Thursday 26 July 2012

கதை போல ஒன்று - 31

முருகேசனும் அவரின் ஆறாம் வகுப்பு படிக்கும் பையனும், சைக்கிளில் நாகர்கோவில் செட்டித்தெருவை சுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

எதாவது ஒரு வீட்டை முருகேசன் கூர்ந்து பார்பார், சைக்கிளில் உட்கார்ந்த படியே. பிறகு யோசித்து தலையசைத்து மேலே மிதிப்பார்.

பின்னால் பையன் “யப்பா ஞாபகம் இருக்கா” என்பான்.

“இருப்பா” யோசிச்சு கிட்டே இருக்கேன் என்றார் சைக்கிள் ஓட்டியபடியே.
-----------------------------
பலசரக்கு கடைதான் பெரிதாய் இருக்கிறதே அதில் மூலையில் ஏன் சுரண்டல் லாட்டரி நடத்த கூடாதென்று லாட்டரி ஏஜெண்ட் வற்புறுத்த, அரைமனதாய் தலையாட்டிய முருகேசன், பின்னர் ,அதில் வரும் வருமானத்தை பார்த்து,தான் முன்னாடியே அதை நடத்தியிருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார்.

மனிதர்கள் இவ்வளவு பைத்தியகார பயல்களா ? என்று ஆச்சர்யபடும் விதத்தில் கூலி வேலை செய்பவர்களில் இருந்து, கார்களில் வரும் பெரிய பார்ட்டிகள் வரை சுரண்டல் லாட்டரிகளை சுரண்டினார்கள்.

லாட்டரியில் உள்ள நம்பரை மறைக்கும் நீள்சதுர வெள்ளி முலாமை சுரண்டி , நம்பர் மெல்ல மெல்ல தெரியும் போது அவர்கள் கண்களை பார்க்க வேண்டுமே.

வாழ்க்கையே தெரிவது மாதிரியான முகபாவனைகள்.

பெரும்பான்மையாக அதில் தோற்றாலும், நாளைக்கு ஜெயிப்பேன் என்று சொல்லி போவார்கள்.

பால்ராஜ் புரோட்டா கடை மொதலாளி, தன் பைக்கை அவசர செலவுக்கு வித்து இருபதாயிரம் ரூபாய் கொண்டு வந்தார். எதேட்சையாக கடையில் அம்பது ரூபாய் லாட்டரியை சுரண்ட ஆரம்பித்து, இரவு ஒரு மணிவரை விளையாடி அவர் தொலைத்த தொகை நாலாயிரம்.

தினம் இருநூறு நூறு வாங்கும் கொத்த வேலை செய்பவர்கள் நிறைய சுரண்டுவார்கள்.

முதலில் ஐநூறு ரூபாயை கொடுத்து விட வேண்டும்.

அப்புறம்தான் முருகேசன் லாட்டரி டிக்கட்களையே கொடுக்க ஆரம்பிப்பார்.

பால்ராஜ் அப்படித்தான் ரெகுலர் கஸ்டமரானார்.

தினமும் இருநூறு ரூபாய்க்கு சுரண்டுவார்.

கரெக்டா காசை கொடுத்துருவார். ”எங்க இருந்து வே வரீரு” என்று முருகேசன் கேட்டால். “எனக்கு கோவில்பட்டி பக்கத்துல உள்ள பசுவந்தனை அண்ணாச்சி. நான் இங்க வந்த கதை பெரிய கதை” என்பார். அதைத்தாண்டி சொல்ல மாட்டார்.

தீவாளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்னால், பால்ராஜுக்கு அறுநூறு ரூபாய் போனஸ் கிடைத்ததாக முருகேசனிடம் சொல்லி, சுரண்டினார்.

சொல்ல சொல்ல கேட்காமல் ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு சுரண்டும்போது முருகேசன், மேலும் லாட்டரி கொடுக்காமல் “காச வைச்சிட்டு சுரண்டு பால்ராஜு “ என்று சொல்ல, பால்ராஜ் “நாளைக்கு தாரேன் அண்ணாச்சி “ என்று சொல்ல, கண் சிவந்த முருகேசன், பால்ராஜ் கையில் வைத்திருந்த துணிப்பையை பிடிங்கி கடைக்குள் வீசினார்.

“என் யாவாரத்துல கடனே கிடையாது. காச கொடுத்துட்டு பைய எடுத்துட்டு போ “
பால்ராஜ் ரொம்ப நேரம் கெஞ்சிவிட்டு போய்விட்டார்.

தீவாளிக்கு முந்தின நாள் முருகேசனின் பையன் அந்த பையை தற்செயலாக சோதிக்க, அதில் பால்ராஜ் அவர் மூன்று வயது குழந்தைக்கு, சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து எடுத்த ரோஸ்கலர் பட்டு பட்டுசட்டையும், பச்சைகலர் பாவாடையும் இருக்க, முருகேசன் அதை ரொம்ப நேரம் பார்த்தவர்.
“நான் செய்ஞ்ச பாவம். நான் செய்ஞ்ச பாவம்” என்று தலையில் வெடிக்க அடித்தார்.

இதோ பையனை சைக்கிளில் ஏற்றி பால்ராஜ் வீட்டை விசாரித்தபடியே போகிறார்.

இன்னும் பால்ராஜ் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

உங்களுக்கு பால்ராஜ் வீடு தெரிந்தால் சொல்லுங்கள்.

பாவம் முருகேசன்! நாளை தீபாவளி கொண்டாட வேண்டும்.

No comments:

Post a Comment