Thursday 21 June 2012

கதை போல ஒன்று - 11 a

அடையாரிலிருந்து கொளத்தூர் வரவேண்டுமானால், கிண்டி வந்து வரத்தெரியாத அப்பாவி நான்.

கேட்டால் சிரிப்பீர்கள். அடையாரிலிருந்து பாரீஸுக்கு போவேன்.அங்கிருந்து மறுபடியும் கொளத்தூர் போவேன்.சென்னை புதுசில்லையா! 

பாரீஸ் ஹைகோர்ட் பக்கத்தில் நிற்கிறேன். 142 பஸ் வருகிறது. தாவி ஏற வண்டி நிற்கிறது.

ஒரு மாற்றுதிறனாளி வண் டியை விட்டு கிழே இறங்க கஸ்டபடுகிறார்.அவர் இறங்க டிரைவர் என் உதவியை கோர
செய்கிறேன்.

மாற்றுதிறனாளி கோர்ட் உள்ளே வரை அவரை தாங்கலாக விட்டு விடும்படி சொல்ல. நான் பக்கத்தில் தானேஎன்று காலேஜ் பையை கூட எடுக்காமல் அவரை கூட்டி செல்கிறேன்.

உள்ளே போனது “ இன்னும் கொஞ்சம் உள்ள விட்டுறு தம்பி” என்று போய்கொண்டே இருக்கிறேன். அப்புறம் படியில் ஏத்தி விடு என்று சொல்ல நேரம் ஆவது பற்றிய பயமும் பையின் நிலமை பற்றிய பதட்டமும் ஏறுகிறது.

பதட்டமாய் ஓடி வரும் போது, ஒரு வக்கீலை இடித்து தள்ளி விட அவர் கொத்தாய் பிடித்து அடிக்க, அப்புறம் நான் கல்லூரி மாணவன் என்று சொல்லும்போது குரல் “இலக்கியம் படிப்பவனின்” கம்பீரக்குரலாக இல்லை.அழும் குரலாய் இருந்தது.

ஒடி வந்து பார்த்தால், பஸ்ஸை காணவில்லை. நன்றாக பார்க்கிறேன். ஆம் பஸ்ஸை காணவில்லை. அவ்வளவு பெரிய உருவம் தவறுதலாக அங்கோ இங்கோ இருக்க வாய்ப்பில்லை. பஸ்ஸை காணவில்லை.

என் பையும் எவனோ பஸ்ஸோடு எடுத்து போய்விட்டான்.

பையில் என் ரெக்கார்ட் நோட்டும், மரப்பசு புக்கும், எல்லாம் தாண்டி ஆயிரத்து இருநூறு ரூபாயும். இரண்டு நிமிடம் பைத்தியம் மாதிரி அலைந்தேன்.

பக்கத்து பஸ் கண்டெக்டர்களிடம் விசாரித்தேன். அவர்கள் ”டைம்கீப்பரை கேளு” என்றார்கள். டைம் கீப்பர் கூண்டில் அடைபட்ட கிளியாய் இருந்தார்.

அவரிடம் நிலமையை சொல்லி விளக்கும் போது, சுத்தி உள்ள எல்லா கண்டெக்டரும் டிரைவரும் என் வெள்ளை உள்ளம் கண்டு பரிதாபபட்டனர். க்ஷேவ் செய்யபட்ட ”அப்பாவி முகம்” என்னை சுத்த பேக்காகவே அடையாள படுத்தியிருக்க கூடும்.

ஒருவர் “ஜூஸ் வாங்கி தந்தார்” இன்னொருவர்” இட்லி சாப்பிடுறியாப்பா “ என்றார். மற்றுமொருவர்” இந்த காலத்துல அடுத்தவங்கள பத்தி யோசிச்சாலே பிரச்சனைதான்” என்றார்.

டைம் கீப்பர் சொன்னார் “தம்பி அதே பஸ், அதே டிரைவர் ஒரு மணிக்கு வருவார். பாக்கனும்னா வெயிட் பண்ணி பாரு “என்றார். அந்த இரண்டரை மணி நேரமும் என்னை சுத்தி நடந்தது ஒரு கனவாகவே இருந்தது.

வந்தது . வண்டி வந்தது. ஓடிசென்று வண்டியில் பார்த்தால் என் பை இல்லை.

அவ்ளோதான் என்று வேதனையோடு இறங்கினால், டிரைவர் பையை கையில் வைத்து கொண்டு என்னை தேடிக்கொண்டிருக்கிறார். “ சாரிப்பா, நீ அவர விடுறது உள்ள போயிட்டியா, அப்றம் ரொம்ப நேரம் வரல. டைம் கீப்பர் கத்த ஆரம்பிச்சுட்டார். சரி வேற வழியில்லன்னு நானே தூக்கிட்டு போயிட்டேன்” .

மகிழ்ச்சியாய் பையை வாங்கி பார்த்தேன் உள்ளே ரூபாய் பத்திரமாக இருக்கிறது. ரெக்கார்ட் நோட்டை பார்த்தேன் அதுவும். கடைசிகடைசியாக “மரப்பசு”வை பார்க்கிறேன். அதுவும் சிநேகமாக சிரித்தது.

1 comment: