Wednesday 16 May 2012


  • முன்குறிப்பு:
    சின்ன சின்ன கதைகள். உங்கள் வாழ்க்கையை திசைமாற்ற போகும் கதைகள்.
    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை - 1
    ...
    நீங்கள் பேயை பார்த்திருக்கீர்களா என்று கேட்டார் வந்தவர் ?

    நான் பணிவோடு,” திருமணம் செய்தால் பார்க்கலாம் !”என்றேன்.
    ...
    என்னை குருவாக ஏற்று காலில் விழுந்து வணங்கினார் அவர்...

    ------------------------------------------------------------------------------------------------
    டுபாக்கூர் ஜென் கதை- 2

    முதலாளி எங்கே போயிருக்கிறார் ? என்று கேட்டேன்.

    மும்பைக்கு ! என்றான்
    ...
    ”மும்பைக்கா? நானும் மும்பைக்குதான் போயிருக்கிறாறோன்னு தப்பா நினைத்து விட்டேன் !“ என்றேன்.

    நான் அவன் இரண்டு பேருமே ஞானம் பெற்றோம். :)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 3

    பஸ்ஸில் அந்த பெண் மிக அழகாக இருந்தாள்.

    கண்டக்டர் உட்பட எல்லோரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.
    ...
    திடீரென்று “கர பூம் “ என்று தன் சளி மூக்கை சீந்தினாள் அவள்.

    கண்டக்டர் உட்பட பஸ்ஸில் எல்லோரும் ஞானம் பெற்றார்கள். :)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 4

    ”குருவே! ஒருவாரம் வெளியே போகிறோம்.ஏன் கடிகாரத்தின் பேட்டரியை எடுத்து வைத்து விட்டு செல்ல கூடாது? பேட்டரி மிச்சமல்லவா? ”என்றான் சிஸ்யன்.

    ஒரு வாரம் சுத்தாமல் இருந்தால் சின்ன முள்ளுக்கும் பெரிய முள்ளுக்கும் இடையே தூசி அடைத்து விடாதா ? என்றார் குரு.

    ஒளி பிறந்தது.:)

    ------------------------------------------------------------------------------------------------

    டுபாக்கூர் ஜென் கதை- 5

    காலையில் குப்பை எடுக்க வந்தவரிடம் வெள்ளுடை குரு, மிக அருமையான புனித கருத்துகளை சொன்னார்.

    கேட்டதனால் புனிதமடைந்து விட்டாய் என்றார்.
    ...
    குப்பை எடுக்க வந்தவர் ஒரு அழுக்கு ஆப்பிளை காட்டி உங்கள் புனிதத்தால் இதை கழுவி கொடுத்தீர்களானால், எனக்கு பசியாரும் என்றார்.

    குரு வெளிச்சமடைந்தார்.

கதைபோல ஒன்று - 8

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது ராஜீவ்காந்தி நாகர்கோவில் வர்ராருன்னு, சட்டை கூட போடாமல் ஓடிப்போனேன்.

நாகர்கோவில் பறக்கைல உள்ள ரிசர்வ் போலீஸ் கேம்பு கிரவுண்ட்ல, மத்தியானம் 12 மணிக்கெல்லாம் வந்து நின்னுட்டேன். 

கூட்டம்.

சவுக்கு கம்பத்த வேலியா நட்டு அது பின்னாடி எங்கள் நிறுத்தி இருக்காங்க. ரொம்ப நேரமா ராஜீவ் காந்தி வரல. ஜனங்க சவுக்கு கம்பமெல்லாம் வெத்தல போட்டு மிச்சமிருக்கிற சுண்ணாம்ப தடவ ஆரம்பிச்சிட்டானுங்க.

பல கதைகளையும் பேசிகிட்டே இருந்தாங்க.ராஜீவ் காந்தி கலரா இருக்கிறத பத்தியும், அவரு நல்லா இங்கிலீஸ் பேசுரதப் பத்தியும் அடிச்சி விடுறாங்க ஆளாளுக்கு.

ஒரு தாத்தா இன்னும் மேல போய் , ராஜிவ் காந்தி டெய்லி காலை டிபனா ஒரே ஒரு ஆப்பிள் மட்டும்தான் சாப்பிடுவார் என்றும் , அதுவும் வெளிநாட்டில் இருந்து தரவிக்கபட்ட தரமான ஆப்பிள் மட்டுமே சாப்பிடுவார் என்று பக்கத்திலேயே இருந்து ஆப்பிள் வெட்டி கொடுத்த மாதிரி சொன்னார்.

ஒரு வழியா ஹெலிகாப்டர் இறங்கிற்று அந்த காத்தாடி சுத்தி முடிக்கயே ரொம்ப நேரம் ஆச்சு .

அதுல இருந்து சின்ன உருவம் கைய்ய அசைச்சுட்டு சட்டுன்னு டெண்டுக்குள்ள போயிற்று. அதுதான் ராஜீவ் காந்தின்னு ஒரே பரபரப்பு.

எனக்குன்னா கடுப்பு.

என்ன இவர பாக்க 12 மணில இருந்து பச்ச தண்ணி கூட குடிக்காம நாயா கிடக்குறேன், இவரு என்ன இப்படி போயிட்டார்ன்னு கோவம்.

திரும்ப வரும் போது பக்கத்துல வருவாருன்னு ஒரு போலீஸ்காரர் சொல்ல ஜனங்க பொறுமையா வெயிட் பண்ண நான் வெளியே வந்துட்டேன்.

வழி நெடுக போலீஸ்.

நடந்து வரும்போது ,ஒரு விளையை பார்த்தேன் . விளை முழுதும் கொல்லா மரம் (முந்திரி மரம்) . அதுல கொல்லாம்பழம் சிகப்பும் மஞ்சளுமாய் குண்டு குண்டாய் இருக்குது.

யாருமே இல்லை.

பயமாய்த்தான் இருந்தது. ரெண்டு பழத்த பறிச்சு சாறு பொங்க பொங்க சாப்பிட்டேன். நாக்கை இழுத்து பிடித்தது கொல்லாம்பழம் சுவை.

“என்னடா பண்ற “ ஒரு குரல் கேட்டது .

உடம்பு பதறிற்று.

நடுங்கி பாத்தா,காவலுக்கு நிக்கும் போலீஸ்காரர் ஒண்ணுக்கடிக்கும் போது நான் திருடரத பாத்து விளையாட்டா மிரட்டி கூப்பிட்டிருக்கிறார்.

உண்மையிலேயே மிரட்டுரதா நம்பிட்டேன்.

“ மேல பாரு” . பார்த்தேன் .

”ரெண்டு ஹெலிகாப்டர் பறந்து போயிட்டு இருக்கு பாரு! அந்த ஹெலிகாப்டர் கேமரால உன்ன படம் எடுத்துடுவானுங்க. எடுத்த உடன உன்ன பிடிச்சிருவாங்கன்னு ”சொன்னார்.

எம்முகத்துல ரத்தமே இல்ல.

ஓடினேன் வீட்டை நோக்கி, கால் நடுங்க.

ஹெலிகாப்டரோ என்னை துரத்துது.

நான் முருகா! முருகா! ன்னு சொல்லிட்டே ஒடினேன் .

ஒரு வழியா வீட்டுக்கு வந்து கதவை பூட்டினேன்.

அரைமணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் சத்தம் நின்ன பிறகுதான் வெளியே வந்தேன்.

அந்த போலீஸ்காரர் முகத்தையும் , கொல்லாம்பழத்தயும் மறக்கவே மாட்டேன் . :))

கதைபோல ஒன்று 7

இது முதல் கதைங்க....

கடையில் இருக்கும் போது ,ஒருவர் 500 ரூபாயோ 100 ரூபாயோ கொடுத்தாரானால், உடனே கல்லாவில் போடவே கூடாது, பட்டறை டேபிளில் பேப்பர் வெயிட் வைத்து வைக்க வேண்டும் என்ற பாடத்தை ஏழாம் வகுப்பில் படித்தேன்.

அப்பா கடையில் இல்லாத சமயத்தில் கார்மெல் ஸ்கூல் கேண்டீனிலிருந்து ஒருத்தர் ரெண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கினார்.

100 ரூபாய்தான் கொடுத்தார்.

நான் 100 ரூபாய்க்கு சில்லறை கொடுக்கும் போது , 500 ரூபாய் கொடுத்தேன் என்று சாதிக்கிறார்.

என்னால் சரியா சண்டை போட முடியவில்லை. கடையில் வேலை பார்க்கும் அண்ணன் எனக்கு சப்போர்ட் பண்ண பிரச்சனை முத்துகிறது.

அப்போதான் கடைக்குள் அப்பா வருகிறார். என்ன விசயம் என்று கேட்டு கொண்டார்.

என்னை பார்த்து “நீ 100 ருபாய் வாங்குனியா !500 ரூபாய் வாங்குனியா ? “ என்று கேட்டார்.

அந்த பதட்டத்தில் திகைத்து ஒரு நிமிடம் யோசித்தேன் பாருங்கள், டக்கென்று 500 ரூபாயாக பாவித்து மிச்சத்தை கொடுத்து பிரச்சனையை முடித்தார்.

கிட்டத்தட்ட அழுது விட்டேன். “அவரு 100 ரூபாதான் குடுத்தாரு “ என்று குளறும் குரலில் சொல்ல,
அப்பா என்னை பார்த்து சிரித்தார்.

“ அடிச்சு பேசனும்ப்பா ! நீ யோசிச்சா உன்ன யாரும் நம்ப மாட்டாங்கல்ல . சரி அத விடு. நீ போய் பக்கத்து கடையில போய் ரெண்டி லிம்கா வாங்கிட்டு வா !” குடிப்போம் என்று சொன்னார்.

அப்பா என்னை மன்னித்தது , திட்டாதது எரிச்சலையூட்டிற்று என்றால் “லிம்கா” வாங்கி கொடுத்தது செம காண்டாக்கியது என்னை.

சரி. முதல் கதை முடிஞ்சுட்டுங்க. அப்படியே ரெண்டாவது கதைக்கு வாங்க .

500 ரூபாய் நஸ்டம் ஏற்படுத்திய மறுநாள் “ஜான் பேட்ரிக்” சார் டுயுசன் போறேன்.

ஜான் பேட்ரிக் தான் கணிதத்தை லவ் பண்ண சொன்னவர். கணிதம் மேல் ஆர்வம் வர காரணமானவர்.

அவரிடம் பொதுவாக கார்மெல் ஸ்கூல் பசங்கதான் படிப்பாங்க.அங்கு நிறைய கார்மெல் ஸ்கூல் பிரண்ட்ஸ் கிடைச்சாங்க.

எஸ். எல் .பி ஸ்கூல்ல இருந்து நானும் , ”ரெஜூ ஐப்” பும் தான் இருந்தோம்.

ரெஜூ ஐப் மலையாளம் எடுத்து படித்தான். அதாவது எல்லாம் ஆங்கிலம், தமிழுக்கு பதிலா மலையாளம் பாடம். ரெஜூ ஐப் ரொம்ப அப்பாவியா இருப்பான். கிண்டலடிச்சிகிட்டே இருப்பேன்.

நானும் ரெஜூ ஐப்பும் டுயுசன் ஃபீஸ் கொடுக்கிற நாள். முதலில் 50 ரூபாய ஜான் பேட்ரிக் சார் கிட்ட கொடுத்துட்டேன். எல்லோரும் கொடுத்துட்டோம், ரெஜு ஐப்பை தவிர.

டுயுசன் முடிஞ்ச உடன் சார் கேட்கிறார் , ”ரெஜூ ஐப் ! என்னடே மறந்துட்டியா “ .

அவன் தயங்கிய படியே 40 ரூபாய் கொடுத்தான்.

என்னடே பத்து ரூபாய் கொறையுது .

ரெஜு ஐப் தெளிவாய் கூறினான் . “ சார் அம்மா சொன்னாங்க , ஒரு சப்ஜெக்ட்டுக்கு 10 ரூபாய் வைத்து அஞ்சு சப்ஜெக்டுக்கு 50 ரூபாய் ஃபீஸ். உன் சார்தான் மலையாளம் எடுக்கலியே . அப்போ 40 ரூபாய்தான கணக்கு வரும்”

சார் அசந்து விட்டார் “ நீ சொல்றதும் சரியாதாம்பா இருக்கு” . என்று சிரித்தார்.

வெளியே வந்து ரெஜு ஐப்பிடம் அவன் அம்மா ஏன் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்று எரிச்சலாய் கேட்டேன்.

அதற்கு அவன் அது அம்மா சொன்னது இல்லையென்றும், தானே யோசித்து சொன்னது என்றும் பெருமையா சொன்னான்.

அந்த பத்து ரூபாய உண்டியல்ல “கூட்டி போட்டு” பெரிய சைக்கிள் வாங்குவானாம் அந்த கேரள குட்டன் ....

சொல்லுங்க பாஸ்.

