Tuesday 30 April 2013

கதை போல ஒன்று - 90


ஆரோக்கியசாமி என்னுடன் காரில் ஊருக்கு வருவது மகிழ்சியாகவும் இருந்தது, பழைய டிரான்சிஸ்டரை திரும்ப கேட்பானே என்று கவலையாகவும் இருந்தது.

எங்கள் கடைக்கு எதிர்த்தாற்போல உள்ள சித்தப்பாவின் கடையில் காலை ஆறுமுதல் இரவு பதினொன்று வரை வேலை பார்க்கும் பையன்தான் ஆரோக்கியசாமி.பதிமூன்று வயது, என்னுடைய வயதுதான் இருக்கும்.

சித்தப்பா கடைக்கு இரண்டு வருடம் முன் வந்தான்.

வந்த புதிதில் தினமும் அழுது கொண்டே இருப்பான்.

சித்தப்பா அவனை வேலை செய்ய விடாமல் கடையில் வைத்து உன்னியப்பமும்,முட்டைகோஸ் கேக்கும் வாங்கி சமாதானபடுத்துவார்.

கடையில் இருக்கும் மற்ற இரண்டு பையன்கள் ஆரோக்கியசாமியை கிண்டல் செய்வான்கள்.நான் கூட அடிக்கடி சித்தப்பா கடைக்கு போய் ஆரோக்கியசாமி அழுவதை வேடிக்கைபார்த்துவிட்டு வருவேன்.

கன்னங்கரேல் என்றிருப்பான்.

மிகுதி அழுகையால் மூக்கில் வடியும் சளியை துடைக்காமலே இருப்பது வழக்கம்.

தலைமுழுக்க தேங்கா எண்ணெய்யை வைத்திருப்பான்.நெஞ்சில் ஒரு சிலுவை டாலர் போட்ட செயின் தொங்கும்.

தேவைக்கு அதிகமான சலவையால சுருங்கின பிரிந்த கால்சட்டை.முட்டியில் இருக்கும் அழுக்குச்சாம்பல் என்ற தோற்றமாய் இருப்பான்.

ஒருமாதத்தில் சரியாகி விட்டது.அழுகை நின்றது.

எடை போட்டு பொட்டலம் கட்ட பழகிக்கொண்டான்.

பத்து முட்டைகளை லாவகமாக இங்கீலீஸ் பேப்பரில் மடக்கி அழுத்தம் கொடுக்காத ஆனால் உறுதியான சணல் கட்டுக்களை போட பழகிக்கொண்டான்.

சும்மா இருக்கும் நேரத்தில்  கையகலத்தில் முக்கால்வாசி இருக்கும் பைபிளை கால்சட்டையில் இருந்து எடுத்துப்படித்து கொண்டிருப்பான்.”

யல ஆரோக்கியசாமி பைபிள் படிச்சி ஃபாதராகப் போறான் என்று மற்ற பையன்கள் கிண்டல் செய்வதை பொருட்படுத்துவதே இல்லை.

சித்தப்பா தன் வக்கீல் தொழிலை அதிகம் கவனித்ததால் பலசரக்கு கடையை நடத்த சிரமப்பட்டு, அதை அரிசி மட்டும் விற்பனை செய்யும் அரிசிக்கடையாக்கினார்.

கடையில் இருக்கும் மூன்று பையன்களில் இரண்டு பையன்களுக்கு கணக்கை முடித்து அனுப்பிவிட்டார்.

ஆரோக்கியசாமியை மட்டும் வைத்துக்கொண்டார்.
அரோக்கியசாமி கல்லாவில் உட்கார்ந்தான்.

சித்தப்பா கோர்ட்டுக்கு போகும் போது ஆரோக்கியசாமியே கடையின் முதலாளியாகிவிட்ட கம்பீரம் அவன் முகத்தில் வந்து சேர்ந்தது.

அப்பா கடைக்கு போனால் மட்டும் கல்லாவில் இருந்து எழுந்து நிற்பான்.

நான் போனால்,கல்லாவில் இன்னும் சாகவாசமாக இருந்து கொண்டு என்னை நோக்குவது போல தோண்றுவது, உண்மையா அல்லது அது என் தாழ்வுணர்ச்சி கொடுக்கும் மாயத்தோற்றமா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாது.

நானும் அவனும் நிறைய பேசுவோம்.

அவன் அப்பா,அவன் அக்கா சடங்கிற்கு குடித்து விட்டு வந்தாராம்.

எல்லோரும் அவரை திட்ட வேட்டியை அவுத்து பந்தலுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தாராம்.

அம்மா அழுதுகொண்டே வேஸ்டியை கட்டி விடும்போது அம்மாவின் முதுகில் அப்பா ஒங்கி குத்த,வர்ம அடியாய் பட்டு அம்மா மூச்சிழுத்து கீழே விழுந்தாளாம்.தூக்கிக்கொண்டு ஆஸ்பித்திரிக்கு எல்லாரும் ஒட,இன்னும் ஒரு கூட்டம் அப்பாவை அடித்து துவைக்க,ஆரோக்கியசாமியும்,சடங்கு பட்டுப்புடவையில் இருக்கும் அவன் அக்காவும் அழுதுகொண்டே நின்றார்களாம்.

அதற்கு மறுநாள்தான் அம்மா ஆரோக்கியசாமி படிப்பை நிறுத்தி நாகர்கோவிலுக்கு வேலைக்கு அனுப்பினாராம்.

“உனக்கு சம்பளம் எவ்வளவு ஆரோக்கியம்”

“தெரியாதுடே.அம்மாக்குத்தான் தெரியும்”

“அடுத்தது எப்போ ஊருக்கு போவ”

“கோயில் திருவிழாவுக்குதான் போகனும்.அக்காவ பார்க்கனும்.அக்காக்கு நான்ன்னா ரொம்ப பிடிக்கும்.இதப்பாரு லட்டர் போட்டிருக்கா”என்று நீலநில கவரை காட்டுவான்.

சித்தப்பா ஆரோக்கியசாமியிடம் முழுதமாய் கடையை ஒப்படைத்தார்.

என்ன வியாபாரம் விற்றது என்பதை தனியாக ஒரு நோட்டில் துல்லியமாக எழுதிவைத்து காசைக்கொடுப்பான்.

காலையில் சித்தப்பாவிடம் பணம் வாங்கிப்போய் கோட்டாறு சென்று அரிசி கொள்முதல் செய்வான்.

சாப்பாட்டை கடையிலே முடித்துக்கொள்வான்.மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய் அரை மணி நேரத்தில் திரும்பிவிடுவான்.இரவு பத்து மணிக்கு மேல் கடையை அடைத்து சாவியை சித்தப்பாவிடம் கொடுப்பது வரை வேலை செய்து கொண்டே இருந்தான்.

நடுவில் ஆரோக்கியசாமி அம்மாவுக்கு அம்மை போட்டிருப்பதாக சித்தப்பாவுக்கு செய்தி வர அவன ஊருக்கு போகச்சொன்னார்.
“வேண்டாம் அண்ணாச்சி. எனக்கு கோயில் திருவிழாவுக்கு போக பத்து நாள் லீவு மட்டும் கொடுங்க. இப்ப லீவு வேண்டாம்” என்றான்.

ஆரோக்கியசாமி கல்லாவில் இருக்க,நான் சித்தப்பாவின் கடையுள் உலாத்திக்கொண்டிருக்கும் போது தூசி படிந்த செல்ஃபின் உள்ளே அது என்னை ஈர்த்தது.பழைய பாக்கெட் டிரான்சிஸ்டர்.எடுத்து திருப்பி திருப்பி பார்த்தேன்.

“இது என்னதுடே”

“அது பழைய பாக்கெட் ரேடியோடே”

“அழகாயிருக்க ஆரோக்கியம்.இத சரி பண்ணி நானே வெச்சிக்கப்போறேன்”

ஆரோக்கியசாமி முகம் மாறியது.

“இல்லடே அது கடைக்க ரேடியோ.அத நீ கொண்டு போகக்கூடாது.அண்ணாச்சி என்கிட்ட கேட்ட அவியளுக்கு என்ன பதில் சொல்றது”

எனக்கு கோபம் வந்தது.நம்ம சித்தப்பா கடைக்கு வேலைக்கு வந்துட்டு நம்மளையே அதிகாரம் பண்ணரான் பன்னிப்பய என்று நினைத்துகொண்டேன்.

மறுநாள் சித்தப்பா இருக்கும் போது, சித்தப்பாவிடம் கேட்டு ரேடியோவை நான் எடுத்துக்கொண்டேன்.

“நீ அத யார்க்கிட்டயாவது கொடுத்து சரி பண்ணி, இங்க கடையில் ரெண்டு நாள் வெச்சி எங்களுக்கு பாட்டு போட்டு காட்டிட்டு அத எடுத்துக்க “ என்றார் சித்தப்பா.வெற்றிப்பெருமிதமாய் ஆரோக்கியசாமியை பார்த்தேன்.

வாரம் போனது.வாங்கிய டிரான்ஸ்சிஸ்டரை தூக்கி ஒரு இடத்தில் போட்டவன் தான் அதை மறந்தே போய்விட்டேன்.

இப்போது ஆரோக்கியசாமி ஆரம்பித்தான்.தினமும் சித்தப்பா கடைக்கு போகும் போதெல்லாம் டிரான்சிஸ்டர் சரியாகிவிட்டதா என்று கேட்ப்பான்.அதுவும் சித்தப்பா இருக்கும் போது வேண்டுமென்றே கேட்பான்.தினமும் ஒரு பதிலைச்சொல்வேன்.

“எதுக்குன்னா விஜய்.ரேடியோ கடைப்பொருள் பாத்துக்க அதான் கேட்டேன்” என்பான்.

அவனிடம் பேசுவதை தவிர்த்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக சித்தப்பா கடைக்கு போவதையே தவிர்த்தேன்.அப்பாவிடம் சொன்னேன்.

“ஆரோக்கியம் அவன் கடையில் பொறுப்பா கவனமா இருக்கான்.நீதான் வாக்கு கொடுத்த.அப்ப அது படி நீதான் இருக்கனும் “ என்று முடித்துக்கொண்டார்.

ஆரோக்கியசாமி மேல் எரிச்சல் வந்தது.பழைய சரி செய்யாத பாக்கட் ரேடியோவையும் கொடுக்க முடியாது.கிண்டல் செய்வான்.அது மானப்பிரச்சனை.

கோயில் கொடை வந்தது.

வழக்கமாக பஸ்ஸில் போகும் நாங்கள் அன்று கார் பிடித்து போனோம்.காருக்குள் நான் ஏறும்போது உள்ளே சீட்டில் ஆரோக்கியசாமியும் தன்னுடைய பையை மடியில் வைத்து உட்கார்ந்திருந்தான்.மகிழ்ச்சி தாங்கவில்லை

அவன் கையை பிடித்துக்கொண்டேன்.

“நீ கிறிஸ்டின் ஆச்சே உனக்கும் திருவிழாவா இப்போ “என்றேன்.ஆரோக்கியசாமி சிரித்தான்.

பேசவில்லை

“ஒ எங்க கோயில் கொடை முடிஞ்சதும் சர்ச்சுல திருவிழா ஆரம்பமாயிருமோ “என்றேன்.

அதற்கும் ஆரோக்கியசாமி சிரித்தான்.

அம்மா காரில் போகும் போது ஆரோக்கியசாமிக்கு கொழுக்கட்டை,முறுக்கு எல்லாம் கொடுத்தாள்.வேண்டாம் என்று மறுத்தவன் பிறகு சாப்பிட்டான்.

என்னிடம் சரியாக பேசாதது கூட எனக்கு ஆச்சர்யம் இல்லை.ஆனால் டிரான்சிஸ்டர் கேட்காமல் இருப்பது ஆச்சர்யம்.

இதோ அம்மா இருக்கிறார்கள்.அப்பா சித்தப்பா அண்ணன் எல்லோரும் இருக்கிறார்கள்.இப்போது டிரான்ஸ்சிஸ்டரை கேட்க வேண்டியதுதானே ஆரோக்கியசாமி.கேட்டு தர்மசங்கடபடுத்த வேண்டியதுதானே என்று மனதிற்குள் கேட்டேன்.

வள்ளியூரில் இறங்கி முறுக்கு வாங்கித்தந்தார் அப்பா.

ஒண்ணுக்கிருக்க கீழே இறங்கும் போது ஆரோக்கியசாமியையும் கூப்பிட்டேன்.

” எனக்கு வரல” என்று என்னை தவிர்த்தான்.

மெய்ஞானபுரம் தாண்டியதும் “திரேஸ்புரம்” வந்தது, கார் ஊருக்குள் சுற்றி சுற்றி ஒரு தெருமுனையில் நின்றது.என்னை காருக்குள் வைத்துகொண்டு.ஆரோக்கியசாமியும் சித்தப்பாவும் இறங்கினார்கள்.

வெளியே கந்தல் சேலை கட்டி கொண்டுக் ஒல்லியாக பெண் நின்றிருந்தார்.அதுதான் ஆரோக்கியசாமியின் அம்மாவை இருக்கவேண்டும்.

காருக்குள் இருந்து பார்க்கத்தான் முடிந்தது.கேட்க முடியவில்லை.சித்தப்பா பணத்தை எடுத்து ஆரோக்கியசாமியின் அம்மாவிடம் கொடுத்தார்.அவர் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டே பணத்தை வாங்கிக்கொண்டார்.சிரித்தபடி கும்பிட்டு கொண்டே சித்தப்பா காருக்குள் வந்தார்.

அப்பா கேட்டார் “என்னாச்சி தம்பி”

“என்னத்த சொல்றது.என் பையன் தெரியாம செய்ஞ்சிட்டான்னு அம்மா கெஞ்சுறா.கணக்கு முடிச்சி காச கையில கொடுத்துட்டேன்.”

அப்பா டிரைவரைப்பார்த்து “நீங்க வண்டிய எடுங்கன்னே “ என்று சொன்னவர் சித்தப்பாவிடம் திரும்பி

“ஆமா கடைப்பசங்க பிரச்சனை பண்ணுனா நாம எப்பவுமே பஸ்ஸுல அவனுகள தனியா அனுப்பக்கூடாது.ஒடிப்போனா பிறகு அவன் அப்பா அம்மாவுக்கு நாமதான் பதில் சொல்லனும்.கார் புடிச்சி வீட்டிலயே போய் விட்ரனும்.அதான் சேஃப்டி”

சித்தப்பா கத்தனார்

“தேவ்டியாப்பய.எவ்ளோ நம்பினேன்.மதியானம் ஒருத்தன வரச்சொல்லி சீட்டு கட்டிருக்கான்னே கடைப்பணத்த எடுத்து.தயளி அவன் நெஞ்சழுத்தத பாத்தியா.”

அப்பா பதிலுக்கு கத்தினார்.

“சரி திருடினான் அதுக்கு.நேத்து ராத்திரி அவன அந்த அடியா அடிப்பாங்க.நான் வரலன்னா அவன நீ அடிச்சு கொன்னுருப்ப.அவன் கால் எதுக்கு அஞ்சு கிலோ படிக்கல்ல எடுத்து எறிஞ்ச.கால் முறியாம போனது நம்ம அதிர்க்ஷ்டம்.எவ்வளவு ரத்தம்,ஆஸ்பித்திரி கட்டுன்னு எல்லாருக்கும் கஸ்டம்.உன் முன்கோவத்த கொறச்சுக்கப்பா “ என்றார்.

சித்தப்பா முறைத்து கொண்டே இருந்தார்.

கார் மெல்ல கிளம்பியது.நான் ஆரோக்கியசாமி வீட்டைப்பார்த்தேன்.

பனை ஒலைக்குடிசையை நோக்கி விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தவனை தாங்கி பிடித்து கூட்டிப்போனவர் அவன் அம்மா இல்லை. பழைய தாவணியும் பாவாடையும் கட்டிருப்பதால் அது ஆரோக்கியசாமிக்கு ப்ரியமான அவன் அக்காவாகத்தான் இருக்கவேண்டும்.

இனிமேல் டிரான்ஸ்சிஸ்டரை கேட்க ஆரோக்கியசாமி இல்லை.அவன் கால்கட்டோடு வலியோடு குடிசையில் படுத்திருப்பான்.

சூன்யம்யாயிருந்தது.

வெறிக்க ரோட்டைப்பார்த்து கொண்டே இருந்தேன்.சித்தப்பா கொஞ்ச நேரம் பொறுத்து காரை நிறுத்த சொன்னார்.

என்னிடம் குனிந்து “இந்த இடத்துல கரும்புச்சாறு நல்லா இருக்கும் குடிக்கிறியா விஜய் “என்றார்.

பதில் சொல்லாமல் சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

Monday 29 April 2013

கதை போல ஒன்று - 89

எனக்கு முன்னால் நின்றவர்கள் இரண்டு தொடர் பாம்புகளாய் வளைந்து வளைந்து நின்றிருந்தனர்.

ஒரு தளத்திற்கு ஒரே ஒரு பில்லிங் கவுண்டர்தானாம்.

கூட்டத்தில் வேர்த்தது.கொஞ்சம் தள்ளி கைகுழந்தையும் மனைவியும் முக்கால் மணிநேரமாக காத்திருக்கும் கஸ்டம் வேறு என்னைத்தாக்கிற்று.

திநகரின் ராஜாவான அந்தக்கடையினர் புரசைவாக்கத்தில் தன்னுடைய கிளையை ஏன் தொடங்க வேண்டும்.

அது தெரியாமல் திறந்த அன்றே ஏன் அந்தகடைக்கு குடும்பத்தோடு போக வேண்டும்.கேள்விக்கெல்லாம் பதில் தேட முடியாது.சிலது அப்படி நடந்து விடுகிறது.திரும்பி யோசித்தாலே முட்டாள்தனம் இளித்து கெக்கலிப்பு காட்டுகிறது.

கடைக்குள் கூட்டமான கூட்டம்.புர்க்கா அணிந்த பெரியமேடு வேப்பரியை சேர்ந்த பெண்கள் குடும்பத்தினர்,எஸ்குலேட்டரில் ஏறிப்பழகிக்கொண்டிருந்தனர்.

சுடிதார் செக்சனில் நெருக்கி அடித்து மனைவி செலக்ட் செய்து கொண்டு வர, நான் குழந்தையை வைத்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் ஒரு பெண் என்னை அடிக்கடி முறைத்து கொண்டே இருந்தார்.

முதலில் புரியாத எனக்கு அப்புறம் அது நான் பெற்ற மகளின் வேலை என்று தெரிந்து ஒதுங்கினேன்.

அந்த பெண்ணின் தலை முடியை என் தோளில் சாய்ந்து அடிக்கடி இழுத்திருக்கிறாள்.

பெரிய மாமா ஒருத்தர் பெண்கள் செக்சனில் தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பதாக ஃபீல் செய்து கொண்டிருந்தார்.
குழந்தையோடு இருந்த அந்தஸ்த்தில் தப்பித்தேன்.

சுடிதார் முடித்து,குழந்தைகள் உடை செக்சனுக்குள் நுழைந்தால் அங்கே ஊரில் உள்ள எல்லா ரக துணிகளும் ரெடிமேடுகளும் இருந்தன.

அதிலிருந்து எடுக்க அரைமணி நேரம்.

டாய்ஸ் செக்சனில் பொம்மைகள் வாங்கி பில் போட கவுண்டர் நின்றால், அத்தனைக்கூட்டத்திற்கும் சேர்ந்து தளத்துக்கு ஒரே கவுண்டர்தானாம்.

கல்லூர்யில் படித்த கியூவிங் தியரி ஞாபகத்திற்கு வந்தது.

முக்கால் மணி நேரம் முடிந்து எனக்கு முன்னால் இரண்டுபேர் நிற்கும் போது, திடீரென்று பில் போடும் பையனின் முகம் மாறியது.

ச்சை ச்சை என்று புலம்பியவன் அறிவிப்பை வெளியிட்டான்.”சார்! இங்க சிஸ்டம் வொர்க் ஆகல.எல்லாரும் கீழ இருக்கிறா ஃபுளோருக்கு போய் பில் போட்டுக்குங்க என்று சொல்லி போய்விட்டான்.

குழந்தையை மனைவிடம் வாங்கி “நீ ஒடிப்போய் செகண்ட் ஃபுளோரில் இடம் புடி” என்று சொல்ல மனைவி ஒடினாள்.

குழந்தையை எடுத்துக்கொண்டு படியில் வேகமாக இறங்க கால் பிசங்கி அப்படியே விழுந்தேன்.வலி வலி வலி.

அதிர்ச்சியில் குழந்தை அழுகிறாள்.எல்லோரும் தூக்கி விட்டார்கள். பொருட்படுத்தாமல் இறங்கிப்பார்த்தால் தலை சுற்றியது.

சூர சம்ஹாரத்துக்கு வரும் கூட்டம் அந்த தளம் முழுவதும்.

கீழே அவள் கீவில் நிற்கு நொண்டி நொண்டி நான் வருவதைப்பார்த்த மனைவி வரிசையை விட்டு வந்தாள்.

“நீ ஏம்பா வரிசைய விட்டு வந்த”

“இல்ல உங்களுக்கு அடிபட்டிருச்சே அதான்”

“அது ஒண்ணும் இல்ல ச்சனியனே.மணி நைட் எட்டரை மணியாச்சி.இனி எப்ப பில் போட்டு எப்ப கொளத்தூர் போய்.அறிவுகெட்டவளே”

திட்டின கோவம்,கூட்டம் கொடுத்த எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவளை கடுப்பேற்ற, சட்டென்று குழந்தையை வாங்கிக்கொண்டு புன்னகைகோடு நிற்கும் சூப்பர்வைசரிடம் தூய ஆங்கிலத்தில் பளிச் பளிச்சென்று பேச, அந்த வலியிலும் எரிசலிலும் கூட பொண்டாட்டி ஆங்கிலம் பேசுவதை ரசித்து கிடந்தேன்.

இப்போது சூப்பர்வைசர் எங்கள் பில்லை வாங்கி உள்ளே போனார்.சீக்கரம் முடித்து கொடுத்தார்.

அவருக்கு நன்றி கூட சொல்லாமல் பொருட்களை நாங்களே கேரிகவரில் போட்டு கீழே வந்தோம்.மணி ஒன்பதை தாண்டியிருந்தது.

கொளத்தூருக்கு ஆட்டோவில் போகவேண்டும்.அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புரசைவாக்கத்தில் இருந்து அயனாவரம் லோக்கோ சாலை வழியே பெரம்பூர் போய் போவார்கள் ஆட்டோகாரர்கள்.இரவு வேளையில் வெள்ளையான மனைவியையும் தங்க நகைகளையும் அந்த வழியே கூட்டிபோவதற்கு பயந்தவன் நான்.

அதனால் தந்திரமாக ஜமாலியா வரை ஒரு ஆட்டோ பிடித்தேன்.அந்த ஸ்டாப்பை சொன்னால் லோகோ போகமாட்டார்கள்.

“ஏன் ஜமாலியா புடிக்கிறீங்க” என்று ஆட்டோவில் கிசுகிசுத்தாள் மனைவி.

அவள் காதில் “லோகோ வழியே போனால் ரிஸ்க் அதான்” மிக மிக மெல்லிய குரலில்தான் சொன்னேன்.

ஆனால் அதை அந்த முதிய ஆட்டோ டிரைவர் கேட்டுவிட்டார்” ஏன் தம்பி ஆட்டோகாரங்கன்னு சொன்னாலே கெட்டவங்கதானா “ என்று தன் சொற்பொழிவை ஆற்ற மனைவியை முறைத்தபடியே இருக்கும் போது குழந்தை ஜெர்கென்று பால் வாடை வர வாந்தியடுத்தாள்.

ஆட்டோவிலே வெட் டிஸ்யூ வைத்து அவளை துடைத்து, பவுடர் போட்டு.ஆட்டோ சீட்டை துடைத்து.என்னைத்துடைத்து கும்மியடிக்கையில் ஜமாலியா வந்தது.ஜமாலியாவில் இருந்து கொளத்தூர் வந்து வீட்டில் காலெடுத்து வைத்த பிறகு நிம்மதி பரவிற்று.

அம்மா அப்பா ஊருக்கு கோவில் கொடைக்கு போயிருக்கிறார்கள்.

பத்தரை மணியாகி விட்டது.இறங்கினதும் குழந்தை கடவுள் கிருபையால் தூங்க, அவள் தோசை சுட ஆயுத்தமானாள்.

”இதப்பாரு எனக்கு சூடா எல்லாம் வேண்டாம்.கரெக்டா ரெண்டே ரெண்டு தோசை சுட்டு வைச்சிரு” என்று சொல்லி பாத்ரூம் சென்று குளித்து வெளியே வரவும், அவளுக்கும் எனக்கும் சேர்ந்து தோசை சுட்டு ஹாலில் வைத்து மிளகாய் பொடியையும் நல்லெணெய்யையும் வைத்து சாப்பிட ஆயுத்தமானோம்.

இரண்டு விள்ளல்தான் வாயில் வைத்திருப்பேன்.

சமையல் ரூமில் இருந்து ஹிஸ் ஹிஸென்று சத்தம் கேட்டது.பிரமையெல்லாம் இல்லை. நன்றாகவே கேட்டது.

”என்னங்க பாம்பாயிருக்குமோ” என்று மனைவி சொல்ல சந்தேகம் வலுத்தது.

அம்மாவுக்கு போனைப்போட்டால் எடுக்கவே இல்லை.பதினோரு மணி ஆதலால் தூங்கியிருக்கலாம்.

பரணை ஒதுக்க பயமாய் இருந்தது.ஒதுக்கி பார்க்கும் போது உண்மையிலே ஒரு பாம்பு ஜிங்ஜிங்கென்று என்னை நோக்கி வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி என்னை வாட்டிற்று.

“சரி விடு எதுனாலும் காலையில பாத்துகிடலாம்” என்று சொன்ன என்னை மனைவி பார்த்த பார்வையில் ஏளனம் இருந்தது.

வேறு வழியில்லாமல் படுத்தோம்.ஆனால் “ஹிஸ் ஹிஸ் “ சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டேதான் இருந்தது.

தூங்கவே முடியவில்லை என்னால்.கிச்சனின் கதவு இடுக்கு அனைத்தையும் துணியால் அடைத்தேன்.ஒரு வாரம் முன்னால் டிஸ்கவரி சேனலில் பார்த்த ஆவணபடத்தில் “ஆப்பிரிக்கன் மாம்பா “ பாம்பு ஒரு குடும்பத்தையே கொன்ற காட்சி வேறு நினைவுக்கு வந்தது.

நைட்டெல்லாம் ஹால் சோபாவிலே படுத்துக்கொண்டு தூங்காமல் கிடந்தேன்.

காலை ஏழு மணிக்கு மறுபடியும் அம்மாவுக்கு போன் போட்டு விசயத்தை சொன்னேன்.ரொம்ப நேரம் சிரித்த அம்மா.

“ஏ கழுத அது அணில்டா. மேல பரண்ல கூடு கட்டியிருக்கு.அது அடிக்கடி அங்க இங்க போகும்.அந்த சத்தமாய் இருக்கும்.”

“ஏம்மா அதெல்லாம் வீட்ல வளத்து உயிர எடுக்கீங்க” என்று கத்திவிட்டு பரணில் பார்த்தால் அணில் கூடு இருந்தது.

மனசு லேசானது.

மனைவியை எழுப்பி சொன்னேன்.அவள் கேட்டுவிட்டு தூங்கப்போய் விட்டாள்.

நாள் முழுவதும் கடையில் அலைந்த களைப்பு.இரவெல்லாம் தூங்காமல் இருந்த களைப்பு எல்லாம் சேர்ந்து கண்களை இழுக்க எட்டு மணி வாக்கில் தூக்கம் சொக்க,

தூங்கி அரைமணி நேரத்தில் முகத்தில் சுள்ளென்று அடி விழுந்தது.

சட்டென்று பதறிபோய் விழித்துப்பார்த்தால்

“எந்திரிப்பா.அதான் சன் வந்துச்சில்ல.வீடெல்லாம் பாரு சன்லைட்டா இருக்கு.இப்ப போய் தூங்கற. வா ஜாலியா விளையாடலாம்” என்று செம அடி அடித்தாள் மகள்.

எழுந்து தூக்கக்கலக்கத்தில் அவளுடன் ரிங்கா ரிங்கா ரோஸஸ் சுற்றிகொண்டிருக்கும் போது இப்படி தோண்றிற்று.

அன்னாசிப்பழம் ஒரு சுவை,ஆப்பிள் இன்னொருசுவை,பலாவும் மாமபழமும் தனிச்சுவை.

தனி தனி சுவையான பழம் மாதிரியே குடும்பம் நடத்துவதும் ஒரு சுவைதான் போல.

கடவுள் எனக்கு கொடுத்த இந்த குடும்ப பழத்தை அவர் கொடுத்த மாதிரியே சுவைக்க வேண்டும்.டென்சனே ஆகக்கூடாது.

குழந்தையைப்பார்த்து சிரித்து ஆர்வத்துடன் விளையாடத்தொடங்கினேன்.

அதான் “குடும்ப பழத்தை” சுவைக்கிறேனாம் நான்.

கதை போல ஒன்று - 88


வாழ்க்கையின் பிடிப்பை உணர, ஆச்சி தயிர் கடைவதை பார்க்கவேண்டும்.

காலை ஆறுமணிக்கு சமைலைறை வழியே பின்கட்டுக்கு பல்விளக்க போனால், சமைலறையின் ஒரு மூலையில் குத்த வைத்து தயிர்பானையை இருகாலால் பிடித்து மரமத்து கொண்டு தயிரை கடைந்து கொண்டிருப்பார் ஆச்சி.

இரண்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை முழுவருட லீவிற்கு வரும்போதெல்லாம் இந்த காட்சியையே பார்க்கிறேன்.

தயிர் பானையை சீராக கடைவதும், திரழும் வெண்ணெய்யை பக்கத்தில் இருக்கும் சுத்தமான நீர்பாத்திரத்தில் மிதக்க விடுவதும்,

மிதக்கும் வெண்ணெய்பந்துகள் அங்குமிங்கும் கலம் போல ஒடுவதும் காலையில் பார்க்க பூரணமாய் இருக்கும்.

சில வெண்ணெய்துளிகள் அதிபிரசங்கித்தனமாய் மத்தின் கைப்பிடியில் ஏறி, தயிரில் இருந்து கடைந்து அவர்களை உருவாக்கியதற்கோ அல்லது காதலித்து கிடந்த தயிரில் இருந்து ஏன் என்னைப்பிரித்தாய்? என்று கேட்பதற்கோ மத்தின் கைப்பிடியில் ஏறி வழியில் ஏறமுடியாமல் ஒட்டிக்கொள்ளும்,

அவை அனைத்தையும் விரலால் வழித்து திரட்டும் லாவகமென்ன.

காலையில் உதிக்கும் சூரியன் உலகின் எல்லா சக்திக்கும் காரணமாய் அமைவது போல,ஆச்சிதான் குடும்பத்தின் அச்சானி என்று எல்லோருக்கும் அறிவிப்பதாய் இருக்கும் அவர் தயிர்கடையும் காட்சி.

மூன்று மகளையும் இரண்டு மகனையும் கொடுத்து விட்டு தாத்தா அம்பத்தியெட்டு வயதில் இறந்துவிடும் போது, ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமணமாகி இருந்தது.அது என் அம்மாதான்.

படிப்பு வராமல் தவித்த தன் இருமகன்களையும் பிளஸ் டூ வரை படிக்க வைத்தது ஆச்சி வளர்க்கும் பால்மாடுகளின் மூதாதையர்களும், பூ கட்டி கோயில் வாசலில் கொண்டு விற்றதும்,வீட்டு வேலை செய்ததும்,கடல் சிப்பியை நூலில் கோர்த்து விற்ற உழைப்பும்தான்.

பள்ளியைத் தாண்டி படிப்பு வராத பட்சத்தில் மூத்த மாமவை பழவியாபாரம் செய்ய சொன்னதும்,இளைய மாமாவை பெட்டிக்கடை வைக்க ஊக்குவித்து பணம் கொடுத்ததும் பாட்டிதான்.

நைட் செகண்ட் க்ஷோ முடிந்து வரும்போது ஒருவனுக்கும் பலபேருக்கும் தகராறு வர, எல்லோரும் சேர்ந்து அவனை அடித்து ஒடிவிட்டார்கள்.

மாமாவின் பழக்கடையை மூடப்போகும் போது, அடிபட்டவன் தள்ளாடி தள்ளாடி வந்து மாமாவின் கடைமுன்னால் விழுந்து விட. விசாரிக்க வந்த போலீஸ் மாமாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றது.

தகவல் கிடைத்த பாட்டி இரவு இரண்டு மணிக்கு போலீஸ் ஸ்டேசன் முன்னால் நியாயம் கேட்டு மாமாவை கூட்டி வந்தாராம்.

வரும் போது இன்னொரு போலீஸ் சொன்னாராம் மெல்ல காதில் “நல்ல வேளைம்மா நீ அழுது புரண்ட.இல்லாட்டி இந்த சோம்பேரிகள் இவன் மேலயே கேச எழுதியிருப்பானுங்க.கேஸ் எழுதிட்டா அப்புறம் தப்பிக்க கஸ்டம்ம்மா” என்றாராம்.

மாமாவுக்கு ஆறுதல் சொல்லி மறுபடியும் பழக்கடையை திறக்க வைக்க சொல்ல அதிர்ஸ்டம் எட்டிப்பார்த்தது.

பழக்கடை பழமுதிர்ச்சோலையானது.தூத்துக்குடியில் இருக்கும் பிரபல ஹோட்டலின் எல்லா பழத்தேவையும் பூர்த்தி செய்யும் ஆர்டர் மாமாவுக்கு கிடைத்தது.மாமா கழுத்தில் தங்கச்சங்கிலி மோதிரம் எல்லாம் போட ஆரம்பித்தார்.தன் தம்பியையும் சேர்த்துக்கொண்டார்.

வீட்டை இடித்து பெரிதாக கட்டினார்.ஆச்சியிடம் மிகமரியாதையாக அன்பாய் இருந்தார்.

தன் தங்கைகளுக்கு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்தார்.
கார் கூட வாங்கிக்கொண்டார்.அடையாளத்துக்காக பெரிய மீசையும் சங்கிலி செயினும் என்ஃபீல்டுமாய் ஆகிப்போனார்.

ஒருகாலத்தில் மாமாவை போலீஸ் ஸ்டேசனில் அடித்து உதைத்த போலீஸ்காரர்கள் எல்லாம் மாமாவுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்று கூட கேள்வி.

அன்று ஆச்சி தயிர்கடைந்து கொண்டிருக்கும் போது மாமா குளித்து ஆச்சியை கடந்து போகும் போது, ஆச்சி கூப்பிட்டார்.

“யய்யா இந்த வசந்தி பிள்ள வயசுக்கு வந்ததுக்கு எதாவது செய்யனும்லா”

மாமா கொஞ்சம் எரிச்சலுடன்.

