Saturday 10 August 2013

ஏன் உப்பு மூட்டையை மட்டும் யாரும் திருடுவதில்லை ?

ஏன் உப்பு மூட்டையை மட்டும் யாரும் திருடுவதில்லை என்ற கேள்வி சிறுவயது முதலே எனக்குண்டு.

அப்பாவிடம் அந்த கேள்வியை கேட்டதில்லை.அது அற்ப கேள்வியாய் தோன்றியது.ஆனால் கேள்வி இருந்தது.

அயோடைஸ்ட் சால்ட் வருவதற்கு முன்னால், கல் உப்பு மூட்டையை கடையின் வெளியே வைத்திருப்போம்.

இரவு கடை மூடும் போது கூட எல்லா பொருட்களையும் உள்ளே வைத்து பலகை போடும் போது கூட உப்பு மூட்டையை உள்ளே தூக்கி வைக்க மாட்டோம்.

உப்பென்ன பாவம் செய்தது தெரியவில்லை.அல்லது உப்பு மூட்டையை கடையினுள் வைத்தால் மற்ற பொருட்கள் கெட்டு விடுமா? இப்படி பல கேள்விகள்.விலை குறைவு என்பது ஒரளவுக்கு ஒப்பு கொள்ளத்தக்க ஒன்றாக இருந்தது. 

எவ்வளவு குறைந்த விலையென்றாலும் என்ன ? வெளியேத்தானே இருக்கிறது.யாராவது எடுத்துப் போகலாமில்லையா? இதுமாதிரி கேள்விகள்.

அன்று காலையில்(ஆறு மணி அளவில்) அப்பா கட்டிலில் படுத்துக் கொண்டே என்னை கூப்பிட்டார்.” விஜய் நீ போய் கடை திற அப்பா கொஞ்சம் லேட்டா வரேன்” என்றார்.

நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பா சொன்னதும் குளித்து சாப்பிட்டு ரெடியானேன்.

காலையில் கடை திறப்பது எனக்கு பிடித்த வேலை.

குளித்து புத்துணர்ச்சியாக கடைக்கு போய், பூட்டைத்திறந்து ஒவ்வொரு பலகையாய் எடுத்து வைக்க வேண்டும் (அப்போது கடையில் ஒரே ஒருவர் மட்டுமே வேலைக்கு இருந்தார்.அவர் எட்டு மணிக்குதான் வருவார்).

பலகைகளை எடுத்து வைப்பது லேசானதில்லை.ஒவ்வொரு பலகைக்கும் ஒவ்வொரு விஞ்ஞானம் இருக்கும்,சிலதை மேலே தூக்கி சைடில் இழுக்க வேண்டும்.சில பலகைகளை ஒங்கி இரண்டு அடி அடித்து தூக்க வேண்டும்.சில பலகைகள் செல்லம் போல அழகாக பூட்டாக கழன்று வரும்.

பலகைகளை எடுத்து கட்டி வைத்தப்பின்.பட்டறையை இழுத்து வெளியே போட வேண்டும்.பின் கயிறு பைகள் என்று தொங்க விட வேண்டியதெல்லாவற்றையும் தொங்க விட வேண்டும். 

வாரியலை எடுத்து கடையினுள்ளும் வெளியே பிளாட்பாரம் வரை சுத்தமாக பெருக்க வேண்டும்.

பத்து லிட்டர் கேனில் உள்ள நீரை எடுத்து கடைனுள்ளும் வெளியேயும் தொளிக்க வேண்டும்.கைகளை நன்கு கழுவிக்கொண்டு பழைய பேப்பர்களை கிழித்து தொங்க விட வேண்டும்.

சின்ன குமுதம் ஆனந்த விகடன் பேப்பர்களையும் தொங்க விட வேண்டும்.

பின் அரிசி போன்றவைகளை குமித்து வைக்க வேண்டும்.அப்போதுதான் பார்வையாய் இருக்கும்.மூடைகளை மண்ண வேண்டும் (சைடில் ரோல் பண்ணுவார்களே அது )

முறுக்கு பாக்கெட்கள்.கடலை பாக்கெட்களை அழகாக அடுக்க வேண்டும்.

இதெல்லாம் முடிந்த பிறகு ஊதுவத்தி ஏற்றி ராணிமுத்து கேலண்டிரில் நம்மை நோக்கி புன்னகைத்து கொண்டிருக்கும் முருகனை கும்பிட்டு கல்லாவில் உட்கார்ந்தால் புத்துணர்ச்சி வரும்.

இரண்டு நிமிடம் உட்கார்ந்த பிறகு பக்கத்து கடையில் காபி சொன்னால் நுரை பறக்க வரும்.

காலையில் அதை அந்த பரபரப்பான மக்கள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு உறிஞ்சும் போது கிடைக்கும் திருப்தி சுகமானது.

அப்பாவுக்கு ஏழு மணிக்கெல்லாம் கடை திறந்து விட வேண்டும்.

அதையே என் தாத்தா குறை சொல்வார்.அவரெல்லாம் ஆறு மணிக்கு கல்லாவில் இருப்பாராம்.ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளாக விற்பது என்னவோ கொஞ்சம் காபி பொடியும் சீனியும் கருப்பட்டியும் மட்டும்தான்.ஆனாலும் தாத்தா ஆறுமணிக்கு கடையில் இருப்பாராம். “தூங்கினா வெளங்குவானா யாவாரி” என்பது தாத்தாவின் கொள்கையாக இருந்தது.இப்போதெல்லாம் நான் காலை ஒன்பது மணிக்கு எழுந்திருப்பது நல்ல வேளை தாத்தாவுக்கு தெரியாது:).

அப்பா சொன்னதும் குளித்து சாப்பிட்டு சாவி தொங்க விடும் இடத்தைப் பார்க்கும் போது திக்கென்றிருந்தது.

சாவி அங்கில்லை. முந்தின நாள் சாவியை நான் தான் வைத்திருந்தேன்.

நான் தான் பூட்டி இழுத்துப் பார்த்து கொண்டு வந்தேன்.

தொங்க போட்டேனா என்று தெரியவில்லை. வேறு எங்காவது வைத்திருக்கிறேனா என்று தேடினேன் கிடைக்கவில்லை.

அப்பாவிடம் எப்படி சொல்வது.?சொன்னால் அவர் ரியாக்சன் எப்படி இருக்கும்.

முதலில் சாவியை பூட்டி எடுத்து வந்தேனா? அல்லது பூட்டிலேயே தொங்க விட்டுவிட்டேனா என்று தெரியவில்லை.மூட் சட்டென்று பயமாய் மாறியது.

அப்பாவிடம் எதுவும் சொல்லாமல் சைக்கிளை எடுத்துப் போகிறேன்.

பொதுவாக வேகமாக சைக்கிள் ஒட்டுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது.வேகமாக வாகனம் ஒட்டுவதை ஆண்மையின் அடையாளமாக பார்ப்பவர்களை ஏளனம் செய்யும் பக்குவத்தை சிறுவயதிலேயே அடைந்திருந்தேன்.

ஆனால் அன்று அந்த பக்கும் எல்லாம் சிதறியது.வெறியான அழுத்தம்.தளவாய்புரம் கடந்து ராமவர்மபுரம் இறக்கத்தில் எல்லாம் சைக்கிள் சிட்டாக பறக்கிறது.பத்து நிமிடத்தில் கடைக்கு வந்து விட்டேன்.

சைக்கிளை ஸ்டாண்ட் போடும் போது கையெல்லாம் நடுங்கியது.பல கஸ்டங்களிடையே பேங்க் லோனில் தான் கடையில் சரக்கை அப்பா எடுத்து வைத்திருக்கிறார் என்பெதெல்லாம் நினைவுக்கு வந்தது.

கடை பிளாட்பார்ம் மேல் ஏறி பூட்டைப் பார்க்கிறேன். அங்கே சாவி பூட்டோடு தூங்கி நின்று “என்னைப் பார்த்து ஹாய் பொறுப்பில்லாதவனே” என்று வணக்கம் சொன்னது.நிம்மதியானேன்.

இரவெல்லாம் சாவி பூட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

யாரும் பார்க்கவில்லை.யாரும் பொருட்களை எடுக்கவில்லை.

யாரும் விசமம் செய்யவில்லை.

இந்தச் சாவியை திருடாவதர்கள் யார் என்று யோசித்தேன்.வெளியே இருக்கும் உப்பு மூட்டையை திருடாதர்வகள்தான் சாவியையும் திருடாமல் இருந்திருக்க வேண்டும்.நினைத்துக் கொண்டேன்

4 comments:

  1. கடைசிப் பாராவில் வச்சீங்க பாருங்க ஒரு கமெண்ட்…! சூப்பர்…!

    ReplyDelete
  2. கடைசிப் பாராவில் வச்சீங்க பாருங்க ஒரு கமெண்ட்…! சூப்பர்…!

    ReplyDelete
  3. கடைசிப் பாராவில் வச்சீங்க பாருங்க ஒரு கமெண்ட்…! சூப்பர்…!

    ReplyDelete
  4. அருமை நண்பா, கட்டுரை மிக நன்று, நமது குமரி மாவட்ட இயல்பை அழகாக பதிவு செய்த்தமை பாராட்டுக்கள், எனக்கு 35 வருடமாக தெரியாத ஒரு கேள்விக்கான பதில் உனது எழுத்தில் தெரிந்து கொண்டேன், அதாவது உப்பளத்திலும், கடையிலும் வெளியே கிடக்கும் உப்பை யாரேனும் களவு செய்து போவர்களா என்ற வினா வந்தது, நண்பர்களிடம் கேட்டும் சரியான பதில் இல்லை, உங்கள் கட்டுரையில் அதை ஒரு கதை போல் சொன்னது அருமை, தொடரட்டும் பயணம்.

    ReplyDelete