முதல் கதைக்கும் ரெண்டாவது கதைக்கும் எதாவது சம்மந்தம் உண்டா ? லேதா ? :))))

கதையில்லாத ஒன்று - 6



சுப்பிரமணியம் பிள்ளைன்னு ஒரு மேத்ஸ் வாத்தியார் இருந்தார்.

‘பிள்ளை’ என்பது அவர் ஜாதிதான். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்.பெரும்பான்மையான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் அழகானவர்கள்.ரோஸ் வெள்ளையாய் சிகப்பும் உதடுமாய் ஆண்கள் கூட ஒளிருவார்கள்.

சுப்பிரமணிய பிள்ளையும் அப்படித்தான். இளமையான மோகன்லால், கலராய் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இருப்பார். ஹிரோ ஹோண்டாவில் வரும் அவர் ஸ்டைலே தனி.

கணிதத்தில் பின்னுவார். கால்குலஸ் பார்முலா தினமும் கேட்ட பிறகே பாடத்தை ஆரம்பிப்பார்.தன்னம்பிக்கை அதிகம்.

நக்கலும் அதிகம்.

பொதுவா ஒருவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால். அவர் “அசோக் பில்லர்” என்று சொல்கிறார் வைத்துகொள்வோம். விட்டுவிடுவோம் தானே!. அங்குதான் சுப்பிரமணியம் பிள்ளை பஞ்ச் வைப்பார்.

முதலில் மாட்டியவன் நான்.

”ஏய்! எங்க இருந்துடே வரெடே !”.
”சார் நாகர்கோவில்ல இருந்து”.
”ஹா ஹா நாங்கெல்லாம் அரேபியால இருந்து வரல கேட்டியா ! கரக்டா சொல்லு” .
”சார். ஹிந்து காலேஜ் பின் கேட் இருக்குல்லா அங்கின இருந்து வரேன்”
”ஹா ஹா ஹிந்து காலேஜ் பின் கேட்ல இருந்தா.
எப்படி? உன் அப்பா,அம்மா ,குடும்பம் எல்லாம் பல்லி மாதிரி ஹிந்து காலேஜ் பின் கேட்ல ஒட்டிட்டு இருப்பீங்களா.”

வகுப்பு மொத்தமும் அதிரும்.

அடுத்து மாட்டியது ஜியா உல் ஹக்குன்னு ஒரு பையன்.

அவன்கிட்ட கேட்டார்.

’நீ எங்க இருந்து வரடே !
”சார் “மத்தியாஸ் வார்டுல” இருந்து சார்.
ஹா ஹா ! மத்தியாஸ் வார்டு வராண்டலதான் தூங்குவியாடே !

தீர்மானம் பண்ணிவிட்டால் அவனை கிண்டல் பண்ணாமல் ஓய மாட்டார்.
சிரித்து சிரித்து அசந்து விடுவோம் .
ஹெட்மாஸ்டர் கூட அவரை பார்த்தால் வெச்சுக்க மாட்டார்.சிலபஸ் கரெக்டா முடிப்பார்.

ஒரு நாள் லீவு போட்டாலும் அப்பா அம்மாவ கூட்டிட்டு வரணும்பார்.

மொத்த கிளாஸ்யயே கிளாஸா ஆக்கிட்டார். ஒரே கடுப்பு அவர் சர்வாதிகாரம். நக்கல்.

மற்ற நல்ல விசயம், யாருக்கும் தெரியாமல் நிறைய உதவி செய்வார். உண்மையிலேயே கஸ்டபட்டவன் என்றால் என்ன வேண்டுமானால் செய்வார்.

வீட்டிலும் தினமும் அவரை பத்தியே பேசுவேன்.அவர் மாதிரியே மிமிக்ரி பண்ணுவேன்.என் ஹீரோ அவரே.

என் +2 டைரிய எடுத்து பார்த்தால் அவர பத்தி நிறைய எழுதி வைச்சிருப்பேன்.

அப்புறம் நாகர்கோவில்ல் இருந்து சென்னை வந்து மூன்று வருடம் கழித்து ”சுப்பிரமணியம் பிள்ளை சார் ”ஏதோ பிரச்சனைல தற்கொலை செய்துகிட்டதா நண்பன் சொன்னான்.

செம கடியா இருந்தது.

தன்னம்பிகைனாலே அதுல இருந்து காமெடியாத்தான்தெரியுது : )