Friday 7 August 2015

தாய் அன்பு...

யோவான் எழுதிய சுவிசேஷம்’ என்றொரு புத்தகத்தை பஸ்ஸில் என்னருகில் இருந்தவர் வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் புத்தகம் சிறியதாயிருந்தாலும் நேர்த்தியாய் வடிமைக்கப்பட்டது மாதிரி எனக்குத் தோன்றியது.
அப்படியே மெல்ல நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அவரும் அதை சும்மா புரட்டிதான் கொண்டிருந்தார்.
’இந்தப் புக்க யாராவது உங்களுக்கு கொடுத்தாங்களா” என்று ஆரம்பித்தேன்.
“ஆமாங்க டிரெயின்ல கொடுத்தாங்க. நான் படிப்பேன். எங்க வீட்ல என் வைஃப் கிறிஸ்டியன்தான்” என்று அடுத்தப் பேச்சுக்கு லீட் கொடுத்தார்.
“நீங்க கிறிஸ்டியன் இல்லையா” இது நான்
“இல்ல நான் ஹிந்துதான் ஆனா சர்ச்சுக்கெல்லாம் அப்ப அப்ப போவேன்” என்றார்.
“நானும் சர்ச்சுக்கு அப்பப்ப போவேன். எங்க குடும்பத்துல என் அத்தை ரெண்டு பேரு கிறிஸ்டியனா கன்வர்ட் ஆகிட்டாங்க” என்றேன்.
”சில சமயம் வேற வழியில்ல. எனக்கு கூட இப்ப கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாம போயி ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்தோணியார் கோவில்ல போய் கயிறு ? கட்டின பிறகுதான்
சரியாச்சு” என்றார்.
“ஆமா நமக்கு வர்ற் கஷ்டம்தான் நம்ம நம்பிக்கைய டிசைட் பண்ணுது” என்று பேசிக்கொண்டே இருந்தோம்.
திடீரென்று சொன்னார் “யாரையும் வெளக்குமாறாலோ அல்லது செருப்பாலோ அடிக்கக் கூடாதுன்னு. அடிச்சா அடிச்சவங்கள தோஷம் பிடிக்கும்ன்னு இந்து வேதமந்திரங்கள்ல சொல்லியிருக்கு தெரியுமா? என்றார்.
நான் ஆர்வமானேன் “அப்படீங்களா தெரியலையே? நீங்க அப்படி யாரையாவது அடிச்சிருக்கீங்களா? என்று கேட்டேன்.
”ஆமா ஒருதடவை என் அம்மாவ வெளக்குமாறால அடிச்சுபுட்டேன்.அதான் எனக்கு தோஷம்”என்றார்.
அம்மாவ தொடப்பத்தால அடிச்சிருக்காருன்னா காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.
அப்படி இப்படி சுற்றி சுற்றி வந்தேன். பின் எப்படியோ காரணம் சொல்லிவிட்டார்.
“நா கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணப் போறேன்னு அம்மாவுக்கு தெரிஞ்ச ஒடன கோவில்லு பூ போட்டு பாத்திருவோம்ன்னு அம்மா சொன்னா. பாத்தா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு வருது. ஆனா பண்ணுவேன்னு நிக்கிறேன்.
அடுத்ததா என் அம்மாக்கு அப்பப்ப சாமி வரும். லைட்டா சாமி ஆடி குறிசொல்லும். அப்படி சாமி வந்தப்போவும் அந்த கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சாமி மாதிரி சொல்லிப் பாத்தா. ஆனா நா அவளத்தான் கட்டுவேன்னு நின்னேன்.
அப்புறம் நேரடியாவே என்ன நா லவ் பொண்ண கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொன்னா.
நா கேக்கல.
ஒடனே என்ன சொன்னா தெரியுமா? நா அந்த கிறிஸ்டியன் பொண்ண கல்யாணம் பண்ணுனா அவ(அம்மா) மொட்ட அடிச்சுப்பாளாம். அப்படின்னு என்கிட்டயும் ஊருக்குள்ளயும் சொல்லியிருக்கா.
அதக் கேக்காம கல்யாணம் செய்துகிட்டேன். ஊருக்குள்ள வந்தா என் அம்மா உண்மையிலேயே மொட்ட அடிச்சிகிட்டுருக்கா.
நா அவளப் பாக்ககூடாதுன்னு நெனச்சாலும் முன்னாடி வரா போறா. செமக் கோவம் வந்துச்சு. வெளக்குமாற வெச்சி நாலு போட்டேன்” என்றார்.
”ம்ம்ம்” இது நான்.
“ஆனா அன்னைக்கு அவள அடிச்சது எனக்கு தோஷமாயிட்டதாம். அது தோஷம்ன்னு வேத மந்திரங்கள்ல இருக்கு”
“அதெப்படி உங்களுக்கு தெரியும்”
”எனக்கு ஒரு ஜோசியர் சொன்னார்”
“ம்ம்ம்ம்”
“அந்த தோஷத்தாலத்தான் அம்மாவ அடிச்சி பதினைச்சு வருஷம் ஆனாலும் எனக்கு ஒரே இருமல் சலி இழுப்புன்னு இப்ப ரெண்டு மாசமா ரொம்ப கஷ்டப்பட்டேன். சரியா தூக்கமில்ல. மனசுல நிம்மதியில்ல. கண்ணுக்கு தெரியாதது எல்லாம் தெரியுறா மாதிரி இருக்கும். அந்தோணியார் கோவிலுக்குப் போய் க்‌ஷ்டப்பட்டு குணமாகி வந்தேன்” என்றார்.
”ம்ம்ம் கஷ்டம்தான். ஆனா அப்பக் கூட நீங்க கிறிஸ்டியனா மாறலையா” என்றேன்.
“இல்ல சர்ச்சுக்கு போவேன் ஆனா மாறமாட்டேன்.அது என் வைஃபுக்கும் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டா.
அதாங்க என்னைக்குமே யாரையுமே வெளக்குமாறாலோ, செருப்பாலோ அடிக்கக் கூடாது. அது தோஷம். அப்படின்னு வேதமந்திரங்கள்ல சொல்லப்படிருக்கு.
கோவம் வருதா. கோவப்படு. வேண்டாங்கல. அடி. வேண்டாங்கல. ஆனா ஒரு கரண்டிய வெச்சி அடி, ஒரு பிரம்ப வெச்சி அடி. ஆனா வெளக்குமாறாலோ, செருப்பாலோ அடிக்கூடாது. அது ஒரு தோஷம். அப்படின்னு நம்ம வேத மந்திரங்கள்ல சொல்லப்பட்டிருக்கு”
அடுத்த முறை அவர் வேத மந்திரங்கள் பற்றி சொல்வதற்கு முன்னரே நான் இறங்கும் ஸ்டாப் வந்துவிட்டது.
நான் அந்த அண்ணனுக்கு அன்போடு டாட்டா காட்டி இறங்கினேன்.
கிழே இறங்கி அந்த அண்ணனின் அம்மாவை நினைக்க நினைக்க எரிச்சல் வந்தது.
எப்பேர்பட்ட சுயநலவாதியாய் இருந்திருக்கிறார்.
வாழ்நாள் எல்லாம் பையனை குற்ற உணர்ச்சியிலேயே வைத்திருக்கும் வேலையை அல்லவா செய்துவிட்டுப் போயிருக்கிறார் என்று தோன்றியது.
இது தாய்மையின் இன்னொரு கொடூரமான அரக்கத்தனமான முகம் என்று நினைத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment