Friday 7 August 2015

பறவையில் கூட ஜாதி

முன்குறிப்பு: ஒருவேளை நீங்கள் பிராமணராய் இருந்தால் இது உங்களைச் சீறும் பதிவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பிராமணீயத்தின் அடக்குமுறையைப் பற்றி விளக்கும் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள். சரியான ஸ்பிரிட்டில் நீங்கள் இதைப் படிக்க வேண்டும் என்ற பதட்டம் எனக்கிருக்கிறது.
நண்பர் ஒருவர் அவர் நண்பர் பற்றி சொன்ன விசயம் இது.
நண்பரின் நண்பர் தமிழகத்தின் சிறுநகரத்தில் இருந்து சென்னை வந்து வீடு கட்டி இருக்கிறார்.
நண்பர் கேட்டிருக்கிறார் “டேய் எப்படிடா இருக்கிற’ என்று.
“நல்லாயிருக்கேண்டா இங்க வீடு கட்டியாச்சு. சுத்தி இருக்கிற இடமெல்லாம் பிரச்சனையே இல்லை. சுத்தி முத்தி எல்லாரும் பிராமின்ஸாத்தான் இருக்காங்க. நீட்டா இருக்கு” என்றிருக்கிறார்.
நண்பர் சொன்னார் “தல பாருங்க சுத்தி முத்தி பிராமின்ஸ்ன்னு சொல்லிட்டு, அதையும் சுத்தத்தையும் அவனையறியாமல் ஒப்பிடுறான் பாருங்க.அதுதான் நம்ம சமூகத்துல இருக்கிற ஜாதி உணர்வு” என்றார்.
பிராமணர்கள் என்றால் சுத்தமானவர்கள் என்ற வாக்கியமே மற்றவர்கள் அசுத்தமானவர்கள் அல்லது பிராமணர்கள் அளவுக்கு சுத்தமானவர்கள் அல்ல என்ற மொழியில் மொழியப்படுகிறது.
இது ஒருநாளில் ஏற்றப்பட்ட உணர்வு அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்.
இதற்கு இன்னொரு உதாரணமாக வலசைப் பறவைகள் பற்றிப் பேசும் போது தயாளன் சண்முகாவும், சண்முகானந்தனும் ஒரு தகவல் சொன்னார்கள்.
பருந்து வகைகளிலேயே இந்த ஜாதிப்பெயர்கள் இருக்கிறது என்று.
அதாவது பிராமணப் பருந்து (brahminy kite) மற்றும் பறையப் பருந்து (Pariah kite). இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
அதே மனிதர்களில் இட்டுக் கட்டப்படும் வித்தியாசம்தான்.
பிராமணப்பருந்தின் கழுத்துப் பகுதி வெள்ளையாக இருக்கும். அது சுத்தமான உணவை உண்ணும என்பது போன்றவை.
பறைப்பருந்து எப்படியிருக்கும்.கருபாய் இருக்கும். நீர்நிலைக் கரையோரம் இருக்கும் அழுக்கான விசயங்களை உண்ணும் என்பது போன்றவை.
இப்பெயரை வைத்தவர்கள் நம்மவர்கள் தாம்.
சிறுகுழந்தை எப்படிப் பேசிப்பழகும் அதோ வெள்ளை சுத்த பிரமணப்பருந்து பறக்கிறது. அதோ கறுப்பு அழுக்கு பறையப்பருந்து பறக்கிறது என்றுதான் பேசிப்பழகும்.
பிராமணன் என்றால் சுத்தம். பறையன் என்றால் அசுத்தம். இப்படிப்பட்ட இட்டுக்கட்டலை நாகரிகம் தோன்றியதில் இருந்து சொல்லிவிட்டு
தீடீரென்று ஃபேஸ்புக்கில் “ஏன் நான் ஐயர்ன்னு போடுறது மாதிரி நீயும் பறையன்னு பேருக்குப் பின்னாடி போட்டுக்கயேன். அதில் உனக்கென்ன தாழ்வு மனப்பான்மை என்று பொத்தாம் பொதுவாக பேசுவது அறிவுடமையோ மனிதநேயமோ ஆகாது.
உங்கள் நண்பர்கள் யாராவது பெயர்களுக்கும் பின்னால் ”ஐயர்” என்றோ “ஐயங்கார்” என்றோ எழுதியிருந்தால் அது தவறு என்பதை பக்குவமாக புரிய வையுங்கள்.
அவ்வார்த்தைகள் நாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் அப்பட்டங்கள் உழைப்பினாலோ படிப்பினாலோ வரவில்லை. வெறும் பிறப்பினால் மட்டும் வந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
சாதியின் வேர்கள் உங்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
பிராமணர்கள் போற்றும் எழுத்தாளர்கள்,
உதாரணமாக பாலகுமாரன் போன்றவர்கள் அந்த ஐயர் ஐயங்கார் பேர்களை ஃபேஸ்புக் பெயர்களில் சேர்க்காதீர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கலாம்.
அவர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்தால் அதன் ரீச்சே தனி.

No comments:

Post a Comment