Thursday 21 June 2012

கதை போல ஒன்று -14

எட்டாம் வகுப்பில், குறுகிய காலத்தில் அந்த ஏரியாவின் “லெக் ஸ்பின்னராக” உருவானேன்.

பெருவிரலை சாதரணமாக வைத்து பாருங்கள். மற்ற விரல்கள் மாதிரி நேராய் நிற்காது.வளைந்திருக்கும்.

அதில் உள் பக்கமாக வளைந்திருக்கிறதில்லையா !அதனை வைத்துதான் ரப்பர் பந்தை அழுத்துவேன்.

ரப்பர் பந்தாகையால் அழுந்தும். வெறித்தனாமாய் அழுத்தி, நடு விரலையும், ஆள்காட்டி விரலையும் வைத்து சுற்றி விட்டேன்னானால், சுழலும் பந்து “பிட்ச்” ஆகும் இடத்துக்கும் “பவுன்ஸ்” ஆவதற்கும் இடையே 45 டிகிரி ஆங்கிள் உத்தரவாதம்.

நான் போடும் பாலை அடிக்க ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் என்றெல்லாம் “கிழக்கு வாசலில்” பேசிக்கொண்ட்டார்கள்.

ரப்பர் பாலை பெருவிரலால் அழுத்தும் போது, போர்வீரன் போல் திட்டமிட்டு எதிராளியை வீழ்த்துவேன்.

நல்ல பெர்ஃபார்ம் பண்றேன் என்று நினைத்தேனே தவிர , கிரிக்கெட்டின் ஏரியா ஹீரோ “ஜெகன் அண்ணன்” வீடு தேடி டீமுக்கு கூப்பிடும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“எல, லெக் ஸ்பின்ல கலக்குறியாம, நாளைக்கு மேட்சுக்கு ஆள் குறையுது வரியா”

“இல்லண்ணே! நீங்க பெரிய அண்ணன்க வெளாடுவீங்க. எனக்கு செட் ஆகாது”

“யல மயிரு வாயேம்புல, யாமுடே கொனட்டுற “
“சரின்னே வாரேன்”

இரவெல்லாம் தூக்கமில்லை.முதன் முதலில் “பறக்கை போலீஸ் கேம்ப்” கிரவுண்டில் விளையாட போறேன்.

”முருகா. நான் ஜம்முன்னு விளையாடனும். முருகாஆ”
தூங்க முடியல.

மறுநாள் மதியம் மேட்ச். காலையில கூப்பிடுறேன்னு சொன்ன “ஜெகன் அண்ணன்” வரல. ரொம்ப கஸ்டமா போச்சு.

திடீருன்னு மத்தியானம் “ நெத்திலி மீனும் மாங்காவும் வெச்சு மரச்சீனி கிழங்கு “ சாப்பிடும்போது , ஜெகன் அண்ணன் சைக்கிளில் சர்ரென்று வந்தார்.

“யல சீக்கிரம் வா. மேட்ச் ஆரம்பிக்க போறோம். வா! வா ! இழுத்து போனார்.

டாஸில் ஜெகன் அண்ணன் ஜெயித்து பவுலிங் எடுத்தார்.
முதல் ஓவர் போட , கேஸியஸ் அண்ணன் பந்தை தேய்க்கும்போதுதான் அந்த அதிர்ச்சி.

அது சிகப்பாய் இருக்கிறது. கட்டியாகவும் இருக்கும் போலிருக்கிற்தே.என்னது அது ! அது ரப்பர் பந்த்தில்லையா ? கிரிக்கெட் பாலா !

அடுத்த அதிர்ச்சி இரண்ட்டாவது ஓவரே “ஜெகன் அண்ணன்” என்னை போட சொன்னதுதான்.

கிரிக்கெட் பாலை, என் பெருவிரலை வைத்து அழுத்துகிறேன்.கல்லு மாதிரி இருக்கு. “பாலே நீ அமுங்க மாட்டாயா ! அமுங்க மாட்டாயா ! என்று கதறுவது பந்துக்கு கேட்க நியாமில்லைதான்.

என் பிரம்மாஸ்திர அமுக்கு இல்லாமல் என்னப்பா ஸ்பின்.

சொக்கன் போல் பாலை போட்டேன்.

முதல் பால் ஸ்பின்னே ஆகாமல் சொத்தென்று விழ , பேட் செய்தவன் பவுண்டரிக்கு விரட்டினான்.

மறுபாலை போட்டேன் .

என் பால் தன் பேட்டுக்கு வரும்வரை அவனால் வெயிட் பண்ண முடியாமல் இறங்கி ஸ்டெரயிட்டாக அடித்தான் பாருங்கள், அது நேரே வந்து என் ‘நெஞ்சாங்கூட்டை’ தாக்க. வலி கூரிய வாளாய் இறங்க, நினைவை இழக்கும் போது

“யல ஜெகா, பன்னி பயல, ஆள் கூட்டுட்டு வந்திருக்கான் பாரு. மண்டைக்கு வழியில்லையால ஜெகா ! தப்ளையன் மாதிரி போடுறான். ஸ்பின்னாரல இவன். உப்பு சப்பாணில “

என்ற வசனம் காதில் விழுகிறது.

No comments:

Post a Comment