Tuesday 7 April 2015

நீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...

தீபம் ஒண்ணு இருந்துச்சாம்.அதுக்கு கோவமாம்.யார் மேல கோவம்.சிம்னி மேலத்தான்.
சிம்னி விளக்குல இருக்கிற தீபத்துக்கு கண்ணாடி சிம்னி மேல கோவமாம்.
மூஞ்சிய எட்டு மொழத்துக்கு தூக்கி வெச்சிட்டிருந்ததாம்.சிம்னிக்கு புரியுது. ஏதோ பேசிப் பேசிப் பாக்குத்தாம். ம்ஹூம் தீபம் சிம்னிக்கிட்ட பேசவே இல்லையாம்.சிம்னிக்கு மனசு கஸ்டமாப் போச்சாம்.பக்கத்துல இருக்கிற ஃபிரண்டு பேசலன்னா கஷ்டமாத்தான இருக்கும்.திரும்ப திரும்ப சிம்னி தீபத்துகிட்ட காரணம் கேட்டுச்சாம்.அப்போ இன்ன பாரு தீபம் முகத்த இப்படி வெச்சிகிட்டு சொல்லிச்சாம்.

“நா ரொம்ப அழகானவ”

அதுக்கு சிம்னி சொல்லிச்சாம்.” ஆமா நீ அழகானவாத்தான்.எப்படி பளிச்சுன்னு இருக்கிற”
தீபம் மறுபடியும் சொல்லிச்சாம்” ஆனா சிம்னி நீ அசிங்கமானவ.உன் உடம்பெல்லாம் கறுப்பா இருக்கு”

“இல்ல தீபா.நானும் அழகுதான் உன்கிட்ட இருந்து வர்ற சாம்பல்தான் என் மேல படிஞ்சி அழுக்காயிட்டேன்னு புரிஞ்சிக்க”

“அதெல்லாம் தெரியாது சிம்னி. நீ கறுப்பு.உன் கறுப்பால என்ன நீ மறைக்கிற. என் அழகு உலகத்துக்கு தெரியாம பண்ற. உனக்கு என் மேல பொறாமை.அதான் என்ன மறைக்கிற சிம்னி”
இதக் கேட்டு சிம்னிக்கு கஷ்டமா போச்சாம். சிம்னி சொல்லிச்சாம்.

“ தீபா உன் வார்த்தைகள் எல்லாம் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது.நான் உன்ன என் பெஸ்ட் ஃப்ரெண்டாத்தான் பாக்குறேன்.நீ ஏன் இப்படி பேசுற.நான் உன்ன விட்டு போகக்கூடாது” 
“போடி சிம்னி உன்ன எனக்கு பிடிக்கல” 

அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா? அந்த சிம்னி விளக்கு இருக்கிற வீட்ல ஒரு குட்டிப்பையன் என்ன செய்தான், விளையாட்டா சிம்னிய தூக்கிட்டான்.சிம்னிய தூக்கின உடனே என்னாச்சு, காத்து தீபம் மேல படும் இல்ல. காத்து பட்டதால தீபம் அணையிரமாதிரி மினுங்குது. எப்படி மினுங்கும். நீ உன் கண்ண வேகமா சிமிட்டு. ஆம் இப்படித்தான்.அப்பா சிமிட்டுறேன் பாரு.இப்படி.இப்படித்தான் தீபம் அணையுறாப்புல சிமிட்டி சிமிட்டி போச்சாம். உடனே அந்த குட்டிப்பையனோட அம்மா “ஐயோ அதோ தீபம் அணையப்போகுது.அது பக்கத்துல கைய வைடா” அப்படின்னு குட்டிப் பையனோட அண்ணா கிட்ட சொல்றாங்க. அந்த அண்ணன் ஒரு சோம்பேறி.அவன் கைய இப்படி தாமரை மாதிரி வெச்சிக்கிட்டு தீபத்த காப்பாத்துறான்.தீபத்துக்கு நிம்மதியா இருந்துச்சி. ஆனா அப்போ பாத்து ஒரு கொசு அந்த அண்ணன் கைய கடிச்சது பாரு.அந்த தீபத்த காப்பாத்துற கைய ஆ வலிக்குதேன்னு எடுத்தான் பாரு.மறுபடியும் தீபம் அணையுறாப்புல போச்சுது.அதுக்கு முன்னாடி குட்டிபையனோட அம்மா என்ன செய்ஞ்சாங்க.அவுங்க அந்த சிம்னிய நல்லா துடைச்சு, பளிச்சின்னு... எப்படி ... சும்மா பளிச்சின்னு துடைச்சி விளக்குல வெச்சாங்க.இப்போ தீபம் ஜம்முன்னு எரிஞ்சது. 

தீபத்துக்கு புரிஞ்சிடுச்சி.”சிம்னி நமக்கு பாதுகாப்பா இல்லன்னா நாம அணைஞ்சிருப்போம்ன்னு தெரிஞ்சிகிடுச்சி.” தன்னோட தவற உணர்ந்து சிம்னி கிட்ட மன்னிப்பு கேட்டிச்சாம்.சிம்னி “இட்ஸ் ஒக்கே தீபா.நான் தப்பா நினைக்கல” அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருந்தாங்களாம்.அதுக்கப்புறம் சிம்னி சொல்லிச்சாம். “நான் தான் உனக்கு சேஃப்டியா இருக்கேன்னு இல்ல தீபா. நீ மட்டும் எரியலன்னா என்ன எப்பவோ உடைச்சி தூக்கிப்போட்டிருப்பாங்கன்னு” சொல்லிச்சாம்.
நீ இல்லாம நா இல்ல. நா இல்லாம நீ இல்ல.
எங்க சொல்லு... நீ இல்லாம நா இல்ல... நா இல்லாம நீ இல்ல...
இப்படி கதையை குழந்தைக்கு சொல்லி, குழந்தையை இந்த வசனத்தை வேடிக்கையாய் சொல்ல வைத்து கதை சொல்லி கிச்சி கிச்சி மூட்ட வேண்டும்..
பின் இருவரும் கெக்கே பிக்கே என்று சிரிக்க வேண்டும்... :) :) 

1 comment:

  1. நல்லாத்தானிருக்கு....

    ReplyDelete