Monday 30 March 2015

ஏன் தேவை கனிவு ?

இந்தியாவின் ஜனத்தொகை 130 கோடி.

அதில் இந்துக்கள் 80 சதவிகிதமென்றால் 104 கோடி மக்கள் வருகிறார்கள்.

அதில் பாதி பெண்கள் என்றால் 52 கோடி பெண்கள் வருகிறார்கள்.

முஸ்லிம்கள் 13 சதவிகிதமென்றால் என்றால் 17 கோடி வருகிறார்கள்.

அதில் பெண்கள் 8 கோடி வருகிறார்கள்.

104 கோடி மக்களிடத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதை ஒருவன் முதல் காரியமாக செய்ய வேண்டுமா? அல்லது

17 கோடி மக்களிடத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதை ஒருவன் முதல் காரியமாக செய்ய வேண்டுமா?

முன்னுரிமை அடிப்படையில் எதை ஒரு சமூக இயக்கம் செய்ய வேண்டும்?

இந்த அடிப்படையில் சிந்திப்பது என்பது இந்தியனின் கடமையாகும்.
இதற்கு அர்த்தம் முஸ்லிம்களின் பிற்போக்கு சம்பிரதாயங்களை ஆதரிப்பது அல்ல.அவர்களில் இருக்கும் மத அடிப்படைவாதத்தை ஆதரிப்பது இல்லை.

முஸ்லிம்களின் மதம் சார்ந்த பிற்போக்கு கொள்கைகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் சந்தடிசாக்கில் அவர்களின் அடிப்படை வாழும் உரிமையையே பறிப்பதற்காக ஒரு இந்துத்துவா இந்திய கூட்டம் காத்திருக்கிறது என்பதை ஞாபகம் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சிறுபான்மையினராக இருப்பவர்களின் சடங்களுகள் சம்பிரதாயங்கள் மீது கைவைக்கும்போது, சிறுபான்மையினராக இருக்கிறோமே என்ற பதட்டத்தில் கூடுதலாக “இப்படியே நாம் அழிக்கப்பட்டு விடுவோமோ? “ என்ற பயம் பதட்டம் இருக்கும்.

இதை உணர்ந்துதான் ’முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதை’ நேரு முதல் பெரியார் முதல் இப்போதிருக்கும் மதஎதிர்ப்பு சமூக அமைப்புகள் வரை அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த எளிய உண்மையை நாம் அனைவரும் திரும்ப திரும்ப யோசித்துப் பார்க்க வேண்டும்.இது ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணெய்யை வைக்கும் வேலை அல்ல.

வீட்டில் மெலிந்திருக்கும் பையனுக்கு இன்னும் அரைக்கிளாஸ் பால் கொடுப்பது போன்றது.இந்தியா அதைத்தான் செய்கிறது.இந்திய மதச்சார்பின்மையில் இந்தக் கொள்கைதான் முக்கிய பங்காற்றுகிறது என்பதை எப்போது நம் இதயம் உணர்ந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மை சமுதாயத்தின் மூடநம்பிக்கைகள் ஒழிந்து மாபெரும் பாய்ச்சலாக அவர்கள் அறிவியல் அடிப்படையில் முன்னேறும் போது , சிறுபான்மையினரும் அதைப் பின்பற்றி வருவார்கள் என்று நம்ப வேண்டும்.

அந்த முன்னேற்றத்தின் படியாகத்தான் ”தாலி ஒழிப்பை” பார்க்க வேண்டும். தாலி இருந்தால் மழை பெய்யாதா? தாலி இல்லாவிட்டால் எல்லாம் சுபிட்சமா? என்று கேட்கிறார்கள்.

நிச்சயமாக தாலி இருந்தால் பெரிதாய் ஒன்றும் நடந்து விடாது.ஆனால் தாலி அகற்றுதல் என்பது ஒரு சமுதாய முன்னேற்ற Updation ஆகும். சாஃப்ட்வேரில் அப்டேசன் இருக்கிறது அல்லவா? விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 8 என்று, அது போல பெரும்பான்மை மக்களின் விஞ்ஞான நோக்க வாழ்க்கையின் ஒரு Updation.

அதற்கான ஒரு அதிர்வை ஏற்படுத்தத்தான் சமுதாய ஆர்வலர்கள் முயற்சி செய்கிறார்கள்.

பெரும்பான்மையினரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு சிறுபான்மையினரையும் நல்லவிதமாக பாதிக்கும் என்று சொன்னேன்.அதற்கு நான் பார்த்த ஒரு உதாரணம்.

எனக்கு ஒரு முஸ்லிம் நண்பர் உண்டு.

அவருடைய பெண் பிளஸ் ஒன் படிக்கும் போதே அவரிடம் பேசும் போதெல்லாம், ”எங்க இதுல எல்லாம் பிளஸ் டூவோட நிறுத்திருவோம்” என்பார்.

பலமுறை நான் அமைதியாக இருப்பேன்.ஆனால் ஒருமுறை பொறுக்கமுடியாமல் “சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.இப்பல்லாம் கல்யாண வாழ்க்கை எந்த அளவுக்கு சரியா செட்டாகுதுன்னு தெரியாது. நான் டிரான்ஸ்போர்ட்ல கொஞ்சநாள் வேலைப் பார்க்கும் போது,புருசன் மெக்கானிக்கா இருப்பார்.வேலை செய்யும் போது இறந்து போயிருவார்.பொண்டாட்டிக்கு ஒரு வேலை கொடுக்க டிரான்ஸ்போர்ட் முன்வரும்.ஆனா அந்தப் பொண்ணு படிச்சிருக்காது.படிப்பில்லைன்னு சொன்ன உடன கூட்டிப்பெருக்கிற ஸ்வீப்பர் வேலதான் கிடைக்கும். கொஞ்சம் படிச்சிருந்தா நல்ல வேலை கிடைச்சிருக்கும். அதனால பாதுகாப்புக்காகவாது டிகிரி படிக்க வைங்க” என்று சொல்லி முடித்துவிட்டேன்.

இரண்டு வருடம் கழித்துப் பார்க்கும் போது அவர் பெண் காலேஜ்  படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

நான் சொன்னதை வைத்தா அவர் காலேஜில் சேர்த்திருப்பார்.

இல்லை.

சுற்றிலும் சமுதாயத்தைப் பார்த்திருப்பார்.அவர்களின் ”நல்வாழ்க்கைப் பாய்ச்சல்” அவரை அம்முடிவு எடுக்கத் தூண்டியிருக்கும்.

தீய சக்திகளினால் இந்தியாவில் தற்போது அசாதரணமான பதட்டம் தூண்டப்படுகிறதாக நினைக்கிறேன்.

நம்மைப் போன்ற சாதரண மக்கள் இவ்விடத்தில் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

சிறுபான்மையினரை கனிவாக அணுகவோம்...

1 comment:

  1. ஏன் இந்துக்கள் மட்டும் எனும் கேள்விக்கு அறிவுப்பூர்வமான அணுகுமுறை....

    ReplyDelete