Monday 29 April 2013

கதை போல ஒன்று - 89

எனக்கு முன்னால் நின்றவர்கள் இரண்டு தொடர் பாம்புகளாய் வளைந்து வளைந்து நின்றிருந்தனர்.

ஒரு தளத்திற்கு ஒரே ஒரு பில்லிங் கவுண்டர்தானாம்.

கூட்டத்தில் வேர்த்தது.கொஞ்சம் தள்ளி கைகுழந்தையும் மனைவியும் முக்கால் மணிநேரமாக காத்திருக்கும் கஸ்டம் வேறு என்னைத்தாக்கிற்று.

திநகரின் ராஜாவான அந்தக்கடையினர் புரசைவாக்கத்தில் தன்னுடைய கிளையை ஏன் தொடங்க வேண்டும்.

அது தெரியாமல் திறந்த அன்றே ஏன் அந்தகடைக்கு குடும்பத்தோடு போக வேண்டும்.கேள்விக்கெல்லாம் பதில் தேட முடியாது.சிலது அப்படி நடந்து விடுகிறது.திரும்பி யோசித்தாலே முட்டாள்தனம் இளித்து கெக்கலிப்பு காட்டுகிறது.

கடைக்குள் கூட்டமான கூட்டம்.புர்க்கா அணிந்த பெரியமேடு வேப்பரியை சேர்ந்த பெண்கள் குடும்பத்தினர்,எஸ்குலேட்டரில் ஏறிப்பழகிக்கொண்டிருந்தனர்.

சுடிதார் செக்சனில் நெருக்கி அடித்து மனைவி செலக்ட் செய்து கொண்டு வர, நான் குழந்தையை வைத்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் ஒரு பெண் என்னை அடிக்கடி முறைத்து கொண்டே இருந்தார்.

முதலில் புரியாத எனக்கு அப்புறம் அது நான் பெற்ற மகளின் வேலை என்று தெரிந்து ஒதுங்கினேன்.

அந்த பெண்ணின் தலை முடியை என் தோளில் சாய்ந்து அடிக்கடி இழுத்திருக்கிறாள்.

பெரிய மாமா ஒருத்தர் பெண்கள் செக்சனில் தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பதாக ஃபீல் செய்து கொண்டிருந்தார்.
குழந்தையோடு இருந்த அந்தஸ்த்தில் தப்பித்தேன்.

சுடிதார் முடித்து,குழந்தைகள் உடை செக்சனுக்குள் நுழைந்தால் அங்கே ஊரில் உள்ள எல்லா ரக துணிகளும் ரெடிமேடுகளும் இருந்தன.

அதிலிருந்து எடுக்க அரைமணி நேரம்.

டாய்ஸ் செக்சனில் பொம்மைகள் வாங்கி பில் போட கவுண்டர் நின்றால், அத்தனைக்கூட்டத்திற்கும் சேர்ந்து தளத்துக்கு ஒரே கவுண்டர்தானாம்.

கல்லூர்யில் படித்த கியூவிங் தியரி ஞாபகத்திற்கு வந்தது.

முக்கால் மணி நேரம் முடிந்து எனக்கு முன்னால் இரண்டுபேர் நிற்கும் போது, திடீரென்று பில் போடும் பையனின் முகம் மாறியது.

ச்சை ச்சை என்று புலம்பியவன் அறிவிப்பை வெளியிட்டான்.”சார்! இங்க சிஸ்டம் வொர்க் ஆகல.எல்லாரும் கீழ இருக்கிறா ஃபுளோருக்கு போய் பில் போட்டுக்குங்க என்று சொல்லி போய்விட்டான்.

குழந்தையை மனைவிடம் வாங்கி “நீ ஒடிப்போய் செகண்ட் ஃபுளோரில் இடம் புடி” என்று சொல்ல மனைவி ஒடினாள்.

குழந்தையை எடுத்துக்கொண்டு படியில் வேகமாக இறங்க கால் பிசங்கி அப்படியே விழுந்தேன்.வலி வலி வலி.

அதிர்ச்சியில் குழந்தை அழுகிறாள்.எல்லோரும் தூக்கி விட்டார்கள். பொருட்படுத்தாமல் இறங்கிப்பார்த்தால் தலை சுற்றியது.

சூர சம்ஹாரத்துக்கு வரும் கூட்டம் அந்த தளம் முழுவதும்.

கீழே அவள் கீவில் நிற்கு நொண்டி நொண்டி நான் வருவதைப்பார்த்த மனைவி வரிசையை விட்டு வந்தாள்.

“நீ ஏம்பா வரிசைய விட்டு வந்த”

“இல்ல உங்களுக்கு அடிபட்டிருச்சே அதான்”

“அது ஒண்ணும் இல்ல ச்சனியனே.மணி நைட் எட்டரை மணியாச்சி.இனி எப்ப பில் போட்டு எப்ப கொளத்தூர் போய்.அறிவுகெட்டவளே”

திட்டின கோவம்,கூட்டம் கொடுத்த எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவளை கடுப்பேற்ற, சட்டென்று குழந்தையை வாங்கிக்கொண்டு புன்னகைகோடு நிற்கும் சூப்பர்வைசரிடம் தூய ஆங்கிலத்தில் பளிச் பளிச்சென்று பேச, அந்த வலியிலும் எரிசலிலும் கூட பொண்டாட்டி ஆங்கிலம் பேசுவதை ரசித்து கிடந்தேன்.

இப்போது சூப்பர்வைசர் எங்கள் பில்லை வாங்கி உள்ளே போனார்.சீக்கரம் முடித்து கொடுத்தார்.

அவருக்கு நன்றி கூட சொல்லாமல் பொருட்களை நாங்களே கேரிகவரில் போட்டு கீழே வந்தோம்.மணி ஒன்பதை தாண்டியிருந்தது.

கொளத்தூருக்கு ஆட்டோவில் போகவேண்டும்.அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புரசைவாக்கத்தில் இருந்து அயனாவரம் லோக்கோ சாலை வழியே பெரம்பூர் போய் போவார்கள் ஆட்டோகாரர்கள்.இரவு வேளையில் வெள்ளையான மனைவியையும் தங்க நகைகளையும் அந்த வழியே கூட்டிபோவதற்கு பயந்தவன் நான்.

அதனால் தந்திரமாக ஜமாலியா வரை ஒரு ஆட்டோ பிடித்தேன்.அந்த ஸ்டாப்பை சொன்னால் லோகோ போகமாட்டார்கள்.

“ஏன் ஜமாலியா புடிக்கிறீங்க” என்று ஆட்டோவில் கிசுகிசுத்தாள் மனைவி.

அவள் காதில் “லோகோ வழியே போனால் ரிஸ்க் அதான்” மிக மிக மெல்லிய குரலில்தான் சொன்னேன்.

ஆனால் அதை அந்த முதிய ஆட்டோ டிரைவர் கேட்டுவிட்டார்” ஏன் தம்பி ஆட்டோகாரங்கன்னு சொன்னாலே கெட்டவங்கதானா “ என்று தன் சொற்பொழிவை ஆற்ற மனைவியை முறைத்தபடியே இருக்கும் போது குழந்தை ஜெர்கென்று பால் வாடை வர வாந்தியடுத்தாள்.

ஆட்டோவிலே வெட் டிஸ்யூ வைத்து அவளை துடைத்து, பவுடர் போட்டு.ஆட்டோ சீட்டை துடைத்து.என்னைத்துடைத்து கும்மியடிக்கையில் ஜமாலியா வந்தது.ஜமாலியாவில் இருந்து கொளத்தூர் வந்து வீட்டில் காலெடுத்து வைத்த பிறகு நிம்மதி பரவிற்று.

அம்மா அப்பா ஊருக்கு கோவில் கொடைக்கு போயிருக்கிறார்கள்.

பத்தரை மணியாகி விட்டது.இறங்கினதும் குழந்தை கடவுள் கிருபையால் தூங்க, அவள் தோசை சுட ஆயுத்தமானாள்.

”இதப்பாரு எனக்கு சூடா எல்லாம் வேண்டாம்.கரெக்டா ரெண்டே ரெண்டு தோசை சுட்டு வைச்சிரு” என்று சொல்லி பாத்ரூம் சென்று குளித்து வெளியே வரவும், அவளுக்கும் எனக்கும் சேர்ந்து தோசை சுட்டு ஹாலில் வைத்து மிளகாய் பொடியையும் நல்லெணெய்யையும் வைத்து சாப்பிட ஆயுத்தமானோம்.

இரண்டு விள்ளல்தான் வாயில் வைத்திருப்பேன்.

சமையல் ரூமில் இருந்து ஹிஸ் ஹிஸென்று சத்தம் கேட்டது.பிரமையெல்லாம் இல்லை. நன்றாகவே கேட்டது.

”என்னங்க பாம்பாயிருக்குமோ” என்று மனைவி சொல்ல சந்தேகம் வலுத்தது.

அம்மாவுக்கு போனைப்போட்டால் எடுக்கவே இல்லை.பதினோரு மணி ஆதலால் தூங்கியிருக்கலாம்.

பரணை ஒதுக்க பயமாய் இருந்தது.ஒதுக்கி பார்க்கும் போது உண்மையிலே ஒரு பாம்பு ஜிங்ஜிங்கென்று என்னை நோக்கி வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி என்னை வாட்டிற்று.

“சரி விடு எதுனாலும் காலையில பாத்துகிடலாம்” என்று சொன்ன என்னை மனைவி பார்த்த பார்வையில் ஏளனம் இருந்தது.

வேறு வழியில்லாமல் படுத்தோம்.ஆனால் “ஹிஸ் ஹிஸ் “ சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டேதான் இருந்தது.

தூங்கவே முடியவில்லை என்னால்.கிச்சனின் கதவு இடுக்கு அனைத்தையும் துணியால் அடைத்தேன்.ஒரு வாரம் முன்னால் டிஸ்கவரி சேனலில் பார்த்த ஆவணபடத்தில் “ஆப்பிரிக்கன் மாம்பா “ பாம்பு ஒரு குடும்பத்தையே கொன்ற காட்சி வேறு நினைவுக்கு வந்தது.

நைட்டெல்லாம் ஹால் சோபாவிலே படுத்துக்கொண்டு தூங்காமல் கிடந்தேன்.

காலை ஏழு மணிக்கு மறுபடியும் அம்மாவுக்கு போன் போட்டு விசயத்தை சொன்னேன்.ரொம்ப நேரம் சிரித்த அம்மா.

“ஏ கழுத அது அணில்டா. மேல பரண்ல கூடு கட்டியிருக்கு.அது அடிக்கடி அங்க இங்க போகும்.அந்த சத்தமாய் இருக்கும்.”

“ஏம்மா அதெல்லாம் வீட்ல வளத்து உயிர எடுக்கீங்க” என்று கத்திவிட்டு பரணில் பார்த்தால் அணில் கூடு இருந்தது.

மனசு லேசானது.

மனைவியை எழுப்பி சொன்னேன்.அவள் கேட்டுவிட்டு தூங்கப்போய் விட்டாள்.

நாள் முழுவதும் கடையில் அலைந்த களைப்பு.இரவெல்லாம் தூங்காமல் இருந்த களைப்பு எல்லாம் சேர்ந்து கண்களை இழுக்க எட்டு மணி வாக்கில் தூக்கம் சொக்க,

தூங்கி அரைமணி நேரத்தில் முகத்தில் சுள்ளென்று அடி விழுந்தது.

சட்டென்று பதறிபோய் விழித்துப்பார்த்தால்

“எந்திரிப்பா.அதான் சன் வந்துச்சில்ல.வீடெல்லாம் பாரு சன்லைட்டா இருக்கு.இப்ப போய் தூங்கற. வா ஜாலியா விளையாடலாம்” என்று செம அடி அடித்தாள் மகள்.

எழுந்து தூக்கக்கலக்கத்தில் அவளுடன் ரிங்கா ரிங்கா ரோஸஸ் சுற்றிகொண்டிருக்கும் போது இப்படி தோண்றிற்று.

அன்னாசிப்பழம் ஒரு சுவை,ஆப்பிள் இன்னொருசுவை,பலாவும் மாமபழமும் தனிச்சுவை.

தனி தனி சுவையான பழம் மாதிரியே குடும்பம் நடத்துவதும் ஒரு சுவைதான் போல.

கடவுள் எனக்கு கொடுத்த இந்த குடும்ப பழத்தை அவர் கொடுத்த மாதிரியே சுவைக்க வேண்டும்.டென்சனே ஆகக்கூடாது.

குழந்தையைப்பார்த்து சிரித்து ஆர்வத்துடன் விளையாடத்தொடங்கினேன்.

அதான் “குடும்ப பழத்தை” சுவைக்கிறேனாம் நான்.

1 comment:

  1. லேசான மத்திய வர்க்க அன்றாட நிகழ்வுக் கதை… நைஸ்…!

    ReplyDelete