Sunday 9 December 2012

கதை போல ஒன்று - 59

விஜய் மழையையே பார்த்து கொண்டிருந்தான்.

வெறித்தனமான மழையின் ஆவேசம் இன்னும் கூட வேண்டும் போல இருந்தது. இன்னும் இன்னும் இன்னும்.

ஜன்னல் கம்பிகளில் நெற்றியை அழுத்திகொண்டே மழையை பார்ப்பதின் உணர்வை அனுபவிக்கும் போதே முதுகை தொடுவது தெரிய, பார்த்தால் அப்பா.

இந்த மழையில ஒரு காரியம் செய்வோமா? கேட்டார்

என்னது என்பது மாதிரி விஜய்யும் அவன் அண்ணனும் பார்க்க அப்பா தொடர்ந்தார்.

நம்ம தெருல ரொம்ப சகதியா இருக்குல்லாப்பா? அத சரி பண்ணிருவோமா.

”நாம எப்படி சரி பண்ணமுடியும்.”

”நம்ம ஹவுஸ் ஒனர் மாதவரத்துல வீடு ஒண்ணு இடிச்சிட்டு கட்றாருல்லா, அந்த ரப்பிக்ஷ்ச நம்ம வீட்டு பக்கத்தில கொட்ட சொல்லி இருக்கேன்.கொட்டியிருக்கார் பாத்தியா.”

”ம்ம்ம் பாத்தோம்.”

அத எடுத்து தெருவுல போட்டு கடப்பாரையால இடிக்கனும்.

மண்வெட்டியால சமப்படுத்தனும்.அப்ப சரியாயிடும்.

”என்னப்பா உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு” இந்த மழையில அம்மா இடைமறித்தார்.

”டேய் இல்லடா !இப்ப செய்ஞ்சா ஈஸியா இருக்கும் ”அம்மாவை அடக்கினார்.

கொளத்தூரில் சின்ன மழைவந்தாலே எல்லா தெருவும் சேறும் சகதிகளாவும் மாறிவிடும்,

கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் விஜய், டிப் டாப்பாக வெளியே கிளம்பினால் கால் எடுத்து வைத்தவுடன் சகதியில் மிதித்தே ஆகவேண்டும்.

மரக்கிளையில் மெயின் கிளை தார் ரோடுதான், சின்ன கிளையான இவன் வீட்டுத்தெரு மட்டும் சகதியாய் இருக்கும்.

பையில் தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்து கொண்டு, ரெட்டேரி ஜங்சன் போனதும் கால்களை கழுவி போவான்.

இப்போது அப்பா சொல்லும் ஐடியா நல்ல ஐடியாதான்.

பழைய மணல் கலந்த ரப்பிக்ஷ்களை உடைத்து தெருவில் போட்டால் சேற்றில் கால் வைக்காமலே காலேஜ் போய் விடலாம்.

ஆனால் அது எவ்வளவு பெரிய வேலை.

தெரு என்னதோ சின்னதுதான். ஆனால் அது முழுவதற்கும் உழைக்க முடியுமா?

அதுவும் இந்த கொட்டும் மழையில்.

ஆனால் அப்பா உறுதியாய் இருந்தார்.அப்பாவை மாற்ற முடியாது என்று விஜய்யும் அண்ணனும் தெரிந்து கொண்டார்கள்.

நடந்து போகும் போது பாதையில் கல்லோ கயிறோ கம்பியோ நீட்டி கொண்டிருந்தால் அதை எடுத்து ஒரமாய் போடாமல் அப்பா போனதே இல்லை.

”சாக்லேட் கவரை குப்பைதொட்டியில் போடு ,அல்லது உன் சட்டைபையில் வைத்து வீட்டில் வந்து போடு ”என்பது மாதிரியான கொள்கைவாதி.

அரைமணி நேரம் அப்பாவிடம் சண்டை போட்டார்கள்.

அவர் எதற்கும் மசியவில்லை.

மழை தன் சீற்றத்தை குறைத்திருக்க
சட்டையை கழற்றி விட்டு லுங்கியோடு மண்வெட்டி கடப்பாரையை எடுத்து வெளியே இறங்கி விட்டார்.

அம்மாவிடம் அப்பாவை பற்றி கத்திவிட்டு விஜய்யும் அண்ணும் இறங்கினார்கள் தெருவில்.

அப்பா சிரித்தபடியே “வந்தீங்களா வாங்க வாங்க ”என்று மண்வெட்டியை கொடுத்தார்.

அண்ணன் மண்வெட்டியால் ரப்பிக்ஷை இழுத்து ரப்பர் கூடையில் போட அதை சுமந்து அப்பா சொல்லும் இடத்தில் கொட்டினான் விஜய்.

கொட்டின ரப்பிக்ஷை மண்வெட்டியால் இடித்து இன்னும் சிறுதுகளாக்கினார் அப்பா.

மழை உடல் முழுவதும் வழிந்தது.

குளிர் எடுத்தது.

உடைமுழுவதும் நனைந்து தொடை நடுவேயும் கூட நனைந்து குளிரின் வேகம் அதிகமாய் இருந்தமாதிரி இருந்தது.

ஆனால் இது மாதிரி உழைப்பில் கமிட் ஆனால் வெளியே வரமுடியாது.

கால்வாசி பகுதி தெரு நிரம்பும் போது உற்சாகம் வந்தது.

வேக வேகமாய் இயங்கினான்.

அப்பா உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார். சிறு சிறு செங்கலை லாவகமாக குழி விழுந்த இடத்தில் வைப்பது சவாலாக இருந்தது.

அண்ணன் ”உழைக்கும் கைகளே!” என்று பாட விஜய் ”உருவாக்கும் கைகளே!” என்று பதிலுக்கு பாட தெரு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

சென்னைவாசிகளுக்கு அந்த காட்சி புதிதானது. மூன்று பேர் சேர்ந்து ஒரு தெருவிற்காக மழையில் உழைப்பது அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத காட்சியாய் இருந்திருக்கலாம்.

அப்பாவிடம் குடையை பிடித்து ஒருவர் “என்ன விசயம் அண்ணாச்சி” என்று கேட்க,

“சும்மாதான் பசங்தான் இந்த ஐடியாவ சொன்னானுங்க. நான் அவனுங்கள ஏன் தடுக்கனும்ன்னு இறங்கிட்டேன்” என்று சொல்ல.

அந்த தெரு பெரியவர் அண்ணனையும் விஜய்யையும் பார்த்து “ இந்த வயசுலேயே இவ்வளவு பொறுப்பா” என்று அள்ளிதெளித்து விட

ஹீரோயிசம் தொற்றி கொண்டது.

இன்னும் சுறுசுறுப்பாய் வேலை செய்தார்கள்.

”எதாவது அழகிய இளம்பெண் ஜன்னல் வழியே நம்மை பார்க்காமலா போய் விடுவாள்” என்று நினைத்து பெருமிதமாய் வேலை செய்தான் விஜய்

அம்மாவிற்கு கூட அதில் ஒரு பெருமை வந்து விட்டது.

உழைப்பு உழைப்பு. கைகளில் வலி, கால்களில் வலி, கூடையை தூக்கி தோளில் வலி, தூக்கிவைக்கும் போது வயிற்றில் வலி.

வேலை முடியும் போது அப்பா கூடுதல் வேலையை அவரே எடுத்து செய்யும் போது விஜய்க்கு அவன் படித்த ரஸ்ய சிறுகதை ஞாபகம் வந்தது.

அந்த கதையில் பழங்குடியினர் சமவெளி நிலத்தை தேடி பயணம் போவார்கள்.அங்குதான் வாழ முடியும்.

முடிவில்லாமல் அடர்ந்த காட்டில் போய் கொண்டே இருப்பார்கள். கூட்டத்தினர் சோர்ந்து போவார்கள்.

அப்போது கூட்டத்தின் தலைவன் தன்னுடைய உடலை கிழித்து இதயத்தை எடுப்பான்.அது ஒளி வீசும்.அந்த ஒளியை வைத்து கொண்டே ஒடுவான்.

கூட்டமும் ஒடும். முடிவில் அவர்கள் விரும்பிய வாழும் நிலத்தை அடைந்து விடுவார்கள்.

லட்சியத்தை எட்ட வரும்போது தலைவன் அதிகம் உழைத்தால் அந்த குழு உற்ச்சாகமாகிவிடும்தான்.

நான்கு மணி நேர உழைப்பிற்கு பின்னால் இரவு ஏழுமணி அளவில் தெரு கொஞ்சம் மேடு தட்டியிருந்தது.

ஆம் இனிமேல் மழை பெய்தால் சேறாய் கால்களில் ஒட்டாது. சமாளிக்கலாம்.

”ஹேய்”என்ற மகிழ்ச்சி இருந்தது.

வீட்டிற்கு வந்து இளம்சூடான வெந்நீரில் குளித்தான்.

மழை என்பதால் கரண்ட் இல்லை. குளித்து காய்ந்த சட்டையையும் லுங்கியையும் கட்டும் போது சுகமாய் உணர்ந்தன்.

அன்றென்னவோ அப்பா குளித்து விட்டு நெற்றி நிறைய பூசிக்கொள்ளும் விபூதி மேல் ஆர்வம் வந்தது.

விஜய்யும் அண்ணனும் அதுபோலவே பட்டை பூசிக்கொண்டார்கள்.

பெரிய மெழுகுவர்த்தி முன்னால் மூன்று பேரும் அமர, அம்மா சூடான பால் கஞ்சி பறிமாறினார்.

உளுந்து, அரிசி, நிறைய வெள்ளை பூண்டு, துணியில் கட்டி போட்ட சுக்கு, பால் எல்லாம் கலந்த சூடான பதமான கஞ்சி.

தொட்டுக்கொள்வதற்கு காரமான தேங்காய் துவையல்.

உறிந்து உறிந்து கஞ்சியை கையால் எடுத்து சாப்பிடுவது சொர்க்கத்தை காட்டிற்று.

சாப்பிட்டவுடன் அப்பா மகாபாரத்தை எடுத்து வாசித்து “கீசக வதம்” கதை சொல்ல, அதை பத்தின விவாத்தோடு தூக்கமும் வர.

பாயை விரித்து, நிம்மதியாய் தூங்கினான் விஜய்.

அன்று வாழ்க்கையின் ,உண்மையான ருசியை ,

உண்மையான மையக்கருத்தை,

சத்தியமான உணர்வை ,

அறிந்து கொண்டான் என்பது தெரியாமலே.

2 comments: