Monday 30 March 2015

உண்மையான கேள்விகள்...

நேற்று மனைவி ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் உள்ள பத்தியொன்றை படித்துப் பாருங்கள் என்று படிக்கக் கொடுத்தார்.
கிளன் மெல்டன் என்பவர் எழுதிய அந்த பத்தியின் சாரம் வருமாறு: கிளன் மெல்டன் எழுதுகிறார். (அப்படியே அல்ல எஸன்ஸை எழுதியிருக்கிறேன்)
ஒருகாலத்தில் மூன்று சிறு குழந்தைகளின் தாயாயிருக்கும் போது கிரேய்க் (என் கணவர்) காலை ஆறு மணிக்கு ஆபீஸ் கிளம்பிவிடுவார்.மாலை ஆறுமணிக்கு வருவார்.வந்தவுடன் என்னைப் பார்த்து “அப்புறம் இன்னைக்கு எப்படியிருந்தது” என்று கேட்பார்.
அந்த கேள்வியின் எளிமை என்னைத்தாக்கும்.”நல்லாத்தான் போச்சு” என்று அவருக்கு சொல்லிக்கொண்டிருக்கும் போதே
இடுப்பில் இருக்கும் குழந்தை மூத்திரம் பெய்யும், ஃபிர்ட்ஜில் வர்ணத்தை தேய்த்து விளையாடும் இன்னொரு குழந்தை, இன்னொன்று டிஷ் வாஷர் லிக்விட்டை குடிக்க கையில் எடுக்கும்.
மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு மூன்று நிமிடங்களில் எனக்கு எதிர் எதிர் உணர்வுகள் வரும். ஒருநிமிடம் அற்புதமாக உணர்வேன். இன்னொரு நிமிடம் அற்பமாக உணர்வேன்.ஒரு நிமிடம் உலகிலே சுகமாக உணர்வேன். இன்னொரு நிமிடம் கடும் எரிச்சலாக உணர்வேன்.
உடனே என் பிரச்சனையை சரி செய்ய வந்து விட வேண்டாம்.இது பிரச்சனையில்லை.என் வாழ்க்கை என் குழந்தைகள் நான் அனுபவித்தே செய்கிறேன்.இருப்பினும் செயலாக செய்யும் போது நிஜ வாழ்க்கையில் தோன்றும் சோர்வை பகிர்ந்து கொள்ள கிரேய்க்கின் “இன்னைக்கு எப்படி போச்சு” என்ற பொத்தாம் பொதுவான கேள்வி உதவாது.
காதல் என்பது காதலிப்பவர்களின் பிரச்சனைகளை பார்த்தே புரிந்து கொள்வது.அப்படிப் பார்க்கும் போதே கேள்விகள் குறிப்பிட்டபடியாக வரவேண்டும். பொத்தாம் பொதுவான கேள்விகள் அன்புக்கு உதவாது.
அன்பானவர்களிடம் பொதுவான கேள்விகளைக் கேட்டு நல விசாரிப்புகளையே மரத்து போக வைத்திருக்கிறோம்.
எப்போதும் பொதுவாக கேள்வி கேட்காதீர்கள்.
- நீ இன்று எப்போதாவது தனிமையாய் உணர்ந்தாயா?
- ஆங்கிலப் பரீட்சை எப்படி எழுதினாய்?
-போன மாதம் சுற்றுலா போனாயே அங்கே கோல்கோண்டோ கோட்டை பார்த்தாயா?
- ஏன் சோர்வாயிருக்கிறாய் ஜூரம் இருப்பது போலிருக்கிறதே.
என்று கேள்விகளை குறிப்பாக கேட்டுப்பழகுங்கள்.
கேள்விகள் அன்பானவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு.நம் அன்பை அவர்களுக்கு தெரியவைக்கும் சாதனம்.அதை அழகாக கேட்க நீங்கள் எவ்வளவு அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களோ,
அதே அழகாக பதில்களும் கிடைக்கும்.
அன்பு என்பது தொடர்ச்சியான அக்கறையான வார்த்தை பரிமாறல்.அதை அழகாக்குங்கள்.
பின்குறிப்பு:இந்தப் பதிவை நான் திருந்த வேண்டும் என்று என் மனைவி படிக்க கொடுத்திருக்கலாம்.ஆனால் இதைப் படித்த உடன் சொன்னேன் “சூப்பர் நல்ல பதிவா எழுதிர்றேன்” என்றேன்.

1 comment:

  1. உண்மைதான்.... பின் குறிப்பு அதை விட மிக உண்மையோ...

    ReplyDelete