Thursday 21 June 2012

கதை போல ஒன்று - 2

ஏணி மிட்டாய்,ஏணி மிட்டாய்ன்னு ஒரு மிட்டாய் திருச்செந்தூர் திருநெல்வேலி பக்கம் திருவிழா சமயத்தில் அதிகம் கிடைக்கும்.

நாகர்கோவில்ல அத தேன் மிட்டாய்ன்னு சொல்லுவாங்க.

அரிசி மாவ பிரதானமா வைச்சு ஜாங்கிரி மாதிரி, ஆனா நேரா ஏணி மாதிரி செய்யும் பண்டம்.அதுலயும் சீனி பாகு சேர்ப்பாங்க. வெள்ளையா இருக்கும்.

பனை ஒலை பெட்டில அத போட்டு தரும் அழகே அழகு.

நாகர்கோவில் சவேரியார் கோயில் திருவிழா ,சுசீந்தீரம் தேரோட்டத்துல அது செமயா விக்கும்.

எங்க கடை பக்கத்துல உள்ள பெட்டிகடைகாரர் அந்த வருசம் சுசீந்திரம் தேரோட்டத்துக்கு ஏணி மிட்டாய் போட விரும்பினார்.

எங்க கடையிலதான் அரிசி வாங்கினார், உளுந்து வாங்கினார், அப்புறம் சீனி மட்டும் நிறைய வாங்கினார்.

காரணம் கேட்டா

”அண்ணாச்சி ! நச்சுன்னு மிட்டாய் போடனும் அண்ணாச்சி. சீனி பாகா கரைச்சு ஊத்தனும். திருவிழவுக்கு வரவன், அடுத்த திருவிழாவுக்கும் நம்ம கிட்டயே வரணும். பனங்காசு போனாலும் பரவால்ல பெரு முக்கியமுல்லா!” என்றார்.

கம்பீரமாய் டயலாக் பேசி போனார்.

திருவிழா முடிந்தது.

பெட்டிகடைகாரர் ஒரு நிரம்பிய துணிப்பையோடு கடைக்கு வந்தார்.

”என்னன்னே மிட்டாய் எப்படி வித்துச்சி” அப்பா கேட்டார்.

பெட்டிகடைகாரர் ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தார்.

”“அட அது பெரிய ரோதனை அண்ணாச்சி. சீனி பாகா கரைச்சி மேல ஊத்தி வெச்சிருந்தேனா ! அது ஓவரா போயி மிட்டாயயே சுத்தமா மறச்சு போட்டு பாத்துகிடுங்க.

தேரோட்டத்துக்க வந்தவனுவ எல்லா பயலுவலும் இதப்பார்த்து கேக்குறானுவா . அண்ணே இது என்ன புது மிட்டாய்ன்னு கேக்குரான்னுவ !

சே ரொம்ப மனசு கஸ்டமாயிட்டதுங்க. பொறவு அது எப்படி விக்கும் . ””

இப்போது என்னை பார்த்து அந்த பையை நீட்டினார்.

“எல தம்பி லேய் ! லே பிள்ளே இத பிடில இதுல அந்த மிட்டாய் இருக்கு, வீட்டுல போய் சாப்பிடு “

நான் மறுக்க “சும்மா, வெச்சுக்கல. என்னல! நீ வேற. ஆனா விடமாட்டேன், அடுத்த திருவிழாவுல கலக்கிபுடுவேன் பாரு” சொல்லி போய்விட்டார்.

நான் பையை திறந்து பார்த்தேன்.

வெள்ளை கட்டிகளாய் சீனி பாகினுள் மிட்டாய் கொஞ்சூண்டு கிடந்தது.

No comments:

Post a Comment