Saturday 20 October 2012

கதை போல ஒன்று - 55

மாடியில் இருட்டாய் இருந்தது.

அண்ணன் முன்னாடியே மாடி லைட்டை அனைத்துவிட்டான்.

”யாரும் இல்லலா” என்றேன்.

”இல்ல” என்று பையில் இருந்து அதை எடுத்தான்.

பன்னிரண்டாக ஐந்தே நிமிடம் இருந்தது.

மண்டையோடு.

உண்மையான மனித மண்டையோடு.

அண்ணன் மெடிக்கல் காலேஜில் சேர்ந்த புதிதில் அவனுடைய படிப்பால் குடுமத்துக்கே கவுரமாகி போனது.

அதிலும் சென்னையில் நம்பர் ஒன் கவர்மெண்ட் காலேஜில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியால் தவித்தோம்.

முதல் வருடம் அனாட்டமி புக்கான ”கன்னிங்காஹ்ம்” என்னும் புத்தகத்தை அவன் பெருமிதமாக படிக்க தொடங்கும் போது, முதன் முறையாக அண்ணனை வேறொரு ஆளாக பார்த்தேன்.

இவன் நம்மை போல ஒருவன் இல்லை. இவன் வேறு. நான் வேறு.இவன் கொஞ்சம் உயர்ந்தவன்.என்பதாய் பட்டது.

அனாட்டமி படிக்க சீனியர்ஸிடம் இருந்து, அவர்கள் சேர்ந்து வைத்திருக்கும் கை, கால் எலும்புகளை எடுத்து வருவான்.

முதலில் பிளாஸ்டிக் எலும்புகள் என்று நினைத்தேன்.

ஆனால் அது உண்மையான மனித எலும்புகள் என்றான்.

அதுதான் படிக்க எளிதாக இருக்கும். அது சட்டப்படி சரியா? தவறா? என்று எனக்கு தெரியாது. 
கேட்கவும் மாட்டேன்.

ஒவ்வொரு எலும்பையும் பார்க்கும் போது இது எதாவது மனிதனின் உடலின் பகுதி என்று நினைக்க சிலிர்ப்பாய் இருக்கும்.

கட்டிலில் படுத்து கொள்வேன். எலும்புகளை கையில் வைத்து புரட்டி புரட்டி பார்ப்பேன். பலதும் தோண்றும். வாழ்க்கையே புரிந்து விட்டதோ என்று கூட மாயை வரும்.

இதுமாதிரி போய் கொண்டிருக்கும் போது, என்னிடம் பழைய மனித மண்டைஒட்டை காட்டினான்.

அம்மாவிடம் சொல்ல வேண்டாம்” மாடி ரூமில் வைத்து விடுவோம்” என்று சொன்னேன்.

”இந்த மண்டையோட்டை ஒரு நாள் அறுக்கனும் விஜய்” என்றான் அண்ணன்.

மெக்கானிக்கல் படித்தமையால், முதலாம் ஆண்டு எங்களுக்கு “வொர்க்க்ஷாப்பில்” அறுக்க, ஃபைலிங் செய்ய சொல்லி தருவார்கள்.

அதை பற்றி வீட்டில் அடிக்கடி சொல்லி கொண்டிருப்பேன்.அதனாலோ அல்லது என்ன நினைத்தானோ தெரியவில்லை. 

அறுத்து பார்க்கனும் என்றான்.ஹாக்ஸா பிளேடை ஹாக்சாவில் போட்டு காத்திருந்தேன்.

அம்மா அப்பா தூங்கிய பிறகு அண்ணன் மண்டைஓட்டை பிடித்து கொள்ள, நான் அறுக்க தொடங்கினேன். 

பிரண்ட் ஸ்டிரோக்கை வேகமாகவும், பின்னால் இழுப்பதை மெதுவாகவும் செய்தேன்.

பத்து தடவை பிளேடை இங்கும் அங்கும் ஒட விட்டேன். சட்டென்று நிறுத்தி,

”இது ஆம்பிளை மண்டையோடா? பொம்பளை மண்டையோடா? என்றேன்.

“ஆம்பிளை மண்டையோடு” என்றான்.

மறுபடி அறுக்க தொடங்கினேன்.அறுக்க முடியவில்லை.கடினமாக இருந்தது.

“எவன் மண்டைஒடுல இது அறுபடவே மாட்டேங்குது” சலித்தேன்.

குடு நான் செய்றேன் என்று அண்ணன் பிளேடை வாங்கினான்.

