Friday 7 September 2012

கதை போல ஒன்று - 46

”அண்ணே இவ இங்க இருக்கட்டும் நான் பக்கத்துல வேலையா போய்ட்டு அரை மணி நேரத்துல வரேன்”

பாவாடை தாவணி மல்லிகைப்பூ.

பிளஸ் ஒன் படிக்கும் மகளை, கடையில் விட்டு போனார் கணேசன் அண்ணன்.

பத்தாம் வகுப்பில் முழுவது ஆண்டோரஜன் சுரப்பிகளே என்னுள் பொங்கி இருந்ததால் அக்கணமே அவளை காதலிக்க ஆரம்பித்தேன்.

கடையில் தேமே என்று நின்று கொண்டிருந்தாள்.

’நீ எந்த கிளாஸ்மா. எந்த ஸ்கூல்”

“அங்கிள்! நா டதி ஸ்கூல்ல பிளஸ்டூ படிக்கிறேன்”

”சரிம்மா. ஏன் நிக்குற போய் உட்காரு” என்று அப்பா சிறிய ஸ்டூலை காட்ட, அவள் போய் கல்லா பட்டறை சேரில் உட்கார்ந்து கொண்டாள்”

அப்பா சிரித்து ”சரி சரி உட்கார்ந்துக்க” என்று சொல்லி வியாபாரம் பார்த்தார்.

நான் மறுபடியும் அவளை பார்த்தேன்.

தலை முடியை விரித்து இரண்டு பக்கமும் இழை எடுத்து கட்டியிருந்தாள்.

நெற்றியில் சந்தனம்.

கன்னம் ரெண்டும் கொழுக் மொழுக் என்று இருந்தது.காலையிலேயே நாகாராஜா கோவிலுக்கு போய் வந்திருக்கிருகிறாள் என்று யூகித்தேன்.

“கன்னகதுப்பில் செழிப்படக்கி
வண்ணக்குரலில் பாசுரம் பாடி

என சொந்த வரிகள் திரும்ப திரும்ப வந்தது.

கணேசன் அரை மணி நேரம் கழித்து பெண்ணை கூட்டி போனார்.

அவள் நினைவாகவே வந்தேன்.

அப்பா வீட்டிற்க்கு வந்த உடன் அம்மாவை பார்த்து சொன்னார்.

“டேய் கீதா. இன்னை கடையில ஒண்ணு நடந்தது பாத்துக்க.கணேசன் இருக்காருல்லா. அவரு பொண்ண கூட்டி கடையில பாத்துக்க சொல்லி விட்டு போனாரு. நான் உட்காருன்னு சொன்னேனா. அது டக்குன்னு பட்டறை சேர்ல உட்கார்ந்துகிட்டு.
பாவம் அப்பாவி பொண்ணு.”

”அப்படியா “ அம்மா ரசித்தாள்.

“ஆமா.நமக்கு ஒரு பொண்ணு பிறந்தா எப்படி இருக்குமோ அது மாதிரி இருந்துச்சு. நமக்குதான் பொம்பள பிள்ளையே இல்லையே’ .

அப்பா சலித்து கொண்டார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெண் குழந்தை மேல் உள்ள ஆர்வத்தை துல்லியமாக கண்டுபிடித்தது நான்தான்.

அப்பா அம்மாவுக்கு அழகான பெண் குழந்தை பொம்மை வாங்கி கொடுத்திருப்பார்.

அதை மட்டும் அம்மா தரவே மாட்டாள்.

அந்த குழந்தை அம்மாவின் சூட்கேஸில் தன் கோல்டன் முடியுடனும், பூனை கண்களுடனும் தூங்கி கொண்டே இருப்பாள்.

இப்போது நான் சைட் அடித்த பெண்ணையே அப்பா என் ச்கோதரியாக்கி விட்டாரே.

இது என்ன பாலசந்தர் படக்கதை போல சிக்கலாய் இருக்கிறதே என்று நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு.

பின் அவள் சகோதரியாகத்தான் இருக்கட்டுமே என்றும் தோண்றியது.

அவள் என் அக்காவாக இருந்தால் எப்படியெல்லாம் சண்டை போடுவேன் என்று கற்பனைத்து மகிழ ஆரம்பித்தேன்.

அதற்கப்புறமும் கணேசன் அண்ணன் நிறைய தடவை கடைக்கு வந்தார். ஆனால் தனியாக. அப்பா கூட ஆர்வத்தில் அவர் பெண்ணை விசாரிப்பார்.

பத்தில் இருந்து பதினொன்றாம் வகுப்பு போகும் போது கணிதம் ஒண்ணுமே புரியவில்லை.

காலாண்டு தேர்வில் ஃபெயிலாகி போனேன்.

வீட்டில் கையெழுத்து வாங்கினால் அம்மா திட்டுவாள்.

அப்பா திட்டுவதில்லை என்பதால் கடைக்கு போய் வாங்கி கொள்ளலாம என்று சைக்கிளை கடைக்கு விட்டேன்.

அப்பா பிராகரஸ் ரிப்போர்ட் பார்த்து முகத்தை சிறிது சுருக்கி அமைதியாக கையெழுத்து போட்டு முடிக்கவும். பால்துரை அண்ணாச்சி வந்தார்.

“ஏ நடராஜா விசயம் தெரியுமா. நம்ம பத்தி வியாபாரம் செய்வான்லா கணேசன் “

“ஆமா ஆமா விசயத்த சொல்லுங்க”

“அவன் பொண்ணு தலையில மண்ணெனெய் ஊத்தி தீ வைச்சிகிட்டாம் பாத்துக்க. ஸ்பாட்லயே ஆள் குளோஸ். கணேசன் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கான். என்னால அங்க நிக்க முடியல”

அப்பா பதறி கடையை கடை பையன்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை ஸ்கூலுக்கு போகும்படி சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்து கணேசன் அண்ணன் வீட்டுக்கு போகத்தயாரானார்.

நான் என் சைக்கிளை எடுத்து போகவும்.

”விஜய் விஜய் இங்க வாப்பா “ ஏற்கனவே அதிர்ச்சியில் தலைசுற்றி கிடந்த நான் பொம்மை மாதிரி அப்பா பக்கத்தில் போனேன்.

“என்னப்பா சொல்லுங்க” என்றேன்.

“இது, வந்து எக்காரணத்த கொண்டும் இந்த விசயத்த அம்மாகிட்ட சொல்லியிராத என்ன. சொல்லிரவே சொல்லிராத”

என்று சொல்லி சைக்கிளை எடுத்து வேகமாக கணேசன் அண்ணன் வீட்டை நோக்கி போனார்.

No comments:

Post a Comment