Sunday 22 July 2012

கதை போல ஒன்று - 29

ஏ பி என் பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேரம் பிறகுதான், என் சட்டை பாக்கெட்டை தொட்டு பார்க்கிறேன்.

என் மூன்று டெபிட் கார்டுகள் அடங்கிய பவுச்சை காணவில்லை. 

திக்கென்றிருந்தது.

மொத்த சேமிப்பும் அந்த மூன்று அட்டைகளில்தான் இருக்கிறது.ரெண்டு நிமிடம் என்ன செய்வதென்றே தோண்றவில்லை.

சரி கார்டை முதலில் கேன்சல் செய்வோம்.

பண்ணெண்டு இலக்க அக்கவுண்ட் நம்பர் தெரியுமா ?

தெரியாது.

மாமா பையனிடம் போன் போட்டு என் இண்டெர்நெட் பேங்கில் அக்கவுண்ட் நம்பர் பார்க்க சொல்கிறேன்.

போனது ஸ்லீப்பர் பஸ் ஆனதாலும், கூட்டம் இல்லாத்தாலும் வசதியாக இருந்தது.

அவனிடம் நம்பரை கேட்டு எழுதிவிட்டு, அப்புறம் தான் தெரிந்த்து பேங்க் கஸ்டமர் கேர் நம்பரும் என்னிடம் இல்லையன்று.

மாமா பையனிடமே மறுபடியும் கேட்க வெட்கபட்டு, தம்பிக்கு போட்டு அவனிடம் திட்டு வாங்கி நம்பரை போட்டு, குரல் தழுதழுக்க மூன்று கார்ட்டுகளையும் கேன்சல் செய்து ஐந்தாவது நிமிடம், தெரியாத நம்பரில் இருந்து போன். தெலுகிலும் ஆங்கிலமுமாய் பேசுகிறார்.

“நீங்க விஜய்யா”

“ஆமா”

“உங்க கார்டுகள் என்கிட்ட இருக்கு.மியாபூர் பஸ் ஸ்டாப்பிலே விட்டுடீங்க பாஸ்”

“ஆமா. அத வைச்சுக்கோங்க நான் இரண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிறேன் “.

“இல்ல பாஸ் இன்னைக்கு நைட்டு நான் குண்டூர் போறேன். முடிஞ்சா இன்னும் ஒரு மணி நேரத்துல வாங்கிக்க்கோங்க”

“சரி பாஸ். நான் எப்படியாவது பிரண்ட்ஸ் கிட்ட சொல்லியாவது வாங்கிக்கிறேன். ஃபைவ் மினிட்ஸ்ல வரேன் “ என்று சொல்லி கட் செய்தேன்.

யார விட்டு வாங்கலாம். ஒன்றுமே ஒடவில்லை. கைகள் நடுங்கி கொண்டே இருக்கின்றன.

கோதண்டராமன் ஞாபகம் வர போன் போட்டு விவரம் சொல்லி, கார்ட்டு வைத்திருந்தவரிடம் பேசுமாறு சொன்னேன்.

ரெண்டு நிமிடத்தில் ராமனிடம் இருந்து போன்.

அந்த நம்பரில் ஏதோ ஒரு பெண் பேசுகிறார். கார்டு என்று சொன்னால் ஏதோ தெலுகில் கத்துகிறார் என்று சொல்ல பதட்டமாகிறது.

சரி என்று நம்பரை செக் செய்தால். ஒரு நம்பரை தப்பா கொடுத்திருக்கிறேன்.

அடச்சே என்று மறுபடி நம்பரை கொடுத்து பேசி, தன்னை எஸ். ஆர் நகர் பஸ் ஸ்டாப்புக்கு வரும்படி சொல்லி இருக்கிறார் என்று ராமன் சொல்ல.

“ராமன் எப்படியாவது ஆட்டோ பேசி உடனே அவர பிடியுங்க. ஃப்ளீஸ் அசால்ட்டா இருக்காதீங்க” என்று கெஞ்சினேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் ராமன் போன் போட்டு தான் மூன்று கார்டுகளை வாங்கிவிட்டதாக சொல்ல மூச்சு வந்த்து.

போனை கார்டை எடுத்தவரிடம் கொடுக்க சொல்லி பலமுறை நன்றி சொன்னேன்.

அதற்கு அவர் தான் சேல்ஸ்மான் ஆக இருப்பதாகவும் தான் ஹைதிராபாத் வந்து போன் போட்டால் அட்டெண்ட் செய்து பேசவும் என்றார்.

”கண்டிப்பா. என்ன ஹெல்ப் வேணுமின்னாலும் சொல்லுங்க செய்றேன்” என்று சொன்னேன்.

அவர் நம்பரை “மனிதகடவுள்” என்று உணர்ச்சிவசப்பட்டு பதிந்து வைத்திருந்தேன்.

மறுபடி ஹைதிராபாத் வந்து கார்ட்டு அன்பிளாக் செய்து நிம்மதி அடைந்தேன்.

இரண்டு வாரம் போனது. மல்லிகார்ஜுனா தியேட்டரில் “கப்பர் சிங்” படம் மூன்றாம் முறையாக பார்ப்பதற்கு ஆவலாய் உட்கார்ந்திருக்கிறேன்.

போன் அடித்தது “மனித கடவுள்” என்று காட்டிற்று. எரிச்சலாய் வந்தது, எடுக்காமல் சைலண்டில் போட்டேன்.

மறுபடி வந்தது “இவன் வேற மொக்க போடுறான்” என்று மனதில் சொல்லி எடுத்து “மனித கடவுளிடம்” சொன்னேன் “பாஸ் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். டிஸ்டர்ப செய்ய வேண்டாம். நானே போன் போடுறேன். இப்ப வைச்சிர்றேன். என்று வைத்தேன்.

கப்பர் சிங் படம் ஆரம்பமாகி கைத்தட்டல் கேட்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment