Monday 30 March 2015

தோழர் பத்மா

இரண்டாம் உலகப்போர் முடிந்திருக்கும் காலகட்டங்களில் இந்தியாவின் தெலுங்கானாப் பகுதியில் மிகப்பெரிய விவசாய ஆயுதப் போராட்டம் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் நடந்தது.
கிட்டத்தட்ட 20000 விவசாயிகளும் 2000 கொரில்லா போர்வீரர்களும் சேர்ந்து நடத்திய உயிர்போராட்டம் அது என்று பொதுவுடைமை இயக்கத்தை தோன்றச் செய்தவர்களின் ஒருவரான புச்சலபள்ளி சுந்தரய்யா தன் ”வீரத்தெலுங்கானா” என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
இதில் ஒவ்வொருவரும் போராட்டத்துக்காக செய்த தியாகத்தைச் சொல்லி வரும் போது “தோழர் பத்மா” என்பவருடைய தியாகத்தை சுந்தரய்யா சிலாகித்து சொல்கிறார்.
தோழர் பத்மா இயக்கத்தில் போராடி இறந்த ஒருவரின் மனைவி.கணவர் இறந்தாலும் இயக்கத்தில் தொடர்ந்து இருந்து போராட்டம் செய்து வருபவர்.
அங்கே இருக்கும் திறமையான அமைப்பாளர் ஒருவருக்கும் தோழர் பத்மாவுக்கும் காதல் வருகிறது.இயக்கம் அக்காலத்தில் மறுமணத்தை ஆதரித்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்ததால், அக்காதலை ஆதரித்து தோழர் பத்மாவுக்கு அந்த இயக்க திறமைசாலிக்கும் திருமணம் செய்து வைத்தது.
சிறிது காலத்தில் தோழர் பத்மா சூலுற்று குழந்தை பெற தயாரானார்.
அப்போது அவ்ர் கணவருக்கு காட்டில் சென்று போராடும் கட்டாயம் ஏற்பட்டது.அதற்கு முன் போர் இல்லாத பணிகளில்தாம் இருந்தார்.ஆனால் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் பட்சத்தில் அனைவரும் காட்டுக்கு சென்று போராட வேண்டிய கட்டாயம்.
இங்கே மனைவி குழந்தையோடு(வயிற்றில்) இருந்தால் இயக்க நண்பரின் மனம் போராட்டத்தில் இல்லை.
தோழர் பத்மாவின் சகோதரர்கள் அனைவரும் வசதியானவர்கள். அவர்கள் தங்கையை ஏற்றுக் கொள்ள தயார்.ஆனால் குழந்தையை அல்ல.
புச்சலபள்ளி சுந்தரய்யா தோழர் பத்மாவுக்கு ஒரு யோசனை சொல்கிறார் “ நீ உனக்கு குழந்தை பிறந்தவுடன் அதை வேறொரு தம்பதியினருக்கு தத்து கொடுத்துவிட்டு, உன் சகோதரர்களோடு போய்விடு.அப்போதுதான் உன் கணவர் காட்டுக்கு வந்து போராடுவார்” என்கிறார்.
தோழர் பத்மா பி.எஸ் சொன்னதை அப்படியே கேட்டு அப்படியே பெற்ற குழந்தையை தத்துக் கொடுக்கிறார்.அதன்பின் இரண்டு வருடங்களில் போராட்டம் முடிவுக்கு வருகிறது.
தோழர் பத்மா தன் கணவருடன் இணைகிறார்.ஆனால் குழந்தையை பார்க்க முடியாத சூழ்நிலையில் கடைசி வரை பார்க்காமல் இருந்து விடுகிறார்.
போராட்டம் என்பது மனிதர்களுக்கு எப்படிப்பட்ட மனஉறுதியையும் கொடுத்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
போராட்டத்தை வழிநடத்துபவர்களுக்கு சில கொடூரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்தக் கொடூரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கும் தனிமனித உரிமைக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை மட்டும் ஆராய்ந்து அதையே போராட்டத்தை எடுத்து செல்பவர்கள் மேல் குற்றச்சாட்டாய் வைத்து அவர்களை கிரிமினல்கள் ஆக்குவது என்பதும் ஏற்கதக்கதல்ல.
இப்படியெல்லாம் எனக்கு தோன்றிற்று.

No comments:

Post a Comment