Tuesday 20 August 2013

அம்மை நோய்...

1873 யில் வள்ளியூரை சேர்ந்த முத்து கருப்பப்புலவர்
மகன் அருணாசல புலவர் எழுதிய ”முத்தாரம்மன் கதை” கதைபாடலை பற்றி படித்தேன்.

இந்த ஆய்வு புத்தகத்தை எழுதியவர் முனைவர் சூ.நிர்மலா தேவி.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பா செய்திருக்கிறார்.

முத்தாரம்மனின் கதையை இந்த சுவடி இலக்கியம் தெரிவிக்கிறது.

முதலில் கதையை பார்த்துவிடலாம்.

கசிப ரிக்ஷி நாகராஜாவுக்கு செய்து கொடுத்த வேள்வியால், நாகராஜாவின் தங்கை நாகக்கன்னி கர்ப்பமாகிறார்.

பெரிய முத்து, சின்ன முத்து என்று இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்.

பெரிய முத்துவும் சின்ன முத்துவும் வளர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்கின்றார்கள்.

தவமென்றால் தவம் வீரியமான தவம். சிவன் மனமிரங்கி என்ன வேண்டும் என்று கேட்கிறார்.

பெரிய முத்துவும் சின்னமுத்துவும் அம்மைமுத்துக்களை கேட்கிறார்கள்.”எம்பெருமான் எங்களுக்கு அம்மைமுத்துக்கள் வேண்டும்.அம்மனை வழிபடாதவர்களை இந்த அம்மைமுத்துக்களை தெளித்து தண்டிப்போம்” என்று சொல்ல சிவன் வரமளிக்கிறார்.

பெரியமுத்து பெரியமுத்தம்மனாகவும், சின்ன முத்து சின்னமுத்தம்னாகவும் அவதரிக்கின்றனர்.

குஜாராத்துக்கு மேலே இருந்தே ஊர் ஊராக வருகிறார்கள்.

தங்களை வழிபடாவதவர்களுக்கு,கெட்டவர்களுக்கு,இறுமாப்பு கொண்டவர்களுக்கு நோயை கொடுத்து அம்மைமுத்துக்களை கொடுக்கிறார்கள்.

கோவம் தணிந்ததும் அடுத்த ஊருக்கு வந்து ஆக்ரோஷிக்கிறார்கள்.

இப்படியே போய் நெல்லை மாவட்டம் பட்டபுரம் என்ற ஊரில் வந்து தங்கள் பயணத்தை முடிக்கிறார்கள்.

சரி.

ஆய்வாளர் சூ.நிர்மலா தேவி இந்த கதைப்பாடல் பற்றி என்ன சொல்கிறார் என்றால் பெரியமுத்தம்மன் என்பது பெரியம்மையை( Small pox) குறிக்கிறது.

சின்னமுத்தம்மன் என்பது சின்னம்மையை (Chicken pox) குறிக்கிறது.

1600 இல் இருந்து 1900 வரை உலகம முழுவதும் இந்த இரண்டு நோய்களின் தாண்டவம் அதிகமாய் இருந்தது.

அதே தன்மை இந்தியாவிலும் இருந்ததைத்தான் இந்த கதைப்பாடல் குறிக்கிறது என்று.

ஏனெனில் இதில் பெரியமுத்தம்மன்தான் கோபக்காரியாக காட்டபடுகிறார்.

சின்னமுத்தம்மன் பெரியமுத்தம்மனுக்கு அடங்கினவர்.

நோயிலும் அப்படித்தானே பெரியம்மைதான் சின்னமையை விட பலமடங்கு ஆபத்தானது.

என்னுடைய அத்தை சின்ன வயதில் பெரியம்மை தாக்கி உயிரிழந்து உயிர் பெற்றார் என்பதை வீட்டில் போரடிக்கும்போது பாட்டி உருக்கமாய் சொல்லி அழுவார்.

“நிலைக்கும் பெரியமுத்து.நிலையாது சின்னமுத்து”

பெரியம்மை தழும்புகள் முகத்தில் இருக்கும்.

சின்னம்மை தழும்புகள் முகத்தில் நிலைக்காது.

எந்த விசயத்திற்கு காரணம் தேடுவது மனித அடிப்படை.

ஒரு காலத்தில் அம்மை நோய் வந்து எல்லோரையும் கூட்டம் கூட்டமாக கொன்று போட காரணம் தெரியாமல் திகைத்தனர்.

பிறகு இதற்கு காரணம் அம்மனின் கோபம்தான் என்று உருவாக்கம் செய்து அம்மனை குளிர்விக்க பூஜை புனஸ்காரம் செய்தனர்.

பிரச்ச்னையை தீர்க்க முடியாவிட்டால், ஏதோ காரணம் கற்பித்து மனநிம்மதி அடைவதுதான் பொதுவான மனித யுத்தி.

அதுவே நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் இந்த பெரியமுத்தம்மனின் சின்னமுத்தம்மனின் விஜயம் இந்த கதைபாடலில் கூறப்பட்டிருக்கிறது.

இன்னொரு விசயம் என்னவென்றால் வைதீக கோயிலாளர்கள் இந்த புள்ளியில் தான் சிறுதெய்வ வழிபாட்டையே திரும்பி பார்க்கிறார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் இந்த அம்மன் கான்செப்டை அங்கீகரித்து விடுகிறார்கள்.

சைவர்களும் வைணவர்களும் மிகக்கேவலமான சண்டையை தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் போது கூட, இந்த அம்மன் வழிப்பாட்டை அதிகம், தத்தம் கோவிலுள் அனுமதிப்பது இந்த பெரியம்மை சின்னம்மை நோய் பற்றிய பயத்தினால்தான்.

இன்னும் என்ன மாயம் செய்திருக்கிறது இந்த நோய் என்று பாருங்கள்.

அகமதாபாத்தை சுற்றியுள்ள நாட்டை ஆண்ட முகலாயர் வழி வந்த இஸ்லாமிய மன்னன் “உறக்கு பாதுக்ஷா” (1530-1553)என்பவர் தன்னுடைய படை பரிவாரம் (மிருகத்திற்கு வரும் அம்மை நோயும் அப்போது வீரியமாக இருந்ததாம்) எல்லாம் நோயால் தாக்கப்படுவதை கண்டு இந்த பெரியமுத்தம்மனையும் சின்னமுத்தம்மனையும் வணங்கி வழிபட்டாராம்.

இது ஒரு ஆவணமா அல்லது இலக்கியமா என்ற குழப்பம் இருந்தாலும், சுவடியில் இருக்கும் கோர்வை அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது என்று ஆய்வு சொல்கிறது.

இந்த கதைபாடல்களை கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வில்லுப்பாட்டாக பாடுகிறார்கள் இப்போதும்.

அந்த அம்மை முத்துக்கள் என்ற பெயரில் இருந்து முத்தாரம்மன் என்ற வார்த்தை வந்திருக்கலாம் என்பது ஆய்வாளரின் ஒரு யூகம்.

இன்னும் இது மாதிரி இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது.

ஆனால் இந்த நோய் பத்தின விசயம் எனக்கு சென்சிபிளாகவும் சரியாகவும் இருக்கிறது...

No comments:

Post a Comment