Friday 7 August 2015

தூக்குதண்டனை

சிஷ்யன் :
குருவே ! எனக்கு சில விஷயங்கள் உங்களிடம் பேச வேண்டும்.
கழிந்த இரண்டு நாட்களாக என் முகத்தில் கறுப்பு உறையை மூடி தூக்குக் கயிற்றின் முன் நிற்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஒரு சுழற்சியாக என் மனதில் வந்து கொண்டிருக்கிறது.
அந்தத் துணி என் புற உலகை இருண்டதாக்குகிறது.
பயமாயிருக்கிறது.
அடுத்து எப்போது எந்த விநாடி என் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கும் என்று தெரியாது.
அது என் கழுத்தை இறுக்கும் விநாடிவரை நான் மூச்சு விட்டுக்கொள்ளலாம். இதோ மூச்சு விடுகிறேன். ம்ஹூஹ்... மிகுஷ்.. ம்ஹூஹ் ...மிகுஷ் இப்படியே விட்டுக் கொள்ளலாம்.
நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் எந்த மூச்சுக்காற்று என் இறுதி மூச்சுக்காற்று என்று எனக்குத் தெரியாது.
தொண்டையை இறுக்கும் கயிறு அந்த மூச்சுக்காற்றை நிறுத்தும் போது என் கால்கள் எப்படித் திணறும்.
என் நுரையீரல் எப்படித் திணறும்.
என் மல மூத்திரம் துவாரம் வழியே கசியுமா?
அது மாதிரி தொங்கிக்கொண்டு நான் எவ்வளவு நிமிடம் கிடப்பேன்.
அது முடிந்த பிறகு இருட்டுதானா. நான் இல்லையா?
என்னால் ஒரு மலரைப் பார்த்து ரசிக்க முடியாதா?
இரவு உணவாக உப்பு அதிகமுள்ள தோசையை சாப்பிட்டு விட்டு, நள்ளிரவில் தாகம் முட்ட ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கும் போது ஒரு நிம்மதி கிடைக்குமே அதை அனுபவிக்க முடியாதா?
சில சமயம நல்ல இசை மனதுக்குள்ளே கேட்டு மனித உயிரின் இருப்பின் அற்புதத்தை உணர்த்தும் அதை உணர முடியாதா?
என்னுள் இருப்பது ஒன்றிரண்டு உணர்ச்சியல்லவே?
இருப்பது ஒருலட்சம் உணர்வுகள். அந்த ஒரு லட்சம் உணர்வுகளும் இந்த இருட்டிய உயிரின் பின்னால் இருக்கும் பயமுறுத்தும் மவுனத்தில் தொடர்ச்சியாக வரும் தூக்குக் கயிறின் இறுக்கத்தில் போய்விடுமா?
ஏன் என்னை இப்படி திட்டமிட்டு விநாடி விநாடியாக கடக்க வைத்து கொல்ல வேண்டும். இது எப்படி மனித நேயமாகும்.
திட்டமிட்டு என்னை கொலை செய்வது எப்படி மனித நேயமாகும்.
அந்த கறுப்பு உறை அணிந்த நேரத்துக்கும் தூக்கில் தொங்கும் நேரத்துக்குமான இடைவெளி என்னை துன்புறுத்துகிறது குருவே.
தூக்கு தண்டனை செய்தியைக் கேட்கும் போதெல்லாம் இப்படித்தான் தோன்றுகிறது.
இப்படித் தோன்றும் போது எல்லையே இல்லாத வெட்டவெளியில் வெறித்தனமாக கத்திக் கொண்டே ஒட வேண்டும் போல இருக்கிறது.
நேற்றும் இப்படித்தான் தோன்றி என்னைத் துன்புறத்துகிறது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும் குருவே !
இரண்டு நாட்கள் முன்பு இறந்த நல்லவரின் இறப்பை மற்றவர்கள் கொண்டாடும் விதமே எனக்கு அருவருப்பாக தெரிகிறது.
பிணத்துக்கு மாலை போட்டு,
பிணத்துக்கு பவுடர் அடித்து,
பிணத்தை சலிக்க சலிக்க புகழ்ந்து,
பிணத்தை வணங்கி,
பிணத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த மக்கள்,
புதிதாக இன்று காலையில் துடிக்க துடிக்க ஒரு மனிதன் பிணமாகிவிட்டிருப்பது பற்றிய உணர்வில்லாமல் இருக்கிறார்கள்.
இதனாலேயே எனக்கு அந்த நல்ல பிணம் மீது அர்த்தமற்ற கோபம் வந்துவிடுமோ, வெறுப்பு வந்து விடுமோ என்ற பயம் இருக்கிறது.
நான் மிகுந்த மனநெருக்கடியில் உள்ளேன் குருவே. எதாவது சொல்லுங்கள்.
குரு : சிஷ்யா ! மனித வாழ்க்கையின் இம்மை மறுமை அடிப்படையிலான சிக்கலை பகவத் கீதை எப்படி சொல்கிறது என்றால்?
சிஷ்யன் : குருவே உங்கள் ரத்தம் தெறிக்க உங்கள் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்து விடுவேன். த்தா நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
குரு : இரண்டு நாட்கள் ஃபேஸ்புக் பக்கம் வராதே ! அதிகம் வார்த்தைகளைக் கொட்டாதே. அமைதியாக இருந்து விடு.
சிஷ்யன்: சரி.

No comments:

Post a Comment