கர் கிர் கர் கிர் என்று அறுக்க தொடங்கும் போது மண்டைஒட்டையே பார்த்து கொண்டிருக்கிறேன்.

எலும்பு துகள்கள் பறக்கின்றன சில என் கண்ணாடியிலும், முகத்திலும் ஒட்டி கொள்கின்றன.

"சரி இது செட்டாகாது வேணாம் விடு” என்றான் அண்ணன்.

“இல்ல அறுக்கலாம்” அறுக்கிறேன்.

”இத அறுக்க முடியாதுல இப்படி. சும்மா டைம் வேஸ்ட பண்ணாத”

”இல்ல நா அறுத்துதான் பார்க்க போறேன்” 

”அப்ப நான் தூங்க போறேன்”

“போ. நா கொஞ்ச நேரம் அறுக்க டிரை பண்றேன்.”

அண்ணன் போனது நிம்மதியாய் இருந்தது. நானும் மண்டையோடும் கார்த்திகை மாதத்து இரவு குளிரும்.

இந்த மண்டையோட்டை உடையவர் என்னவெல்லாம் செய்திருப்பார். 

வயிறு முட்ட சாப்பிட்டிருப்பார்.

புறம் பேசியிருப்பார்.

பெண்கள் குளிக்கும் போது எட்டி பார்த்திருப்பார்.
தன் பொண்டாட்டி குளிப்பதை எவனாவது பார்க்கிறானா என்று பதட்டமடைந்திருப்பார்.

திருடியிருப்பார்.

அவர் குழந்தைகளின் சொத்துக்களை யாராவது அபகரிக்க கூடாதே என்று சாமிக்கு வேண்டியிருப்பார்.

அவமானப்பட்டிருப்பார்.

கோமணத்தை அவிழ்த்து தொடை நடுவே விருக் விருகென்று சொரிந்திருப்பார்.

அழுதிருப்பார். 

இளநீரை அண்ணாந்து குடித்திருப்பார்.

பசித்திருப்பார்.பிச்சை போட்டிருப்பார். 

முதல் காமத்தை அனுபவித்து பித்த நிலைக்கு சென்று திரும்பி இருப்பார்.

தன் பெண்ணை கட்டி கொடுத்து விட்டு கட்டிலில் படுத்து அழுது குழுங்கியிருப்பார்.

அரை செண்டி மீட்டர் கூட என்னால் அறுக்க முடியவில்லை.

பென்ஞ் வைஸ் இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஃபிட் செய்து விட்டு அறுக்கலாம்.

அதுவும் இல்லை. அசதியில் ஆவேசம் அடங்கியது. 

புறச்சூழ்நிலைக்கே அப்போதுதான் வருகிறேன்.

சுற்றிலும் எலும்பு பொடிகள்.கை விரலில் துகள்கள். 

எடுத்து மூக்கருகே கொண்டு மணத்தி பார்க்கிறேன்.

வினோதமான கேல்சியம் இரும்பு கம்பிகளின் கலவையான வாடை. 

இது இறந்த மனிதனோடது என்று சட்டென்று அதன் யதார்த்தம் தாக்க குமட்டியது.கையை துடைத்து. தரையை துடைக்கிறேன்.

தலையில் கொஞ்சமாக கீறப்பட்ட மண்டையோட்டை எடுத்து ரகசிய இடத்தில் பத்திரபடுத்தினேன்.கையை எடுத்து மோந்து பார்த்து ம்ஹூம் என்று குமட்டுவேன். 

மறுபடி மோந்து பார்ப்பேன். 

சரி குளிக்கலாம் என்று பாத்ரூம் சென்று க்ஷவரை திறந்து, மைசூர் சாண்டல் சோப்பால் உடல் முழுவதும் தேய்க்கிறேன்.நாறின மாதிரியே இருக்கிறது. 

வழக்கமாக இரண்டு நிமிடத்தில் குளித்து வருபவன், அன்று அம்பத்தி ஐந்து நிமிடம் குளித்திருக்கிறேன்.

இது நடந்து சரியாக பத்து வருடம் கழித்து அமெரிக்காவின் ஐம்பத்தி எட்டாவது பெரிய நகரமான “பேக்கர்ஸ்ஃபீல்ட்டில்” ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்றோம். 

அந்த காட்சியின் பேரே “ நைட் சில்லிங் நியூட் டான்ஸ்” என்பதுதான். 

மிகுந்த ஆர்வத்தோடு இரவு ஏழு மணிக்கே நண்பர்களுடன் அங்கே போக ,இப்போது வரக்கூடாது இரவு பதினொன்று மணிக்கு மேல்தான் என்று சொன்னார்கள். 

பதினொன்ரை மணிக்கு நான், உமர், எழில் மூன்று பேரும் போனோம்.ஒரு டிக்கெட் இருபது டாலர்.

போகும் போது இருக்கும் ஆர்வம் இருக்கிற்தே. வார்த்தைகளால் சொல்ல முடியாது.

முக்கால்வாசி இருட்டில் பச்சை விளக்கு தீம்களில், ஸ்டேஜ் இருக்கிறது. வரிசையாக சேர்கள் இருக்கின்றன.

மூன்று பேரும் உட்கார, பெப்ஸி குடுத்தார்கள். 

அங்கே மது குடிக்க கூடாது.

நடனம் ஆடும் பெண்களை தொடக்கூடாது. 

முதலில் மாநிறமாக ஒரு பெண் நடனமாட வந்தார்.

உடம்ப்பில் ஒரு சொட்டு துணி கிடையாது.

மெழுக்கு மாதிரி இருந்தார்.முதல் முறையாக இது மாதிரியான பெண்ணை நேரில் பார்க்கிறேன்.

துணி இல்லை என்பதால் எந்த கூச்சத்தையும் காண்பிக்க வில்லை. 

ஒரு துள்ளல் இசைக்கு எல்லாமும் தெரியும் படியான அங்க அசைவுகளை காட்டி ஆடினார்.

நண்பர்கள் கமெண்ட் அடித்தார்கள். 

நான் பேசவே இல்லை. பார்த்து கொண்டே இருந்தேன்.

ஜானகிராமன் உடையணியாத சின்னஞ்சிறு குழந்தையை “கீரைத்தண்டு “ என்று எழுதியிருப்பார். 

எனக்கும் அப்படித்தான் தோண்றியது. 

எவ்வளவு கிக்காக இருக்கும் என்று நினைத்து வந்தோம்.இப்படி தோண்றுகிறதே என்று நினைத்தேன்.

எனக்குள் எதாவது உடல் மாற்றம் நிகழ்கிறதா என்று பார்த்தேன்.

ஒன்றுமே இல்லை. 

தட்டையாக நின்று வேடிக்கை பார்த்தேன்.

நடனம் ஆடிவிட்டு இறங்கி எனக்கு மிக அருகே நின்று பொதுவாய் சிரித்து விட்டு போனார். 

மனது முழுமையாக ஏதும் அற்று இருந்தது. 

வெகு நேரம் சிறுநீரை அடக்கிவிட்டு இருக்கும் போது, எதாவது சிந்தனை தோண்றுமா? அது ஒரு அதீத யதார்த்த இருப்பு நிலைதானே.

நிர்வாணத்தின் வெறுமை என்னை தாக்கியிருந்தது.

நிகழ்ச்சி முடிந்து காரில் வரும் போது எழில் சொன்னார் “எனக்கு புத்தருக்கு போதி மரத்துல ஞானக் கிடைச்சா போல இருந்தது “ என்றார். 

எனக்கு நான் அவேசமாக அறுத்த மண்டையோட்டின் காட்சி நினைவுக்கு வந்தது.

அந்த மணமும்தான்.

அது மாதிரி ஒரு மண்டைஒடுதான் அந்த ஆடின பெண்ணுக்கும் இருந்திருக்கும்.

”இல்லை நான் அன்று அறுத்ததே அந்த பெண்ணின் மண்டையோட்டைத்தானோ.அண்ணன் ஆணுடையது என்று பொய் சொல்லிவிட்டானோ ? என்றெல்லாம் கிறுக்குதனமாக தோண்றியது.

வாழ்க்கையில் காமம் என்ற உணர்வே போய்விடுமோ என்ற பயமும் வந்தது. 

திரும்ப திரும்ப எலும்பின் துகள் மாதிரி “அந்த பெண்ணின் நிர்வாணம் கொடுத்த அதிர்ச்சி” என்னை படுத்தியது. 

வீட்டிற்கு வரும் போது இரவு மூன்று மணி.

பாத்ரூம் சென்று வெந்நீர் க்ஷவரில் குளித்தேன்.

அன்று நான் குளித்த நேரம் சரியாக் அறுபத்தி ஒன்பது நிமிடங்கள்.

1 comment:

  1. தி.ஜா........
    நினைவில்.......
    என்றும்..உயிர்ப்புடன்!

    ReplyDelete