Thursday 21 June 2012

கதை போல ஒன்று -16

சுத்தமாக கழுவிய இலையில் வைக்கபடும் போது அழகாயிருக்கும் கூட்டும்,பொரியலும், கட்டியான ஆட்டுக்கறி தொக்கும்.பரிமாறிய பத்து நிமிடத்தில் அருவருப்பானவைகளாக மாறி விடுகின்றன.

ரசமும், தயிரும் வழிய எலும்புதுண்டுகளும் கறிவேப்பிலைகளும் ஒதுங்கிருக்க, கிழிந்தும் கிழியாமலும் உள்ள இலைகளை அந்த தாத்தா எடுத்து கொண்டிருந்தார்.

அண்ணன் கல்யாணத்தின் ”வீடு பார்க்க வரும் விழா”. 

சம்பிராதயப்படி கறிசோறும் கருப்பட்டி காப்பியும் கட்டாயம் பரிமாறவேண்டும்.

கூட்டம் எதிர்பார்த்தை விட அதிகம் வர பந்தி வைக்க திணறல் வருகிறது.”இலை எடுக்கும் தாத்தாவை” சமையல்காரர்கள் ஆ.ஊன்று அதட்ட , அவரும் அசராமல் மூங்கில் இலக்கால் நெய்த பெட்டியில் இலைகளை எடுப்பதும், கொட்டுவதுமாக இருக்கிறார்.

தள்ளாத வயதின் முதிர்ச்சியை வெளிக்காட்டாத பாவனைகளையும் மீறி, முகம் களைப்பை சொல்கின்றது.

இலையின் கழிவுகள் பட்ட லுங்கியும், பழுப்பு நிற அழுக்கு சட்டையும் தாத்தாவின் பிம்பத்தை மேலும் சோர்வாக்குகின்றன.

கூடையை டேபிளின் கீழே தூக்கி பிடிப்பதும், ’சலக்’ என்று இலையை லாவகமாக கூடையில் தள்ளுவதுமாய், கலைத்தன்மையை உருவாக்கியிருந்தார் தன் வேலையில்.

எல்லோரும் சாப்பிட்ட முடிக்க ஆயிற்று இரவு ஒன்பது மணி.அப்புறம் சமையல்காரர்கள் முடித்து, பந்தி பரிமாறிவர்கள் முடித்து , ஆகா ! ஒரு சின்ன விழாவில் இத்தனை கஸ்டமா ?

இலை எடுக்கும் தாத்தாவை சாப்பிட சொல்கிறேன்.

“தாத்தா வாங்க சாப்பிடலாம்”

என்னை பார்த்து பதில் ஏதும் சொல்லாமல் புன்னகை பாவனையில் இருந்தார்.

“ஏன்... என்னாச்சு சாப்பிடலையா நீங்க”

“இல்லப்பா வேணாம்”

”ஏன் சாப்பாடு இல்லையா”

சிரித்தார்.

போய் பார்த்தேன். சோறு இருந்தது. சாம்பார் இருந்தது. கூட்டு பொரியல் இல்லை.அம்மாவிடம் போனேன்.

“யம்மா. கறி இருக்கோ”

“ஆமா, வீட்டு வேல செய்வாங்க இல்ல, அந்தக்காக்கு எடுத்து வெச்சுருக்கேன்”

“நீங்க வேற,நைட்டு பத்து மணிக்கு மேலஅந்தக்கா எப்ப சாப்பிடுவாங்க, அத எங்கிட்ட குடுங்கன்னு” வாங்கி வந்தேன்.

தாத்தாவை சாப்பிட வைக்க போகிறேன் என்பதில் கர்வம் வேறு வந்தது.

“தாத்தா ! உங்களுக்குதான், கறி முன்னாலயே எடுத்து வெச்சுட்டேன், வாங்க சாப்பிட்ருவம்

“நீ ஆட்டுகறியயையா சொல்லுத”

”ஆமா ஏன்”

”நமக்கு அசைவமே ஆகாதுல்லா தம்பி, கறி மீன் சாப்பிட மாட்டேன்லா !. எம் பையனுக்கு கேட்டியா!
மீன் கறி இல்லாம சோறே இறங்காது.
அவந் ”தவறுனதில” இருந்து நானும் சாப்பிட மாட்டேன்.அவளும் சாப்பிட மாட்டா பாத்துக்க “ என்றார்.

No comments:

Post a Comment