Monday 7 March 2016

பூமி...

காலையில் தூங்கி கட்டிலில் உருண்டு கொண்டிருக்கும் போது பி.பி.சி எர்த்தின் நல்ல விளக்க கட்டுரை ஒன்றைப் படித்து முடித்தேன்.
அதை மிக மிக சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறேன். பி.பி.சி லின்க் முதல் கமெண்டில்.
விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள், ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய சுரணை நம் ”இந்திய மதமூளையில்” வருவதற்காக இதை எழுதுகிறேன்.
1.நானூற்றி அம்பது கோடி வருடங்கள் முன்பு சூரியனை சுற்றியுள்ள பாறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு பூமி உருவாகிறது. அப்படியே சந்திரனும்.
2. ஒற்றை செல் உயிர்கள் தோன்றுகின்றன 400 கோடி - 340 கோடி ஆண்டுகள் முன்னே.
3.ஒற்றை செல் உயிர்கள் சூரியனில் இருந்து சக்தி உண்டாக்குவதை செய்கின்றன. ஆனால் ஆக்சிஜன் எதையும் வெளியிடவில்லை என்பதால் அப்போது ஆக்ஸிஜன் இல்லை. 340 கோடி ஆண்டுகள் முன்னே.
4.பூமியின் முழுவதும் குழம்பு இறுக்கி கண்டத்தட்டுகள் உருவாகின்றன. 300 கோடி ஆண்டுகள் முன்னே
5. சில பாக்டீரியாக்கள் சூரிய ஒளியில் இருந்து சக்தி சேகரித்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அதன் ஆதிக்கம் பூமி மீது தொடர பூமி முழுவதும் ஆக்சிஜனால் ரொம்புகிறது. இதனால் பூமியை வெப்பமடைய வைக்கும் மீதேன் மீது ஆக்சிஜன் ஆதிக்கம் செலுத்தி பூமியை ஒரு பனிப்பந்தாக ஆக்கி வைக்கிறது 240 கோடி ஆண்டுகள் முன்னே.
6. ஒரு உயிர் செல் உயிரிகளுக்குள் மைட்டோகாண்டிரியா எனப்படும் புதிய உறுப்பு ? உருவாதல் நடக்கிறது. 200 - 100 கோடி வருடங்கள் முன்னே.
7.முதல் உயிர் கலத்தல் நடக்கிறது. ஏன் ஒற்றை உயிர் செல்கள் பிரிந்தன.ஏன் கலந்தன.ஆனால் முதல் கலத்தல் நடக்கிறது. 120 கோடி ஆண்டுகள் முன்னே
8.வாய், சுவாச உறுப்புகள் கொண்ட பல செல்களையுடைய உயிர்கள் தோன்றுகின்றன. 100 கோடி ஆண்டுகள் முன்னே.
9. பூமி சுமார் இருபது கோடி ஆண்டுகள் மீண்டும் பனிபந்தாக இருக்கிறது. அதன் பின் வித்தியாசமான உயிரினங்கள் தோன்றுகின்றன. 85 - 63.5 கோடி ஆண்டுகள் முன்னே.
10. கேம்பேரியன் வெடிப்பு எனப்பட்டும் பல்வேறு உயிரனங்களில் அதிசயத்தக்க தோற்றம் தாறுமாறான வேகத்தில் நடக்கிறது. 53.5 கோடி ஆண்டுகள் முன்னே.
11.தாவரங்கள் பூமியை ஆட்சி செய்தன. க்ரீன் ஆல்கே எனப்படும் பாசி வகை பூமி எங்கும் வியாபித்து இருந்தது. 46.5 கோடி ஆண்டுகள் முன்னே.
12.திடீரென பூமி குளிர்ந்தது. முதல் பேரழிவு நடக்கிறது. நீரில் இருக்கும் 96 சதவிகிதம் உயிர்கள் அழிந்தன. 46 - 43 கோடி ஆண்டுகள் முன்னே.
13.நீரில் இருந்த மீன்கள் மற்றும் மற்ற உயிரனங்கள் பூமிக்கு வர முயற்சி செய்தன. பூச்சிகள் உருவானது. நடக்கும் மீன்கள் உருவாக ஆரம்பித்தன. 37.5 கோடி ஆண்டுகள் முன்னே. இதைத் தொடர்ந்து இரண்டாம் பேரழிவு நடக்கிறது. இரண்டு கோடி ஆண்டுகள் பெரிய உயிர்கள் இல்லை.
14.ஊர்வன தோன்றின. அவை ஆதிக்கம் செலுத்தின 32 கோடி ஆண்டுகள் முன்னே
15. உலகின் நிலம் நீர் ஒரு ஸ்திரத்தன்மையை அடைந்தன. கண்டங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒன்று பட்ட பெரிய கண்டமான பேங்கியா உருவானது. சுமார் 17.5 கோடி ஆண்டுகள் அப்படியே இருந்தது. 30 கோடி ஆண்டுகள் முன்னே.
16. பெர்மியன் பேரழிவு எனப்படும் மூன்றாம் பேரழிவு நடந்தது. 96 சதவிகித பூமி உயிர்கள் காணாமல் போயின. 25.2 கோடி ஆண்டுகள் முன்னே
17. முதல் பாலூட்டிகள் தோன்றின. ஆனால் மிகச்சிறியவைகளாவும். இரவில் மட்டும் வெளியே வருவதாகவும் இருந்தன. 22. கோடி ஆண்டுகள் முன்னே
18. காரணம் தெரியாமல் (கண்டுபிடிக்கப் படவில்லை) பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து போயின. அதில் முக்கியமானது டைனோசர். இத நான்காம் பேரழிவு மற்றும் டிரையாசிக் பேரழிவு என்கிறார்கள். 20.1 கோடி ஆண்டுகள் முன்னே
19.பறக்கும் டைனோசர்களில் இருந்து பறவை தோன்றியது.16 கோடி ஆண்டுகள் முன்னே
20.பூமியில் பூக்கள் தோன்றின. முதன் முறையாக பூ பூக்கும் தாவரங்கள் உருவாயின. 13 கோடி ஆண்டுகள் முன்னே.
21.பூமியின் மேல் விண்கற்கள் மோதி அதனால் ஏற்பட்ட தூசி சூரியனை மறைக்க உயிர்கள் அழிகின்றன. டைனோசர்கள் முழுவதுமாக காணாமல் போகின்றன. 6.5 கோடி ஆண்டுகள் முன்னே. ஐந்தாம் பேரழிவு இது.
22.பாலூட்டிகள் கர்ப்பம் தரித்து குட்டி போடும் தன்மையில் ஒரு ஒழுங்குக்கு வருகின்றன. 6 - 5.5 கோடி ஆண்டுகள் முன்னே.
23. சி4 போட்டோசிந்தீஸிஸ் எனப்படும் விசேஷ சக்தி சேர்க்கையை செய்யும் தாவரங்கள் தோன்றுகின்றன. 3.2-2.5 கோடி ஆண்டுகள் முன்னே
24.முதல் மனிதக்குரங்கு வகை உயிர்கள் தோன்றுகின்றன. 1.3- 0.7 கோடி வருடங்கள் முன்னே
25.முதல் சிந்திக்க தெரிந்த வகை மனிதக்குரங்குகள் தோன்றுகின்றன. பிற்கால மனிதனுக்கு அவையே முன்னோடிகள். சுமார் 2 லட்சம் ஆண்டுகள் முன்னே.

No comments:

Post a Comment