Wednesday 26 September 2012

அம்பேத்காரியமும் மிடில்கிளாஸ் மாதவ மாதவன்களும்...

ஆன்ந்த் பட்வர்த்தன் இயக்கிய ’ஜெய் பீம் தோழர்’ என்கிற ஆவண படத்தை பார்த்தேன்.

இதனை பற்றிய தகவலை தன் வலை தளத்தில் கொடுத்து, பலருக்கும் தெரிய செய்த
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு நன்றி.

மும்பையை சேர்ந்த ரமாபாய் காலனியில் துப்பாக்கி சூட்டை நடத்துகிறது போலீஸ்.

அம்பேத்காரின் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்ததை எதிர்த்து போராடிய மக்களை கலைந்து போக நடத்தபட்ட சூடு என்கிறது போலீஸ்.

துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லபடுகிறார்கள்.

கொன்ற பிறகு போலீஸ் சொல்லும் காரணம், போராடியவர்கள் LPG டேங்கர் லாரியை எரிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்பதுதான்.

விசாரனையில் இது எல்லாமே தவறை மறைக்க அரசு இயந்திரம் செய்யும் சதியாகவே தெரிய வருகிறது.

டேங்கர் லாரி எரிவதாய் காட்டும் இடமும் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும் தெரிகிறது.

போலீஸீன், ஜாதி இந்துக்களின், ஆதிக்க அரசுகளின் சதியாகவே இது பார்க்கபடுகிறது.

கோக்ரே என்கிற அம்பேத்காரிய கவிஞர், பாடகர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து தன்
எதிர்ப்பை காட்டுகிறார். அதன் மூலம் போராட்டத்தை மேலெடுத்து செல்ல பாதை அமைக்கிறார்.

ஆனால் கடைசிவரை துப்பாக்கி சூட்டை நடத்திய போலீஸ் அதிகாரி ”மனோகர் கதம்” மீது சட்டம் வீரியமாக பாயவே இல்லை.

இதுதான் டாக்குமெண்டிரிக்கு அவர்கள் எடுத்தாண்டிருக்கும் உண்மை சம்பவம். ஆனால் டாக்குமெண்டெரியின் சாரம் “இசையும் பாடல்களிலுமாக தலித் விழிப்புணர்வு” எவ்வாறு தூண்டபடுகிறது என்பதும், அம்பேத்காரின் கொள்கையை பின்பற்றுவது அம்பேத்காரை தொழுவதை விட சிறந்தது என்பதும்தான்.

விலாஸ் கோக்ரே முதலில் தீவிர இடதுசாரியாக இருக்கிறார். அம்பேத்காரியமும் அவரை ஈர்க்க தனது கவாலி பாடல் பாடும் திறமையை தலித் விழிப்புணர்வு பாடல் பாட உபயோகிக்கிறார்.

மும்பையில் தெருவில் கவாலி டைப் பாடல்களை படு ஆபாசமாகவும் பாடுகிறார்கள்.( நான் நேற்றிரவு கறுப்பு கத்திரிக்காயை உண்டேன் என்று ஒரு பெண் பாடகர் பாடுவதை டாக்குமெண்டெரியில் காட்டுகிறார்கள்). அது மாதிரியாக ஜனரஞ்சக பாடலை இளமையில் பாடும் விலாஸ் கோக்ரேவுக்கு ஒருவன் 2500 ரூபாய் பணம் கொடுக்கிறான். ஆனால் அன்றிரவே இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தவன், சரியான உணவு வீட்டில் இல்லை என்பதால் தன் மனைவியை அடிப்பதையும் கோக்ரே பார்க்கிறார். அன்றிலிருந்து கவாலி பாடாமல் தன் திறமையை தலித் விழிப்புணர்வுக்காக அர்பணிக்கிறார்.

தலித் மக்களின் போராட்ட எழுச்சிக்காக தற்கொலை செய்து மறைந்தும் விடுகிறார்.

தலித்துகளின் துயரத்தை பார்ப்பவர்கள் நெஞ்சினுள் உறைய வைக்கிறார் ”ஆன்ந்த் பட்வர்த்தன்”.

மும்பையில் குப்பை அள்ளும் கிடங்கை காட்டுகிறார்கள்.

அதில் வேலை பார்க்கும் குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் பண்ணிரெண்டு வருடங்களாக வேலை பார்க்கிறார்.

பதிமூன்று மணிநேரம் அவர் உழைத்தால் கிடைக்கும் கூலி 73 ரூபாய்.

ஒருமுறை லாரியிலிருந்து குப்பையை கொட்டும் போது, கூர்மையான கம்பி அவர் கண்களை குருடாக்க, அதற்கு மும்பை மாநகராட்சி நயா பைசா கூட அவருக்கு உதவி செய்யவில்லை.

என்ன போராட்டத்தை நடத்திவிட முடியும். ஒற்றை கண்ணோடு பீ அள்ளுகிறார்.

குப்பை அள்ளூபவர்களுக்கு மாஸ்க் கிடையாது தொப்பி கிடையாது கழுவ குடிக்க தண்ணீர் கிடையாது. ஒருவர் சொல்கிறார்” எனக்கு குடிக்க தண்ணி கூட கிடைக்காது. பல தடவை குப்பை என் தலைவழி முகம் வழியே வழிந்து நாறும் தொப்பி கூட கிடையாது எங்களுக்கு. நாங்கள் சங்கம் அமைத்து அடிப்படை வசதி கேட்க கோர்ட் கொடுக்க உத்தரவு போட்டது. ஆனால் மும்பை மாநகராட்சி அதனை எடுக்காமல் பல ஆயிரம் கொடுத்து மேல் முறையீடு செய்தது. அந்த ஆயிரக்கணக்கான ரூபாயில் எங்களுக்கு தொப்பி வழங்கிவிடலாமே !

தலித்துகள்,இடஒதுக்கீடு பற்றி மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் டாக்குமெண்டெரியின் Black Humour.

--ஒரு பெண் சொல்கிறார் நான் உயர்ந்த ஜாதியில் பிறந்திருக்கிறேன். அதை கர்வமாக சொல்லி கொள்ள
எனக்கு உரிமை இருக்கிறத

-தலித்கள் நாற்றம் பிடித்தவர்கள் அவர்கள் நான்கு பேர் சேர்ந்தாலே அங்கே அசிங்கமும் குப்பையும் வரும்.

-என் great grand father அவர்களுடைய great grand father க்கு செய்த தப்புக்காக நான் ஏன் இட ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும்.

-தலித்துகளுக்கு திறமையும் இருந்தால் படித்து மெரிட்டில் எங்களுடம் போட்டி போட வேண்டியதுதானே.(இதை இப்போதும் நிறைய பேர் சொல்லி அதற்கு நான் பதில் சொல்லி சொல்லி அலுத்து விட்டது. நம்முடைய சிவிக்ஸ் பாடதிட்டத்தில் இடஒதுக்கீடை மக்களுக்கு புரிய வைக்கும் ஒரு முயற்சியும் கிடையாது.எனக்கு இடஒதுக்கீடு பத்தி அ.மார்கஸ் ஒரு டாக் க்ஷோவில் சொன்ன பிறகுதான் அதை பற்றின தெளிவு வந்தது. ஒரு சமுதாயத்தில் எக்ஸ் என்பவ்ர்கள் 98 சதவிகதிதமும் இசட் என்பவர்கள் 2 சதவிகதுமும் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதே சதவிகிதம் ஒரு கிளாஸ் ரூமிலும் பிரதிபலிக்க வேண்டும். நம் நாட்டில் அந்த 2 சதவிகித்தினர் 99 ஸீட்களை பெற்று விடுவார்கள். அங்குதான் இடஒதுக்கீடு என்கிற கான்செப்ட் வருகிறது. அதனால் தனி மனிதர்கள் பாதிக்க படுகிறார்கள் என்றாலும், “பேர்ட்ஸ் ஐ” வியூவில் அது தவிர வேறு வழியில்லை. அறிவியல் பூர்வமாக நமக்கு அது தேவையானதாகவே இருக்கிறது)

-அவர்கள் மலம் அள்ளுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இது போன்ற முன்னேறியவர்கள் சொல்லும் அபத்தங்கள்.

பாய் சங்காரே மற்றும பல தலித் பேச்சாளர்கள் பேசும் பேச்சை டாக்குமெண்டரி முழுவதும் விரவி இருக்கிறார்கள்.

அட்டகாசம்.

