Friday 7 August 2015

சரியானவற்றை புரியவைத்தல்

நான்கு ’அமுக்குப் பொத்தான்கள்’ கொண்ட இயந்திரம் இருக்கிறது.
ஒவ்வொரு பொத்தானும் ஒவ்வொரு பயன்பாட்டுக்காக.
எந்த எந்த பொத்தான் எந்த செயலுக்காக என்பதை, ஒவ்வொரு பொத்தான்களில் இருந்து மேலே உள்ள இடத்தில் எழுதுவது சிறந்ததா?
அல்லது ஒவ்வொரு பொத்தான்களின் பக்கவாட்டில் எழுதுவது சிறந்ததா? (கற்பனை செய்து பாருங்கள்).
முதல் பொத்தானுக்கு மேலே 'ON' என்று எழுதியிருக்கிறது .
முதல் பொத்தானுக்கு கிழே, இரண்டாவது பொத்தானுக்கு மேலே ‘OFF’ என்று எழுதியிருக்கிறது. அதாவது ‘OFF’ என்ற வார்த்தை முதல் மற்றும் இரண்டாவது ஸ்விட்சுக்கு நடுவே இருக்கிறது.
திடீரென்று ஒரு அவசரம் வருகிறது. ஸ்விட்சை ‘OFF’ செய்ய வேண்டும்.
நாம் குழம்புவோமா ? மாட்டோமா? இந்த ‘OFF’ எந்த பொத்தானுக்கு முதல் பொத்தானுக்கா? அல்லது இரண்டாவது பொத்தானுக்கா? என்ற சின்ன குழப்பம் வருமா? வருமா? வராதா?
அவசரத்தில் மனித மூளை சில சமயம் அப்படியே செயலற்று நின்று விடும்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் ஒர் சம்பவம் சொன்னான்.
நாகர்கோவிலை அடுத்துள்ள கொட்டாரம் என்ற ஊரில், ஊற வைத்த அரிசியை திரித்து மாவாக்க மாவு மிஷினுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். அந்தக் கடைவீதியில் கொஞ்சம் தள்ளி ஒரு நகைத்திருட்டு ? நடந்து கொண்டிருக்கிறது.
திருட்டின் முடிவில் திருடர்கள் கடையின் முன்னால் நாட்டு வெடிகுண்டை வீசுகிறார்கள். அது டாமென்று வெடிக்க பொதுமக்கள் பயத்தில் ஒடுகிறார்கள்.
நண்பனும் மாவும் மில்லை விட்டு “கொல்லாண்டோ குட்டியப்போ” என்று அலறி ஒடி வந்திருக்கிறான்.
சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து சைக்கிளை ஒட்ட வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்தப் பதட்டத்தில் அவனால் சைக்கிள் ஸ்டாண்டை கால்களால் தட்டிவிட முடியவில்லை.
கால் ஒடவில்லை.
பதட்டம் என்பது சிலசமயம் அப்படி உடல் மற்றும் மூளையை செயல் இல்லாமல் ஆக்கிவிடும்.
அஞ்சாதே திரைப்படத்தில் ஒருவரை கடத்தல்காரர்கள் போனில் மிரட்டுவார்கள். அவர் பதறுவார்.
கடத்தல்காரர்கள் போனை ஸ்பீக்கரில் போடச் சொல்வார்கள்.அவரால் அந்தப் பதட்டத்தில் ஸ்பீக்கரில் போட முடியாது. மூளை வேலைசெய்யாது. பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்பார்.
இது மாதிரியான சூழ்நிலையில் சரியான பொத்தானை அடையாளம் காணும்படியான, எந்த செயல் எந்தப் பொத்தானுக்கு என்று புரியும் படியாக எழுதிவைக்க வேண்டும்.
ஒவ்வொரு பொத்தானின் பக்கவாட்டிலும் எழுதி வைத்தால் குழப்பமே வராது.
’கொயந்தப் பய்யன்’ கூட அதை எளிதாக சரியாக இயக்குவான்.
இதற்கு Ergonomics யில் ஒரு பெயர் உண்டு. தற்சமயம் எவ்வளவு யோசித்தாலும் வரமாட்டேன் என்கிறது.
வாழ்க்கையிலும் இது மாதிரி சரிவர குறிப்பு எழுதாத பொத்தான்களைப் பார்க்கலாம்.
சமீபத்தில் பனுவலில் “பவுத்தமும் அதன் இன்றையப் பொருத்தப்பாடும்” என்றொரு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி மிக உபயோகமுள்ள அர்த்தமான நிகழ்ச்சி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கொடுத்திருந்த தலைப்பு என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
நிகழ்ச்சியில் வகுப்பெடுத்த எழுத்தாளர் கணிதவிலாளர் குடியரசன் “பவுத்தமும் அதன் இன்றையப் பொருத்தப்பாடும்” என்று அந்த இன்றைய பொருத்தப்பாடு என்ற அளவில் அம்பேத்கரின் பவுத்த ஈர்ப்பு பற்றியும் பவுத்தம் சொல்லும் முற்போக்குக் கருத்துக்கள் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
ஆனால் வந்திருந்த சிலர் புத்தர் மற்றும் பவுத்தத்தை ஒரு ஜென் தன்மையோடும், ஒரு ஈசாப் நீதிக்கதைகள் சொல்லும் தன்மையோடும், ஒருவித ஸ்பிரிச்சுவல் ரொமாண்டிக் ஆளாகவும் கருத்தாகவும் எண்ணிக் கொண்டவர்கள்.
அதன் அடிப்படையிலேயே குடியரசனிடம் கேள்வி கேட்டார்கள்.
ஒருவர் “நீங்க புத்தன் சொன்ன மாயா தத்துவம் பற்றி சொல்லுங்கள்” என்று ஒரே அடம் பிடித்தார்.
இன்னும் பலர் பனுவலையே போதிமரமாகவும், அந்த வகுப்பு முடியும் நேரத்தில் தானும் ஞானம் பெற்று புத்தனாகிவிட வேண்டும் என்ற வெறியில் கேள்வி கேட்டார்கள்.
எப்படி நியூட்டனின் மூன்றாம் விதியை எளிமையாய் இருப்பதாலேயே அனைவரும் சொல்கிறார்களோ,
அப்படியே “ஆசையே துன்பத்துக்குக் காரணம்” என்பதையும் சொல்கிறார்கள்.
அந்த எளிமையினாலேயே புத்தர் பவுத்தம் எல்லாம் மக்கள் மத்தில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறார்கள்.
அது மாதிரி மக்களை எல்லாம் அந்தத் தலைப்பு குழப்பிவிட்டது.
அதற்கு பதிலாக “பவுத்தமும் அம்பேத்கரும்” என்று தலைப்பை வைத்திருந்தால் நிறை அன்பர்களின் தேவையில்லாத கேள்விகளை தவிர்த்திருக்கலாம்.
விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்வது பிரச்சாரத்துக்கு முக்கியமானதாகும். பொத்தானுக்கு பக்கவாட்டில் எழுதுவது போல.

No comments:

Post a Comment