Monday 1 April 2013

கதை போல ஒன்று - 79

காலடிப்பேட்டையில சவுக்குக்கம்பு வியாபாரத்தில் கட்டத்தொட்டி வைத்திருந்ததால் நாங்கள் தாத்தாவின் தங்கையான அந்த ஆச்சியை “வெறகு கடை” ஆச்சி என்றுதான் சொல்லுவோம்.

வருச லீவுக்கு திருச்செந்தூர் செல்லும் போதெல்லாம் ”வெறகு கடை ஆச்சியையும்” பார்ப்போம்.

சென்னையில் அவர் தெருபசங்க விளையாடி கடைக்குள் வரும் ரப்பர் பந்துகள் எல்லாத்தையும் சேகரித்து எங்களுக்கு கொடுப்பார்.

குடல் கறி என்றால் வெறகு கடை ஆச்சி வந்தால்தான் திருச்செந்தூரில் செய்வார்கள்.ஆச்சி குடலை கழுவுவதை கறியை அரிவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

திருச்செந்தூர் கோயிலுக்கு ஆச்சியுடன் போயிருந்தேன்.

மூலஸ்தானத்து சாமியை பார்த்து அழுது அழுது வேண்டினார்.பார்க்கவே பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

கோயிலை விட்டு வெளியே வந்ததும் ஆச்சியிடம் கேட்டுவிட்டேன்.

“ஆச்சி எதுக்கு அழறீங்க”

“நா எங்கல அழுதேன்.முருகர பார்த்ததும் கண்ணீர் வந்துச்சி”

“சரி வேற ஏதோ வாயில முணகினீங்கள.என்னது மந்திரமா.உங்களுக்கும் மந்திரம் தெரியுமா.பிராமின்ஸ்க்குதான அதெல்லாம் தெரியும்”

அதற்கு ஆச்சி பதிலே சொல்லவில்லை.

ரகசியத்தை அல்லது அந்தரங்கத்தை உடைப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.

ரகசியத்தை முதலில் அது என்னதென்று நேரடியாக கேட்டு விட வேண்டும்.

அப்புறம் அதில் ஆர்வம் இல்லாதது மாதிரி ஆனால் அந்த ரகசியத்தை சுற்றி சுற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தருணத்தில் எதிராளி சுவாரஸ்யத்திற்காக அவரே ரகசியத்தை கக்குவார்.

அப்படியே ஆச்சியும் சொன்னார்.

“அது ஒரு வரண் ஒன்னு பார்த்திருந்தேன்.அது செட்டாகுமான்னு சாமிகிட்ட கேட்டேன்”

”யாருக்கு வரன்”

“மெட்ராஸ்ல எங்க வீட்டு பக்கத்தில ஒரு பையன் இருக்கான்.நம்ம ஜாதிதான்.டிப்ளமோ படிச்சிருக்கான்.அவன பார்த்ததும் இங்க ஊர்ல இருக்கால்ல கஸ்தூரி, நம்ம சித்திரகனி பொண்ணு அவளுக்கு முடிச்சி வைக்கலாமேன்னு பார்த்தேன்.ஜாதகம் பொருந்துது.இருந்தாலும் சாமிகிட்ட கேட்பேன்.அப்படி கேட்டேன்”

கேள்விபட்டிருக்கிறேன்.

அம்மா சொல்லியிருக்கிறார் வெறகு கடை ஆச்சி பற்றி.

தெரிந்தவர்களுக்கு கல்யாண வரன் சொல்வது ஆச்சியின் பழக்கம்.அம்மாவுக்கும் அப்பாவுக்கு கல்யாணம் நடந்ததே ஆச்சி சொன்ன துப்பினால்தானாம்.

“நீங்க எதுக்கு ஆச்சி இதெல்லாம் பண்றீங்க,இது தேவையில்லாத பிரச்சனைதான”

“என்ன பிரச்சனை வரும்கிற” ஆச்சி கேட்டார்.

“இல்ல யாரோ ஒரு பொண்ண அல்லது பையன கல்யாண வாழ்க்கையில துப்பு சொல்லி தள்ளி விடுறீங்களே.திடீர்ன்னு அவுங்க கல்யாண வாழ்க்கை செட் ஆகலன்னா,அதுக்கு நீங்கதான பொறுப்பு ஆச்சி.எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்”

“ஆமா அப்படிப்பார்த்தா கொஞ்சம் கஸ்டம்தான்.நான் மொத மொதல்ல பார்த்து முடிச்சி வைச்ச பொண்ணுக்கும் பையனுக்கு கல்யாணம் நடக்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோக்ஷம் தெரியுமா?

உங்க தாத்தாவோட் நான் போனப்போ கிடைச்ச மரியாதையைப் பார்த்து மனசு முழுசாயிட்டு.

ஆனா பாரு விஜய்!அந்தப் பையன் கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலேயே ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான்.செத்தான்னா எப்படி. சதை சதையா கிழிஞ்சி தொங்கினான்.

அவன் செத்த வீட்டுக்கு போனேன்.

எல்லோரும் ஒரே அழுகை.அதுல ஒருத்தி “இவதான் இவன் முடிச்சி வைங்கன்னு சொன்னா” அப்படின்னு தொடங்கி வைக்க எழவு வீட்லயே பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் எனக்கு சாபம் கொடுத்தாங்க.

இதப்பார்த்துகிட்டிருந்த என் புருசன் அதான் உன் தாத்தா வீட்டுக்கு வந்ததும் என்ன போட்டு அடிச்சார்.அடிச்சது கூட பிரச்சனையிலல் ”நீ நல்ல குணமான பொண்ணாயிருந்தா இப்படி நடந்திருக்காதுன்னு” பேச்சு வாக்கில சொல்லிட்டார்.

அப்போ நான் தேவிடியாளான்னு எனக்கு கோவம் வந்துச்சு.அன்னைக்கு உங்க தாத்தாவ பிரிஞ்சி வந்துட்டேன்.சொல்லு தாங்காது எனக்கு.

அப்புறம் மூணு வருசத்துல தாத்தா எங்கயோ போயிட்டார்.நானே காலடிப்பேட்டையில கட்டதொட்டிய லீசுக்கு எடுத்து யாவாரம் செய்ஞ்சேன்”

“ஆச்சி நார்த் சென்னைனா ரவுடிங்க தொல்ல அந்த காலத்துல இருக்கும்ன்னு சொல்வாங்ள்”

“இருக்கத்தான் செய்ஞ்சது.நாம பொம்பளன்னா இன்னும் இளக்காராமா சுத்தி சுத்தி வருவாங்க.தைரியம்தான் வேணும்.

கேளு.

முத்ல் முதல்ல பார்த்து முடிச்ச வரன் இப்படி போச்சேன்னு எனக்கு மனசு அரிக்குது.

இனிமே இத செய்யவா வேண்டாமான்னு நெஞ்சுக்குள்ளவே ஒரு கேள்வி.

உடனே பஸ்ஸ பிடிச்சி திருச்செந்தூர் வந்தேன்.கோயிலுக்கு விரதமிருந்தேன்.

விரதம் முடியவும் பூ போட்டு பார்த்திரனும்.மல்லி வந்தா நான் வரன் பார்க்கிறத தொடரனும். கனகாம்பரம் வந்தா இனிமே யாருக்கு வரன் பார்க்கவே கூடாதுன்னு நெனச்சேன்.

அப்படியே பூவ போட்டுட்டு ஒரு சின்ன பையன கூப்பிட்டு ஒரு பூவ எடுக்கச்சொன்னேன்.எடுத்து கொடுத்தானா?

“என்ன பூ இருந்துச்சி”

“இன்னும் அந்த பூவ தொறந்து பாக்கல.அப்போ எனக்கு தோணிச்சி. நாம நல்லது பண்றோம்.ஒரு கல்யாணத்த நடத்தி வைக்கோம்.என்ன பொறுத்தவர அதுதான் நம்ம ஊர்ல பெரிய தர்மம்.அத செய்யும் போது மொதல் கல்யாணம் சரியா வரலன்னு இத விட முடியுமா? விடக்கூடாது.நல்லது பண்ணும் போது அது மாதிரி வரத்தான் செய்யும்.பின் வாங்கிறக்கூடாது.

ஊர் திட்டத்தான் செய்யும்.இருந்தாலும் அப்படியே நின்னு பிடிக்கனும்ன்னு தோணிச்சி.

ஒரு வேள கனகாம்பரம் பூ வந்துச்சுன்னா நம்மாள இந்த வேலையை பார்க்க முடியாதுன்னு, பூவ பிரிக்கவே இல்ல அப்படியே சன்னிதானத்துல வெச்சிட்டு வந்துட்டேன்.”

“அப்புறம் எத்தன கல்யாணம் செஞ்சி வெச்சீங்க”

“ஞாபகத்துல இருந்து இருவதுக்கும் மேல வரன் பார்த்து பேசி முடிச்சிருக்கேன்.

பதிமூணு வருசம் முனனாடி,நம்ம ரத்னம் பொண்ணுல்ல அவளுக்கு ஹார்ட்ல ஆபேரசன் செய்ஞ்சு, ஊருக்கே அது தெரியவம் செய்ஞ்சது.

எவன் பொண்ணு கொடுப்பான்.அந்த பொண்ணு சட்டைய கழற்றி பார்த்தேன்.நெஞ்செல்லாம் தையல் தளும்பு கண்ணுகண்ணா தெரியுது.

திருச்சியில ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தப்போ எனக்கு தெரிஞ்ச ஒரு பையன், ஆள் நல்லாயிருக்க அவுங்க அம்மா அப்பாகிட்ட பேசினேன் அந்தப்பொண்ணபத்தி.ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சி டாக்டர்கள் பிரச்ச்னையில்லைன்னு சொல்லிட்டாங்கன்னு புரிய வைச்சி, ரத்னம் பொண்ணுக்கு கல்யாணத்தையும் நின்னி நடத்தினேன்
பாரு.

இப்ப நல்லாத்தான் இருக்காங்க.பதினோரு வயசுல ஒரு பொம்பள பிள்ள அதுக்கு இப்ப இருக்கு.ஆளு நல்ல நெகு நெகுன்னு இருக்கா. அவ சடங்குக்கும் ஆச்சி போவேன் பாரு” என்று சொல்லி சிரித்தார்.

“ஒ அவ சடங்காவா.அப்புறம் அவளுக்கும் நீங்கதான் வரன் பாப்பீங்க அப்படித்தான ஆச்சி”

“ஆமா நான்தான் பார்ப்பேன்”

“மொதல்ல எனக்கு பாருங்க ஆச்சி.நீங்க பார்த்து சொல்ற பொண்ணயே நான் கல்யாணம் பண்றேன்”

“யல உனக்கு மேல ரெண்டு அண்ணனுங்க இருக்கானுங்க.உனக்கு இப்பவே கல்யாண ஆசயா ”

என்று சிரித்தார் வெறகு கடை ஆச்சி.

1 comment:

  1. பழைய விசு படம் பார்க்கறாப்ல சாரி படிக்கறாப்லயே இருக்கு…!

    ReplyDelete