Tuesday 26 June 2012

பலசரக்கு கடை

+2 வரை பலசரக்கு கடையில் இருந்த அனுபவம் எனக்குண்டு.( அட! எங்க கடைதாங்க.) அங்கு உள்ள சில சட்டதிட்டங்களை வரிசைப்ப்டுத்துறேன்.

- காலையில் ஆறு டு ஆறரை மணிக்கெக்ல்லாம் கடைதிறந்திருக்கனும். அந்த ஆறு டு எட்டு என்ன விற்கும் என்று பார்த்தால். அரைகிலோ கருப்பட்டியும், அரைக்கிலோ சீனியும், கொஞ்சம் காபித்தூளும்தான். ஆனாலும் ஆறு மணிக்கு கடை திறக்க வேண்டும்.

- வியாபாரம் இல்லாத போது கல்லாவில் இருப்பவர் சும்மா இருக்கலாம். ஆனால் பேப்பர்,புத்தகம் படிக்க கூடாது

- யாரிடமும் இல்லை என்று சொல்லகூடாது, நாளைக்குத்தான் வரும் என்று சொல்ல வேண்டும். (அண்ணே ! நாளைக்கு வாங்க நல்ல நயம் கடலை பருப்பு குடுக்கிறேன்)

- First come first serve கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். முதலில் ஒருவர் அம்பது பைசாவுக்கு கொட்டை பாக்கு கேட்டிருப்பார். இரண்டாவது ஒருவர் 500 ருபாய்க்கு பொருள் கேட்டாலும் முதலில் உள்ளவரை அனுப்பிய பின்பே இரண்டாமவர். ( போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில் வந்தால் மட்டும் விதி விலக்கு )

-கல்லாவில் இருந்து சண்டை போடக்கூடாது. எனக்கும் என் அண்ணனுக்கும் கல்லா அருகே ஒருதடவை கடுமையான விவாதம் வர, இரண்டு பேருமே அடித்து துரத்தப்பட்டோம், அப்பாவால்.

-எடை சரியாக இருக்க வேண்டும். ஒருவர் பொருளின் தரம் சரியில்லை என்று சொன்னால் ரிட்டர்ன் வாங்கப்படும். ஆனால் எடை சரியில்லை என்றால் ரிட்டர்ன் வாங்கப்படாது. ஆகையால் எடை மிக மிக சரியாக இருக்க வேண்டும்.

-நண்பர்கள் கடைக்கு வந்தால், கல்லாவில் இருந்து பணம் எடுத்து செலவலிக்கலாம். ஆனால் கடையில் உள்ள கடலை, முறுக்கு பாக்கெட்களை அங்கேயே உடைத்து கொடுக்க கூடாது.

-யாருக்கு பசித்தாலும் கல்லாவில் பத்து ரூபாய் எடுத்து கொண்டு டீ வடை சாப்பிடலாம்.ஆனால் கஸ்டமரிடம் எந்நேரமும் எரிந்து விழக்கூடாது.

-கஸ்டமர் நூறு ரூபாய் , ஐநூறு ரூபாய் கொடுத்தால் வியாபாரம் முடியும் வரையில் அதை டேபிளில் பேப்பர் வெயிட்டின் அடியில் வைத்திருக்க வேண்டும்.

-உருளைகிழங்கு, பல்லாரி(பெரிய வெங்காயம்) விற்க விற்க அதில் உள்ள அழுகியவற்றை தனியே அப்புறப்படுத்தி, நல்லவற்றை பார்வையாக வைத்திருக்க வேண்டும்.

மற்ற கடைகளில் எப்படியோ எங்கள் கடையில் இதெல்லாம் ரூல்ஸ்.

வீட்டில் அன்பை பொழியும் அப்பா கடையில் படு வித்தியாசமாக இருப்பார்கள்.

வீட்டில் பொன்னியின் செல்வன், மகாபாரதம்,கும்மிபாட்டு, இளையராஜா, பாலகுமாரன்,கிரிக்கெட் என்று தூள் பறத்தும் அப்பா கடையில் அதை பேசுவதே கிடையாது.

ஒரு ஒழுங்குதான்.... :))

1 comment: