால் முடியல் அதபத்தி எதாவது மேத்ஸோட தொடர்பா? ...

- வர்ணங்களை எண்களாக்க முடியுமா? அல்லது மேத்ஸ்ல ரெப்ரஸண்ட் பண்ண முடியுமா? இப்போ மஞ்சளையும் நீலத்தையும் கலக்கினா பச்சை வருது. அது மாதிரி வர்ணங்கள மேத்ஸ்ல ரெப்ரசண்ட் பண்ணினா? என்ன வர்ணத்த கலக்கினா என்னென்னா வர்ணங்கள் கிடைக்கும் அப்படிங்கிறத பேப்பர்ல போட்டே தெரிஞ்சிக்கலாம்.ஒவ்வொரு கலரா மிக்ஸ் பண்ணிகிட்டே இருக்கதேவையில்லைதானே.

இப்படி எதுனா ஒண்ணு யோசிச்சிகிட்டிருப்பேன்.ஆனா புதுசு புதுசா யோசிப்பேன். நிறைய

கிறுக்குத்தனமாத்தான் இருக்கும்.

இருந்தாலும் அந்த யோசிக்கும் சுதந்திரம் கொடுக்கும் கிக்கே தனியானது.

செஸ்ஸில் கணித்தத்தை புகுத்த முடியுமா என்று டிரை ப்ண்ணினேன்.

ராணிக்கு அதிக பாயிண்ட், ராஜாவுக்கு சைபர் பாயிண்ட் ( ஏன் ராஜாவுக்கு சைபர் கொடுத்தேன் என்றால் சைபர் இல்லாமல் எந்த நம்பரும் இல்லை. அது போல் ராஜா இல்லாமல் செஸ்ஸே இல்லைதானே.சைபர் ராஜா ரெண்டுமே கொஞ்சம் அமைதியாத்தானே இருக்கும். எப்படியெல்லாம் யோசிச்சிருக்கேன் பாத்தீங்களா)

அப்புறம் செஸ் போர்டில் நடுவில் இருக்கும் நான்கு கட்டங்களை நீங்கள் ஆக்கிரமித்தால் எளிதாக வெல்லலாம் என்று ஒருவர் டீவியில் சொன்னார்.

அந்த “செண்டிரல் ஸ்குயர்ஸ்க்கு” தனி மதிப்பு கொடுத்தேன்.

இப்படி பேப்பரையும் பேனாவை வைத்து ஒரே ஆராய்ச்சிதான்.

என்னுடைய ஆராய்ச்சிகள் மிகவும் ரகசியமானவை.

அண்ணகளுக்கு தெரியாது. தெரிந்தால் கிண்டால் செய்வான்கள் என்ற வெட்கம்தான் காரணம்.

அப்படியே ஆராய்ச்சி போனது.

கடைசியில் உருப்படியாய் ஒன்றை கண்டுபிடித்ததாய் நினைக்க வைத்ததும் நடந்தது.

ஒரு காலைவேளையில் சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது நினைத்தேன்.

நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸை அதிமிக்கேல் தெருவழியாக போயும் அடையலாம்.ராமவர்மபுரம் போயும் அடையலாம்.சேரும் புள்ளி ஒன்றாய் இருந்தாலும் வழி வேறு வேறுதான்.

அப்படியானல் அந்த இரண்டு வழிகளையும் சமண்பாடு செய்யலாம்.

அட நான் ஒன்று கண்டுபிடித்து விட்டேன்.

நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேன்.

”யல விஜய்யி சரியான ஆள இருக்கியேல.கணக்குலயே புதுசா ஒண்ண கண்டு பிடிச்சிட்டியே.பெரிய மத்தவ்னதாம்ப்ள நீ” என்று பெருமை பட்டுக்கொண்டேன்.

அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன் .ஆனால் அதற்கு மேல் அந்த கணித தத்துவத்தை எப்படி கொண்டு போவது என்று தெரியவில்லை.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதம் முடிந்த பிறகு வாத்தியார் “Vector algebra" எடுத்தார்.

ஏ வெக்டார் பிளஸ் பி வெக்டார் இஸ் இம்ளைஸ் சி வெக்டார்.

இப்போ ஒரு புள்ளியை இப்படியும் போய் அடையலாம்.அப்படியும் போய் அடையலாம். எப்படியும் போய் அடையலாம். அதைத்தான் வெக்டார் அல்ஜிப்ரா சொல்ல வருகிறது என்று சொன்னார்.

எனக்குன்னா அதிர்ச்சி.

அது நான் யோசித்து வைத்து இருந்தது.

அட மாக்கான்களா என் கண்டுபிடிப்பை அல்ரெடி நீங்க எல்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சிட்டீங்களாடா

பாவிகளா.

வெக்டார் அல்ஜிப்ராவாம் வெக்டார் அல்ஜிபரா. என்று கிளாஸை கவனித்து கொண்டிருந்தேன்.

பாக்ராஜ் அந்த ஏழுநாட்களில் சொல்வாரே “இது எண்ட டியூனு எண்ட டியூனு “ என்று. அதுமாதிரியான கூவல் எழுந்தது.

அப்புறம் பிளஸ் ஒன் படிப்பு பளுவினாலும், இண்டகிரேசன் டிப்பிரண்சேசன் கால்குலஸில் ஃப்யில் ஆகும் வரை போனதாலும் என்னுடைய கணிதம் கண்டுபிடிக்கும் ஆர்வம் அதுவாக தற்கொலை செய்து கொண்டது.

பிற்காலத்தில் “ஜான் நாஷ்” என்ற கணித மேதையின் படமான “பீயூட்டியுஃபுல் மைண்ட்” படம் பார்க்கும் போது ஒரு காட்சி ஈர்த்தது.

அதில் ரசல் குரோவ் ( ஜான் நாஷ்) பறவைகளுக்கு தீனி போடுவார்.

எந்த புறா முன்னாடி வந்து அந்த தீவனத்தை உண்கிறது. அதில் எதாவது கணிதம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வார்.

அவர் நோட்டில் அதை எழுதி வைத்திருப்பார்.

என்னுடைய கணித ஆராய்ச்சி நினைவுக்கு வந்தது.நான் சரியாத்தான் செய்திருக்கிறேன்.

தைரியமாக சிந்திக்கவேண்டியது அறிவியல் மற்றும் கணிதத்தில் முக்கியம்.அதை நான் செய்தே இருக்கிறேன்.

என்னைபோன்ற பல இளம் ஆர்வலர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள், இருப்பார்கள்.

அதை எப்படி நல்ல புராடக்டாக கன்வெர்ட் செய்கிறோம் என்பதில்தான் இந்தியா வல்லரசாவது இருக்கிறது.

எமெர்சன் வாசித்த “அமரிக்கன் ஸ்காலர்” கட்டுரை அமரிக்காவின் சிந்தனை முறையையே மாற்றியதாம் அல்லது வழிகாட்டியதாம்.

எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதை வாசித்துப்பாருங்கள்.

நாம் இன்னும் நிறைய வளரனும் தம்பி.

Monday 9 September 2013

ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம்...

'எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்று கவிஞர் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தை கடந்த ஞாயிறு பனுவல் புத்தகநிலையம் தடாகம் அரங்கத்தில் பார்த்தேன்.

இந்தப் படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளர் இளையராஜா.வெளி வந்த ஆண்டு 2008.

படம் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்தது.பிரளயன் முன்னமே வந்திருந்தார்.ருத்ரனும்,ரவிசுப்பிரமணியனும் பின்னால் சேர்ந்து கொண்டார்கள்.

இந்த படம் ஜெயகாந்தனை ஏற்றிக் கூற முயற்சிக்கவில்லை.ஜெயகாந்தன் இப்படி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.ஜெயகாந்தன் கொண்டிருக்கும் பிற்போக்கு கருத்துக்களைக் கூட அவர் வாயாலே பேசச் செய்து பதிந்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக தீவிர சமுதாயப் பார்வையில் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் கொதிப்பார்கள்.

அப்படி ஒருவர் கொதித்தார்.அதை கடைசியில் பார்ப்போம்.இப்போது டாக்குமென்டரி பிட்ஸ்... என்னை ஈர்த்ததில் கொஞ்சம்.

-காந்திக்கு லியோ டால்ஸ்டாயை அறிமுகப் படுத்தினது ஒரு தமிழர்

-ஜெயகாந்தனுடைய சபையில் இத்தனை பேர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ராணித் தேனீயாக அவர் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.எந்த அளவுக்கு ஆவேசமாக பேசுவாரோ அது போலவே உடனடியாக அமைதியாகவும் பேசுவார்.கருத்துக்கள் தாண்டி, யாரையும் அவமானப்படுத்தி விட வேண்டும் என்று ஜெயகாந்தன் நினைப்பதில்லை.