“நீங்களே பாத்து எதாவது செய்ஞ்சிருங்கம்மா.எனக்கு வேல இருக்கு”

“அதில்ல அவுங்க நம்ம வீட்டு விசேசத்துக்கு எவ்வளவு செய்ஞ்சாங்கன்னு மொய் நோட்ட பாத்தாத்தான் நாம அவுங்களுக்கு எவ்வளு ரூவாயைக்கு செய்யனும்ன்னு தெரியும்”

“யம்மா நம்ம கிட்ட பணத்துக்கு என்னம்மா கொற.நோட்டெல்லாம் ஏன் பாக்கனும்.உங்களுக்கு என்ன செய்யனுமோ தாராளமா செய்ங்க.”

“ காசு இருந்தா அதை சும்மா தரையில போடுவியா.சும்மா கொண்டு காச குடுக்கமுடியாது.கூடாது”

“ஏன் நான் போடுவேன்,அதான் கஸ்டபட்டு சம்பாதிச்சேன் இல்ல.எப்படி தோணுதோ அப்படி செலவழிப்பேன்.இப்ப என்ன செய்ய சொல்றீங்க.”

ஆச்சி கொஞ்சம் கண்கலங்கினாள்.

மாமா கொஞ்சம் இறங்கி வந்தார்.

“ஏம்மா போட்டு காலங்காத்தால இப்படி வாதம் செய்றீங்க”

”சரி நான் உங்கிட்ட பேசல” என்று ஆச்சி மறுபடியும் தயிர்கடைய ஆரம்பித்தார்.

”இதப்பாருங்க எப்ப பாத்தாலும் காலங்காத்தால தயிரகடைஞ்சிக்கிட்டு கைகாலெல்லாம் வயசான காலத்தில உங்களையே நீங்க கஸ்டபடுத்திகிட்டு.அப்படியே நீங்கதான் குடும்பத்த தாங்குறீங்கன்னு நினைப்பு.”

ஆச்சி சட்டென்று மாமாவை திரும்பிப்பார்த்தார்.

“ஆமாம்மா நான் சரியாத்தான் சொல்றேன்.நீங்க என்ன கடைக்கு வந்தா வியாபாரம் செய்ஞ்சீங்க,அப்படியே வீட்ல இருந்தே சமாளிச்சிட்டீங்க.லேடீஸ்க்கு என்ன பொறுப்பு .அது தேவையே இல்ல. நான் எல்லாம் கஸ்டபட்டுத்தானம்மா முன்னேறி இருக்கேன்.”

“நீ சொல்லுவ இரண்டு பசங்களையும் இரண்டு பொண்ணுகளையும் தேத்தி கொண்டு வந்த கஸ்டம் எனக்குத்தான தெரியும்”

“ஆமா கிழிச்சீங்க. ஒருநாள் கடையில வந்து இருந்தீக்கிருக்க மாட்டீங்க.ஏதோ கல்லாவுல இருந்து யாவாரம் பண்ணின மாதிரி.பேசாதீங்க போங்கம்மா” .

ஆச்சியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.மத்து கடைவது மெல்ல ஆகியது.மாமா பேச பேச அதன் வேகம் சுருங்கிக்கொண்டே இருந்தது.குறிப்பிட்ட நேரத்தில் நின்றே போய்விட்டது.எழுந்து கைகழுவி போய்விட்டார்.

அன்றிரவு முழுவதும் ஆச்சி அழுது கொண்டே இருந்தற்கான காரணம் மாமா அவமானப்படுத்தியதுதான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது எனக்கு.

”அதான் காசு வந்தாச்ச இனிமேல் இந்த வீட்டு வேலை,ஆடு,மாடு,தயிர் எல்லாத்தையும் விட்டுருலாம்.

பொட்டச்சி நான் என்னால முடிஞ்சதத் குடும்பத்துக்கு செய்யலன்னா இப்போ இவன் இந்த குடும்பம் இப்படி வந்திருக்குமா” என்று அழுது புலம்பி கொண்டே இருந்தார்.

யோசித்து கொண்டே இருந்தேன்.

பணம் சம்பாதிப்பது மட்டுமா குடும்பத்தை காப்பது, ஏன் மாமா போலீஸ் ஸ்டேசனில் இருக்கும் போது அவரை மீட்டெதெல்லாம் கணக்கில் வராதா ? என்பது மாதிரியான கேள்விகள் என்னுள் அதிகம் இருந்தன.அப்படியே தூங்கியும் விட்டேன்.

மறுநாள் காலையில் சமைலறையை கடக்கும் போது ஆச்சி அங்கிருந்து தயிர்கடைந்து கொண்டிருக்கவில்லை.

ஆச்சி மனக்கஸ்டபபட்டு விட்டார். தயிர்கடைவது எல்லாம் போய் விட்டத.நான் பின் பக்கம் போனபோது ஆச்சி அங்கிருந்து சாணியை அள்ளிக்கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சி தயிர் கடையலையா”

”கடைஞ்சுட்டேனே.நீ இன்னைக்கு எழுந்திருக்க லேட் அதான் உனக்கு தெரியல என்று சொல்லி ஆச்சி சிரித்தார்.

நானும் சிரித்தேன்.

Friday 19 April 2013

கதை போல ஒன்று - 87



பீச்சில், காட்டன் க்ஷாலில் தலைகளை நுழைத்து முத்தமிட்டுக்கொண்டோம்.புருவத்தில் மூக்கில் எல்லாம் முத்தமிட்டேன்.

கழுத்தும் தோளும் சேரும் இடத்தில் முத்தமிடும்போது கூச்சத்தால் தள்ளிவிட்டாள்.

விலகிவிட்டேன்.

“நமக்குள்ள என்ன ரிலேக்ஷன்”

“நாம ஃபிரண்ட்ஸ்” என்றேன்.

“எப்படி இப்படி கூச்சமில்லாம பேசுற.உண்மையில நாம ஃபிரண்ட்ஸ்தானா”

“ஆமா.முதல்லேயே நான் சொல்லிட்டேன்ல.நாம ஃபிரண்ட்ஸ்தான் அப்படின்னு”

“பிரண்ட்ஸ்னா கழுத்தில கிஸ் பண்ணுவானாடா”

“இதப்பாரு அதெல்லாம் தெரியாது.கமிட் ஆகுறதெல்லாம் எனக்கு செட்டாகாது.அத உன்கிட்டவே சொல்லியிருக்கேன்.நீயும் அப்படி சொல்லித்தான் நாம இப்படி இது மாதிரி இருக்கோம்.இப்ப வந்து திடீருன்னு அதுமாதிரி எதாவது கமிட்டாகிடாத.மனசுல அப்படி தோணிச்சினாலும் சொல்லிரு ஃப்ளீஸ்”

“ச்சே சும்மா கலாய்ச்சேன்.நாம் பிரண்ட்ஸாவே இருப்போம்” தோளில் கையைப்போட்டு இறுக்கிக்கொண்டாள்.

மெத்து மெத்தென்ற சாய்கை கிளர்ச்சியூட்ட,அடுத்து தயாராகும் போது பூக்கூடையில் மல்லிகைப்பூவை எடுத்து அந்தப்பெண் நடந்து வந்தாள்.பயம் வந்தது.

ஒருமணி நேரம் முன்னால்தான் சுண்டல் விற்கும் பையன் இதுமாதிரி வந்து தொல்லை செய்தான்.எவ்வளவு சொன்னாலும் போகவே இல்லை.

சுமதிதான் கண்ணைச்சிமிட்டி அந்தப்பையனிடம் ஆரம்பித்தாள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்.

“டோண்டு யூ ஹவ் மேனர்ஸ்.யூ ஆர் ஸ்பாயிலிங் அவர் பிரைவேஸி ஸ்டுபிட்”

சுண்டல் பையனுக்கு “ஸ்டுபிட்” என்ற வார்த்தை புரிந்திருக்கும் போல.

“யக்கா திட்டுறியா.வேணாம்.என் கிட்ட வெச்சுக்காத”

சுமதி விடவில்லை.

“வாட் யூ வில் டு.யூ ஆர் எ கிட் ஹூ ஃபர்க்ட் டு பிஹேவ் லைக்தட்”
சுண்டல் பையன் முகம் சிவந்தது

இப்போ நான் குறுக்கே புகுந்தேன்.

“ஏம்பா.ஏன் தம்பிய திட்ற.அவன் சின்னப்பையன்.அவன் என்ன கேட்டான்.சுண்டல் வேணுமான்னு கேட்டான்.வேண்டாம்னா சொல்லிரு.அதுக்கு இப்படி இங்கீலீசுல கத்தினா.எனக்கே பிடிக்கல எந்திரிச்சி போயிரவா”

அவள் கத்தினாள்.

“போ.இஃப் யூ வாண்ட் டு கோ ,கெட் லாஸ்ட்”

பைனிடம் திரும்பி”நீ போப்பா கொஞ்சம் டென்சனாயிருக்காங்க”

“யக்கா இந்த அண்ணன் அன்பா சொன்னதால போறேன்.ஆனா நீ இது மாதிரி இங்கிலீக்ஷ்ல இன்னொருதடவ கத்தின நடக்கிறதே வேறக்கா” கத்தி இடத்தை காலி செய்தான்.

அது முடித்து கொஞ்சம் ஜாலியாய் இருக்கலாம் என்றால் மறுபடி பூ விற்கும் பெண்.

நெருங்கி காலை மடக்கி அமர்ந்து கொண்டாள்,இளம் வயதில் கல்யாணம் ஆனப்பெண்.

“பூ வேணுமாக்கா”

க்ஷாலுக்குள் தலையை பதித்து முகமே பார்க்காமல் கிடந்தோம்.
இப்போ பூப்பெண் சுமதி கையை தொட்டாள்.”யக்கா பூ வேணுமா”
இதுமாதிரியான தொல்லைகளில் தப்பிக்க குரலைக்காட்டக்கூடாது.
சுமதி கைகளைக்காட்டி போ போ என்று செய்கைகாட்டினாள்.

பூப்பெண் போகவில்லை.

“கொஞ்சமா வாங்கிக்க.அண்ணா நீதான் வாங்கிக்கொடேன்”

“இல்ல வேணாம்”

“இல்ல நீ வாங்கிக்குடு.அக்காவுக்கு வெச்சா அழகா இருக்கும்.இதப்பாரு புதுப்பூவுதான்.பழசெல்லாம் இல்லை.”
பூவை எடுத்துக்காட்டினாள்.

நாங்கள் ,கவனமாக பூவை தொடவே இல்லை.

“யம்மா போம்மா எனக்கு பூவைக்கிறபழக்கமே கிடையாது” சுமதி கத்தினாள்

“வாங்கிக்கொடுண்ணா.நாளைகே ஹஸெபண்ட்,வைஃப் ஆக போறீங்க.”

“நீ தேவையில்லாம பேசுற.போம்மா.” கையை வீசினேன்.

“ண்ணா போன்னா போறேன்.கையெல்லாம் வீசாத.நம்ம் ஊர் ஆளுங்க பக்கத்துலதான்.பூதான் வாங்கிக்கயேன்.”

சுமதியைப் பார்த்தேன். தலைக்கு குளித்து முடியை விரித்து விட்டிருக்கிறாள்.சுடியின் பின் பக்கம் அகல முதுகை காட்டி இருக்கிறாள்.வெயில் அவள் மேல் பட்டு தகிக்கிறாள்.உட்கார்ந்திருக்கும் போது பிதுங்கும் கால்களின் திரட்சி,சுடிதாரைப்பிதுங்கி தெரியும் செல்ல தொப்பை.இவளை ரசிக்க,அனுபவிக்க தடையாய் இருப்பது என்ன?

இதோ இந்த பூ விற்கும் பெண்ணும் அவள் கூடையில் இருக்கும் பூக்களும்தான்.தடுக்கும் எல்லா கதவுகளை உடைக்கும் மோகம் முளைவிட்டிருந்தது என்னுள்.

“சரி ஒருமுழம் எவ்வளவு”

கேட்டுமுடியவில்லை.நான்கு முழங்கள் மேலிருந்து கீழாக முழங்கையில் சரசரவென்று அளந்து கொண்டிருக்கும்போதே கத்தினேன்.

“ஏம்மா நான் முழம் எவ்வளவுன்னுதான் கேட்டேன்.நீ நாலுமுழம் அளக்கிற”

அப்போதும் கேட்க்கவில்லை.அளந்து என் மடியில் வைத்தாள்.
“நான் வாங்கமாட்டேன்”

”இல்லண்ணா நீ வாங்கிட்ட நாலு முழம் காசு குடு.அய்ய அக்காவுக்கு வாங்கித்தான் கொடேன்.

“நீ போறியா இல்லையா.அடி வேணுமா”

“பூவுக்கு காசு கொடு போறேன்”

“அதெப்படி நாந்தான் பூவே வாங்கவே இல்லையே. விலைதான விசாரிச்சேன்”

அது பற்றிக்கவலையே இல்லாமல்,காசை எடு என்பது மாதிரி நின்று கொண்டிருந்தாள்.

என்னையோ சுமதியின் வனப்பு தகித்துகொண்டிருந்தது.

பணிந்தேன்

”வெலை எவ்வளோ”

“நாலுமுழம் முப்பது ரூபா.”

“முப்பது ரூபாவா.நல்ல ஏமாத்துறம்மா நீ”
பதிலில்லை.

வேறு வழியில்லாமல் பணத்தைக்கொடுத்தேன்.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது, சுமதி எதுவுமே பேசவில்லை.
முட்டியில் கைகளை வைத்துக்கொண்டு,முகத்தை அதன்மேல் வைத்துக்கொண்டு அந்தப்பூவையே மோனமாய் பார்த்துகொண்டிருந்தாள்.

பூ விற்பவள் போனதும்,சுமதி மேல் பாய்ந்தேன்.என்னிடம் எதுவுமே கேட்காமல் படரும் கைகள்.

காமம் செய்து கொண்டிருக்கும் போது அந்த நாலு முழம் பூ என்னை என் ஏமாந்த இளிச்சவாய்தனத்தை காட்டி சிரிப்பதைப்போல் இருந்தது.

“ஒரு நிமிக்ஷம் இரு” என்று சொல்லி, என் முன்னால் இருந்த கடல்மணலை கைகளால் ஒரளவுக்கு தோண்டினேன்.

சுமதி கத்தினாள்.

“ஹேய் என்ன செய்ற”

“இரு இத அடக்க பண்ணிட்டு வந்துர்ரேன்.நீ வைக்க மாட்டல்ல”

“நான் வெக்க மாட்டேந்தான்.அதுக்காக என்னப்பண்ணபோற”

“போ பிள்ள” என்று அந்த கடல்மணல் குழியில் பூ எல்லா முழங்களையும் போட்டு புதைத்தேன்”

சுமதி பூக்கள் புதையுண்ட இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவள் இப்படி முறைத்துப்பார்க்கிறாள். ஏன் ஈஸியா எடுத்துக்கமாட்டேன்கிறேன்” என்று குழம்பினேன்.

போன வாரம் க்ஷேர் ஆட்டோவில் பிராயணம் செய்யும் போது.என் தலைக்கு பக்கத்தில் இருக்கும் விரல் மஞ்சள் பல்பு என் நிழலை ஆட்டோவின் எதிர்பக்க உடம்பில் பதிக்க,அந்த நிழல்மேல் சாய்ந்து என்னைப்பார்த்து கண்சிமிட்டிய சுமதி நினைவுக்கு வந்தாள்”

செண்டிமெண்டாய் இருப்பதைப்பார்த்தால் பயமாய் இருந்தது.என்னுடன் பிணைத்துக்கொள்வாளோ ?

நீதான் வேண்டுமென்று,கமிட் ஆகிவிடுமோ.?

ஃஃபிரண்ட்ஸ் ஃபிரண்ட்ஸ் என்று பழகினதெல்லாம் போய் காதல் அது இது என்று சொல்லி கல்யாணம் செய்துகொள்வாளோ.

போலீஸில் கம்ளையின் செய்வாளோ?.அல்லது வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம்.

சட்டென்று தலையை உதறிக்கொண்டேன்.

சேச்ச சுமதிகிட்ட முதல்ல தெளிவாய் சொல்லித்தான் பழகினோம்.அவள் அது மாதிரியெல்லாம் செய்ய மாட்டாள்.ஆணும் பெண்ணும் நட்பாய் கொஞ்சம் உடலையும் பகிர்ந்துகொண்டால் என்ன தப்பு.சுமதிக்கும் இந்த கோட்பாட்டில் உடன்பாடிருக்கிறது என்று அவளே சொல்லியிருக்காளே.

சமாதனமடைந்து சுமதியை நெருங்கினேன்.

பூவை புதைத்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தவள்.சட்டென்று விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

“என்னாச்சு சுமதி”

“இல்ல மொத மொதல்ல வாங்கித்தந்த மல்லிகையை இப்படி சமாதி மாதிரி புதைச்சிட்டீங்களே.அதப்பார்த்து தாங்கல, தோளில் சாய்ந்து இறுக்கப்பிடித்து குலுங்கினாற்போல அழுதாள்.

கழட்டியும் விட வேண்டும்,அது அவளுக்கும் தெரியக்கூடாது.நாசுக்காய் நடக்க வேண்டும்.அதற்கான சூத்திரத்தை மனம் பின்னிக்கொண்டே இருக்க சுமதி என்னைப்பிடித்து அழுதுகொண்டே இருந்தாள்.

இவளை எப்படி கழட்டிவிடுவது என்று மிகத்தீவிரமாக யோசித்துகொண்டிருந்தேன்.

இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.

Wednesday 17 April 2013

கதை போல ஒன்று - 86

நல்லத்தூக்கம் அவரை நினைவுபடுத்துகிறது.இந்த வயதிலும் அப்படித்தான்.

இன்னும் எண்பது வயதும் கூட ஆகி செத்தாலும் நல்லத்தூக்கம் அவரைத்தான் நினைவுபடுத்துமோ என்னவோ?

திருநெல்வேலியில் வைத்து முடிவெடுக்க கடினமான கேள்வியை கேட்டது மாமாவேதான்.

உனக்கு குருசிக்ஷ்யன் படம் பாக்கனுமா?இல்ல சர்க்கஸ் போகனுமா? என்ற கேள்விதான் அது.

சொல்லுங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்துவயது சிறுவன் என்னதான் முடிவெடுக்க முடியும்.

சர்க்கஸே போகலாம் என்று சொன்னேன்.

மாமவோ உன்னை இரண்டுமே கூட்டிப்போகிறேன் என்று சொன்னார்.

காலையிலே திருச்செந்தூரில் இருந்து கிளம்பிவிட்டோம்.அய்யனார் டிம்பர் டிப்போவில் மாமா தன் கடைக்கு ,மொத்த கொள்முதலுக்கு வந்த வேலையை பத்துமணிக்கெல்லாம் முடித்துவிட்டார்.

கடையில் முதலாளியில்லை.அவர் பையன் இருந்திருந்தான்.காலேஜ் படித்து கொண்டிருக்கும் அண்ணன்.

என்னைப்பார்த்து சிநேகமாக புன்னகைத்து “என்னல்லாம் விளையாட்டு விளையாடுவ “என்றார்.

நான் “கிரிக்கெட்,கபடி விளையாடுவேன் என்றேன்.

கையில் வைத்திருந்த க்ஷட்டில் பேட்டை எடுத்து காண்பித்து “க்ஷட்டில் விளையாட மாட்டியா” என்றார்.

மாட்டேன் என்று தலையை அசைத்தேன்.

”வா விளையாடலாம்”

மாமவைப்பார்த்தேன்.

“போல போய் விளையாடு.சின்ன மொதலாளியே கூப்பிடுறாரு போகாம இருக்க முடியுமா?

“யண்ணே சும்மா இருங்கண்ணே நீங்க வேற” என்று மாமாவிடம் சிரிப்பாய் அதட்டி, அந்த அண்ணன் என்னை கடையின் பின்பக்கமாக கூட்டிச்சென்றார்.

ஆயினி,வெந்தேக்கு,படாக்கு, என்று ஒவ்வொரு மரமாய் காட்டித்தந்தார்.இது அந்தமான்ல இருந்து வருது,இது பிலிப்பைன்ஸ்.இது இந்தோனிசியா என்று சொல்லிக்கொண்டே போனார்.

பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தங்கள் உடலை காட்டிக்கொண்டு பே என்று செத்துக்கிடந்தன.இதை எல்லாம் அறுத்து ஒரே வீட்டிற்கோ அல்லது பல வீட்டிற்கோ கொண்டு செல்வார்கள்.மிச்சமிருக்கும் மரத்துண்டுகள் விறகாகப்போகும்.

கொஞ்சம் தள்ளியது விஸ்தாரமான சமதளம் கிடந்தது.

இதப்பாரு க்ஷட்டில் பேட்ட இப்படிப்பிடிக்கனும்.உன் பெருவிரல் வந்து கரெக்டா க்ஷட்டில் பேட் பின் பக்கம் அழுத்தனும்.க்ஷட்டில் காக் பேட்ல படும் போது ரொம்ப வேகமா வீசக்கூடாது.லைட்டா சின்னதா ஒரு ஜெர்க் கொடுக்கனும்.

கொஞ்ச நேரத்தில் விளையாட்டை பிடித்துக்கொண்டேன்.

பத்து மணியில் இருந்து பண்ணிரண்டு மணி வரை ஏப்ரல் மாத திருநெல்வேலி வெயிலில் விளையாடினேன்.நடுவில் அந்த அண்ணன் வேலையாள்களிடம் சொல்லி வாங்கித்தந்த “கோல்டு ஸ்பாட்” ,அப்பா வாங்கித்தராமல் நான் குடித்த முதல் கோல்டு ஸ்பாட்.

விளையாடி விளையாடி காலெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது.

மதியச்சாப்பாடு பிரியாணி வந்தது.

அதற்கிடையில் முதலாளிவந்து விட அவர் இன்னும் உபசரித்தார்.ஒரு மணிக்கெல்லாம் கடையை விட்டு வெளியே வந்தோம்.

அப்போதுதான் மாமா சினிமா சர்க்கஸ் இரண்டையும் கூட்டிப்போகிறேன் என்ற வாக்குறுதியை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

படம் முடிந்து வெளியே வரும் போதே உடல் அயர்ச்சியை உணர்ந்திருந்தது.முதுகெல்லாம் வலித்தது.

வெளியே வந்து காபியும் பஜ்ஜியும் சாப்பிட்டு,உடனே ஆட்டோ பிடித்து சர்க்கஸுக்கு போனோம்.

கொண்டைகிளிகள் ஆட,கூண்டிற்குள் சிங்கள் உறும, யானை தன் சிறு சைக்கிளை பெரு உடலால் ஒட்டிக்காட்டியது.
வலைவித்தைகள்,பார்வித்தைகள்,ஆகாய வித்தைகள் எல்லாம் வாய்பிளந்து பார்த்தேன்.எட்டரை மணிக்கெல்லாம் சர்க்கஸ் முடிந்ததும்.காத்தாட சிறுநீர் கழித்து, கொஞ்சம் தள்ளியிருந்த பரோட்டா கடையில், பரோட்டாவும் சால்னாவும் சிக்கன் பொரியலும் வாங்கித்தந்தார் மாமா.வயிறு முட்ட சாப்பிட்டேன்.

மாமா சொன்னார்.”விஜய் இன்னைக்கு சர்க்கஸ்,ரஜினிப்படம் ரிலீஸாயிருக்கு,ஞாயித்து கிழமை வேற,திருச்செந்தூர் பஸ்ஸெல்லாம் செம கூட்டமா வரும்.வந்ததும் ஒடிப்போய் ஏறிக்க.நான் பின்னால வரேன்” என்றார்.

கூட்டத்தில் இரண்டு பஸ்களை தவறவிட்டு, மூன்றாவது பஸ்ஸில் தொத்தி ஏறினேன்.

நடுப்பக்கம் சீட்காலியாய் இருக்க இடம் பிடித்து உட்கார்ந்தேன்.என்னருகே இருந்தது நாற்பது வயது ஆள்.என் பரபரப்பை பார்த்து சிரித்தார்.

நான் சிரிக்கவில்லை.மாமா ஏறிவிட்டாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.மாமா ஏறினார் ஆனால் சீட் கிடைக்கவில்லை.என்னிடம் கையைக்காட்டிக்கொண்டு பின்னாலயே நின்று கொண்டிருந்தார்.

பஸ்ஸை எடுத்து பத்து நிமிடத்தில் தூக்கம் வந்தது.

காலையில் பஸ்ஸில் வந்தது,அதன் பிறகான இரண்டு மணிநேர விளையாட்டு,தொடர்ந்த சினிமா,தொடர்ந்த சர்க்கஸ்,தொடர்ந்த பஸ்ஸுக்கான காத்திருப்பு.

தூக்கம் வந்தது.தூங்கி தூங்கி பகக்த்தில் இருந்தவர் தோளின் கீழே இருக்கும் புஜங்களில் விழுந்தேன்.

கொஞ்சம் நேரம் பிறகு நிம்மதியாக எப்படி உறங்க முடியும் என்று சட்டென்று விழித்துப்பார்த்தால் அவர் தோளில் தூங்குவது தெரியவர உடனே எழும்புவேன்.

தலையை உதறிக்கொள்வேன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் கண் சொக்கும்.தூங்கி மண்டை டொச்சென்று அவர் மேல் இடிக்கும் கணத்தில் விழிப்பேன்.

இரண்டு இமைகளையும் யாரோ கயிறால் இழுக்கும் தூக்கம்.

“தம்பி என் மடியில படுத்துகிறியா “என்றார்.

“இல்ல இல்ல நான் தூங்கமாட்டேன்.தூங்கல”

”சரி”

மனதின் வைராக்கியத்திற்கு இந்த உடல் கட்டுப்பட்டால்தானே.அதிலும் தூக்கம் எப்படிக்கட்டுப்படும்.

மறுபடியும் அவர் மேலேயே தூங்கி வழிந்தேன்.

இந்த முறை அவர் என்னைக்கேட்கவில்லை, என் தலையை எடுத்து அவர் மடியிலேயே வைத்துக்கொண்டார்.

நான் திமிறி எழுந்திருக்க போனேன்.”பயப்படாத தம்பி.மாமா மடியில படுத்து தூங்கு” என்று எழவிடாமல் தட்டிக்கொடுத்தார்.

தூங்கிவிட்டேன்.

தூங்குவதற்கு முன்னால் அவருடைய சாம்பல் நிற பேண்டின் கலர் என்னுள் ஆழப்பதிந்தது.அப்படித்தூங்கும் போது ஒன்றே ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

தினமும் தலையணையில் வடிக்கும் கோழாவை இவர் மடியில் வடித்து விடக்கூடாதென்று.

கடவுளிடம் சின்ன பிரார்த்தனை கூட செய்து கொண்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு போகாமல் கிடந்தேன்.

உள்ளே இழுத்துப்போவதற்கு தூக்கத்திற்கு என்ன தனிவகுப்பா நடத்தவேண்டும்.அய்ர ஆரம்பித்தேன்.

கனவில் இரண்டாம் வகுப்பில் கூடப்படித்த கல்பனா வந்தாள்.

இதோ விஜய் எல்ல பாய்ஸும் ,கேர்ள்ஸ் பேங்கில்ஸ் வைச்சுதுதான் பேப்பர்ல்ல சர்க்கிள் போடுறாங்க, நீ மட்டும் ஏன் கையால போடுற, இதோ என்னோட பேங்கிள்ஸ் வெச்சுக்க விஜய்”
அவளுடைய இரட்டை ஜடையும் நீண்ட முகமும் நினைவுக்கு வந்தது.

அம்மா வந்தாள் கனவில்,ஜிங்கிடி ஜிங்கிடி குரு சிஸ்யன் பாட்டு வந்தது, சர்க்கஸ் பெண்கள் வளப்பான கால்களைக்காட்டிக்கொண்டு ஆடினார்கள்” .

தூங்கும் காலத்தை மெதுவாக நகரவைக்க முடியும்.சார்ப்பியல் படி அது வேகமாகத்தானே போகவேண்டும்.

”ஆர்ச் இறங்கிரவங்கல்லாம் இறங்கிகிடுங்க,வண்டி கோவில் வாசல் பஸ்ஸ்டாண்டு வர போகும்”

மாமா என்னை உலக்கினார்.சட்டென்று முழித்துப்பார்த்தேன்.

மாமா என்னை அவசர அவசரமாக கீழே இறக்கி தானும் கிழே இறங்கிக்கொண்டார்.

இறங்கும் போது திகிலாய் அந்த் சாம்பல் நிறப்பேண்டை பார்த்தேன்.பெரிய வட்டமாக எச்சில் இழுக்க ”கோழா” வடித்து வைத்திருக்கிறேன்.

வெட்காமாய்ப் போனதெனக்கு.அவர் முகத்தைப்பார்த்தேன்.

புன்னகைத்தபடியே “பை என்று டாட்டா காட்டினார்.

அந்த இரண்டு மணிநேரம் தூங்கினது உடலுக்கு இதமாய் இருந்தது.கண்கள் எல்லாம் குளிர்ச்சியடைந்திருந்தது.
அந்த சாம்பல் நிற உடையணிந்தவர் என்னை அவர் மடியிலே தட்டிக்கொடுத்து தூங்கவைத்து உணர்வின் பெயரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இப்போது கூட எச்சில் பட முத்தம் கொடுத்தால் சட்டென்று துடைக்கும் மனைவியைப் பார்க்கும் போது ,பேண்டெல்லாம் எச்சிலாக்கி வைத்திருந்த என்னைப்பார்த்து என்ன கனிவு இருந்தால் “பை “என்று டாட்டா காட்டிருப்பார் என்று தோண்றுகிறது.

அயர்ந்த தூக்கம் என்பது அப்பாவையோ அம்மாவையோ மனைவியையோ நினைவுபடுத்துவதே இல்லை.

நல்லத்தூக்கம் அவரை நினைவுபடுத்துகிறது.

இந்த வயதிலும் அப்படித்தான்.

இன்னும் எண்பது வயதும் கூட ஆகி செத்தாலும் நல்லத்தூக்கம் அவரைத்தான் நினைவுபடுத்துமோ என்னவோ?

கதை போல ஒன்று - 85


இந்தியா டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது.அன்றைய நாள் மகிழ்வாய் போகும் என்று நம்பினேன்.

வீட்டில் யாரும் இல்லை.

முந்தின நாளே ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்துவிட்டேன்.எனக்கு பிடித்த ஜூஸ்களையெல்லாம் குளிர்பெட்டியில் திணித்தாயிற்று.

விடுமுறையில்,யாரும் இல்லாத சமயத்தில் சோபாவில் படுத்துகொண்டு நேந்திரம் பழம் சிப்ஸும்,ஜூஸும் சாப்பிட்டுக்கொண்டு கிடப்பது மகிழ்வான தருணம்தான்.

டிவியில் வெளிச்சம் அடிக்க, ஜன்னலை பூட்டுவதற்காக எழுந்தேன்.வெளியே “வாட்ச்மேன் பொண்டாட்டி” தன் சிறிய குடிசைமுன்னால் பாத்திரம் விளக்கி கொண்டிருந்தார்.

பெயர் எல்லாம் தெரியாது.அம்மா வாட்ச்மேன் பொண்டாட்டி என்பார்.நானும் அப்படியே கூப்பிடுவேன்.அவரை நேருக்கு நேர் விளிக்கும் போது “அக்கா”வென்றோ அல்லது மொட்டையாகவோ பேசிவிடுவது வழக்கம்.

ஜன்னல்முன் என் உருவம் தெரிய பாத்திரம் விளக்கியபடியே “சாப்டாச்சா” என்றார்.

“ஆ சாப்டாச்சு.நீங்க சாப்ட்சாச்சா.”

“இனிமதான்ப்பு காய்ச்சல் மாதிரி இருக்கு”

“யக்கா அதென்ன பக்கத்துல மீன்சட்டியில் சாள மீன் வைச்சிருக்கிய” என்றேன்.

“ஆமா நேத்து கிடைச்சது.உங்க வீட்டு ஃபிரிட்ஜிலதான் வெச்சி அம்மா காலையில கொடுத்தாங்க”

“நம்ம சாளன்னு சொல்றது மெட்ராஸ்ல கவள மீனுன்னு சொல்றாங்க கவனிச்சீங்களா”

வாட்ச்மேன் பொண்டாட்டி தன் சிரிப்பை பெரிதாக காட்டி, ஆம் நான் நீ சொல்வதை கவனிக்கிறேன் என்று அங்கீகரித்தார்.

வீட்டு ஒனர், எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டபிறகு, பணம் கொட்டிற்றோ என்னவோ இன்னும் இரண்டு வீடுகள் கட்ட ஆரம்பித்தார்.

வீட்டின் சிமெண்ட் ஜல்லி மணலை பாதுகாக்க இருந்த வாட்ச்மேனுக்கு,வீட்டின் இடது பக்கம் இருக்கும் சிறுதுண்டு நிலத்தில் குடிசை கட்டி கொடுத்தார்.

வாட்ச்மேன் எப்போதும் கண்களில் கலக்கமாய் பக்கத்தில் போனால் பழவாசனையாய் இருக்கும் ரகம்.அவர் குடுமத்தை அழைத்து வருவதற்கு முன்னால் யாருமே அவரிடம் பேசமாட்டோம்.

இரண்டு மாதம் முன்னால்தான் ஒல்லியான ரெண்டு மூக்கிலும் மூக்குத்திய,கறுத்த பெண்ணாய் வாட்ச்மேன் பொண்டாட்டி. தன் இரண்டு வயது குழந்தையுடன்,சொந்த ஊரான படுக்கபத்தில் இருந்து சென்னை வந்தார்.

வந்தவர் அம்மாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டார்.வாட்ச்மேன் பொண்டாடியுடன் பேசி பேசி சமயத்தில் வாட்ச்மேனை அதட்டும் அளவுக்கு அம்மா வந்துவிட்டாள்.

சில சமயம் வீடு கட்டும் வேலை நடக்கும் போது சித்தாள் வேலையும் செய்வார்.குழந்தை சும்மா பக்கத்தில் கல்லு மண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும்.

திருமணம் பற்றிய எல்லா கோட்பாடுகளை கிண்டல் செய்யும் நான் “இவல்லாம் ஏன் பிள்ள பெத்துக்கிறா” என்பது மாதிரி நினைப்பேன்.

தவறியும் மூக்கொழுகும் அந்தக்குழந்தையை கொஞ்சினதில்லை.அம்மாவுக்கு அதெல்லாம் இல்லை.சில சமயம் அம்மா இடுப்பில் அந்தகுழந்தை ஏறியிருக்கும்.

சில மதிய வேளையில் வாட்ச்மேன் பொண்டாட்டி நடுஹாலில் குழந்தையை வைத்துகொண்டு படுத்திருப்பார்.

முதன் முதலாய் இதைப்பார்க்கும் போது அம்மாவிடம் காட்டுகத்து கத்தினேன்.”அதிலென்ன இருக்கு.நீங்க யாரும் இல்லாத சமயத்துல அது நம்ம வீட்ல கொஞ்சம் ஆத்தலா ஃபேனுக்கு அடியில படுத்திருக்கா.அப்படி படுத்தா என்ன தர தேய்ஞ்சிருமா? நீதான் இன்னும் மெச்சூரிட்டியா இருக்கனும்” என்ற பதிலே கிடைக்கும்.

குடிசையை பார்க்கும் போது வரும் மற்றொரு சந்தேகம் இந்த வீட்டில் பாத்ரூம் லெட்ரின் கிடையாதா?

அப்படியில்லைன்றால் காட்டுப்பக்கமா போகிறார்கள்.சென்னையில் எங்கே காட்டுப்பக்கமெல்லாம் இருக்கிறது என்ற குழப்பம் வந்தது.

இதை அம்மாவிடம் கேட்கும் போது “அவுங்க எப்படியோ சமாளிக்கிறாங்க,உனக்கு எல்லாமும் தெரியனுமோ” பதில்தான் கிடைக்கும்.

இந்திய பேட்ஸ்மன்கள் பிட்சுக்கு வந்தார்கள்.சோபா என்னை உள்ளிழுத்து கொண்டது கிரிக்கட்டை பருக.

ரிமோட்டில் சவுண்ட்டை அதிகப்படுத்தினேன்.
அரைமணி நேரத்தில் சேவாக் முப்பத்தியைந்து ரன் அடித்திருந்தார்.

காலிங் பெல் அடித்தது.யாராவது சொந்தக்காரங்களா இருக்குமோ என்று பயந்தபடியே கதவை திறந்தேன்.அழகான முப்பது வயதொத்த பெண் நின்று கொண்டிருந்தார்.

சிரித்தார்.

“சாரி எனக்கு தமிழ் தெரியாது.ஆங்கிலம்தான் தெரியும்.பக்கத்து விட்டிற்கு வாடகைக்கு வரப்போகிறேன் அடுத்த வாரம்.வீட்டுச்சாவி வேண்டும்.”

அம்மா சொல்லிவிட்டு போனதகவல்தான்.சாவியை எடுத்து கொடுத்தேன்.

”நீங்களும் அந்த வீட்டிற்கு வரமுடியுமா”

நான் லுங்கியுடனே அசிரத்தையாக போனேன்.

அந்த பெண் அடிக்கடி கனிவோடு என்னை நோக்கி சிரித்தார்.விசாகபட்டிணம் சொந்த ஊராம்.தெலுகு ஹிந்தி ஆங்கிலம்தான் தெரியுமாம்.

வீட்டைப்பார்த்தவர்.

”கிச்சன் மேடைதான் கொஞ்சம் அழுக்காக இருக்கிறது.இங்கு யாரோ வாட்ச்மேன் வைஃப் ஒருத்தர் இருக்காராமே.அவர் கழுவி விடுவார் என்று ஹவுஸ் ஒனர் சொன்னார்.”

ஆம் என்று வாட்ச்மேன் பொண்டாட்டியை அழைத்தேன்.

வந்தவர் சேலையை தூக்கிக்கட்டி தன் கருத்த கால்களை காட்டி கிச்சன் மேடை மற்று கிச்சனை பதினைந்து நிமிடத்தில் கழுவி சுத்தம் செய்தார்.

“நன்றி என்னையும் வாட்ச்மேன் பொண்டாட்டியையும் பார்த்து பொதுவாய் சொன்னவர். பின் வாட்ச்மேன் பொண்டாட்டியை பார்த்து
“நீங்கள் போகலாம் “ என்றார்.

நான் அதை மொழிபெயர்த்து சொல்லவில்லை வாட்ச்மேன் பொண்டாட்டியிடம்.

வாட்ச்மேன் பொண்டாட்டி போகாமல் தயங்கி தயங்கி ஏதோ சொல்ல காத்திருந்தார்.

பின் அந்த பெண்ணிடம் போய் பாத்ரூமை கைகாட்டினார்.

“இவர் என்ன சொல்கிறார்” என்று அந்த பெண் என்னைக்காட்டினார்.
“உங்கள் வீட்டு பாத்ரூமை அவசரமாக உபயோகிக்க வேண்டுமாம்.அனுமதி கேட்கிறார்.”

அந்த விசாகப்பட்டிணத்து பெண்ணின் முகம் சிவந்தது.

“என்ன?”

இப்போது வாட்ச்மேன் பொண்டாட்டி குறுக்கிட்டு “ரொம்ப அவசரம் இன்னைக்கு ஒருநாள்தான் அப்புறம் போகமாட்டேன்.நல்லா கழுவி கொடுத்திர்றேன்”

நான் அதை அவளிடம் மொழிபெயர்த்தேன்.வீடு கட்டும் போது கட்டிட வேலை செய்பவர்கள் இது மாதிரி செய்வது சகஜம்.இதில் பெரிய தவறொன்றுமில்லை என்று சொன்னேன்.

அந்த விசாகப்பட்டினத்து பெண் வாட்ச்மேன் பொண்டாட்டியிடம் திரும்பி “நோ நோ” என்று கையை வைத்து அழுத்தமாக ஒரு செய்கை செய்தார்.

வாட்ச்மேன் பொண்டாட்டி விடவில்லை.” இது மாதப்பிரச்சனைக்கு முன்னாடி வயிறக்கலக்கும் அதுமாதிரி” என்று தமிழில் அந்த விசாகப்பட்டினத்து பெண்ணிடம் குரலை தாழ்த்தி சொன்னார்.

புரியவில்லை அவர் சொன்னது இவருக்கு.
நான் மொழிபெயர்க்க முயற்சித்தை கண்டுகொள்ளவில்லை.

வீட்டைப்பூட்டிவிட்டு வெளியே வந்தார்.சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டியில் ஏறிப்பறந்தார்.

வாட்ச்மேன் பொண்டாட்டியின் முகத்தைப்பார்த்தேன்.

உடலின் அவஸ்த்தைகள் அவர் முகத்தில் குடியிருந்தன.மனதின் பிரச்சனை என்னவாயினும் இருக்கலாம்.உடலின் கழிவுகள் வெளியேற காத்திருக்கும் போது அதை நிம்மதியாக செய்ய ஒரு இடம் இல்லாத தன்மை என்னை இளகசெய்தது.

சாவியை நீட்டினேன் “யக்கா அவுங்க போயிட்டாங்க நீங்க போங்க”

வாட்ச்மேன் பொண்டாட்டி அந்த அவஸ்த்தையிலும் அதை வாங்கவில்லை.என்னவோ போல் இருந்தது.
மறுபடியும் சொன்னேன் “யக்கா நீங்க என் வீட்டு பாத்ரூமுக்கு போங்க”

அவரின் முக அவஸ்த்தை கூடிக்கொண்டே போனது.

”எங்க வீட்டு பாத்ரூமுக்கு போங்க.நான் வீட்டுக்கு வெளியவே நிக்குறேன்.”

“அம்ம இல்லாம தனியா இருக்கும் போது எப்படி வரது “என்று உணர்ச்சியே இல்லாத சிரிப்பை சிரித்தவர்.

“உள்ளப்போய் எனக்கொரு பிளாஸ்டிக் கவர் எடுத்துட்டுவாப்போ.அத மட்டும் செய்”

ஒடிச்சென்று பெரிய பாலத்தீன் கவரை எடுத்துக்கொடுத்தேன்.

வாட்ச்மேன் பொண்டாட்டி எடுத்து ஒடினார்.

ஹாலுக்கு சென்று ஜன்னல் கதவை திறந்துப்பார்த்தேன்.

அந்தப்பாலத்தீன் கவரில் சாளமீன்களையெல்லாம் எடுத்துப்போட்டவர்,அந்தக்கவரை வெளி ஆணியில் போட்டவர்,மண் சட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு குடிசை கதவை சாத்திவிட்டார்.

அன்றைய நாளிற்காக கற்பனை செய்து வைத்திருந்த மகிழ்ச்சியெல்லாம் கரைந்து போனது.

சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சோபாவில் பொத்தென்று விழுந்தேன்.

Friday 12 April 2013

கதை போல ஒன்று - 84

நான் குத்துவிளக்கை பொருத்த தீக்க்குச்சியை உரச,தம்பி “பூஊம் “என்று ஊதி அணைத்தான்.திரும்பி முறைத்தேன்.

“இப்ப எதுக்குல ஊதுனா” கத்தினேன்.

“இன்னைக்கு என் டர்ன்.நான் சாமிக்கு விளக்கு பொருத்துவேன்” தம்பி தன் கையில் இருந்த தீக்குச்சியை உரசி விளக்கை ஏற்றப்போனான்.

இப்போது நான் எச்சில் தெறிக்க “பூஊம்” என்று ஊதினேன்.

போட்டோ பிரேம்களில் மாலைகளோடு இருந்த சகல தெய்வங்களும் “தம்பிகளா சண்டை போடாதீங்கடா! யாராவது ஒருத்தர் விளக்க பொருத்துங்கடா” என்று எங்களிடம் மவுனமாக கேட்டுக்கொண்டிருக்கும் போது நானும் தம்பியும் அடித்து பிடித்து தரையில் உருண்டு கிடந்தோம்.

நான் ஏழாம் வகுப்பு.தம்பி ஐந்தாம் வகுப்பு.அடுத்தடுத்து பிறந்த அண்ணன் ம்பிகள்.சண்டை,அடிதடி,பொறாமை இருக்கம் என்பதை எழுதியும் காட்ட வேண்டுமா?

ஒரு மனிதனின் சக்தியை உறிஞ்சுவதில், அவனது ஒருமுகப்படுத்தப்பட்ட தன்மையை கலைப்பதில் ,பெரும் பங்கு வகிப்பது காமம்.

காமம் வந்தால் அது மட்டுமே உலகாய் இருக்கும்.அதை கடக்கத் தெரியாமல் முழிக்கும் மனிதர்கள் தங்களுடைய எல்லா நன்மைகளின் சாயல்களையும் இழக்க தயாராகிவிடுகிறார்கள்.

அந்தக் காமத்தை விட கொடூரமானதாய் மனிதனின் மனதை சிதைப்பது பொறாமை.காமத்தை கழித்து விட பூட்டிய நான்கு சுவருல்ல அறை போதும்.பத்து நிமிடம் போதும்.ஆனால் பொறாமையை கடந்து போதல் யாராலும் இயலாது.

ஆபேலின் படையலை ஏற்ற கடவுள்,கெயினின் படையலை மறுக்கிறார்.உலகின் முதல் கொலை பொறாமையினாலே விளைந்து விடுகிறது.

நானும் தம்பியும் அதே பொறாமையினால்தான் சிறுவயதில் கட்டுண்டு இருந்தோம்.ஹைட்ரஜன் எப்போதும் இரு அணுக்கள் இணைந்த நிலையிலே இருக்கும் எனப்து போல தம்பியுடன் பொறாமையினால் எப்போது சேர்ந்தே இருந்தேன்.

“யம்மா அவனுக்கு எடுத்த ஆம்லட் பெரிசா இருக்கு பாருங்க.நான் என்ன இளிச்சவாயா”

“எல கழுத நல்லா பாரு சரியாத்தான் எடுத்துருக்கேன்”

“அப்ப எனக்கு அதுல கொஞ்சம்” சட்டென்று தம்பி தட்டில் இருந்து ஆம்லெட்டை பிய்து என் தட்டில் போடுவேன்.

தம்பி அடிப்பான்.அடிதடி உருளல்.அடிதடி அதிகமாக கடைசியில் அம்மாவின் வெறி பிடித்த அடி இருவருக்கும் விழும்.

அழுது கொண்டே போய்விடுவோம்.

செவ்வாய்கிழமை கடைக்கு லீவு.ஆனால் இரவு பரோட்டா ஸ்டால்களுக்கு தேவையான பொருட்களை கொடுக்க அப்பா ஒரு மணிநேரம் கடைக்கு போவார்.

அவருடன் அன்று கடைக்கு போக எனக்கும் தம்பிக்கும் போட்டிவரும்.

காரணம் கடைக்கு எதிர்தாற்போல் இருக்கு தியேட்டர்.அப்பாவிடம் கொஞ்சம் நைச்சியம் பேசினால் செகண்ட் ஷோ படத்துக்கு கூட்டிச்செல்வார்.இருவரும் அப்பாவுடம் போக முடியாது.யாராவது ஒருத்தர்தான் என்பார்.

பேச்சு திறமையாலும் பெரியவன் என்பதாலும் அடிக்கடி நானே அப்போவோடு போவேன்.

இரவு நானும் அப்பாவும் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வரும்போதே மகிழ்ச்சியாக இருக்கும்.

தம்பி தூங்காமல் அழுதுகொண்டே இருப்பான்.அப்பாவிடம் சண்டை போடுவான்.

அவன் தோல்வியை நிதானமாக ரசிக்கலாம்.ஆறுதல் சொல்லலாம்.அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் முதுகில் செல்லமாய் தட்டும் போது, அவன் கோபத்தில் அந்த கையை எடுத்து விடும்போது உலகிலேயே பக்குவமானவான காட்டிக்கொள்ளலாம்.

அன்று அப்படித்தான் படம் பார்த்து விட்டு வந்தேன்.தம்பி குமுறினான்.

மறுநாள் காலை டிபன் ஆப்பமும் தேங்காய்பாலும்.

தேங்காய்ப்பால் எனக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக எடுத்து வைத்துவிடுவது அம்மாவின் வழக்கம்.பதினோரு மணி வாக்கில் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, தொட்டுக்கொள்ள மசாலா கடலையை சாப்பிட்டு சுவைத்து குடிப்பது என் பழக்கம்.

தம்பிக்கு தேங்காய்ப்பால் பிடிக்காது.அவன் குடிக்கவே மாட்டான்.ஆனால் முந்தின நாள் அப்போவோடு சினிமா பார்த்த துரோகத்தை மனதில் வைத்து கேட்டான்.

“எனக்கும் தேங்காய்பால் வேணும்”அம்மாவிடம் கேட்டான்.

“நீ குடிக்க மாட்டலாம்மா.அண்ணன் தான குடிப்பான்”

“அதெல்லாம் தெரியாது.என் பங்கு எனக்கு வேணும்”
வேறு வழியில்லாமல் அம்மா தேங்காய்ப்பாலை இரண்டு கப்களாக பிரித்து ஊற்றிக்கொடுத்தாள்.

நான் குடித்தேன்.தம்பி அவன் பங்கை எடுத்து பூனைக்கு ஊற்றினான்.அவேசமானேன்.

“நீ எப்படில பூனைக்கு ஊத்தலாம்.”

“அது என் பங்கு டிரிங்க்.அத நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” தம்பியிடம் இருந்து தீர்க்கமாக பதில் வந்தது.

அன்று முழுவதும் அதை நினைத்தே மருகினேன்.
என்னுடன் விளையாட வந்த தம்பியை மறுதலித்தேன்.

யாரிடமும் பேசவில்லை.

பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.பொறாமை ஒரு மதுபோல மனதை ஏதோ செய்து கொண்டிருந்தது.

எனக்குள்ளவே நிறைய பேசிக்கொண்டிருந்தேன்.அம்மா அப்பா யாரிடமும் சரியாய் பேசவில்லை.

தம்பி கூட அவன் பங்கு கேக்கையெல்லாம் எனக்கு கொடுத்து சமாதானப்படுத்த பார்த்தான்.சமாதானம் ஆகவில்லை.

ஏதோ ஒன்று என்னுள் இருட்டாய் அழுத்திக்கொண்டிருந்தது.இரவெல்லாம் முழித்தபடியே கிடந்தேன்.

பொறாமையினால் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்.

அம்மா தம்பி யாரிடமும் பேசாமல் போய் பல்விளக்கி கொண்டிருந்தேன்.

வழக்கமாக ஒரு நிமிடத்தில் பல்விளக்குபவன் அன்று பத்து நிமிடம் விளக்கிகொண்டிருந்தேன்.

தொட்டில் இருக்கும் மக்கில் நீர் மொண்டு வாய் கொப்பளித்தேன்.பிரக்ஷ்க்ஷை கழுவினேன்.

உள்ளே அம்மாவும் தம்பியும் பேசும் சத்தம் கேட்டது.

அம்மா தேங்காயை உடைத்து கொண்டிருந்தாள்.

தம்பி குட்டிச் சொம்பை கையில் வைத்திருந்தான்.

”யம்மா இன்னைக்கு தேங்காய்த்தண்ணி எனக்குதான்” என்றான்.

எனக்கு திக்கென்றிருந்தது.இன்னைக்கும் தேங்காய்த்தண்ணி அவனுக்குத்தானா?.

அம்மா தேங்காய் உடைக்கும் போது யார் முதலில் செம்பை எடுத்து வருகிறார்களோ அவர்களுக்குத்தான் தேங்காய்த்தண்ணி எனபது எனபது எழுதப்படாத விதி.

இன்று அந்த போட்டியிலும் தம்பி ஜெயிக்க போகிறான்.

தண்ணீர் முகத்தில் சொட்டிபடி இருக்க எதையும் கவனிக்காமல் சமைலைறை கடக்க முயன்றேன்.

தம்பி கூப்பிட்டான் “விஜய் இதோப்பாரு இன்னைக்கு என்க்குத்தான் தேங்காய்த்தண்ணி செம்பை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.

அம்மா என்னைப்பார்த்து “என்ன மிஸ்டர் கோவம் போயிடுச்சா” சிரித்தாள்.

நான் சிரிக்கவில்லை.

அம்மா தேங்காயை உடைத்து, தேங்காய பிளக்கபடும் போது தம்பியை பார்த்து “செம்பை ஒழுங்கா புடி” என்றாள்.

தம்பி கீழே செம்பை பிடிக்க ,அம்மா அரிவாளால் லாவகமாக தென்னினாள்.தேங்காய் தண்ணி அருவி மாதிரி கொட்டிற்று.

தம்பி வெற்றிக்களிப்புடன் என்னைப்பார்த்தான்.

நான் செம்பை நீட்டும் தருணங்களில் எல்லாம் கொஞ்சமே வரும் தேங்காய்த்தண்ணி அன்று கலகலவென கொட்டிற்று.இயற்கை முதற் கொண்டு எல்லோரும் என்னை சபிக்கிறார்கள் என்று அழுகையாக வந்தது.

சட்டென்று அதை செய்தேன்.

என் கையில் ஈரமான நீரோடு இருக்கும் பல் விளக்கும் பிரக்ஷ்க்ஷை உதறினேன்.அந்த பிரக்ஷ்க்ஷில் இருந்து தெறித்த பல துளிகள் தம்பி கையில் இருக்கும் செம்பில் இருக்கு தேங்காய் நீர் மேல் விழுந்தது.

அது விழுந்து கரைந்து உள்ளே போனதை அனைவரும் பார்த்தோம்.

எனக்கே அதிர்ச்சி ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று.

“உன் கேடுகெட்ட புத்தியை மாத்திக்க விஜய்.மனசார சொல்றேன்” என்று குரல் நடுங்க அம்மா கத்தினாள்.அழுவது மாதிரி ஆகிவிட்டாள்.

தம்பி அழுதுகொண்டே அந்த தேங்காய்த்தண்ணியை ஸின்கில் கொட்டினான்.

ஒன்றும் சொல்லாமல் கிச்சனில் இருந்து நடையை கட்டினேன்.

தம்பி கோவத்தில் செம்பை எடுத்து என் முதுகில் எறிந்தான்.நொங்கென்று அது என் முதுகெலும்பை தாக்கியது வலிக்கவே இல்லை.

பொறாமை பொறாமைதானே.அதற்கு வேறு எதாவது வடிகால் இருக்கிறதா?

சொல்ல முடியாத மனத்திருப்தி என்னை ஆட்கொண்டிருந்தது.

Thursday 11 April 2013

கதை போல ஒன்று - 83

ஜீவாவுக்கும் ஏழுமலைக்கும் இடையே சண்டை வந்தது “காட்டன் வேஸ்ட்” விசயத்தில்தான்.

சென்னை மாநகர டிப்போக்களின் ஒன்றான மவுண்ட் ரோடு டிப்போவில் எப்போதும் காட்டன் வேஸ்டுக்கு டிமாண்ட் இருக்கும்.

மெக்கானிக்குள் இன்ஜின், கியர்பாக்ஸ்,கிராங்க் சாஃப்ட் போன்றவைகளை துடைப்பதற்கும் தங்கள் கை கால்களில் ஒட்டியிருக்கும் கரியையும் மண்ணெனய்யும் துடைக்க பயன்படுவதுதான் காட்டன் வேஸ்ட்.

நானும் ஜீவாவும் அப்பரண்டீஸாக வேலைக்கு சேர்ந்த் முதல் நாள் புது காக்கி பேண்டும் காக்கி சர்டும் போட்டு ”ஜிந்தான்” மாதிரி வந்திருந்தோம்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை பிரிக்கப்பட்ட கியர் பாக்ஸில் மண்ணென்னய் தடவில் கார் வாக்ஷரில் கழுவி வரவேண்டும்.

கியர் பாக்ஸ் பாடிக்கு மண்ணென்னய் போட்டோம்.பிரிக்கப்பட்ட கியர்களுக்கும்தான்.

வண்டியில் எல்லாம் ஏற்றி, நான் உருட்ட ஜீவா பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்.சட்டென்று முதல் கியர் “தனித்தவில்” மாதிரி வண்டியில் இருந்து விழுந்து இறங்கி ஒடி ஏழுமலை முன்னால் விழுந்தது.

ஜீவா அதன் பின்னால் ஒடி” மச்சி மண்ணு ஒட்டிகிச்சுடா என்று ஏழுமலை பக்கத்தில் இருந்த காட்டன் வேஸ்டை எடுத்து துடைக்கப்போகும் போது ஏழுமலை அவன் கைகளை காட்டன் வேஸ்டோடு பிடித்து கொண்டார்.

ஜீவாவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

ஏழுமலை கத்தினார் “என் வேஸ்ட நீ எப்படி எடுக்கலாம்.போடுடா கீழ.என்னடா நெனச்சிட்டிருக்க”

நான் உடனே ஒடிவந்தேன் “சார் வேஸ்ட்தான சார்.அவசரத்துக்குதான எடுத்தான்” அதுக்கு ஏன் டென்சன் ஆகுறீங்க”

“நீ யார்டா பெரிய இவனா.இவனுக்கு சப்போர்ட்டா.அப்படித்தாண்டா. குடுக்க மாட்டேன். ஓடுங்கடா இந்த எடத்த விட்டு”

காட்டன் வேஸ்டை தரவே இல்லை.
இன்னும் அவரிடம் சண்டை போடப்போனேன்.ஜீவா என் தோளை அமுத்தினான்.விட்டு விட்டேன்.

ஏழுமலை அந்த டிப்போவின் ராஜா.

டிப்போ முழுவதும் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறது.

இன்ஜின் ஹெட்டர் பிளாக்கின் அழுத்த திறனை சோதனை செய்வதுதான் அவர் வேளை.

இன்ஜின் ஹெட்டரின் எல்லா துளைகளையும் போல்ட் போட்டு அடைப்பார்.அதற்கான ஃபிக்சரை வைத்து அதனுள் தண்ணீர் குழாயை விட்டு. தண்ணீர் சப்பளை செய்யும் டேங்கில் இருந்து அடிபம்பு மாதிரி அடிப்பார்.

குறிப்பிட்ட அழுத்தம் கொடுக்கப்படும் ஹெட்டரில் எங்காவது நீர் ஒழுகுகிறதா என்று பார்க்க வேண்டும்.

அவர் அந்த சிறிய நீர் நிரம்பிய டேங்கை ஒரு பலூன் வண்டி மாதிரியான அமைப்பில் வைத்திருப்பதாலும் அவர் மேல் எல்லோரும் கடுப்பில் இருப்பதாலும் அவரை “பலூன்காரன் “என்று அழைத்தார்கள்.

ஆதாயம் பெற்றவன், பெறுபவனின் குணம் பிடிக்கவில்லையென்றால் செய்யும் செயலைத்தான் டிப்போவில் எல்லோரும் ஏழுமலையிடம் செய்தார்கள்.

ஏழுமலை இல்லாத போது தூக்ஷிக்கவும்,நேரில் பார்க்கும் போது புகழவும் செய்தார்கள்.

இதுத்தவிர ஏழுமலை வெளிநாட்டு பொருட்களை விற்பனையும் செய்வார்.

உடை மாற்றும் இடத்தில் ,கைலாசம் அண்ணன் ”ஃபாரின் லெதர் ரெயின் கோட்டு ஒரு இருநூறு ருபாய்க்கு இருந்தா பாருங்க ஏழுமலை ”என்று சொல்ல

“ஆமாப்பா ஃபாரின் ரெயின் கோட்டு என்ன ஊர்ல் ஒன் ஆத்தா போட்டிருக்கிற பழைய கிழிசலு சேலன்னு நினைச்சிட்டிருக்கியா இருநூறு ருபாய்க்கு கிடைக்க, மினிமம் எட்நூறுப்பா” என்று அலட்சியமாக பேசியதை பார்த்து ஜீவா முறைக்க,

அவனை நோக்கி

“நீயேண்டா ஜட்டியோட நின்னிட்டிருக்க பெருச்சாளி கடிச்சிர போகுது” என்று சொல்ல ,

உடனே ஜீவா

“ஏன் உங்க இத அல்ரெடி கடிச்சிருக்கோ” என்று சொல்ல அவர் அடிக்க பாய ஜீவாவை இழுத்து வெளியே வந்தேன்.

அன்று டிப்போ குளோசிங் டைமில் எல்லோரும் கைகளை கழுவிக்கொண்டிருந்தோம்.

டிப்போவில் மெக்கானிக்குள் முதலில் கைமுழுவது மண்ணென்னய் போட்டு ஊறவைப்பார்கள். பின் துணி துவைக்கும் சோப்பால் கைகளை நன்றாக கழுவுவார்கள்.அதன் பின்னர் உடலுக்கு போடும் வாசனை சோப்பை கொண்டு கழுவுவார்கள்.

அப்படி அன்று கழுவிக்கொண்டிருக்கும் போது, எழுமலையின் சோப்பை முனுசாமி எடுத்து விட்டார்.அதிலும் துணி சோப்பைத்தான் எடுத்து கழுவினார்.கழுவும் இடத்தில் ஏதேட்சையாக எடுத்து கழுவினார்தான்.

முனுசாமி இரண்டு வருடங்களில் ரிட்டரைட் ஆகக்கூடியவர்.டிப்போவில் எல்லோரும் அவரை மதிப்பர்.ஆனால் ஏழுமலைக்கு சோப்பை அவர் எடுத்தது பிடிக்கவில்லை.சட்டென்று முனுசாமி கழுவி வைத்ததும் அந்த சோப்பை எடுத்து தூர வீசினார்.அது கழிவுநீர் டிரைனேஜில் விழுந்தது.

முனுசாமிக்கு கண்ணீல் நீர் கோர்த்து கொண்டிருந்தது.சுற்றியிருந்த யாருக்கும் ஏழுமலையை கேட்க துணிவில்லை.மவுனம் உறைந்திருந்திருந்தது.

ஜீவாவும் கலங்கிவிட்டான்.ரொம்ப நேரம் புலம்பிக்கொண்டிருந்தான் “மச்சி எதாவது பண்ணனும்டா.எதாவது.அவன் என்ன பெரிய இவனா.யாரும் அவன கேள்வி கேட்க முடியாதாடா” என்று பேசிக்கொண்டே இருந்தான்.

”மச்சி நமக்கு முடிக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு.அப்பரண்டீஸ நல்ல படியா முடிச்சிட்டு போயிருவோம்டா.நீ எதுவும் பண்ணாத கிறுக்குத்தனமா “ என்றேன்.

ஜீவா அதற்கு “சரி” என்று தலையாட்டாததையும் கவனித்தேன்.

மறுநாள் மதியம் சாப்பிட கைகழுவும் போது ஏழுமலை வந்தார்.

கை கழுவும் இடத்தில் ஏதோ தேடினார்.பின் அவரே சொன்னார் “இல்ல என் வாசன சோப்பை இங்க வெச்சேனா நேத்து.காணல” என்று தேடிப்போனார்.

எதிர்கடையில் சோப்பு வாங்கி உபயோகபடுத்தினார்.

மறுநாள் மதியமும் ஏழுமலையின் சோப்பை காணவில்லை.”என் சோப்ப காணல. காணல” என்று தேடினார்.

அடுத்த நாளும் காணாமல் போகும் போதுதான் ஏழுமலைக்கு புரிந்தது, யாரோ அவரிடம் விளையாடுவது.

“என் சோப்ப எவனோ எடுத்துகிட்டு போறான்.அவன் மட்டும் கையில கிடைச்சான்.தொலைச்சிருவேன்”

எனக்கு ஏதோ புரிந்தது. ஜீவாவை பார்த்தேன்.முகத்தை சலனமில்லாமல் வைத்து கொண்டிருந்தான்.

”ஜீவா நீதான மச்சி சோப்ப எடுக்கிறது” என்றேன்.

“மச்சி வாய மூடு நான் ஏன் சில்லரத்தனமா செய்யப்போறேன்.” என்னை அடக்கினான்.

ஏழுமலையின் சோப்பு காணாமல் போவது டிப்போ முழுவதும் பரவியது.

ஏழுமலையும் எங்கெல்லாமோ ஒளித்து வைத்து பார்த்தார்.சோப் காணமல்தான் போனது.

அவருக்கு என்று கொடுத்திருந்த பெட்டி மாடியில் உடை மாற்றும் அறையில் இருந்தது.அதில் சோப்பை வைத்து பூட்டினார்.அன்று சோப் காணாமல் போகவில்லை.ஆனால் தினமும் கைகழுவ மாடிக்கு போய் சோப்பை எடுக்க முடியாதல்லவா? அதனால் கீழே வைத்தார்.அன்று மறுபடியும் காணாமல் போயிற்று.

வொர்க்ஸ் மேனஜரிடம் போய் கம்பளியிண்ட் கொடுத்தால் “சோப்பு ஒரு பிரச்சனையா ஏழுமலை.போன மாசம் கண்ணனோட பத்தாயிரம் ரூபாய் காணம போச்சி.அவரே அமைதியாத்தான் இருந்தார்” என்று திருப்பி அனுப்பபட்டார்.

டிப்போவாசிகளுக்கு “யார்டா அவன் சோப்ப எங்குன வைச்சாலும் தூக்குறான்” என்று ஒரே சிரிப்பு.
பலூன்காரன் பட்டத்தில் இருந்து “சோப்பு” என்ற பட்டபெயரை கொடுத்தனர்.

“என் சோப்பை தூக்குறவன் அம்மா தினத்துக்கும் ஆட்டோல போய் தொழில் செய்றவ.அவன் அப்பன் ஒரு பேடிப்பய” என்னவல்லாமோ சொல்லிப்பார்த்தார்.சோப்புகட்டிகள் காணமல்தான் போனது.

இதை ஜீவாதான் செய்கிறான் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.ஆனால் கேட்டால் அவன் வாயால் சொல்ல மாட்டென் என்கிறான்.

எங்கள் அப்பரண்டீஸ் முடிந்தது. ஒரு வாரம் கழித்து சர்டிபிக்கேட் அப்ளை செய்வதற்கு டிப்போ வொர்க்ஸ் மேனஜர் கையெழுத்து வாங்கப்போனோம்.

விசாரித்ததில் அப்போதும் ஏழுமலையின் சோப்பு கட்டிகள் காணாமல்தான் போய்கொண்டிருக்கிறதாம்.
தினமும் அல்ல,ஆனால் வாரம் ஒருமுறை அப்படி நடக்கிறதாம்.இப்போதெல்லாம் ஏழுமலையின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிகிறதாம்.கொஞ்சம் அடக்கமாகிவிட்டாராம்.யாரையும் அதிகம் புண்படுத்துவதில்லையாம் வார்த்தைகளால்.

வெளியே வந்து டி.வி.எஸ் பேக்ஆபீஸ் பக்கத்தில் உள்ள டீ கடையில் டீ குடிக்கும் போது “மச்சி சாரிடா நீதான் அந்த சோப்பை எடுத்து போட்டுருப்பன்னு நம்புனேன்.ஆனா இப்ப நீ வந்த் பிறகு சோப்பு காணாம போகுதுன்னு தெரிஞ்சபிறகு மொக்கயாயிட்டேண்டா.” என்றேன்.

ஜீவா என்னை பார்த்து சிரித்தபடியே “என்னடா நீ சுத்த வெங்காயமா இருக்க.சோப்ப எடுக்கிற குரூப்ல நானும் ஒருத்தந்தான்.நான்தான் அந்த குரூப்பையே அமைச்சேன்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் சோப்ப எடுப்போம்.ஒருத்தந்தான் சோப்ப எடுக்கனுமா.ஒரு கூட்டம் எடுக்க கூடாதா” ஏழுமலை அலறனும்.அவருக்கு புரியனும். அதுவரைக்கும் நா இல்லன்னாலும் இது தொடரும் மச்சி”

“அட நாய நீ இவ்வளவு பெரிய கிரிமினலா.இப்ப அந்த குருப்புக்கு தலைவன் யாரு”

”அதச்சொல்ல மாட்டேன் மச்சி.நீ ஒட்டவாயி.உளறிருவ” என்று டீயை உறிஞ்சினான் ஜீவா.

Thursday 4 April 2013

கதை போல ஒன்று - 82



நாங்கள் எல்லோரும் டீச்சரின் வீட்டில்தான் கிரிக்கட் விளையாடுவோம்.

டீச்சர் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் சிறிய நீள புளிய விளை விளையாட தோதுவாய் இருந்தது.

விரல் நீள கம்பளி பூச்சிகள் தொல்லைகளை தவிர வேறு எல்லாமும் எங்களுக்கு கிரிக்கட் விளையாட தோதான தன்மைகளையே கொண்டிருந்தன.

டீச்சரின் மகன் பிண்டோ அண்ணனும் எங்களுக்கு சப்போர்ட் என்பதால் யாரும் எங்களை கேட்க முடியாது.காலை ஆறுமணிக்கெல்லாம் கூட விளையாடியிருக்கிறோம்.

தக்கலை ஸ்கூலில் வேலை செய்யும் டீச்சருக்கு இரண்டு அழகான மகள்களும் உண்டு.

பிங்கலா அக்காவும் பிரிஜூலா அக்காவும்.

எனக்கு இளைய பிரிஜூலா அக்காவை பிடிககாது.அவர்கள் வீட்டிற்கு ஆசையாக கலர் டீவி பார்க்கப்போனால் நாய் மாதிரி எரிந்து விழுவாள்.விரட்டிவிடுவாள்.

ஆனால் மூத்த  பிங்கலா அக்கா அப்படியில்லை.

பேசுவதே இனிமையாயிருக்கும்.” தம்பி மீன் வளக்கியா.அக்கா ஒனக்கு அழகாயிட்டு கலர் மீன் தாரேன்.யல கோல்டு பிஸ்ஸுல.
எப்படி வண்ணமாயிட்டு இருக்குவு பாரு” என்று தான் வளர்க்கு மீன் தொட்டியை காட்டுவாள்.

ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் உடைய சின்ன மீன் தொட்டிதான்.ஆனால் அதை அவள் வைத்திருக்கும் நேர்த்தியும் மீன்கள் மீது காட்டும் பாசமும் பார்க்க இனிமையானது.

மீனவ சமூகத்தில் பிறந்திருந்தாலும் மீன் சாப்பிட மாட்டாள்.”யக்கா சாள மீனு கூட சாப்பிட மாட்டியளாக்கா” என்று கேட்டால் தன்னுடைய தலையை மெல்ல ஆனால் தீர்க்கமாக ஆட்டி கண்ணடிப்பாள்.

ரிப்பளிக் டே லீவில் எல்லோரும் இந்திய ராணுவத்தின் அணிவகுப்பை பார்த்து தேச உணர்ச்சியால் பூரித்து கிறங்கிக்கிடக்கும் போது டீச்சர் வீட்டிலிருந்து சத்தம் கேட்டது.

யாரோ பிங்கலா அக்காவை அடிப்பதும் பிங்கலா அக்கா அழுவதும் கேட்டது.

திடீரென்று டீச்சரும் அவர் கணவரும் பிங்கலா அக்காவை பிடித்து வீட்டை விட்டு போ போ என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதும்,”யம்மா நா எங்கன போவேன்.,செத்துதான் போவேன்” என்று பிங்கலா அக்கா அழுததையும் பார்த்து அம்மாவிடம் போய் சொன்னேன்.

அம்மா மெல்ல எட்டிப்பார்த்தவள் “அது அவுங்க குடும்ப பிரச்சனை.நீ வந்துரு” என்று என்னை அழைத்து போகும் போது பிங்கலா அக்காவின் பின் இடுப்பில் பிரம்பு தளும்புகளை பார்த்தேன்.

இரண்டு நாள் கழித்து டீச்சர் இரவு ஒன்பது மணிக்கு அம்மாவை அழைத்தார்.அம்மா என்னவென்று வீட்டிற்கு போக நானும் அண்ணனும் ஒட்டிக்கொண்டோம்.

டீச்சர் வீட்டில் பிங்கலா அக்கா அழாமல் ஆவேசமாக மூச்சிரைத்த படி நின்றிருந்தாள்.

அவள் நின்ற தீர்க்கத்தை பார்க்க பயமாயிருந்தது.சீக்கிரம் அந்த இடத்தை விட்டு ஒடிப்போய் என்னுடைய குட்டித்தலையணையை கால்களுக்கு இடையே வைத்து நிம்மதியாக தூங்க வேண்டும்போல் இருந்தது.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன்.

இருபத்தியைந்து முப்பது வ்யதுள்ள ஒரு அண்ணனும் நின்று கொண்டிருந்தார்கள்.

நல்ல டிஸ்கோ கட்டிங்கும்,கம்ப்ளி மீசையும் வைத்து பேண்ட சர்ட்டில் நாகரீகத்தை வைத்து கெத்தாக நின்று கொண்டிருந்தார்.

பிங்கலா அக்கா தன்னுடைய நகைகள் எல்லாத்தையும் கழட்டி டீச்சரிடம் கொடுத்தாள்.டீச்சர் வாங்கவில்லை.

அம்மாவிடம் கொடுத்தார்.அம்மா வாங்கியபடி “அப்பாகிட்ட சொல்லிட்டு போம்மா.இப்படி பிடிச்சவன்கிட்ட யாரு துணையும் இல்லாம நைட்ல போறது நல்லாவா இருக்கு” .

அக்காவும் அவரும் எதுவும் பேசவில்லை.வெளியே காத்திருந்த அம்பாசிடர் காரில் ஏறிப்போய் விட்டார்கள்.

 “இன்னைக்கு நைட் எங்க வீட்லயே இருங்க.இல்லன்னா நா தூக்குல தொங்கிருவேன்” என்று டீச்சர் கதற அவர் வீட்டு ஹாலிலே நாங்கள் எல்லோரும் படுத்து தூங்க நான் அணைந்திருந்த கலர் டீவியையே பார்த்து கிடந்தேன்.

ஆறுமாதம் கழித்து நாங்களும் பிண்டோ அண்ணனும் டீச்சர் வீட்டில் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த போது, டீச்சர் வீட்டிற்குள் இருந்து புதிதாக ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

கொஞ்சம் யோசித்து கூர்ந்து பார்த்ததில் அவர்தான் அன்று பிங்கலா அக்காவை இரவோடு இரவாக கூட்டிப்போனவர்.

”அப்போ பிங்கலா அக்கா எங்க” .நான் கேட்கவில்லை.ஆனால் மனசு தேடிற்று.

டீச்சர் சமாதானமாகி விட்டார்களா இந்த அண்ணனோடும் பிங்கலா அக்காவோடும் இது மாதிரி பல கேள்விகள் கிரிக்கட் ஆட ஆட வந்தது.

அந்த அண்ணன் எளிமையாய் பேசி நல்லாவே பழகினார்.ஐந்தே நிமிடத்தில் மிக நெருக்கமானதொரு உணர்வை வெளிப்படுத்தினார்.

அவர் பேட்டிங் பிடிக்க நான் பவுலிங் போட்டுக்கொண்டிருந்தேன்.

ஹால்ஃப் ஸ்டெம்புக்கு வெளியே போட்ட பாலை வேகமாக அடித்தார்.

அவர் அடித்த அடியில் ரப்பர் பந்து , வலது பக்க சுவற்றில் வேகமாக பட்டு, அங்கிருந்து இடது பக்கம் நோக்கி போய் சமயலறைக்கு வெளியே உலை வடித்து கொண்டிருந்த டீச்சரின் கைகளில், ஒரு பைஃப் டியூபில் பட்டு ஏறி தாக்கிற்று.

பந்து பட்ட வேகத்தில் டீச்சர் பானையை விட்டுவிட்டார்.

கையில் கொஞ்சம் கொதிசோறு கொட்டிவிட்டது.

பானையை விட்டதால் சோறு கீழே கொட்டிற்று.

இத்தனை நாள் கிரிக்கட் விளையாடி இருக்கிறோம்.

இப்படி நடப்பது இதுதான் முதல் தடவை.

சூட்டின் எரிச்சலில் டீச்சர் எங்களை நோக்கி கத்தினார் “யல மென்டல்பயலுவளா.போங்கல இனிமே இங்கன வெளாண்டா சமுட்டிப்புடுவேன்.”.

இப்போது அவர் மருமகனைப் பார்த்து திரும்பினார்.அண்ணன் கொஞ்சம் அசடு சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார்.

டீச்சர் கோபத்துடன் உள்ளே போனார்.

கொஞ்ச நேரத்தில் பிங்கலா அக்கா வந்தார்.மெலிந்து சிறுத்து பழைய புடவையோடு.என்னையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை

“நீங்க ஏன் சின்ன பிள்ளைங்க கிட்ட வெளாடுறீங்க வீட்டுக்குள்ள வாங்க”.

ஆனால் அண்ணன் சிரித்தபடியே பேட்டை வைத்து கொண்டே இருந்தார்.

கால் மணி நேரம் கழித்து “சரி சரி எல்லாரும் சமாதானாமாயிட்டாவ. நீ பந்த போடு பில்லேய்” என்று என்னைப் பார்த்து சொல்ல நான் இரண்டு பாலை போட்டேன்.

விளையாடத்தொடங்கி ஐந்தாவது நிமிடம் பிங்கலா அக்கா வெளியே வந்தாள்.

அவள் கையில் அவளுடைய ஆசை மீன் தொட்டி மீன்களுடன் இருந்தது.அதை ஒங்கி தரையில் போட்டாள்.

தொட்டி சிமண்டு தரையிலும் மண்ணிலும் தெரித்து மீன்கள் தரையில் நெளிந்து செத்து கொண்டிருந்தன.

”உனக்கு என்ன சொன்னாலும் புரியாத தொட்டி நாய.நீ என் புருசனால.கஞ்சிக்கு வழியில்லனுதானல தாயிக்க வீட்டுக்க வந்து பிச்ச சோறு சாப்பிடுறோம்.அங்கனையும் வந்து வெளாட்டு அது இதுன்னு பிரச்சனைபண்றியள.இவன்கிட்ட போய் மாட்டிவிட்டியே இயேசுவ .சாவுல நீ.நா தாலியில்லாம வாழ்ந்துகிடுவேன்” என்று தலையெல்லாம் கலைத்து அழுதாள்.

நாங்கள் பயந்து எங்கள் வீட்டிற்குள் நின்று பார்த்து கொண்டிருந்தோம்.

பிரச்சனையின் போது காணமல் போகிற மனித நாசுக்கும் நளினமும் எப்போதும் நடக்கும் ஒன்றுதான் போல.

அந்த அண்ணன் எதுவுமே பேசவில்லை.அப்படியே நின்றுதிருந்தார்.

மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் அடங்கின பிறகு டீச்சர் வீட்டு காம்பவுண்டில் என்னுடைய ஸ்டம்புகளை எடுக்க போகும் போது அண்ணன்  மீன் தொட்டி உடைந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

உடைந்த மீன் தொட்டியின் கண்ணாடியை வைத்து மண் தரையில் கோடுகள் போட்டுகொண்டே இருந்தார்.

“சாப்பிட்டீங்களா” என்று கேட்டேன்.

பதில் சொல்லவே இல்லை.வேறு பேசினார்.

“இந்த மீனக எல்லாம் ஒனக்கு பிடிக்குமாடே”

“ம்ம்ம்...பிடிக்கும்ண்ணே”

“உனக்கு பிடிக்கும்ன்னு பிங்கலா அடிக்கடி சொல்லுவா.இந்த மீனுகள அவளுக்கு நாந்தான் வாங்கிக்கொடுத்தேன் பாத்துக்க.அவ டதியில படிச்சா.நான் ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல படிச்சேன்.ஹிந்துவா போயிட்டேன்.அப்புறம் அவிய மதம் மாறிட்டேன்தான்.என்ன மதத்துல இருந்தாலும் சம்பாதிக்கனும்ல.காசில்லனாலே பிரச்சனைதான் கேட்டியா” என்று என்னை நோக்கி வெற்றுச்சிரிப்பு சிரித்தார்.

பாவமாய் இருந்தது.

அன்றிரவு ஏழு மணி வாக்கில் டீச்சர் வீட்டின் ஜன்னல் கொஞ்சம் திறந்து கிடந்ததில் “அந்த அண்ணன்” சாப்பிட்டுக்கொண்டிருக்க பிங்கலா அக்கா பரிமாறும் காட்சியை பார்த்தேன்.

மதியம் பார்த்ததை விட , வெள்ளந்தியாக சாப்பிடும் போது,அண்ணனின் முகத்தை பார்த்ததால் மனதின் அழுத்தமும் துக்கமும் கூடிற்று.

இன்றியிலிருந்து எத்தனையாவது நாள் பிங்கலா அக்காவும் அந்த அண்ணனும் சமாதானமாவார்கள் என்று யோசித்து கொண்டே ரொம்ப நேரம் தூங்காமல் புரண்டு கிடந்தேன் அந்தச்சின்ன வயதிலேயே...

கதை போல ஒன்று - 81

முட்டி வரைக்கும் மிடி போட்டு, வெள்ளையாய் இருந்து, சிரித்தும் பேசினால் அந்தப்பெண்ணை சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும்தானே.

அப்படித்தான் ஜெபாவின் ரூமில் கூட்டம் வழிந்து கொண்டிருக்கும்.

என்ஜியரிங் டிசைன் கம்பெனியில் எல்லாம் லைப்ரரி கட்டாயம் இருக்கும்.அதில் நிறைய ஸ்டாண்டர்டுகள் கோட்கள்(code) இருக்கும்.

அதனை நிர்வகிக்கும் ஒற்றை லைப்பரியனாக வேலை செய்யும் ஜெபாவின் வயது முப்பத்தி ஒன்பது.

கம்பெனியில் டிரையினியாய் சேர்ந்த போதிருந்த வயதை விட பதினெட்டு வயது அதிகம்.

ஆனால் அது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.மற்ற ஆண்களோடு சேர்ந்து நானும் ஜெபாவுக்காக மோத ஆரம்பித்துவிட்டேன்.

முயற்சிப்போம்.கிடைத்தால் ஆச்சி.கிடைக்காவிட்டால் மயிராப்போச்சு என்பதான மனதில் இருந்தேன்.

ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

ஜெபாவின் அறையில் போய் இளித்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் பெரிய அதிகாரிகள்,பிஸினஸ் டெவலப்மெண்ட் ஆபீசர்,சில சமயம் துறைத்தலைவர்களையும், ஏன் ஜி.எம்மையும் கூட சிரித்து சிரித்து வெட்டியாக பேசி கண்களின் மட்டும் காமத்தை வைத்து கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன்.

ஆக கவனம் தேவை.கவனி.அவள் என்ன செய்கிறாள் என்று கவனி. எதாவது மாட்டும்.

கவனித்ததில் அவள் “ஜெப்ரி ஆர்ச்சர்” புத்தகத்தை புத்தங்களை அடிக்கடி வாசிப்பதை குறித்து கொண்டேன்.

ஆனால் வேளை இன்னும் வரவில்லை என்று கடந்த நாட்களை நினைத்து அவசரப்படவில்லை.வேட்டையில் பொறுமை அவசியம்.

காலம் வந்தது.

அது ஒரு எம்.டி.ஓ என்ற மெட்டீரியல் டேக் ஆஃப் புராஜெக்ட்.

அதற்கு நிறைய புத்தகங்கள் விதிகள் கோட்பாடுகளை ரிஃபர் செய்ய வேண்டும்.

செய்வதற்கு அடிக்கடி லைப்ரரி போகவேண்டும்.போனேன்.

“உடகார்” என்றாள் ஜெபா.ஜெபா ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவார்.முதல் மூன்று நாட்கள் ரொம்ப மரியாதையாக பேசினேன்.

நான்காவது நாள்

“அது ஒரு நல்ல காலைபொழுது,ஒரு நல்ல காபியை குடிக்க,ஒரு நல்ல சூரிய ஒளியை ரசிக்க,ஆனால் கண்டிப்பாக லாக்கப் போவதற்காக போலீஸ் ஜீப்பில் ஏறி போவதற்கு அல்ல” இதை யார் எழுதியது மேடம் என்றேன் புன்முறுவலோடு.

ஜெபா என்னை முதன்முதலில் அலுவலக வேளை இல்லாமல் நோக்கினாள்.அப்படியே சிரித்தாள். “மை ஜெப்ரி” என்றாள்.
”நீ கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டாய்.ஜெப்ரி ஆர்ச்சர் படிப்பியா நீ”

“படிப்பேன்.நீங்கள் எப்படி அழகாக இருக்கீங்களோ அதுமாதிரி அவர் எழுத்தும் நேர்த்தியா இருக்கும்” என்று சிரித்தேன்.

என் புகழுரையை தவிர்த்து ஜெப்ரி ஆர்ச்சர் பற்றியே பேசிக்கொண்டிர்ந்ததை பார்த்து ஒன்று தெரிந்து கொண்டேன்.இலக்கியம் பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்திருக்கிறாள் என்று. தினமும் நிறைய பேசினோம்.

/நல்ல டாப்பிக்கோ கெட்ட டாப்பிக்கோ பெண்ணை பேச்சுக்கு அடிமையாக்கு.உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு கொண்டுவா.மீன் கிடைக்கும்/படித்த புத்தக விதி வேலை செய்தது.

இரண்டு நாள் லைப்ரரி பக்கம் போகாமல் இருந்தேன்.இண்டர்காமிற்கு அழைப்பு வந்தது “ஏன் வரவில்லை என்று”
உடனே போனேன்.”நான் வந்து விட்டேன் ஜெபா.கொஞ்சம் வேலை என்றேன்”

/பேச்சுக்கு அடிமையாக்கி விட்டாயா.இப்போது அக்கறை கொண்டவன் போல நடி.அல்லது பிதற்று/ புத்தக விதி.

“நெத்தியில என்ன தழும்பு ஜெபா”

“கீழே விழுந்துவிட்டேன்”

பக்கத்தில் போய் உரிமையுடன் தொட்டேன் நெற்றியை. எதிர்ப்பில்லை.
விட்டுவிட்டேன்.

அவள் தான் சிறுவயதில் சைக்கிளில் விழுந்த கதையை சொல்ல ஆர்வத்துடன் கேட்டேன்.

இருவருக்கும் உரிமை கூடிற்று.

/அக்கறை மாதிரி நடித்து விட்டாயா.பர்சனலுக்குள் நுழை.கொஞ்சம் கெட்ட மாதிரி பேசு.ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டால் நான் இதைத்தானே சொன்னேன் என்று தப்பிப்பது மாதிரி பேசு/புத்தக விதி.

“ஜெபா எப்படி உங்க கால்கள் இவ்ளோ பளபளப்பா இருக்கு.ஒரு மார்பிள் சிலை மாதிரி “என்றேன்.

சிரித்தாள் “நன்றி நன்றி. உட்கார் விஜய் உன்னிடம் ஒன்று பேசவேண்டும்”

உட்கார்ந்தேன்.

“சிம்பன்சி தன்னுடைய பார்டனரை உடல் உறவுக்கு அழைக்க கொஞ்சம் பழங்களை லஞ்சமாக கொடுக்குமாம்.நட்பிலிருந்து உடலுறவுக்கு அழைத்துப்போக எடுத்துக்கொள்ளும் பததிற்கு ஆங்கிலத்தில் ”கோர்ட்ஷிப்” என்று பெயர்.நீயும் அதுமாதிரி என்னை “கோர்க்ஷிப்” பண்ண பார்க்கிறாயா? உனக்கு அது விருப்பமா” நேரடியாக சொல்.

செவுளில் அறைந்தது போலாகி விட்டது.

நேரடியாக கேட்டது, மனதை ஆணியடித்துவிட்டது.

“மன்னித்து விடு ஜெபா.இனிமேல் இது நடக்காது என்று கையை நீட்டினேன்”

“கையை குலுக்கி. நான் நேரடியாக இப்படி கேட்பது ஏன் என்றால் எனக்கு உன்னை பிடிக்கும் என்பதால்தான்.நீயும் என்னிடம் இப்படி பழகுவது எனக்கு அலுப்பாய் இருக்கிறது ஃபிரண்ட்” என்றாள்.

வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் முதல் ஜெபாவிடம் தப்பான நோக்கமில்லாமல் பழக முயற்சித்து இரண்டு நாட்களில் வெற்றியும் பெற்றேன்.

“நீ என் வாழ்க்கையில் முக்கியமானவன் “என்று சொல்வாள்.

அப்படியே காலம் போக எனக்கு வேறொரு கம்பெனியில் வேலைகிடைக்க ஜெபாவிடம் சொல்லிக்கொள்ள அவள் அறைக்குள் போனேன்.

மிகவும் வருத்தப்பட்டாள் பிரிவை எண்ணி.

போன் அடிக்கடி பண்ணு என்றாள்.இனி யாரிடம் புத்தகம் பற்றி பேசுவேன் என்றாள்.

உன் க்ஷர்ட் சைஸ் என்ன என்றாள்.சட்டை பிரசண்ட் செய்தால் வாங்கிக்கொள்வாயா என்றாள்”

“உங்களுடைய சம்பளமே சொற்பம் என்று எனக்கு தெரியும் ஜெபா சட்டையெல்லாம் வேண்டாம்” என்று உரிமையாய் மறுத்தேன்.

வாழ்த்து சொல்லி கைகொடுத்தாள்.

சும்மாவேனும் கிண்டலுக்கு அவளை வம்பிழுத்தேன்.

”இரண்டு வாரம் முன்பு உங்கள் அறையில் நான் நுழையும் போது பார்க்க முடியாத ஒரு காட்சியை கண்டேன் ஜெபா”

சட்டென்று என்னை இறுக்கமாக பார்த்தவள்.
“என்ன பார்த்தாய் “என்று சிரித்தபடியே கேட்டாள்.

”நான் சும்மா விளையாடினேன் ஜெபா.ஒன்றுமே பார்க்கவில்லை” என்றேன்.

”ஏன் இந்த காமடி விளையாட்டு” என்று என்னிடம் பேச்சை இழுத்தவள்.
“சொல்லி நீ என்னப்பார்த்தாய்”

“அய்யோ மேடம் நான் ஒண்ணுமே பார்க்கவில்லை சும்மா கலாய்த்தேன்” என்றேன்.

விடைபெற்று வேறு கம்பெனியில் சேர்ந்து முதல் இரண்டு மாதம் ஜெபாவுக்கு போன் செய்வேன்.
அப்போதும் ஒருமுறை “என்னப்பார்த்தாய் “ என்று கேட்டாள்.

குழம்பிவிட்டேன்.சொன்ன பதிலையே சொன்னேன்.

தூரப்போய் விட்டவர்களை எளிதில் மறந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் பழகுவது என் பழக்கம்.

முன்று வருடங்கள் கழித்து கல்யாணப்பத்திரிக்கையை கொடுக்க ஜெபா ஆபீஸுக்கு சென்றேன்.அவள் ரூமிற்கே அழைத்து சென்றாள்.
பெண்ணைப்பற்றி விசாரித்தவள் தன் பையிலிருந்து க்ஷோபா டே எழுதிய “ஸ்பொஸ்(Spouse)” புத்தகத்தை கொடுத்தாள்.

“என்ன ஜெபா நான் வருவேன் என்றே இந்த புத்தகத்தை வாங்கிவைத்தீர்களா”

“இல்ல தற்செயலா நடந்ததுதான்.படிச்சிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணு “ என்றாள்.

ஐந்து நிமிடம் பேசினதற்கப்புறம்.

“விஜய் நான் ஒன்று கேட்பேன்.கடவுள் மேலே பிராமிஸ் சொல்வாயா.அன்று என் அறையில் என்னப்பார்த்தாய்”

நான் எரிச்சலானேன்.அடிமனதில் இருந்து ஆவேசம் வந்தது.

“என்னுடைய அம்மா மீது பிராமிஸாக சொல்கிறேன்.நான் ஒன்றும் பார்க்கவில்லை.கேலிக்காக அப்படி சொன்னேன்.இப்போது நான் உன்னிடம் பொய் சொன்னால் கடவுள் மேல் ஆணையாக என் அம்மாவுக்கு எதாவது நடக்கும்” என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக கத்தினேன்.

சட்டென்று டேபிளில் முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவள் உடலெல்லாம் அதிர்ந்தது.

மூக்கை உறிஞ்சியபடி கர்சீஃபால் மூக்கை துடைத்து , கண்களையும் துடைத்து கட்டாய சிரிப்பை சிரித்து

“ஸாரி ஸாரி.நீ என்னை நல்லவளாக நினைக்க வேண்டும் என்று மனது விரும்புகிறது.

என்னையறியாமல் அழுதுவிட்டேன்.

உன் கல்யாணத்திற்கு கண்டிப்பாக வருவேன். வாழ்த்துக்கள்” என்றாள்.

லைப்ரரியின் புத்தகங்கள் எல்லாம் ஜெபாவுக்கு அறுதல் சொல்வதை மவுனமாக பார்த்துகொண்டிருந்து விட்டு வெளியேறினேன்.

Tuesday 2 April 2013

கதை போல ஒன்று - 80


காலை நான்கு மணிக்கு அப்பா எழுப்பினார்? முழித்து சுயநினைவிற்கு வரும் போது அம்மா விசும்பி கொண்டிருந்தாள்.

அப்பா மிகக்கம்மிய குரலில் சொன்னார்? விஜய் சித்தி வீட்ல இருந்து போன் வந்துச்சு.நம்ம பிரபா இல்ல அவள் செத்துட்டாளாம்.தூக்கு போட்டுக்கிட்டாளாம்.

பத்தாம் வகுப்பு, அதிலும் சென்னையிலேயே பெரிய பள்ளியில் படிப்பதால் பிரபாவுக்கு பெருமையில்லை.ஆனால் எல்லா மாதங்களிலும் முதல் ரேங்க் எடுப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறாள்.

இதுவரை கணிதத்தில் நூற்றுக்கு குறைந்து எடுத்ததே இல்லை.

ஒரு தடவை ஜியோமெட்ரி படம் வரைந்த கணக்கில் மிஸ் இரண்டு மதிப்பெண்கள் குறைத்து விட்டார்.பிரபாவுக்கு பொறுக்கவில்லை.

”மிஸ் ஏன் மார்க்கு லெஸ் பண்ணுனீங்க”

“நீ படம் கரெக்டாத்தான் வரைஞ்சிருக்க.ஆனா புரொசீஜர்ஸ் சரியா எழுதலையே.புக்ல வேற மாதிரியில்ல இருக்கு”

“மிஸ் ப்ளீஸ்  இதப்பாருங்க.புக்ல உள்ள சென்டண்ஸ மாத்தி எழுதியிருக்கிறேன் என்னோட சொந்த ஸ்டைல்ல.ஆனா சரியாத்தான எழுதியிருக்கேன்” என்று வாதிட்டு இரண்டு மார்க்கை வாங்கி நூறாக்கியவள்.

சித்தியும் சித்தப்பாவும் தங்கள் மகளை பற்றி பேசுவதின் மூலம் உலகின் எல்லா இன்பங்களையும் அடைய வரம் வாங்கி வைத்திருந்தார்கள்.படிப்பதின் பெருமையை அதன் புனிதத்தன்மையை சற்று ஆழமாகவே பிரபாவிடம் ஊன்றியிருந்தார்கள்.

படிப்பு என்பது அறிந்து கொள்வதைத்தாண்டி ஈகோவாக வளர்ந்து போயிற்று பிரபாவிடம்.

தன்னுடன் படிக்கும் மற்ற அழகான பெண்களுடன் ஒப்பிடும் போது பிரபா பேரழகியில்லையென்றாலும்,அந்த இழப்பை தன்னுடைய அகடமிக் முதன்மையால் சரிகட்டிக்கொண்டாள்.

ஓவ்வொரு தேர்விலும் முதன்மை வர வர புரோகிரஸ் ரிப்போர்ட்டை பெட்டினா மேரி சிஸ்டர் கொடுக்கும் போது முதுகில் தட்டிக்கொடுக்க கொடுக்க,காற்றில் மிதப்பது பிரபாதான்.

பெட்டினா மேரி சிஸ்டர் பிரபாவை "புரோடிகி(Prodigy) பிரபா” என்றே பட்டமாய் அழைப்பாள்.

தன்னுடைய பள்ளி சார்பாக எல்லா போட்டிகளுக்கும் அனுப்ப பிரபாவின் அறிவு பெட்டினா மேரி சிஸ்டருக்கு வசதியாய் இருந்தது.

இன்றுள்ளதுபடி நாளை.நாளை மாதிரி மறுநாள் என்று போனால் வாழ்க்கையில் பிரச்சனையே இல்லைதான்.

ஆனால் அது சாத்தியப்படாத தருணத்தில் ஏன் என்ற கேள்வியும் வரும் தருணத்தில் க்டவுள் என்ற கோட்பாட்டை இழுத்து அதன் மேல் எல்லா பாரத்தையும் ஏற்றி வைத்து விடுகிறோம்.

பிரபா மேலும் கடவுள் என்கிற கோட்பாடு விளையாடலாயிற்று.

அரைவருட பரிட்சைக்கு பத்து நாட்கள் இருக்கும் போது ஆக்ரோசமான “டைபாய்ட்” பிரபாவை தாக்கியது.

ஹாஸ்பிடலில் ஒருவாரம் அட்மிட் ஆகி சுயநினைவை இழந்து, தூங்கி எழுந்து தூங்கி எழுந்து வாந்தியெடுத்து, ரத்த சாம்பிள்கள்,டிரிப்ஸ் ஏத்த கைகளை உணர்வே இல்லாமல் நீட்டிக்கொண்டிருக்கும் போது கூட பிரபாவின் ஆழ்மனதில் ஒடிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்.ஹாஃப் இயர்லி எக்சாம் எழுத முடியுமா? முடியாதா?

ஒருவாரம் முடிந்தது டைபாடால்  தன்னுடைய முடி கொட்டிய அலங்கோலமான நிலையை கூட கண்டுகொள்ளவில்லை.

“அப்பா நா எக்சாம் எழுதனும்” என்றாள்.

“எழுதலாம்.டாக்டர்கிட்ட கேட்போம்” என்றார் அப்பா.

டாக்டர் வேறு விதமாக சொன்னார்.இவளை வீட்டுக்கு அழைத்து சென்று இன்னும் இருபது நாட்கள் பெட் ரெஸ்டிலே வைத்து பக்குவம் பாருங்கள்.பரிட்சை எழுத வேண்டாம்.அரைவருட பரிட்சைதானே என்று அனுப்பி வைத்தார்..

அப்பா தயங்கி தயங்கி நின்னார்.

“என்னப்பா எக்சாம் எழுதாலாம்தானே”

“ம்ம்ம்... இல்லம்மா நீ ரொம்ப ரொம்ப வீக்காயிருக்கியாம்.பரிட்சை எழுத வேண்டாம்ன்னு சொன்னார்”

பிரபா எட்டிகாலை வீசியதில் பக்கத்து ஸ்டூலில் இருந்த பழைய ஃப்ளாஸ்க் கிழே விழுந்து தன் மெர்க்குரி பூச்சை சிதறடித்து கொண்டது.

“இல்ல நா எழுதுவேன்.எழுதுவேன்.எழுதுவேனும்பா” மயங்கி விழுந்தாள்.

மறுபடி ரெண்டு மணி நேரம் கழித்து எழுந்து அம்மாவிடம் அழுதாள்

“இந்த ஸ்கூல் ரூல்ஸ் தெரியுமில்ல.இங்க டென்த் பப்ளிக் எக்சாம் மார்க்க வைச்சு மட்டும் பிளஸ் ஒன் குரூப் தரமாட்டாங்கம்மா.

டென்த்தோட ஹாஃப் யியர்லி ஆனுவல் மார்க்கையும் ஆவரேஜ் எடுத்து அந்த மார்க்குத்தான் குரூப் கொடுப்பாங்க. இப்ப நான் பரிட்சை எழுதலன்னா எனக்கு பாதி மார்க்குதான் வரும்.அப்போ ஃபர்ஸ்ட் குரூப் கிடைக்காதும்மா.”

“ரொம்ப யோசிக்காத பிரபா.உடம்பு சரியில்லன்னா என்ன செய்ய முடியும்” அம்மா சொன்னாள்.

“என் பிரஸ்டீஜ் என்னாகும்மா.வசந்தி, டெல்மா எல்லாம் ஃபர்ஸ்ட் குரூப் படிப்பாங்க.நான் மட்டும் செகண்ட் குரூப் எடுக்கனுமா.எப்படியாவது பரிட்சை எழுதனும்மா.இதுவரை மார்க் கொறைஞ்சதே இல்லம்மா”

பிரபாவை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

பரிட்சை எழுத வேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள்.

டாக்டரை வீட்டுக்கே அழைத்தார்கள்.

“நீயே தனியா ஹெல்ப் இல்லாம பாத்ரூம் போயிட்டு வாம்மா.நான் உன்ன பரிட்சை எழுத அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு போனார்.

அவருக்கு தெரியும் பிரபாவால் அது முடியாதென்று.

முதல் நாள் பரிட்சை முடிந்தது.

இரவில் வெறிக்க பார்த்து கொண்டிருந்தவளிடம் அம்மா நீட்டிய மாத்திரையை தூக்கி எறிந்தாள்.

அம்மாவுக்கு கோவம் வந்தது.பிரபாவின் முதுகில் அடித்தாள்.

“மாத்திர சாப்பிடு சாப்பிடு...இல்லன்னா சாவு..செத்து போயிரு”

பிரபாவுக்கு அழுகை வந்தது.போய் அப்பாவிடம் ஓண்டினாள்.அப்பாவும் அவளை தன் இடது கையால் தள்ளிவிட்டார்.

“மாத்திர சாப்பிடு அப்புறமா எதுனாலும் பேசு.அப்பாவும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்.நீ ரொம்ப பண்ற” என்று கத்தினார்.

வாழ்க்கையில் அம்மாவும் அப்பாவும் ஒருசேர ஒதுக்கியது இன்றுதான்.

அதெல்லாம் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை, பரிட்சை எழுத முடியாத வேதனை முன்னால்.

பிரபா முழித்து கொண்டே இருந்தாள்.

மொபைலைப்பார்த்தாள் இரவு இரண்டு மணி.

சாதரணமாக பக்கத்து ரூமிற்கு போனாள்.பெரிய ஸ்டூலில் ஏறினாள்.

எட்டவில்லை.

மறுபடி சமையல் அறைக்கு சென்று “மனைப்பலகை”யை எடுத்து வந்தாள்.

கால்கள் நடுக்கம் எல்லாம் அவள் மனவைராக்கியம் முன்னால் நின்று போயிருந்தது.

அம்மாவின் சேலையை பேனில் போட்டு தயார் செய்து கொண்டாள்.

ஸ்டூலை உதைத்து கீழே தள்ளும் முன்னர் தூக்கத்தில் அம்மா இருமும் சத்தம் கேட்டது.

எதுவும் அவள் மனதை கரைக்கவில்லை.

தன்னுடைய ஸ்கூல்தான் உலகம்.தன்னுடைய தோழிகள் என்ன நினைப்பார்கள் என்ற கற்பனை உலகத்தை நம்பிய, ஒன்றுமே இல்லாத அவமானத்தை அவமானமாக நினைத்த பிரபா,

 ஸ்டூலைதட்டி விட்டு ,அந்தரத்தில் தன் கால்களை உதைத்து செத்து கொண்டிருக்கும் போது அந்த ஒன்றும் தெரியாத, ஒற்றைக்கோர் மகளைப்பெற்ற, மகளுக்குகாக நகை சேர்த்து பணம் சேர்த்து, இப்பவே அவள் கல்யாணத்திற்கு பட்டுப்புடவைகள் சேகரிக்க தொடங்கிருந்த,ஒருமாததிற்கப்புறம் வரப்போகிற மகளுடைய பிறந்தநாளுக்கு  பிரபல ஹோட்டலின் பார்ட்டி ஹாலை புக் செய்து வைத்திருந்த அப்பாவி அம்மாவும் அப்பாவும் தூங்கிகொண்டிருந்தார்கள்.

நான் பிரபாவின் சாவுக்கு போகவே இல்லை.

இறந்து போனால் வெறுக்ககூடாதா? நான் வெறுப்பேன்.

ஒருவாரம் முடிந்து சாதரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா சொன்னாள்.

“பிரபாவுக்கு நல்ல அறிவு.அவ ஸ்டூலை தட்டி விடும் போது கீழ விழுந்து சத்தம் கேட்டுரும்னு, ஸ்டூல சுத்தி பெட் க்ஷீட்ட மொத்து மொத்துன்னு வைச்சிருந்திருக்கா. அவளுக்கு ஆண்டவன் கொடுத்த அறிவ பாத்தியா”

“யம்மா போங்கம்மா இந்த இடத்தவிட்டு” என்று அகலமாய் வாயைத்திறந்து நெஞ்சில் ஆழத்திலிருந்து ஒலமிட்டு கத்தினேன்.