Monday 30 March 2015

ஏக்கம்...

ஷட்டர் வைத்த கடைகளில் யாராவது ஷட்டரை சர்ரென்று ஏற்றும் போதோ, லகுவாக இறக்கும் போதோ “இந்த ஷட்டர் எவ்வளவு வசதியான சாதனம்” என்று யோசனை வரும்.
ஏனென்றால் அந்த ஷட்டரின் அருமை மற்றவர்களை விட எனக்கு அதிகம் தெரியும் என்று எனக்கொரு நினைப்பு.
நாகர்கோவிலில் பத்து பதினொன்று வகுப்புப் படிக்கும் போது சில சமயம் காலையில் எங்கள் பலசரக்குக் கடையை திறக்கப் போவேன்.
அப்பா இரண்டு மணிநேரம் கழித்து வருவார்.அப்பா சொன்னதும் “சரிப்பா” என்று சாவியை எடுத்துக் கொண்டு சைக்கிளில் கடையை நோக்கி செல்லும் போதே” கடய எப்படி திறக்கிறது” என்ற யோசனை வரும்.
ஏனென்றால் எங்கள் கடையில் ஷட்டர் கிடையாது.பலகைதான்.
மொத்தம் பத்தோ பதிமூணோ பலகைகள் இருக்கும்.ஒவ்வொரு பலகையையும் இரண்டு பக்கமும் போட்டு, நடுப்பலகையையும் உள்ளே சொருகி நீள அடிக்கம்பியில் பூட்டைப் போட வேண்டும்.
அதை மறுபடி திறக்கும் போது லாவகமாக திறக்க வேண்டும்.இல்லையென்றால் பலகை சிக்கிக் கொண்டு வராது.
அன்று அப்படித்தான் பூட்டைத் திறந்து நடுப்பலகையை எளிதாக வெளியே வைத்து விட்டேன்.அடுத்தடுத்து இரண்டு பலகைகள் கூட கொஞ்சமான முயற்சியில் வெளிவந்துவிட்டன.
ஆனால் நான்காவது பலகை சுத்தமாக வரவில்லை.எவ்வளவோ முயற்சி செய்கிறேன்.
மொத்த பலத்தையும் வைத்து பலகையை பக்கவாட்டில் தட்டுகிறேன்.வரவில்லை.கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாக அதோடு போராடினேன்.வரவில்லை.
ஜங்சனில் அனைவரும் நான் கடை திறக்கும் அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
நானோ அவர்கள் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது என்ற முகத்தை வைத்துக் கொண்டு, பலகையோடு போராடியதால் யாரும் பக்கத்தில் வரவில்லை.
காலை வைத்தெல்லாம் மிதித்துப் பார்த்தேன்.வரவில்லை.
ஒவ்வொரு பலகைகை கழட்டுவதற்கு ஒவ்வொரு அறிவியல் இருக்கிறது என்ற விசயத்தை ரசிக்ககூட விடாமல் யதார்த்தம் என்னை துன்புறுத்தியது.
முடிவில் தோல்வியை ஒத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த சைக்கிள் கடைக்கார அண்ணனிடம் உதவி கேட்டேன்.
அவர் ஒரு சுத்தியலை எடுத்து வந்து பக்கவாட்டில் ஒரு போடு போட்டார், பலகை கழண்டு வந்தது.வேர்வையில் பதறியிருந்தவன் கொஞ்சம் ஆசுவாசமானேன்.
அப்போ உள் மனதில் இருந்து ஒரு ஏக்க மொழி வந்தது “ச்சே ஒரு ஷட்டர் மட்டும் இருந்திச்சினா கட திறக்க எவ்வளவு வசதியா இருந்திருக்கும்”.
இப்போ வரைக்கும் யாராவது கடை ஷட்டரை வேகமாக கேஸுவலாக தூக்கிவிடும் போதோ, இறக்கி விடும் போதோ “பத்தாம் வகுப்பு பலகை போராட்டம் “ ஞாபகத்துக்கு வரும்தான்.
அப்போது ஒரு நிறைந்த புன்னகை என்னிடம் வெளிப்படும்தான் 

No comments:

Post a Comment