Friday 7 August 2015

புதுமையான சிந்தனை...

எங்கள் வீட்டில் கழகத்தமிழ் கையரகாதி என்றொரு புத்தகம் உண்டு.
சிறுவயதில் இருந்தே அவ்வப்போது அதை எடுத்து வாசிப்போம். தமிழுக்கே தமிழில் பல அர்த்தம் இருப்பது பற்றி வியப்பாயிருக்கும்.
அப்பா சில சமயம் அதில் இருந்து எதாவது சொல்லை எடுத்து விளக்கம் சொல்வார். கேட்க நன்றாயிருக்கும்.
அப்படியாக போய்க் கொண்டிருக்கும் போது தம்பி (அப்போது அவனுக்கு பதினோரு வயது இருக்கும்) ஒருநாள் அந்த கையகராதியைப் புரட்டிக் கொண்டே இருந்தான்.
ஏதோ தேடுகிறான் என்று தெரிந்தது. நான் அண்ணன்கள் மூவரும் அவனிடம் ”என்னல தேடுறா? சொல்லேம்ல” என்று கேட்டுக்கொண்டே இருந்தோம்.
ஆனால் அவன் சொல்வானில்லை. ரொம்ப வற்புறுத்திக் கேட்கும் போது சொன்னான் “நா ஒண்ணு கண்டுபிடிச்சிருக்கேன்.அத செக் பண்றேன்” என்றான்.
”என்ன கண்டுபிடிச்சிருக்கால நீ” எங்களுக்கு ஆச்சர்யம். “இவன் தமிழ்ல ஏதோ கண்டுபிடிச்சிருக்கானா? “ என்று என்னது என்னது என்றோம்.
அவன் சொன்னான் “எனக்கு ’தயம்’ அப்படிங்கிற வார்த்தைக்கு அர்த்தம் வேணும். அப்படின்னா ”சதையா”ன்னு தெரிய்னும் என்றான்.
இவனுக்கு எதுக்கு ’தயம்’ அர்த்தம் வேண்டும் என்று தேடினோம். ஒன்றுமேயில்லை.
“அடடா இல்லாமல் போச்சே” என்று தம்பி வருத்தப்பட்டு பின் தொடர்ந்தான்
“இல்ல ஹார்ட் இருக்குல்ல இதயம். அப்படின்னா அது இருதயம்தான. இருதயம்னா இரு கூட்டல் தயம். இருன்னா இரண்டு. தயம்ன்னா சதையா இருக்குமோன்னு நினைச்சேன். அப்படின்னா இரண்டு சதைகள் என்று அர்த்தம் வரும். அது காரணப்பெயர்தானே” என்றான்.
நாங்கள் எல்லோரும் சிரித்தோம்.
அவனை கேலி செய்து கொண்டே இருந்தோம். “பெரிய இவருக் கண்டுபிடிச்சிட்டாரு” என்றோம்.
தம்பி அசடு வழிந்தபடியே இருந்தான்.
அப்பா வந்தார்” அவனாவது புதுசா ஒண்ணு யோசிக்கவாவது செய்தான் நீங்க அது கூட செய்யலியே” என்று தம்பிக்கு சப்போர்ட் செய்தார்.
இப்போது இந்த சம்பவத்தை யோசிக்கும் போது சிரிப்பாகவும் சிந்தனையாகவும் இருக்கும்.
வித்தியாசமான சிந்தனை என்பதாலேயே அதை சரியானது என்று ஒத்துக்கொள்ள முடியாதுதானே.
வித்தியாசத்துக்குள்ள கிரெடிட் வேண்டுமானால் கொடுக்கலாம்
ஆனால் அது செம்மையான சிந்தனை என்று நிருபிக்கப்படாமல் ஒத்துக் கொள்ள முடியாதுதானே.
வித்தியாசமாக மட்டும் சிந்தித்து அதை நிருபிக்க ஆர்வமில்லாமல் இருப்பதும் ஒரு போலி சிந்தனைப்போக்குதான்.
ஆனால் இந்த வித்தியாச சிந்தனை பாவ்லாவை வைத்து எப்பேர்ப்பட்ட கூட்டத்தையும் ஒரு விநாடி மயக்கி விடலாம் என்பது மட்டும் உண்மை

No comments:

Post a Comment