Friday 7 August 2015

பெருமாள் முருகன் விவகாரத்தில்

பெருமாள் முருகன் விவகாரத்தில் அவருக்கு யாரெல்லாம் ஆதரவளிக்கவில்லையென்றால்...
அல்லது அவரை எதிர்த்து
கேலி,கிண்டல் செய்து மறைமுகமாக சாதிக்கு துணைபோனார்கள் என்றால்.
- பெருமாள் முருகனின் இலக்கிய வளர்ச்சி பிடிக்காத அவரது பழைய நண்பர்கள். பழைய எதிரிகள்.
-பெருமாள் முருகனால் பண்டு காலத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த எழுத்தாளர்கள்.
-தங்களுக்கு புலனாய்வு செய்யும் மூளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, பெருமாள் முருகன் பிரச்சனையை ஆராய்ச்சிக்கு நிதி வாங்குவது என்ற விசயத்தோடு முடிச்சிட்டு ரசித்தவர்கள். இவர்களைத்தான் சாதிக்கு துணை போன அயோக்கியர்கள் என்பேன். இவர்கள் வைத்த கருத்துக்களில் உண்மையோ பொய்யோ சாதியவாதிகளை கூர்மையாக எதிர்க்க இருந்த கூட்டத்தையே இரண்டாக உடைத்த அயோக்கியர்கள் இவர்கள்.
-ஃபேஸ்புக் மற்றும் பத்திரிக்கை, டிவிக்களில் பப்ளிசிட்டி அடிப்பதற்காகத்தான் பெருமாள் முருகன் மற்றும் காலச்சுவடு இதை செய்தது என்று நம்பிய அறிவாளி வாசகர்கள், எழுத்தாளர்கள்.
-பெருமாள் முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாதிய சக்திகளின் கொடூரத்தை அறியாதவர்கள். அது பற்றிய தகவல் இல்லாதவர்கள்.
-பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவு உண்டு. ஆனால் அவர் பயந்துவிட்டாரே. இவன் ஒரு எழுத்தாளனா? என்ற ரீதியில் அவரை தொடர்ச்சியாக கிண்டல் செய்தவர்கள். அந்தக் கிண்டலின் மூலம் தங்களை அறியாமல் பெருமாள் முருகன் பிரச்சனையும், பெருமாள் முருகனையும் காமெடி பீஸாக உலகத்துக்குக் காட்டி “ஏதோ சண்டை” என்ற மற்றவர்கள் நக்கலாக அந்தப் பிரச்சனையை கடக்கும் அலெட்சிய அடிப்படையை உருவாக்கியவர்கள்.
-எவ்வளவுதான் பக்குவப்படவனாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே இருக்கும் “ஜாதி இந்து வெறி” கொண்ட எழுத்தாளர்கள், வாச்கர்கள், பொதுமக்கள்.
-”அதெப்படி ஒரு கிராமத்து தெரு பேரச் சொல்லி இப்படிச் சொன்னா எல்லாருக்கும் கோவம் வரும்தான்” என்று கருத்து உரிமையை எதிர்த்த எளிய தர்க்கவாதி அப்பாவிகள்.
-காலச்சுவடு பிடிக்காதவர்கள், காலச்சுவடு கண்ணனைப் பிடிக்காதவர்கள், சுந்தர ராமசாமியைப் பிடிக்காதவர்கள்.
-காலச்சுவடு எடிட்டோரியலில் இருப்பவர்களைப் பிடிக்காதவர்கள்.
-மற்றப் பிரச்சனைகளில் காலச்சுவடின் நிலைப்பாடு பிடிக்காதவர்கள்.
இப்படி எத்தனை வகைகளில் பெருமாள்முருகனுக்கான போராட்டத்தை கூர்மை இழக்கச் செய்தார்கள். இவையெல்லாம் சாதிய சக்திகளுக்கு கொண்டாட்டம் என்பதை மேலே சொன்ன முட்டாள்கள் ஒரு விநாடி கூட யோசித்துப் பார்க்கவில்லை.
ராஜன் குறை மட்டும் தொண்டை தண்ணி வத்த பெருமாள் முருகனுக்கு தீவிரஆதரவு நிலை எடுத்துப் பார்த்தார். அவரையும் சுத்தி விட்டான்கள் இணையப் புண்ணியவான்கள்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட வகுப்பில் சகமாணவனை பூச்சி கடித்து விட்டு, வகுப்பிலேசுற்றிக் கொண்டிருந்தால்,
அப்பூச்சியை ஒற்றுமையாக விரட்டுவார்கள்.அல்லது அடித்துக் கொல்வார்கள்.
கடிபட்ட மாணவனின் முற்காலம்,அவனது குணாம்சங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
முதல் எதிரி பூச்சி.
அந்தப் பூச்சியை ஒற்றுமையாக விரட்டுவோம். விரட்டிய பிறகு கடிவாங்கியவனைப் பற்றி பேசுவோம் என்றிருப்பார்கள்.
அந்த அறிவு கூட தமிழ் இலக்கியச் சூழலில் வரவில்லை என்பதுதான் கொடுமை.

No comments:

Post a Comment