-”என்னுடைய எழுத்து பிரச்சாரம் என்று விமர்சனம் இருக்கிறது.ஆம் பிரச்சாரம்தான்.எத்தனையோ பிரச்சாரங்கள் நல்ல இலக்கியங்களாக இருந்துள்ளன.இயேசுநாதரின் பிரச்சாரத்தை தாண்டிய நல்ல இலக்கியமில்லை.இங்கு ஏன் பிரச்சாரங்கள் இளக்காரமாய் பார்க்கபடுகிறது என்றால் கலைஞனைத் தவிரவும் நிறைய பேர் பிரச்சாரம் செய்கிறார்கள்.அதனால்தான்” - ஜெயகாந்தன்

-”நான் எழுத வரும் போது முதன் முதலில் அஞ்சியது எதுகை மோனைக்குதான்.அதை தவிர்த்தலே இலக்கியத்திற்கான முதல் படி என்று நினைத்தேன் .நானே பின்னர் “பாதை தெரியுது பார்” திரைப்படத்திற்கு பாட்டு எழுதினேன்.” - ஜே.கே

-மகாபாரதம் தெரியாதவன் அந்தச் சுவைய அறியாதவன் இந்தியன் ஆக மாட்டான் - ஜே.கே

-மயிர் என்பது தூய தமிழ்ச் சொல் அதைச் சொல்வது எப்படி கெட்ட வார்த்தை - ஜே.கே

-இசையில் மிக அதிக நாட்டம் உடையவர்.வீணையெல்லாம் கற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

-தமிழ் எழுத்தாளன் சிந்தனையாளனாகவும் இருப்பான் என்பதை எல்லோருக்கும் முதன் முதலில் புரிய வைத்தவர் ஜெயகாந்தன் - அசோகமித்திரன்

-திராவிட கழக வீரமணியும்,ஜெயகாந்தனும் வகுப்புத்தோழர்கள்.சிறுவயதில் வீரமணியின் பெயர் சாரங்கபாணி,ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். ”சிறுவயதில் ஜெயகாந்தன் எனக்கு பீடி சுருட்டிக் கொடுத்து இழுக்கச் சொன்னார்.இழுத்துப் பார்த்தேன்.தலைசுற்றியது.அதன் பின் அந்தப் பக்கம் போவதே இல்லை “ என்று வீரமணி நகைச்சுவையாக சொல்கிறார்.

-”பெரியார் அண்ணா போன்றவர்களை பார்க்காமல் இருந்தான் நான் கம்யூனிஸ்டாக இருந்திருப்பேன் என்று கருணாநிதி சொல்கிறார்.ஆனால் நானோ பெரியார் அண்ணாவைப் பார்த்த பிறகுதான் கம்யூனிஸ்டாக மாறிப்போனேன்.- ஜே.கே

-”தமிழ்நாட்டில் திராவிட மாயையை திராவிட மோகத்தை குறைத்ததில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு முக்கிய பங்கு உண்டு.திருக்குறள் படிக்காமல் மார்க்ஸ் படிக்கும் எந்த கம்யூனிஸ்டும் உருப்பட மாட்டான்.முதலில் தமிழனாக உணர்ந்தாலே நல்ல பொதுவுடைமை சிந்தனையாளாராக முடியும்” என்று ஜீவா சொன்னதாக ஜெயகாந்தன் சொல்கிறார்.

-”எம்.ஜி.ஆர் பார்க்க ஆசைப்பட்டார் என்கிறார்.அவரைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள்.இருந்தாலும் நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை” - ஜெயகாந்தன்.

-”காமராஜர் ஒருமுறை என்னிடம் அது என்னப் பாட்டு என்றார். நான் எது என்றேன். அதான் “யாதும் யாதும்” என்று யோசித்தார்.நான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அந்தப் பாட்டையா சொல்கிறீர்கள் என்றேன். “ஆமா ஆமா அது எழுதினது யாரு” . அதை எழுதியது கணியன் பூங்குண்றனார் என்றேன்.காமராஜருக்கு அந்த அளவுக்கு தமிழ் எல்லாம் தெரியாது.ஆனால் அவர் அதற்கு வெட்கப்பட்டது கிடையாது.அதை வெளிப்படையாகச் சொல்வார். - ஜே.கே

-”கருணாநிதி என்னை மிக அழமான நட்பாக பலவருடம் நினைத்தார்.அதனால் அவரிடம் நடபானேன்” - ஜே.கே

-ஜாதி இருக்கிறது.அது இந்தியாவின் வேர் - ஜே.கே (இதைக் கேட்கும் போது கடும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.)

-பிராமண துவேசம் இனி தேவையில்லை. துவேசித்து என்ன ஆகிவிட்டது.பகைதான் வளரும் -ஜே.கே

-எதிரிகளைத் தேடிக்கொண்டே இருக்காதீர்கள் - ஜே.கே

-நானே பார்க்க விருப்பட்ட ஆளுமை, காஞ்சி மகா பெரியவர்.- ஜே.கே

-”முதாளித்துவம் வேண்டும்.உடனே பதினேழாம் நூற்றாண்டு முதலாளிகளை நினைத்துக் கொள்ள வேண்டாம்.நிர்வாகம் செய்யாமல் எந்த ஒரு இயக்கமும்.நிறுவனமும் முன்னேறாது” - ஜே.கே

-”எனக்கு விருது தந்ததன் மூலம் தமிழ் பல்கலைக் கழகம் தன்னை பெருமைபடுத்திக்கொண்டது” - ஜே.கே

-”ஜெயகாந்தன் நாடகம் நடிக்க சிறுவயதில் எவ்வளவு சிரமப்பட்டார் எனபதை நகைச்சுவையாக விளக்குகிறார். “தாயே இந்தப் பக்கம் வாருங்கள்” என்ற டயலாக்கை நாள் முழுவதும் மனப்பாடம் செய்ததை நகைச்சுவையாக விளக்குகிறார்

-”எனக்கு பிடித்த பெண் ஆளுமைகள் என்றால் அதில் முக்கியமானவர் அவ்வையார்.அவர் எல்லோருக்கும் தாய்.பயமில்லாதவர்” - ஜே.கே

-”பக்கத்து மாநிலக்காரன் உன்னை அடித்தாலும் நீ சட்டத்திற்கு உடப்பட்டுதான் இருக்கனும்.அதுதான் நியாம்.உன் நேர்மையை நியாத்தை எக்காரணம் கொண்டும் ஏன் நீ இழக்க வேண்டும்”- ஜே.கே

- “பிற எழுத்தாளர்கள் படைப்பை படித்து கருத்து சொல்வதில்லை.அது வெற்று “காஸிப்பாக” போய் விடுகிறது “ ஜே-கே

-1959 ஆண்டு திருச்சியில் நடந்த கூட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை, பெரியார் முன்னாலே எதிர்க்கிறார் ஜெயகாந்தன்.

-சில நேரங்களின் சில மனிதர்களை காட்டும் படக்காட்சிகள் வருகின்றன.

-இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிறைவாகவே படுகிறது எனக்கு - ஜே.கே

-கடலூருக்கு போகிறார் ஜெயகாந்தன் (இன்றைய காலத்தில்).அங்கே ஒரு சிறுவனிடம் என்னைத்தெரிகிறதா என்று கேட்கிறார்.அவன் தெரியல என்கிறான். “என் பெயர் ஜெயகாந்தன். ரஜினிகாந்த பேர ஞாபகம் வெச்சிகிட்டா என் பெயரை ஞாபகம் வெச்சிக்கலாம் “என்று நகைச்சுவையாக சொல்கிறார்.

-படம் முடிவில் பத்துநிமிடம் அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லி முடிக்கிறார்கள்.

படம் முடிந்ததை அடுத்து,

பிரளயன் பேசினார்.”ஜெயகாந்தனின் தர்க்க உலகத்தில் யாரும் லேசில் புகுந்து விட முடியாது.மிகத்தெளிவாக பேசுவார்” என்றார்.ஆவணப்படத்தின் ஒலி பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ருத்ரன் ஜெயகாந்தனுக்கும் தனக்கு இடையே நல்ல நட்பு இருந்ததைச் சொன்னார்.ஒருமுறை தான்( ருத்ரன்) மிகவும் டிப்பிரஸ்டாக இருக்கும் போது ஜெயகாந்தன் “நல்ல டாக்டருய்யா நீ. depressed ஆ இருந்தா எப்படி பிரச்சனைய தீர்ப்ப... concern ஆ இரு என்று இரண்டிற்கும் வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்தாராம். மேலும் “உயிரோடு இருக்கும் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாதே.பிறகு அவர் செய்யும் எல்லா கிறுக்குதனத்திற்கும் நீ தலையாட்ட வேண்டும்” என்று ஜே.கே சொன்னதாக நினைவு கூர்ந்தார்.

இயக்குனர் ரவிசுப்பிரமணியம் பேசுவதற்கு முன்னால் பார்வையாளர்கள் பேசும் படி பரிசல் செந்தில்நாதன் கேட்டுக்கொண்டார்.

அதில் ஒருவர் மிக ஆவேசமாக “ஜெயகாந்தன் ஜாதி வெறி பிடித்த பார்ப்பண ஆதரவாளர்.உடனடியாக ஊருக்குச் சென்று அவர் புத்தகங்களையெல்லாம் தூர எறிந்து விடுகிறேன்.அதை சாக்கடையில் போட்டால் கூட சாக்கடைக்கு கேவலம்” என்றார்.அவர் அப்படி சொன்னது ருத்ரனின் மனதை பாதித்ததை முகபாவனைகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது.

இன்னொரு முதிர்ந்த பத்திரிக்கையாளர் அவர் ஜே.கேவுடன் பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டார்.

நான் கொஞ்சம் உதறலுடன் மைக்கைப் பிடித்து “ஜெயகாந்தன் பேசுவது சரியாப் புரியல.அவர் பேசுறதுக்கு தமிழ் சப்டைட்டில் போடுங்க என்றேன்”. அதன் பின் “இல்ல தப்பாச் சொல்லல் ரீச் (Reach) தான் குறிக்கொள் அப்படின்னா அதச் செய்யலாம்” என்றேன்.அப்புறம் ஜெயகாந்தனைக் காட்ட இந்த ஆவணப் படத்தில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலைக் காட்டி விளக்கியதில் எனக்கு உடன்பாடில்லை. என்றேன். அந்த நாவல் கருத்தளவில் பாடாவதியானது.என் மகளுக்கு இன்னும் பத்துவருடம் பிறகு அந்த நாவலைப் பற்றிச் சொன்னாள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.ஆனால் “ரிஷிமூலம்” மாதிரி சிக்கலான பாலியல் கதைகளை ஜெயகாந்தன் ஆராய்ந்திருப்பதுதான் வருங்கால இலக்கியர்களுக்கு உதவும் என்றேன்.அது போன்ற நாவலை முன் வைத்து காட்டியிருக்க வேண்டும் என்றேன்.

முடிவில் ரவிசுப்பிரமணியன் பேசினார் “இந்தப் படம் இரண்டு முறை நின்று விட்டது.காரணம் ஜெயகாந்தன் சொல்லிய கருத்துக்களும்.அவர் காட்டிய ஆவேசமும்தான்.அப்புறம் இளையராஜா என்னைக் கூப்பிட்டு சமரசம் செய்து எடுக்கச் சொன்னார்.ஜெயகாந்தன் அப்படித்தான்.அவர் யாருக்காகவும் அவர் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை.சமரசமே இல்லாதவர் அவர்.இங்கு சிலர் ஜெயகாந்தன் மேல் கோபமாக பேசினார்கள்.ஆவணப்படம் என்பது ஒரு கோட்டுச்சித்திரம்.அதன் மேல் ஒவியத்தை நீங்கள் வரைந்து கொள்ளுங்கள் நீங்கள் புரிந்து கொண்டபடி.

ஜெயகாந்தனிடம் மரணம் உங்களை நெருங்கினால் அதாவது தெருமுனையில் வந்து நின்றால் என்ன செய்வீர்கள் என்றேன்.அதற்கு அவர் கூறிய ஆவேசப் பதிலை படத்தில் வைத்திருந்தேன்.அப்புறம் அதைத்தூக்கிவிட்டேன்.இளையராஜா ஏன் என்று கேட்டார்.”இப்போதே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லை.அதனால் அதை வைக்க விரும்பவில்லை” என்றேன்.இளையராஜாவும் அதை ஏற்ற்குக்கொண்டார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. என்று முடித்தார்

Thursday 5 September 2013

கல்முகம்

கோயிலுக்கு போகும் போதெல்லாம் அங்குள்ள சிலைகளின் கருணை முகங்களை பார்க்க பார்க்க ஏன் இந்த சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன.

இதன் பர்பஸ் என்ன? 

எங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலில் ‘ஜோதி’ தான் பெருமாள்.அது மாதிரி இருந்து விட வேண்டியதுதானே!என்பது மாதிரி நினைப்பேன்.

ஆனால் சில சாமி உருவங்களை பார்க்கும் போது அந்த வடிவங்கள் ஆழ்மனது வரை சென்று ஏதோ செய்யும்.

பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.

இந்த சிலைகளின் பர்பஸை புரிந்து கொள்வதற்கு ஒரு அமெரிக்க சிறுகதையை உதாரணம் சொல்வேன்.

இதுமட்டும் காரணமில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

நினைவிருந்தவரை கதையை சொல்கிறேன்.

இந்த கதையை எழுதியது ‘நதேனியல் ஹார்த்தர்’( 1804-1864).

கதையின் பெயர் ‘கல்முகம்’ (கிரேட் ஸ்டோன் ஃபேஸ்).

வறண்ட மலைகளுக்கு நடுவே இருக்கும் அந்த கிராமத்தில் சிறப்பு, அந்த பெரிய கல்முகம்தான்.

இயற்கையிலேயே மலையின் முன்முகப்பில் அமைந்திருக்கும் மாபெரும் மனித முகம் போன்ற அமைப்பு பற்றி நிறைய கதைகள் உண்டு.

’எர்னஸ்ட்’ சிறுவனாய் இருக்கும் போது அவன் அம்மா அது பற்றி சொன்னாள்.

’அந்த கல்முகம் ஒரு மாமனிதன். உலகின் எல்லா சக்தியும் வாய்க்கப்பெற்றவன்.கருணையானவன்.தீமைகளை வெறுப்பவன்.அடுத்தவர் உணர்வை புரிந்து கொண்டவன். அவன் பிறந்து மனிதனாக நம் கிராமத்துக்கு கட்டாயம் வருவான். நீயும் நானும் ,இந்த கிராமமும் அதற்கு காத்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்.’ என்றாள். 

எர்னஸ்ட் மனதில் அம்மா சொன்னது உறைந்து விட்டது. தினமும் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டே இருப்பான்.

கடுமையான உழைப்பு முடிந்து ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த கல்முகத்தை பார்த்து கொண்டிருக்க ஆரம்பித்தான். 

ஒருநாள் அந்த ஊருக்கு, ஊரில் பிறந்து வெளியூருக்கு போய் பணக்காரனாகிய கணவான் திரும்பி வந்தான். எல்லோருக்கும் பணமாய் இறைத்தான். வாரி வழங்கினான். ஊர் மக்கள் எல்லோரும் அந்த பணக்காரனின் முகம் ‘கல்முகம்’ முகம் மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டார்கள். 

சிறுவன் எர்னஸ்ட் ஒடி வந்து பணக்காரனை பார்த்தான். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.பணக்காரனின் முகம் கல்முகம் மாதிரி கருணையானதாக இல்லை.

எர்னஸ்ட் மனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பின் எர்ன்ஸ்ட் வளர்ந்து இளைஞனான்.தினமும் கல்முகத்தை பார்த்து அந்த கல்முகத்தின் நல்குணங்களாக பலவற்றை நினைத்து கொண்டான்.கற்பனை செய்து கொண்டான்.அந்த குணங்களை எல்லாம் தானே செய்ய ஆரம்பித்தான்.பிறருக்கு உதவி செய்வதை செய்து கொண்டே இருந்தான்.

அப்போது ஊருக்கு திரும்பிய ’வீரன்’ ஒருவனின் முகம் ‘கல்முகம்’’ மாதிரியே இருப்பதாக சொன்னார்கள். எர்னஸ்ட் போய் பார்த்தான் அவனுக்கு திருப்தி இல்லை. 

எர்னஸ்ட் இப்போது கல்முகத்தின் உதவியால் இன்னும் பக்குவமானவனாய் ஆகியிருந்தான். மக்களுக்கு நிறைய போதித்தான்.வயதும் ஆகிவிட்டிருந்தது. கல்முகம் பார்த்து அவன் மனம் கனித்து விட்டிருந்தது. 

அப்போது ஊருக்கு ஒரு கவிஞன் வந்தான். அறிவை பொழிந்தான்.

மக்கள் அந்த கவிஞனைப் பார்த்து இவன் முகம் கல்முகத்தை ஒத்து இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள்.

எர்னஸ்ட்டுக்கு கொஞ்சம் பிடித்து இருந்தாலும், முழு திருப்தி இல்லை. கவிஞரை உபசரித்து கவனித்தார்.

கவிஞர் எர்னஸ்டிடம் மனம் விட்டு நிறைய பேசிக்கொண்டே இருந்தார். பின் திடீரென்று எர்னஸ்ட்டின் முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“எர்னஸ்ட் நான் கண்டிபிடித்து விட்டேன்.உங்கள் முகம்தான் அந்த ‘கல்முகம்’. நீங்கள் தான் ஊரார் எதிர்பார்த்த மகான். நிச்சயமாக சொல்கிறேன்” என்றார்.

ஊராரும் அதை மனமொத்து ஆமோதித்தார்.

ஆனால் எர்னஸ்ட் அதை ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக போய்விடுகிறார்.கதை முடிகிறது.

இந்த கதையை முழுவதுமாக படிக்கும் போது மிகநன்றாய் இருந்தது எனக்கு. 

கதையில் உள்ளதைப்போல உயரிய நோக்குள்ள கதைகளால் அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகளை அடிக்கடி போய் பார்க்கும் போது, அதன் சாரம் நம் மனதிலும் இறங்கிவிடுமோ என்னவோ.

அதற்காகத்தான் கோயில்களை கட்டிவைத்து, சாமி கும்பிடச்சொல்கிறார்களோ என்னவோ?

எர்னஸ்ட்டின் கண்களும் மனதும் இனிமேல் எனக்கும் சாமி சிலைகளை பார்க்கும் போது வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

Tuesday 3 September 2013

திருவான்மியூரில் ஒரு புத்தக கடையாம்... அதன் பெயர் பனுவலாம்...

வீட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் திருவான்மியூர் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இறங்கி ஜெயந்தி சிக்னலை நோக்கி நடந்தால் இடது பக்க முதல் மாடியில் ‘பனுவல் புத்தகக் கடை’ வந்துவிடுகிறது.

இன்றுதான் அதை தொடங்கியிருக்கிறார்கள்.தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.

நுழைந்ததும் பரிசல் சிவ செந்தில்நாதன் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.கைகளைக் குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

என்னை பனுவல் கடையை நடத்தும் அமுதரசன(?)க்கு அறிமுகப் படுத்தினார்.’தம்பி நல்ல வாசிப்பாளர்.இலக்கிய ஆர்வலர்’ என்று.

அப்புறம் நடிகை ரோகிணிக்காக வெயிட்டிங்.ரோகிணி வந்ததும் குத்துவிளக்கேற்றி திறப்பு நடந்தது.

இந்தப் பனுவல் புத்தகக் கடையை நடத்துவது மூன்று ஐடி புரொபசனல்ஸ்.அமுதரசன்,முகுந்தன்,சரவணன்.

தங்கள் வேலை நேரம் போக ‘வாழை’ என்றொரு அமைப்பையும் தொடங்கி நிறைய கிராமங்களுக்கு சென்று எழுத்தறிவை போதிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இப்போது திருவான்மியூரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த புத்தகக் கடையை தொடங்கியிருக்கிறார்கள்.கடை மட்டும் அல்ல கடையினுள்ளேயே ‘தடாகம்’ என்ற சிறிய அரங்கையும் வைத்திருக்கிறார்கள்.அதில் இலக்கிய நிகழ்வுகள் நடக்கும்.

விழாவை பரிசல் சிவ செந்தில்நாதன் தொகுத்து வழங்கினார்.விழாவில் வரிசைப்படி பேசியதை மிகச்சுருக்கமாக எழுதுகிறேன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் - இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.முதன் முதலில் இப்படி புத்தகம் வாங்கவும் அமர்ந்து படிக்கவுமான கான்சப்டை செயல் படுத்தியவர் ‘க்ரியா ராமகிருஷ்ணன்’.தற்போது புத்தங்கள் பற்றிய விமர்சனக்கூட்டங்கள் குறைந்து வருவது கவலையளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் எந்த புத்தகம் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலைமை வரவேண்டும்.ஃப்ரான்சில் இரவு லைப்ரரிக்கள் நிறைய் இருக்கின்றன.சைனாவில் ஏடிஎம் மெசினில் பணம் விழுவது போல புத்தகம் விழும் அறிவியலை செயல் படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கி கொடுத்துக் கொண்டே இருங்கள்.என் அப்பா எனக்கு 12 வயதில் ‘அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள்’ புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.அதை நான் படித்து புரிந்து கொண்டது என் நாற்பதாவது வயதில்தான்.அதனால் என்ன புத்தகம் இருந்ததினால்தான் எனக்கு அந்த ஆர்வம் வந்தது.ஆகையால் புத்தகம் கொடுத்துக் கொண்டே இருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு.

கல்வியாளர் கல்யாணி-இப்போதெல்லாம் நான் அதிக புத்தகம் படிப்பதில்லை.ஆனால் வாசிப்பில் வெறியாக இருந்த காலங்கள் இருக்கிறது,அமெரிக்கன் கல்லூரி நூல் நிலையம் முழுவதும் எப்போதும் ரொம்பி இருக்கும் அளவுக்கு முன்னர் படிக்கும் ஆர்வம் நம்மிடையே இருந்தது.

ட்ராஸ்கி மருது - இந்தக் பணிக்கு என்னால் முடிந்த யோசனையை அமுதரனுக்கு சொல்லியிருக்கிறேன்.அடிக்கடி என்னைச் சந்தித்து ஆலோசனை கேட்பார்.மிக ஆர்வமுடையவர் அவர்.புத்தகத்தை திருடிக்கூட படிப்போம்.அந்த அளவுக்கு புத்தகத்தின் மேல் காதல் கொண்டிருந்தோம்.

எனக்கு கோணங்கி ஒரு புத்தகம் கொடுத்தார்.அதில் ‘உங்களுக்க்காக இன்னார் நண்பரிடம் இருந்து திருடிய புத்தகம் -இப்படிக்கு கோணங்கி என்று கையெழுத்து போட்டு கொடுத்தார் கோணங்கி என்று சொன்னார் (இதை சொல்லும் போது அனைவரும் சிரித்தோம்)

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் - நான் ஒரு புத்தகம் வேண்டும் என்று பனுவலுக்கு போன் செய்து கேட்டேன்.கேட்டு எட்டு மணி நேரத்தில் கொடுத்தனர்.கொஞ்சம் அதிக பணம் கொடுத்தேன்.இல்லை புத்தகதிற்கான காசு மட்டும் கொடுத்தால் போது என்று வாங்கிச் சென்றார்கள்.

இது போல் நீதிபதி சந்துரு என்னை ஒரு புத்தகம் கேட்டார்.அதையும் பனுவல் எட்டு மணி நேரத்தில் கொடுத்தார்கள்

குழந்தைகள் டிவி மூலமாக சினிமா மூலமாக உலகை தெரிந்து கொள்கிறார்கள்.அவர்கள் வளர வளர புத்தகம் மூலமாக கற்றுக்கொள்ளும் தன்மையை நாம் வளர்க்க வேண்டும்.

பாலகிருஷ்ணன் மாரா என்பவர் புத்தகம் விற்று இப்போது பெரிய பணக்காரராகி இருக்கிறார்.அது போல் இந்தக் கடை இலக்கியம் வளர்ப்பது மட்டுமன்றி வியாபாரத்திலும் மேம்பட வேண்டும்.

நடிகை ரோகிணி - நான் ஐந்து வயதில் தெலுகு படம் ஒன்றில் கிருஷ்ணர் வேடம் போட்டேன்.அதன் பிறகு நான் எங்கு போனாலும் ஆந்திராவில் ஆரத்தி எடுத்தார்கள்.படிக்காமல் இருந்தால் ஆரத்தி எடுப்பார்கள் என்று மகிழ்ந்தேன்.

ஆனால் அதன் பிறகு பள்ளி சென்று படிக்காததில் வருத்தமுண்டு எனக்கு.என்னுடைய மொத்தப் படிப்பே இரண்டு வருடங்கள்தான்.அதன் பிறகு நான் ஸ்கூல் போனதில்லை.

அப்படியான எனக்கு, அறிவு கிடைத்தது புத்தகங்கள் மூலமாகத்தான்.

இந்த விழாவுக்கு லேட்டாக வந்ததுக்கு காரணம் எனக்கு இருக்கும் உடல் பிரச்சனைதான்.நானே டிரைவிங் செய்தால் வாமிட் வரும்.

இந்த விழாவுக்கு ரொம்ப ஆர்வமாக வந்ததன் காரணம் ஃப்ரீ புக்ஸ் கிடைக்கும் என்பதால்தான்.( சிரிப்பு).

என் மகன் யாரும் சொல்லாமல் அவனே படிக்கிறான்.காரணம் வீடு முழுவதும் இருக்கும் புத்தகங்கள் அவனைப் படிக்க வைக்கின்றன.புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகமானால் அதை பெரும் செலவாக நினைக்கிறோம்.அந்தப் போக்கு தவறு. (ரோகிணி மிக அழகாக இருந்தார்.)

இப்படி பேசி முடித்த பிறகு அனைவருக்கும் நவதானிய பொங்கல் பறிமாறப் பட்டது. பின் திணையரிசி பாயசம் கொடுத்தார்கள்.

இரண்டுமே சுவையாய் இருந்தது.

தினை பிளாஸ்டிக் கப்பின் கீழே தங்கிவிட்டது.அதை அப்படியே கவிழ்த்து வாயில் கொட்டப் பார்த்தேன் முடியவில்லை .ஒட்டியிருந்தது.தட்டி தட்டிப் பார்த்தேன்.கிழே விழவில்லை.மற்றவர்கள் என்னைப் பார்க்கிறார்களோ என்ற வெட்கம் வர, போய் ஸ்பூன் வாங்கி எடுத்துச் சாப்பிட்டேன்.

அதன் பிறகு கிழ்கண்ட புத்தகங்களை வாங்கினேன்.

1.சுவர்கள் திசையெங்கும் கொண்ட கிராமம் -அழகிய பெரியவன்

2.மாற்றுவெளி ஆய்விதழ்;கேரளச் சிறப்பிதழ்

3.வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு - சொலை சுந்தர பெருமாள்

4.வரலாறும் வக்கிரங்களும்- ரொமிலா தாப்பர்

5.பட்ட விரட்டி- காலித் ஹுசைனி

6.ராஜ ராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - சி.இளங்கோ.

வாங்கி, பரிசல் சிவ செந்தில்நாதனிடம் சொல்லி (அடிக்கடி வாங்க விஜய்.நிறைய நிகழ்வுகள் இங்க நடக்கும்) விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் மோர்குழம்பும் புதினா துவையலும் அவரைக்காய் பொறியலும் வைத்து சாப்பிட்டேன்.

அவ்ளோதான்...