Friday 7 August 2015

உணர்வில்லாத எழுத்து.

வைரமுத்து அப்துல் கலாமுக்காக எழுதிய இரங்கல் செய்தியைப் படிக்கும் போது “இவர் வார்த்தைக்கும் உணர்வுக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிப்பவர்” என்று தோன்றியது.
ஒரு வார்த்தையை நீங்கள் எழுதினால் அதை படிப்பவர்கள் உணர வேண்டும்.
ஃபீல் பண்ண வேண்டும். அப்போது மட்டுமே அந்த எழுத்து உண்மையான எழுத்தாகும்.
ஆனால் வைரமுத்து போன்றவர்களின் உரைநடை எந்த உணர்வையும் கொடுக்காமல் தட்டையாக இருக்கிறது.
பழைய இளையராஜா பாடல்களில் அடிக்கடி “பூங்காத்து” என்றொரு வார்த்தை வரும்.
பூங்காத்து என்றால் பூக்களில் இருந்து வரும் வாசம் கலந்த காற்று, பூவைப் போன்ற மென்மையான காற்று இப்படி நிறைய உணரலாம்.
ஆனால் பூங்காற்று என்ற வார்த்தையைக் கேட்கும் போது இப்படி எதையாவது நாம் உணர்ந்திருக்கிறோமா? நிச்சயமாக உணர்ந்திருக்க மாட்டோம்.
அது சவுக்களித்த வார்த்தையாய் சவ சவத்துப் மரத்துப் நம்மைக் கடந்து போகும்.
இது போல வார்த்தைக்கும் யதார்த்ததிற்கும், வார்த்தைக்கும் சிந்தனைக்கும் கூட தொடர்பு இருக்கிறது என்று பல எழுத்தாளர்களுக்கு தெரிவதில்லை.
வார்த்தைக்கும் சிந்தனைக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து கொண்டது சுந்தரராமசாமி மூலமாகத்தான்.
அதன்பின் பிரமிள் அதன் உச்சமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஒரு வார்த்தையை டெக்ஸ்ட் செய்யும் போது அது உணர்வை, அறிவை தாக்காவிட்டால் அதை எதற்கு எழுத வேண்டும்?
தி.ஜானகிராமன் மரப்பசுவில் கோபாலி என்ற சங்கீதவித்வானை “குளிர்ந்த மாம்பழம்” என்பார்.
சட்டைபோடாத புஷ்டியான சங்கீதம் செய்யும் வியர்வையானஆளை நினைத்துக் கொள்ளுங்கள்.
அவர் குளிர்ந்த மாம்பழம் போலத்தானே இருப்பார் (அவரை அம்மணி அணைத்துக் கொள்வாள்).
அது போல இருக்க வேண்டும் எழுத்து.
ஒரு கூழாங்கல்லை உள்வாங்கிக் கொண்ட குளத்து சலசலப்புப் போல எழுத்தாளன் எறியும் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட வாசக மனம் சலசலக்கவில்லையென்றால் அது எழுத்தே கிடையாது.

No comments:

Post a Comment