Wednesday 12 December 2012

சூர்ய கடவுளும் மேனேஜ்மெண்டும்.

போன மாதம் ஒடிசி புத்தக கடைக்கு போய் வரும் போது செக்யூரிட்டி தன் பக்கத்தில் பல காப்பிகள் ஆங்கில மாத இதழ் வைத்திருந்தார்.

சும்மா புரட்டி பார்க்க, “இலவசம்தான்” என்றதும் அதை வாங்கி வந்து விட்டேன்.

வீட்டில் வைத்து மேலோட்டமாக புரட்ட நல்ல மேகசின் போலத்தான் தெரிந்தது.இதழின் பெயர்” கல்சரமா” (Culturama).

நிறைய வண்ணப்படங்கள் இருக்க ,சரி ஒருநாள் இத போட்டு தாக்கலாம் என்று தூக்கி போட்டுவிட்டேன்.

இன்று அலுவல
கம் விட்டு வரும் போது மனைவி அந்த புத்தகத்தை படித்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டுரையை எடுத்து கொடுத்து இது சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் படித்து பாருங்கள் என்று சொல்ல படித்தேன்.

அதை பகிர்கிறேன்.

சரி இப்போது தேவ்தத் பட்நாயக் ( பட்நாயக் என்றால் ஜாதியா?) எழுதிய கட்டுரையை நான் உள்வாங்கி அதை எழுதுகிறேன் என்னை போல.

சூரியன் கடவுள் கண்டுபிடித்துவிட்டார் அந்த உண்மையை.

தொண்டையில் வலித்தது சூரியனுக்கு.

மனைவியின் துரோகத்தை தாங்கும் கணவன் யார்தான் இருக்கிறார்கள் மூவுலகிலும்.

எவ்வளவு முட்டாள் என்று நினைத்தால் ”சரண்யா” தன் பிம்பமான “சயாவை” வீட்டில் வைத்து விட்டு வெளியே போயிருப்பாள்.

”சயா” என்னும் இந்த பிம்பம் சரண்யா போல இருக்கலாம். கண், காது, கழுத்து, கால்கள் எல்லாமே சரண்யா போலவே இருக்கலாம்.

ஆனால் சரண்யா இல்லை.

தான் ஏமாற்றபட்டது பற்றி ஆக்ரோக்ஷமான சூரிய கடவுள், மாமனார் வீட்டி கதவை தட்டுகிறார்.

சூரிய மருமகனின் கோபப்பார்வையை பார்த்த மாமனாருக்கு பயம் பதட்டம் எல்லாம் தொற்றி கொண்டது.

தன் மகள் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார்.

சூரியனின் வெப்பத்தை நாள் முழுவதும் தாங்க முடியவில்லை என்பதால் மட்டுமே சரண்யா இப்படி செய்தாள் என்று விளக்கம் சொன்னார்.

சூரியன் அதிர்ந்தார்.

தான் பாதிக்கபட்டவன் என்று நினைத்து ஞாயம் கேட்க வந்தால் உண்மையில் பாதிக்கபட்டது தன் மனைவியே என்று உணர்கிறார்.

உலகே தன்னுடைய வெப்பத்தை கண்டு கருகும் போது, சரண்யாவின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல் விட்டோமே என்று வருந்துகிறார் சூரியன்.

சரண்யா (சூரியனின் மனைவி) இருந்து சூர்ய வெப்பத்தில் இருந்து தப்பி பசுமையான குளிர்ச்சியான புல்வெளியில் பெண் குதிரையாக இளைப்பாறுகிறார் என்று கேள்விப்பட்ட சூரியன் அங்கே போகிறார்.

மனைவியை குதிரையாக பார்த்தும் உடைகிறார்.

தன் மனைவியை இவ்வளவு நாள் தப்பாக புரிந்து கொண்டது பற்றி வருந்தி அவரும் ஒரு ஆண் குதிரையாக மாறி மனைவியை காதலிக்கிறார்.

வந்திருப்பது தன் கணவனே என்று தெரிந்த சரண்யா ஆனந்தமாக கணவனோடு கொஞ்சி குலவுகிறார்.

பின்னர் தனக்காக தன் கணவர் இறங்கி வந்தது பற்றி காதலால் கசிந்துருகி,தன்னால் கணவனின் வெப்பத்தை தாங்கி குடும்பம் நடத்த முடியும் என்று தேவதையாக மாறி சூரிய பகவான் கூடவே சென்று விடுகிறார்.

கணவனின் மனதில் இருக்கும் அன்பின் குளிர்ச்சி, கணவனின் தேகத்தில் வரும் வெப்பத்தில் இருந்து காப்பாற்றுகிறது.

இந்த கதையின் முதுகெலும்பு, பிரச்சனை செய்த மனைவியை கண்டிக்க வந்த சூரியன் உண்மையான பிரச்சனைக்கு காரணமே தான்தான் என்று உணர்வதுதான்.

நிஜ வாழ்க்கையிலும் நாம் பல இடங்களில் இதை பார்க்கலாம்.

பூர்ணசந்திரன் ஒரு நிறுவனத்தை நடத்துகிறார்.

அதற்கு ஒரு டீமை ( குழுவை) கட்டமைக்கிறார்.

டீம் பில்டிங் ( குழு உருவாக்கல்) என்பது சாதாரண காரியமில்லை.

தொழிலாளர்களிடம் நிறைய பேச வேண்டும்.

ஊக்கபடுத்த வேண்டும்.கண்டிக்க வேண்டும்.

சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

உதவி செய்ய வேண்டும்.

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இப்படி பல.

பூர்ண சந்திரன் பிறக்கும் போதே அறிவாளியாய் பிறந்தவராதனால் இதை செவ்வனே செய்கிறார்.

நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.

இப்போது நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருப்பதால் தன்னுடைய டீமுக்கு விஜய் என்றொரு மேனஜரை நியமிக்கிறார்.

ஆனால் பூர்ணசந்திரன் போனதும் அந்த டீமின் திறமை குறைகிறது.

இதை பூர்ணசந்திரனால் தாங்கமுடியவில்லை.

விஜய்யை திட்டுகிறார்.

விஜய் திறமையற்றவர் என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று மதுரை மீனாட்சியை வேண்டுகிறார்.

விபூதியை எடுத்து தன் நெற்றியில் பூசும் போது பூர்ணசந்திரனுக்கு “பளீரென்று” பிரச்சனையின் மூலம் புரிந்து விடுகிறது.

ஆம்.

உண்மையில் விஜய் குற்றவாளி இல்லை.

தான்தான் குற்றவாளி என்று பூர்ணசந்திரன் உணர்கிறார்.

ஒரு குழு, குழுத்தலைவன் வகுத்த நெறிகளைத்தான் பின்பற்ற ஆசை கொள்ள வேண்டும்.

பூர்ணசந்திரன் தலைவராய் இருக்கும் போது குழு நெறிகளைத்தான் முன்னிலை படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் பூர்ண சந்திரன் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிகொள்ள அல்லது நல்ல மேனஜராக காட்டிகொள்ள குழுவை தன்பால் இழுத்திருக்கிறார்.

குழு பூர்ணசந்திரனுக்காக வேலை பார்த்திருக்கிறது. கம்பெனிக்காக இல்லை.

அதுதான் பிரச்சனையின் அடிநாதம்

கோபம் கொண்ட சூரியன் தன் மீதே தவறு என்று உணர்வது போல பூர்ணசந்திரன் தன் தவறை உணர்கிறார்.

விஜய்யுடன் சேர்ந்து குழுவின் கொள்கையை அழகாக வகுக்கிறார்.

அதை விஜய்யை விட்டே குழுவுக்கு போதிக்க சொல்கிறார்.

ஊக்கபடுத்த சொல்கிறார்.

விதிதான் முக்கியம். மனிதர்கள் அல்ல என்று எல்லோரும் உணர்ந்ததும் அந்த குழுவின் திறமை அதிகரிக்கிறது.

( அர்ஜூனா ரணதுங்கா போனாலும் கூட ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் நிமிர்ந்து நிற்க காரணம் ரணதுங்க அமைத்த தெள்ளதெளிவான குழு விதிதான்).

இதுதான் சூரியனின் கதை வாயிலாக தேவ்தத் பட்நாயக் சொல்ல வரும் கருத்து.

அந்த அர்ஜுன ரணதுங்க எல்லாம் நான் சேர்த்ததுங்க.

நீங்க பாதிக்கபட்டவருன்னு நினைச்சு புலம்பலாம் பிதற்றலாம், வருந்தலாம்.

கூர்ந்து பார்த்தால் நீங்களே கூட பிரச்சனையின் ஊற்றுகண்ணாய் இருக்கலாம்.

அதுதாங்க மெசேஜ்ஜூ...

No comments:

Post a Comment