பேச்சில் சிலது

-மக்களே! இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது போலீஸ் அல்லது மகாராஸ்டிர முதலைமைச்சர் என்றா நினைக்கிறீர்கள். இதன் விசம் இந்துக்களின் “மனுதர்ம” நூலில் இருந்தே வந்தது.

- ஜெய் பீம் என்பதை மந்திரமாக்கிவிட்டீர்கள். ஜெய் பீம் என்று சொல்லி குடிக்கிறார்கள். முடிந்தால் அம்பேத்காருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பீர்கள் போல. அம்பேத்காரை தொழவே வேண்டாம். அவர் சொல்லிதந்த சமுத்துவத்தையும் போராட்டத்தையும் பின்பற்றுங்கள் போதும்.

-அம்பேத்கார் இரவு இரண்டு மணிவரை வேலை பார்ப்பதை அவரிடம் கேட்டதற்கு, காந்தியின் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள், ஜின்னாவின் மக்களும் அப்படியே. அதனால் அவர்கள் இருவரும் இரவு ஒன்பது மணிக்கு தூங்குகிறார்கள்.தலித் மக்கள் விழிப்பில்லாமல் தூங்குவதால் நான் விழிப்போடு முழித்திருக்கிறேன் என்று சொன்னாராம் அம்பேத்கார்.

-கோயிலுக்குள் எங்களுக்கு வேலை இல்லைதான். ஆனால் நுழைவது எங்கள் உரிமை.

இந்த பாய் சங்காரேயின் மரணமும் ,மர்மமானதாகவே அரங்கேற்றபடுகிறது.

சித்பவன் என்கிற ஆதிக்க சாதி பிராமணர்களுக்கான அமைப்பின் மதவாத குறிக்கோளை சொல்லும் விதம் அச்சமூட்டுகிறது.( ஆம் நாங்கள் பரசுராம் வழி வந்தவர்கள். எங்களுக்குத்தான் ஆளும் யோக்கியதை இருக்கிறது).

எப்படி இந்து மத அடிப்படைவாதத்தையும் இந்திய தேசப்பற்றையும் அழகாக கோர்க்கிறார்கள் என்பதையும் சொல்கிறார் ஆனந்த் பட்வர்த்தன

பி ஜே பி யின் மோடி வெற்றி பெற்ற பிறகு மும்பைக்கு கூட்டி வருகிறார்கள். அவர் கையில் சங்கையும், விரலில் சக்கரத்தையும் எடுத்து ஸ்டேஜுக்கு வருகிறார். பின்னால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கிறது. இந்து தேசம் இந்தியா .

இப்படி இந்த டாக்குமெண்டரியை பார்த்தால் நியாத்தை தேடும்ஆவேசம் வருகிறது.

நாதுராம் கோட்சேவை ஞாயப்படுத்தும் இந்து இயக்கங்கள். வட இந்திய பிராமணர்கள். அதன் பின்னாடி இருக்கும் ஆபத்தான அடிப்படைவாதம்.

கண்டிப்பா பாருங்க பிரண்ட்ஸ் இந்த டாக்குமெண்டரிய. வேற என்ன சொல்றது. இது அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

இதில் வரும் அனைத்து பாடல்களுமே சிலிர்ப்பையும், தார்மீக ஆவேசத்தையும் எழுப்புவதுதான் இதன் பலம்.

ஆந்திர புகழ் கத்தார் வருகிறார். அருமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு பெரியாரும் அவருடைய சிந்தனைகளும் எவ்வளவு பெரிய கொடை என்பது எனக்கு இதை பார்த்ததும் புரிகிறது.

மேலோட்டமாகவே இருந்து, தீபாவளிக்கு புது துணி எடுத்து,வீக் எண்ட் சரக்கடித்து, சதூர்த்தி கொழுக்கட்டை சாப்பிட்டு, சத்யத்தில் படம் பார்த்து, நெய் விட்டு கேசரி கிண்டி சாப்பிட்டு “ எனக்கெல்லாம் இது பிடிக்காதுப்பா! இத தெரிஞ்சு என்ன பண்ண போறேன் நான் என்று சொல்லி சொல்லியே நல்லதொரு நாளில் செத்து விடலாம் என்று தோண்றினால் இதை பார்க்காதீர்கள்.

No comments:

Post a Comment