Friday 26 September 2014

லித்துயானியா... ரூபர்ட் புருக் எழுதிய குட்டி நாடகம்...

ருபர்ட் பூரூக் 1915 ஆம் வருடம் (?)எழுதிய “லித்துயானியா” என்ற நாடகத்தைப் படித்தேன்.அதன் கதைச் சுருக்கம் வருமாறு.

கொடுமையான, 

பனி பொழியும் குளிர்காலத்தை  எதிர்பார்த்திருக்கும் காட்டின் தனி வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள்.

கதவைத் திறந்த ஐம்பது வயதான அம்மாவும் அவளுடைய இளம் மகளும் பசித்திருக்கும் வழிப்போக்கன் ஒருவனைப் பார்க்கிறார்கள்.

அவன் வாலிபனாயிருக்கிறான். அவனை உபசரித்து உணவும், குளிர்காயத் தீயும் கொடுக்கிறார்கள்.அவன் சாப்பிடும் போது நிறைய பேசுகிறான்.குடும்பத்தலைவரைப் பற்றி விசாரிக்கிறான். அப்பா வெளியே காட்டுக்கு சென்றிருப்பதாக மகள் கூறுகிறாள். 

அப்போது அப்பாவும் வருகிறார்.வழிப்போக்கன் உற்சாகமாக அப்பாவை விசாரிக்கிறான். தான் காட்டில் தொலைந்து போய்விட்டதாகவும் வழிதெரியாமல் குளிரில்  நடுங்கியதாகவும், இந்த தனிவீட்டைப் பார்த்து ஆர்வத்துடனும் பசியுடனும் வந்ததாகவும். இந்த வீடு தன்னை ஏமாற்றவில்லை என்றும். நல்லவிதமான உபசரிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறான். 

தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகவும் சொல்கிறான்.காட்டுகிறான்.

”நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்” என்று கேட்க, குடும்பத்தினர் மரமாடி அறையில் அவனுக்கு படுக்கை கொடுக்கிறார்கள். அவன் மேலேப் போய் அயர்ந்து தூங்குகிறான்.

அவன் தூங்கப்போனதும் மகளும் மனைவியும் அப்பாவை “எதாவது கொண்டுவந்தீர்களா சாப்பிட” என்று கேட்கிறார்கள். “முயல் கூட கிடைக்கவில்லை” என்று சலித்துக் கொள்கிறார்.

”நீங்கள் ஒரு சொங்கி.உங்களால் எதுவும் முடியாது” என்று பசியுடன் மனைவியும் மகளும் அப்பாவைத் திட்டுகின்றனர்.அப்பா நான் தனியாகப் போய் இன்பமாக வாழப்போகிறேன்.நான் ஏன் உங்கள் இருவருக்கும் சம்பாதித்து போட வேண்டும் என்று திட்டுகிறார்.

பேச்சு வழிப்போக்கனைப் பற்றி வருகிறது. “அவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இந்தக் காட்டில் ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகிறான். அவன் திருடன்தான். மறைந்திருக்கு இடம் தேடி இங்கு வந்திருக்கிறான். எத்தனை பேரின் வாழ்க்கையைக் கெடுத்து சம்பாதித்த பணம் அது.அதனால் அவனைக் கொன்று அந்தப் பணத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அப்பா கத்துகிறார்.

அப்பா இப்படி சொன்னதும், அம்மா சட்டென்று ஒரு கூர் கத்தியை எடுத்துக் கொடுத்து கொடுத்து “ நல்ல யோசனை. இவனை தீர்த்துக்கட்டினால் கேட்க யாருமில்லை.பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தை எளிதாக கடந்து விடலாம்” என்கிறாள்.

அப்பா கத்தியைத் தூக்கிக் கொண்டு மர ஏணியில் நடந்து செல்கிறார்.அம்மாவும் பெண்ணும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பரபரப்பாக நிற்கிறார்கள். அப்பா மாடி ஏறிவிட்டு திரும்ப ஏணியில் இறங்கி வருகிறார். அப்பாவை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர் கத்தியில் கறையில்லை.

“நீங்கள் ஒரு கோழை. சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாத முட்டாள். நிச்சயம் வரும் குளிர்காலம் நம்மை கொண்டு போய்விடும்” என்று மகள் கத்துகிறாள்.

“என்னால் சுயநினைவில் அவனைக் கொல்ல முடியவில்லை.அதனால் அவன் பணத்தில் கொஞ்சம் எடுத்துப் போய் வோட்கா சாப்பிட்டுவிட்டு வருகிறேன். குடித்து விட்டு வந்து அவனைக் கொல்கிறேன்” என்று சொல்லி கிளம்புகிறார்.

இங்கே அம்மாவும் பெண்ணும் அப்பாவுக்காக காத்திருக்கிறார்கள். சீக்கிரம் வந்து சீக்கிரம் வழிப்போக்கனைக் கொன்று நல்லது செய்வார் என்று பேசிக் கொள்கின்றனர். அப்போது மேலிருந்து அந்த வழிப்போக்கன் இறங்கி வருகிறான். ஏதோ பேசிவிட்டு மறுபடியும் தூங்கப் போகிறான். நன்றாக தூங்கிப் போகிறான்.

அப்பாவுக்காக காத்திருந்த ,’அம்மாவும் பெண்ணும் ’அப்பா நெடுநேரமாகியும் வராதது பற்றி கவலை கொள்கிறார்கள். அந்த அந்த  அரிக்கேன் இருட்டில் அவர்கள் மனம் மட்டும் எதிர்ப்பார்ப்போடு இருந்தது.

குறிப்பிட்ட நேரமாகியும் வரவில்லையே என்ற எரிச்சலில் மகள் சொல்கிறாள் “அம்மா நான் இந்தக் கோடாலியை எடுத்துக் கொள்கிறேன்.நீ உன் பாவாடையின் கீழ்புறத்தை வைத்து அவன் மேல் போட்டு முகத்தை அமுக்கு. நான் கொன்றுவிடுகிறேன்” என்று சொல்கிறாள்.

அம்மாவும் பெண்ணும் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறிப்போகிறார்கள். அதன் பிறகு ஹா என்று கத்தும் குரல் கேட்கிறது.அதன் பின் அடங்கிவிடுகிறது.

அம்மாவும் பெண்ணும் தரைதளத்துக்கு வந்தவுடன், மகள் கோடாலியை எடுத்து வீசுகிறார்ள்.அதில் ரத்தம் இருக்கிறது.

அம்மா புலம்புகிறாள் “ நீ நெஞ்சழுத்தம் மிக்கவள்தான், நான் என் பாவாடையை வைத்து தூங்கிக் கொண்டிருப்பவனின் முகத்தில் அழுத்தினால், நீ கோடாலியை அவன் தலையில் போட்டுக்கொண்டே இருக்கிறாயே. அவன் அடி வாங்க வாங்க அவன் தாயைக் கூப்பிட்டான் தெரியுமா? என்று சொல்லி அழுகிறாள்.

“நான் ஒருதடவை அடித்த பிறகு எனக்கு வேறு வழியில்லை அம்மா. அடித்துக் கொண்ட்டேதான் இருக்க வேண்டியதாயிருக்கிறது. என்னால் நிறுத்த முடியவில்லை. அவன் துன்பத்தைப் பற்றி நினைக்க எனக்கு நேரமோ மனமோ இல்லை” என்று சொல்கிறாள்.

இப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத்திறந்தால் அப்பா. அப்பாவுடன் ஒட்கா விற்கும் கடைக்காரரும் வருகிறார். அப்பா உற்சாகமாக வருகிறார். அம்மாவிடம்  “இந்த ஒட்கா கடைக்காரர் ஒரு விசயம் சொல்வார்  கேட்டுக் கொள் “ என்று அந்த குடிபோதையிலும் மகிழ்ச்சியாக சொல்கிறார்.

ஒட்கா கடைக்காரர் சொல்கிறார். 

”என் கடைக்கு ஒருவன் வந்தான். அவன் பதிமூன்று வயதில் இந்த ஊரைவிட்டு ஒடிப்போய்விட்டானாம். இப்போது திரும்பியிருக்கிறான். அவனுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது. 

உங்கள் மகன் பதிமூன்று வயதில் ஒடிப்போய் விட்டதாக அடிக்கடி சொல்வீர்களே. அவன்தான் திரும்பி என் கடைக்கு வந்திருக்கிறானாம். எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் உங்களின் மகனைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அவனிடம் உங்கள் வீட்டைப் பற்றிச் சொன்னேன்.”

அவன் சொன்னான்.

“நான் வழிப்போக்கனாக எங்கள் வீட்டுக்கு செல்லப் போகிறேன். ஒருநாள் இரவு வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை” நான்தான் உங்கள் மகன்” என்று சொல்லி என் தாய் தந்தை தங்கையை சேர்ந்து விடுவேன். அதன் பின் மகிழ்ச்சியாக என் வாழ்க்கை ஒடும். இதைத்தான் குடிக்க வந்த உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சொல்ல

அப்பா மகனைத்தேடி மாடிப்படியில் ஏறுகிறார். கிழே அலறியபடி “கொன்றுவிட்டீர்களா” என்று கத்துகிறார்.

“என் மகன் மகன் “ என்று கதறுகிறாள் அம்மா. மகளும் அழுகிறாள்.

“நான் என் பாவாடையை வைத்து அவன் மூச்சை நிறுத்தும் போது கூட அவன் அம்மாவைத்தானே நினைவு கூர்ந்தான் “ என்று சொல்லியபடி அம்மா மயங்கிவிழுகிறாள்.

இருட்டில் விளக்கு ”அப்படியே” எரிந்து கொண்டிருந்தது...

No comments:

Post a Comment