Monday 30 March 2015

பெண்களைக் கண்கானிக்கும் ஆழ்மனம்...

டிவியில் ஒரு திரைக்காட்சியைத் தற்செயலாகப் பார்த்தேன்.வாட்டகுடி இரணியன் என்று நினைக்கிறேன்.
முரளியும் மீனாவும் ஒரு ஒலைப் பரணில் மறைந்திருக்கிறார்கள்.
தேடி வந்த போலீஸ் ஒலையில் கூர்மையான கத்தியை அங்கேயும் இங்கேயும் சரக் சரக் என்று விடுகிறது.இந்தப் பக்கம் முரளியும் மீனாவும் ஒவ்வொரு கத்தி சொருகலில் இருந்தும் மயிரழையில் தப்பிக்கிறார்கள்.
சினிமா என்றாலும் பார்க்க பயமாய்த்தான் இருந்தது.எப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலை அது.
ஆனால் அங்கேதான் இயக்குநர் இப்படி யோசிக்கிறார்.அந்தக் கத்திக் குத்தலில் இருந்து தப்பிக்க மீனாவும் முரளியும் பரஸ்பரம் நெருங்கி அணைத்துக் கொள்கிறார்கள்.
அந்த அணைப்பைத் தொடர்ந்து ஒரு பாடல் காட்சி. “என் மாமன் மதுர வீரன்” என்று மீனா ஒரு பாட்டுப் பாடி நடனமும் ஆடுகிறார்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த மாதிரியான காதல் -காம உணர்வு தோன்ற வாய்ப்பிருக்கிறதா என்று சலித்துக் கொள்வதைவிட,
அந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் கூட ஒரு ஆணும் பெண்ணும் உரசிக்கொள்வதை நம் (தமிழன் இந்தியன் எக்சட்ரா) மனம் கவனிக்கிறது என்பதுதான் நம்முடைய பொதுபுத்தி என்று நினைக்கும் போது,
நம் மன அமைப்பின் மொத்த செட்டப்பையே மாற்ற வேண்டும் தோன்றுகிறது.
ஒருமுறை லிப்டிலிருந்து வெளியே வரவும்,அந்தத் தளத்தில் இருந்த நண்பன் ஒருவன் கேட்டான்
“மச்சி ஒரே ஜாலிதான் போல”
“ஏண்டா”
“இல்ல லிஃப்டுல உன்னத்தவிர எல்லாருமே லேடீஸ்” என்றான்.
“இதுல என்ன மச்சி ஜாலி” என்று கொஞ்சம் சலித்துக் கொண்டேன்.
இதில் நண்பனைக் குறை சொல்லவில்லை.நானும் இதுபோன்ற கமெண்டுகளை செய்திருக்கிறேன்.
ஆண் பெண் உறவு சார்ந்து ஏதோ ஒரு கருத்து நம் பொதுப்புத்தியில் கேவலமாக உறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அலுவலகத்தில் பிரிண்ட் எடுக்கும் போது, ஒரு இருபது வயதுப் பெண்ணைப் பார்ப்பேன்.அவர் தன் சக ஊழியர்களின் தோளை, பஸ்ஸின் மேல் கம்பியைப் பற்றியிருப்பது மென்மையாக பற்றி சில நேரம் பேசிக்கொண்டிருப்பார்.
என் வாசிப்பிலும், கல்வியிலும், சமூகத்தை புரிந்துகொண்ட விதத்திலும் அது சகஜமாகத்தான் எனக்குப் பட்டிருக்க வேண்டும்.ஆனால் எனக்கு அப்படிப் படாது.
ஆழ்மனதில் ஏதோ டிஸ்டர்ப் ஆகும். ஏன் அப்படி டிஸ்டர்ப் ஆகிறது, அப்ப நமக்கு இன்னும் பக்குவம் வரவில்லையோ என்பதான் டிஸ்டர்பன்ஸ் வரும்.
வாழும் காலம் முழுக்க பெண்களை கண்கானித்துக் (ரசிப்பதை சொல்லவரவில்லை.) கொண்டே இருக்கிறோம்.
சலிக்காமல் கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
கண்கானித்து கண்கானித்து
மொத்த அமைப்பையும்
நாசமாக்கி வைத்துக் கொண்டு திணறி வருகிறோம்.

1 comment:

  1. அதானே ஏன் இந்தப் பதற்றம்?...

    ReplyDelete