Sunday 18 May 2014

வெஸ்டர்ன் பிலாஸபி...

அன்று நான் Pascal's wagers என்ற எளிய லாஜிக் ஒன்றை எழுதியிருந்தேன். அதை எளிதாக விளக்க பாஸ்கல் குறிப்பிட்ட அதே கடவுள் நம்பிக்கை உதாரணத்தையே கொடுத்திருந்தேன்.
நண்பர்கள் அந்த லாஜிக்கை விட்டுவிட்டு, உதாரணத்தை எடுத்துக் கொண்டு,கடவுள் நம்பிக்கை,கடவுள் நம்பிக்கை சார்ந்த தத்துவங்கள் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.நான் யாருடைய அறிவையும் குறைத்து எடை போடவில்லை.ஆனால் நாம் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்ல வருகிறேன்.
நமக்கு வெஸ்டர்ன் பிலாசபி என்ற தத்துவம் பற்றிய ஆர்வமே கிடையாது.
எப்படி ஆங்கிலத்தைப் பேச ஏ,பி,சி,டி படிக்க வேண்டுமோ,அது போல தத்துவம் பேச,விவாதிக்க ஒரு அடிப்படை அறிவு வேண்டும்.அந்த அடிப்படை அறிவே நமக்கு இல்லை.எதாவது ஒன்றைச் சொன்னால் இதைத்தான் நம் முன்னோர்கள் எல்லாமே பரம்பொருள் என்று சொல்லிவைத்தார்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிப் போய்விடுகிறோம்.
அது நம் வாழ்க்கைக்கு,நம் சமூகத்தை முன்னெடுத்து செல்ல எந்த விதத்திலும் உதவி செய்யாது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
Francis Bacon இருக்கிறார்.அவர் என்ன செய்தார்? எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக ஏன் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தைப் பற்றி மட்டுமே நிறைய தத்துவங்களை சொல்லியிருக்கிறார். வில் டூரண்ட் இதுவரை உலகை மாற்றிய பத்து பர்சனாலிட்டிகளுக்குள் ஒருவராக பேக்கானை சேர்க்கிறார்.
அவரைப் பற்றி நம்மூர் காலேஜ் மாணவனுக்கு தெரியுமா? தெரியாது. காலேஜ் மாணவனை விடுங்கள்.நம்ம ஊர் அறிவு ஜீவிகளுக்கு. தெரியாது.
நம்ம ஊர் எழுத்தாளர்களுக்கு? தெரியாது.
தெரிந்தாலும் அதை அவர்கள் பரவலாக்க மாட்டார்கள்.பரவலாக்க விரும்புவதில்லை.பரவலாக்க ஆர்வமில்லை.
சிம்பிள் உதாரணமாக ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் மகாபாரத்தை திரும்ப எழுதுகிறார்.பிரமாண்டமாய் எழுதுகிறார்.இதனால் எதாவது பயனிருக்கிறதா?
நிற்க.
ஜெயமோகன் எழுதுவதை நீ எப்படி பயன் பயன் இல்லாதது என்று சொல்லலாம்.அது படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்ல வருகிறீர்களா?
மறுபடியும் நிற்க.
ஜெயமோகன் ஏன் மகாபாரத்தை எழுதுகிறார்? ஏன் இந்திய எழுத்தாளர்கள் எல்லோரும் மகாபாரத்தையும் ராமாயணத்தையும் திரும்ப திரும்ப எழுதுகிறார்கள்.ஏனென்றால் இந்தியர்கள் வெளி உலகம் அறிய விரும்பா மடையர்கள்.அவர்களிடம் எளிதாக செல்லுபடியாகும் சரக்கு இந்த இரண்டு இதிகாசங்கள்தான்.
ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்கள் எல்லோருக்கும் அத்து படி.அதனால் அதையே திரும்ப திரும்ப மாற்றி மாற்றி வெவ்வேறு பார்வையாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.இதே இந்தியர்கள் மேலைநாட்டுத் தத்துவத்தை கற்க ஆரம்பித்தால்.( நம் நாட்டுத் தத்துவம்தான் நமக்கு தெரியுமே.எல்லாமும் ஒரே பொருளில் அடங்குகிறது.அது பரம்பொருள்) அது பற்றியே பேசிப் பழக ஆரம்பித்தால்,
