Monday 30 March 2015

மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ்...

”பூவே பூச்சூடவா” திரைப்படத்தில் ”பாட்டி பத்மினி” நதியாவை மேலோட்டமாக வெறுப்பார். பின் பேத்தியுடன் பாசத்தில் திளைப்பார்.
அப்படித் திளைத்துக் கொண்டிருக்கும் போது பேத்தியை பிரிய நேரிடும்.பத்மினியுடன் சேர்ந்து அந்த வலியை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்.
அது மாதிரியான ஒரு உணர்வை “மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ்” நாவல் படிக்கும்போது ஒரிடத்தில் நான் அடைந்தேன்.
கதைப்படி,
மேயர் தன் இளம்வயதில் குடிவெறியில் மனைவியையும் கைகுழந்தையும் வேறொரு மாலுமியிடம் ஏலத்தில் விற்றுவிடுவார்.தன் கணவன் இப்படி செய்கிறானே என்ற கோபத்தில் மனைவியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த மாலுமியுடன் போய்விடுவார்.போதை தெளிந்த பிறகு நடந்ததை நினைத்து வருந்தும் மேயர் (இளம் வயதில்) இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சபதம் செய்கிறார்.
பின் தன் உழைப்பால் மேயர் ஆகிறார்.அந்த காலகட்டத்தில் அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பும் அன்பும் ஏற்படுகிறது.அவரிடம் தன்னுடைய முந்தைய மனைவியின் கதையை மேயர் மறைத்துவிடுகிறார்.
இந்த சமயத்தில் மேயர் தொலைத்த அவருடைய மனைவியும் மகளும் இருபது வருடங்கள் கழித்து வருகிறார்கள்.மேயருக்கு தன் மகளைப் பார்த்து மகிழ்ச்சி.தன் மனைவியை ஊரறிய மறுமணம் செய்து கொள்கிறார்.தன் சொந்த ரத்தமாகிய மகள் எலிசபத்தின் மீது பாசமாக இருக்கிறார்.
இந்த சமயத்தில் மனைவி இறந்து விடுகிறார்.அவர் இறந்து போன பிறகு அவருடைய ஒட்டிய கடிதத்தில் இருந்து ஒரு தகவலை தெரிந்து கொள்கிறார்.
மேயருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்த குழந்தை இருபது வருடங்கள் முன்பே நோயால் இறந்துவிட்டது. இப்போதிருக்கும் எலிசபத் மேயரின் மனைவிக்கும் மாலுமிக்கும் பிறந்த குழந்தை என்பது அந்தத் தகவல்
எலிசபத் தன் குழந்தை இல்லை என்றதும், மேயர் அந்த அப்பாவி எலிசபத்தை வெறுக்க ஆரம்பிப்பார்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துவார்.எலிசபத் அப்பாவின் எரிச்சலைக் கண்டு அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள்.
மேயர் அதன் பிறகு தன் பழைய காதலியை திருமணம் செய்ய ஆசைப்படுவார்.ஆனால் அதற்கும் பிரச்சனை வரும்.
மேயருக்கு உதவியாளாக பணியாற்றி பின்பு பிரிந்து சென்று தனியாக வியாபாரம் செய்து பணமும் புகழும் ஈட்டிய ஒருவன்,
மேயரின் முன்னாள் காதலியை இப்போது காதலிப்பான்.அவளும் மேயரைக் காதலிக்காமல் அவனையே காதலிப்பாள்.
மேலும் மேயருக்கு,
புகழ் ஊரில் குறைந்து வரும் கவலை.
பணம் ஊரில் குறைந்து வரும் கவலை
மனைவி ”மகள் விசயத்தில்” சொன்ன பொய் கொடுத்த அயர்ச்சியும் கவலை.
முன்னாள் காதலி அவரை மதிக்காத கவலை
தன் உதவியாளனே வியாபாரத்திலும் காதலிலும் போட்டி போட்டு தன்னை ஜெயித்த கவலை
இப்படியாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது “எந்த பாவமும்” அறியாத தன் முதல் மனைவியின் மகளை(எலிசபத்) அவமானப்படுத்தியது பற்றி வேதனையடைகிறார்.
”மகளே எலிசபத் என்னை மன்னித்துவிடு” என்று மனவிம்மலோடு மகளைச் சென்றடைகிறார்.
மகள் அவரிடம் எப்போதும் போல பாசமாயிருக்கிறார்.மகளை தங்கம் என்று பார்த்துக் கொள்கிறார்.அந்த் வீட்டை அவரே பராமரிக்கிறார்.
அவரே மகளுக்கு சமைத்துக் கொடுக்கிறார்.மகள் அவர் வாழ்க்கையாகிவிட்டாள்.
ஒருநாள் மேயர் (முன்னாள் மேயர்) வீட்டில் இருக்கும் போது கதவு தட்டப்படுகிறது.மேயர் கதவைத்திறந்து கேட்கிறார்.
“யார் வேணும்”
“நான் எலிசபத்தின் அப்பா.என் மகளைத் தேடிவந்திருக்கிறேன்.மாலுமியாக இருந்தேன்.அவள் இங்கிருக்கிறாளா? “
“இல்லை அப்படி யாரும் இங்கில்லை. ஒருவேளை அவள் இறந்திருக்கிலாம்” என்று சொல்லி வேகமாக கதவை அடைத்துவிடுகிறார்.
எலிசபத்தின் உண்மையான அப்பா தன் மகளைத் தேடி வந்திருக்கிறார் என்ற விசயம் மேயரின் மனதை தொட்ட அடுத்த விநாடி அவர் மனம் எப்படி கலங்கியிருக்கும்.
எப்படி கலங்கியிருக்கும்.எப்படி கலங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டே கோட்டூர்புரம் லைப்ரரியில் இருந்து மத்திய கைலாஷ் வரை நடந்து சென்றேன்.அந்த நடை எனக்கு டயர்டாகவே இல்லை.
மேயரின் மனம் எப்படி கலங்கியிருக்கும். எப்படி கலங்கி இருக்கும்.

No comments:

Post a Comment