Monday 15 September 2014

பேசும் பொம்மைக்கிளிகள்

முதன் முதலில் பேட்டரியால் இயங்கும் விளையாட்டு சாமான் என்று என் மகளுக்கு எதை வாங்கிக் கொடுத்தேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

கண்டுபிடித்துவிட்டேன்.

நுங்கப்பாக்கம் பாலம் பக்கம் ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தின் கீழ்தளத்தில் ? ஒரு காம்பெளக்ஸ் இருக்கிறது. அங்கே சிடிக்கள், செண்ட் பாட்டில்கள் மற்றும் பல வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கும்.

அங்கே உலக சினிமாக்கள் சிடி வாங்குவதற்காக போயிருந்தேன்.ஒன்றிரண்டு வாங்கிக்கொண்டிருந்த போது என் பக்கத்தில் நின்ற வயதானவரின் நட்பு கிடைத்தது.

அவர் பழைய உலக சினிமா ஒன்றின் கதையை சொன்னார்.சரியாக ஞாபகமில்லை “ ஒரு சிஸ்டர் இருக்காங்க, இறைப்பணி என்ற மக்கள்த் தொண்டு செய்றாங்க.போர் சமயத்துல அவுங்க நடுநிலமையோட அவுங்க வேலைய செய்ய முடியாம போக அவுங்க தன் சிஸ்டர் வேலையை அல்லது இறைத்தொண்டர் வேலையையே விட்டுட்டு வந்துர்ராங்க” என்று சொன்னார்.

அருமையாக இருந்தது.அவரிடம் பேசினேன். அவர் ரிட்டைர்ட் வாத்தியார் என்றும் மகள் வீட்டில் பொழுது போகாமல் இருப்பதாகவும் சொன்னார்.அவரிடம் பேசித் திரும்பும் போதுதான் அந்தக் கிளியைப் பார்த்தேன்.

மஞ்சளும் சிகப்பும் கலந்த வெல்வெட் கலந்த உடலைக்கொண்ட பேசும் பொம்மைக் கிளி அது. அதை பார்த்த உடன் அதன் உடலை வருடச்சொல்லும் உயிர்ப்பைக் கொண்டிருந்தது.

நான் போய் விலை விசாரித்தேன். 350 ரூபாய் என்றார். பின் விலையைக் குறைத்து 250 ரூபாய்க்கு வாங்கினேன். பேட்டரியைப் போட்டு கிளியின் முன்னால் பேசச்சொன்னார்.

நான் “ஹலோ” என்றேன். அந்தக் கிளியும் “ஹலோ” என்றது.

நான் “ ஆமா அப்படித்தான்” என்றேன். அந்தக் கிளியும்” ஆமா அப்படித்தான்” என்றது.

அதற்கென்று எந்த சொந்த சிந்தனைமுறையும் கிடையாது.ஆனால் நாம் சொன்னதை அது திரும்பச் சொல்லும். அப்படிச் சொல்வதைக் கேட்க உண்மையிலே சொல்வது போன்றுதான் இருக்கும்.

அதை வைத்து என் மகள் விளையாடுவதை விட நான் தான் அதிகம் விளையாடினேன். யாரும் இல்லாத சமயத்தில் சில நயம் கெட்ட வார்த்தைகளைச் சொல்வேன். அதுவும் சொல்லும்.

அதன் பின் எப்படியோ அந்தக் கிளி உடைந்து போய்விட்டது. மறுபடியும் அந்தக் கிளியை வாங்கப் பிடிக்கவில்லை.என் மகளும் அந்த வயதைக் கடந்து விட்டாள்.நானும் எனக்காக பேசும் கிளி பொம்மையை வாங்க முடியாது.

இனி எப்படா அந்த பேசும் பொம்மைக் கிளி பொம்மையைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது அந்தக் கவலையில்லை. ஃபேஸ்புக்,பிளாக்,இலக்கியம் அனைத்திலும் எழுத்தாளர்கள் அது மாதிரி பேசும் பொம்மைக்கிளிகளை நிறைய வளர்க்கிறார்கள்.

அந்த பேசும் பொம்மைக்கிளிகள் எழுத்தாளர்கள் சொல்வதை அப்படியே சொல்லும். அப்படியே அட்சரம் பிசுகாமல் பேசும்.

அது மாதிரி பேசும் பொம்மைக் கிளிகளை அதிகம் வளர்ப்பவர் மனுஷ்யபுத்திரன்.

அடுத்து சாரு நிவேதிதா. சாரு நிவேதிதா வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள் அனைத்தும் அப்படி அழகாக பேசும்.

அடுத்து ஜெயமோகன் வளர்க்கும் பேசும் பொம்மைக்கிளிகள்.இவைகள் ஞானச்செருக்கோடு கூடிய பாவனையை வெளிப்படுத்தும்.

பாலகுமாரனின் பேசும் பொம்மைக்கிளிகளோ அன்பாகவே பேசும்.

இது மாதிரி என்னுடைய பேசும் பொம்மைக்கிளிகளை ரசிக்கும் ஆர்வம் தீர்ந்தது...

No comments:

Post a Comment