இந்த எழுத்தாளர்கள் எல்லாம் அந்த தத்துவங்களைப் பற்றி திரும்ப திரும்ப எழுதுவார்கள்.ஏன் மேலை நாட்டுத் தத்துவம்தான் பெரிசா? நம் பாரத நாட்டில் விளைந்த தத்துவங்கள் எல்லாம் சும்மாவா? என்ற கேள்வி வரலாம்.
தற்போது நம் நாட்டுக்கு முக்கிய தேவை இந்த மேலை நாட்டுத் தத்துவங்கள்தாம். வெஸ்டர்ன் பிலாஸிபில் ஒருவர் சொன்னதை மற்றவர் கொண்டாடுவதில்லை.ஆனால் ஆராய்கிறார்.அது பற்றிய இன்னொரு பார்வையை வைக்க அதுவும் தத்துவமாய் விரிகிறது.இன்னொருவர் அதை வேறுவிதமாக பார்க்க அது இன்னொரு தத்துவமாய் ஆகிறது.
ஆக மீண்டும் பார்ப்பது.மீண்டும் மீண்டும் சரி பார்ப்பது.இதெல்லாம் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
அறிவியலையும் கணிதத்தையும் கலந்தே தத்துவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கால்குலஸைக் கண்டுபிடித்த லிப்னிஸ் ஒரு தத்துவ அறிஞர்.அனலிட்டிக்கல் ஜியோமெட்டிரியைக் கண்டுபிடித்த டிஸ்காரட்டஸ் ஒரு தத்துவ அறிஞ்ர்.லாஜிக்கைப் பற்றிய அறிவியலை பரவலாக்கிய பெட்ரண்ட் ரசல் தத்துவ அறிஞர்தானே.இவர்களின் எந்த வாக்கியமும் வெற்று வாக்கியமில்லை.
சராசரி இந்திய பிரஜைக்குள் இன்னும் குடிக்கொண்டிருக்கும் ஆழமன மூடநம்பிக்கைகளை போக்க இவர்களைப் போன்ற மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்களால்தான் முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய மரபு பற்றியெல்லாம் அதிகம் பேசும் நம்ம ஊர் எழுத்தாளர்கள் ஏன் மேலை நாட்டு தத்துவ ஆசிரியர்கள் பற்றி அதிகம் எழுதுவதில்லை.
ஏனென்றால் உணர்ச்சிகரமாக,உணர்வுபூர்வமாக,நெஞ்சைத் தொடுவது மாதிரி எழுதும் எழுத்தாளர்களுக்கு மேலை நாட்டு தத்துவமே தெரியாது.ஏன் அவர்களுக்கு தெரியாது? அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவர்களுக்கு அடிப்படை கணித மற்றும் அறிவியல் அறிவு வேண்டும்.அவர்களுக்கு ஏன் அடிப்படை அறிவியல் மற்றும் கணித அறிவு இல்லை.ஏனென்றால் அவர்கள் அகடெமிக்கை சரிவர கற்றவர்கள் இல்லை. ஏட்டுச்சூரைக்காயை கல்லாமல் வெளிவந்தவர்கள்.
ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள்.சாரு நிவேதிதாவை எடுத்துக் கொள்ளுங்கள்,பாலகுமாரனை எடுத்துக் கொள்ளுங்கள்.இவர்களுக்கு எல்லாம் நன்றாக எழுத வரும்.ஆனால் அறிவியல் தெரியாது.கணிதம் தெரியாது. எப்படி இவர்களால் தங்கள் எழுத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.முடியவே முடியாது.
ஆகையால்தான் இவர்கள் இந்திய மரபு,மகாபாரதம்,தனிமனித விடுதலை,வாதை,சோழப்பரம்பரை என்று எழுதி நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள்.
நான் அவளை critique of dialectical reason புத்தகத்தை படி என்றேன் என்பார் சாரு. சரி அந்தப் புத்தகத்தை பற்றி நாலுவார்த்தை ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றால் எஸ்கேப்பாகிவிடுவார் ( அபிலாஷ் சந்திரன் ”சாருவின் இந்தத் தன்மை” பற்றி நல்ல பத்தி எழுதியதை நினைவு கூர்கிறேன்).இதைத்தான் தமிழ் சுவாரஸ்ய எழுத்தாளர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.
என்னுடைய ஆவல் என்னவென்றால் மேலை நாட்டுத் தத்துவங்கள் எளிமையாக தமிழுக்கு வரவேண்டும்.அதை நம்மை போன்ற இளைஞர்களால் செய்ய முடியும்.
சுஜாதா என்னும் தமிழின் ஒரே வீரேந்திர சேவாக் ( எல்லா திசைகளிலும் சிக்சர் அடிப்பவர்) இன்னும் 30 வருடங்கள் அதிகம் வாழ்ந்திருந்தால் அவரே நமக்கு அதை செய்து கொடுத்துப் போயிருப்பார்.அல்லது பிரமிள் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்தாலும் அது நடந்திருக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களில்லை.
ஜெயமோகனுக்கோ,சாருவுக்கோ அல்லது எஸ்.ராவுக்கோ இது பற்றியெல்லாம் எழுதுவதற்கான அறிவும் இல்லை.தெம்பும் இல்லை.அவர்களை நிறுவிக் கொள்வதற்கே அவர்களுக்கான நேரம் சரியாக இருக்கிறது.
ஆனால் அடுத்த கட்ட ”முகநூல் எழுத்தாளர்கள்” என்று அறியப்படும் அபிலாஷ்,விநாயக முருகன்,பூ.கோ.சரவணன்,வா.மணிகண்டன்,யுவகிருஷ்ணா,அதிஷா போன்றவர்கள்,
இன்னும் அறிவியலை,கணிதத்தை ஒழுங்காக படித்த தமிழ் மீது ஆர்வமிருக்கும் மாணவர்கள்,
இளைஞர்கள்,
புத்தக கண்காட்சிக்கு ஒல்லியான கவிதை புத்தகம் போடும் எழுத்தாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து மேலை நாட்டு தத்துவங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும்.
உடனே கச்சம் கட்டிக்கொண்டு குண்டு குண்டு புத்தகங்களை மொழிபெயர்க்க சொல்லவில்லை.
சின்ன சின்ன கட்டுரைகளின் சாராம்சத்தை எழுதலாம்.சின்ன மேலைநாட்டுத் தத்துவ லாஜிக்காக இருந்தாலும் அதை முகநூலில் பகிர்ந்து கொள்ளலாம்.அதுபற்றி நாலு பேர் படிப்பார்கள்.
இன்று அரிஸ்டாட்டிலைப் பற்றி எழுதிவிட்டாயா? நாளை நான் ஹெகலைப் பற்றி எழுதுகிறேன்.நான் மட்டும் மட்டமா? நான் பூக்கோ பற்றி எழுதுகிறேன்.இப்படிப்பட்ட ஒரு போட்டி முகநூலில் உருவாக வேண்டும்.
ஒருவருடத்தில் முகநூல் தமிழர்களில் 5000 பேராவது மேலை நாட்டுதத்துவங்களின் அம்சத்தை வடிவேலு ஜோக்குகளை ரெஃபரன்ஸ் கொடுப்பது போல கொடுத்து பேசலாம்.
“அட நீங்க சொல்றதப் பாத்தா பெர்க்லி சொல்ற இந்த வாக்கியமாதிரில்லா இருக்கு” என்ற ரீதிக்கு வந்து விடலாம்.
தேவை தன்னம்பிக்கை மட்டுமே.
5000 தமிழர்களுக்கு மேலை நாட்டு தத்துவங்களில் அடிப்படை தெரியும் போது,அதிலிருந்து 50 பேர் புத்தகங்கள் எழுதுவார்கள்.அதிலிருந்து 5 பேர்கள் “விஷ்ணுபுரம்” மாதிரி குண்டாக மேலைநாட்டு தத்துவ புத்தகத்தை தொகுப்பார்கள்.
ஒரு வித அறிவுப் பசியும் வெறியும் பரவும்.கல்லூரிகளில் இது பற்றி விவாதிப்பார்கள்.பள்ளிகளில் பேசுவார்கள்.
வேறு வழியில்லாமல் தமிழ் எழுத்தாளர்கள் இது பற்றி எழுதாமல் முடியாது என்று அறிவியல் கணிதம் டியூசன் கற்றுக் கொண்டு எழுத வருவார்கள்.
இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன்.
வெஸ்டர்ன் பிலாசபி என்றவுடன் ஏதோ ஜீன்ஸ்,பர்கர், எல்லாம் வேஷ்டி, சோற்றை அழித்தது மாதிரி அழிக்க வந்தது என்ற எண்ணத்தை இந்திய குருமார்கள் உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.அதை நம்பத் தேவையில்லை என்பது வாதம்.
இப்போதைக்கு நமக்கு தேவை பகுத்தறிவாலும்,கணித அறிவியலாலும் கட்டமைக்கப்பட்ட மேலைநாட்டுத் தத்துவங்கள்தாம்.
வேலையைத் தொடங்குவோமாக.

1 comment:

  1. மிக அருமை. ஏதும் மொழிபெயர்த்துள்ளீர்களா.. படிக்க சுவாரசியாம இருக்கிறது உங்கள் மொழியும் விளாசலும்.

    ReplyDelete