Monday 30 March 2015

துயில் எழுப்புதல்...

காலை துயிலில் இருந்து மகளை எழுப்பும் முறையில் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும்.
என் மனைவி சாதரணமாக எழுப்பி அவளை பல்விளக்க அனுப்பி வைப்பார்.
நான் அப்படி செய்ய மாட்டேன்.அவள் பக்கத்தில் போய் ”எழும்பும்மா செல்லம்” என்று மெல்லமாய் கெஞ்சுவேன்.கால் அமுக்கி விடுவேன்.அப்புறம் அவளை அப்படியே தூக்கிப் போய் ஹாலில் சோபாவில் படுக்க வைப்பேன்.
மறுபடியும் ஒடிப்போய் தலைக்கும்,கைகளுக்கும் தலையணை எடுத்து சோபாவில் வைப்பேன்.பின் போர்வையை எடுத்து போர்த்திவிடுவேன்.ஐந்து நிமிடம் போன பிறகு மறுபடியும் அவளிடம் கொஞ்சுவேன்.
அப்போது கண் திறந்து பார்ப்பாள்.டிவியை ஆன் செய்து அவள் சொல்லும் சேனலை வைப்பேன்.இவ்வளவு நடந்து முடிந்த பின்தான், பல்விளக்க அனுப்பி வைப்பேன்.
இப்படி செய்வது அவளை சோம்பேறியாக்கும் என்பார் என் மனைவி. நான் சொல்வேன்
“ஏபிள டக்குன்னு எந்திரிக்க முடியுமா? எந்திரிச்ச உடன அஞ்சு நிமிசம் படுக்க மாட்டோமான்னு ஒரு தவிப்பு வரும். தண்ணி குடிக்கிற தவிப்புக்கு சமம் அது.சின்னப் பிள்ள மெல்லமா எழும்பட்டும” என்பேன்.
இது பொதுவாக ஒரு இந்திய தந்தை காட்டும் பாசம்தான். ஆனால் அடுத்து நான் சொல்லவருவது ஒருவேளை இந்த பத்தியை சுவாரஸ்யமாக்கக் கூடும்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் கடைக்கு என்னை விட ஒன்றிரண்டு பெரிய வயதுப் பையன் வந்தான்.”என்னது அப்போ குழந்தை தொழிலாளர் முறையை செய்தீர்களா?” என்று பத்தியை திசை திருப்பாதீர்கள்.
ஒருகாலத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் நாடார் இனம் என்று சொல்லிக் கொள்ளும் மக்களிடையே இந்த டிரண்ட் இருந்தது (இது ஜாதி பேசுறதில்லைதானே).
அதாவது ஆம்பிளைப் பையன் படிச்சா நல்லா படிக்க வைக்கிறது.அப்படி படிக்காம ஊர் சுத்திக்கிட்டு, சுத்தமா வீட்டுக்கு அடங்காம,ஸ்கூலுக்கே போகாம இருந்தா அவனைக்கொண்டு எதாவது மளிகைக்கடையில் சேர்த்து விடுவார்கள்.
அவன் அந்த பலசரக்குக் கடையில் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் தனியே கடை வைப்பான்.பலர் அப்படி வைத்து பெரிய முதலாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள்.இது ஒரு டிரண்ட்.
ஊரில் இப்படி ஒரு டிரண்ட் இருக்கும் போது சில பயல்கள் முதலிலேயே படிக்க மாட்டேன் என்று தீர்மானித்து விடுவான்கள்.அவன்களை ஒன்றும் செய்ய முடியாது.
இப்படியாக ஒரு பையன் எங்கள் கடைக்கு வந்தான்.தினமும் காலையில் அவனை எழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு.
யார் எனக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தார்கள்? நானே எடுத்துக் கொண்டேன்.
”நான் முதலாளி” என்ற செருக்கு அந்த சிறுவயதில் எனக்கிருந்தது.காலை ஆறரை மணிக்கெல்லாம் அவனை எழுப்புவேன்.
எப்படி எழுப்புவேன் தெரியுமா? நன்றாக பாயில் தூங்கிக்கொண்டிருப்பவனை அப்படியே சரக்கென்று கையைப் பிடித்து தூக்கி விட்டுவிடுவேன்.
எவ்வளவு கொடுமையான காரியத்தை செய்திருக்கிறேன் பாருங்கள்.
நன்றாக ஆழ்ந்து உறங்கும் ஒருவனுக்கு அதைவிட அதிர்ச்சியான விசயத்தை செய்ய முடியுமா? அப்படி எழுந்ததும் அவன் அப்பாவியாய் முழிப்பான்.அதைப் பார்த்து ஒரு மகிழ்ச்சி எனக்கு.
தட்டான்பூச்சியை குண்டூசியை வைத்து நறுக்கென்று குத்தி தூக்கி பறக்க விட்டால், எவ்வளவு உச்சம் பறக்க முடியுமோ அவ்வளவு உச்சம் பறந்து கிழே விழுந்து சாகும். அதைப் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு இணையானது, அந்த பையன் திரு திரு என்று முழிக்கும் காட்சி.
அந்தப் பையனால் என்னை திட்டவும் முடியாது. ஏனென்றால் நான் முதலாளிப் பையன்.எரிச்சலுடன் என்னைப் பார்ப்பான்.
நான் வாய்விட்டு ”ஹி ஹி” என்று சிரிப்பேன்.
என் மகளை வாஞ்சையாக சோபாவில் கிடத்தி போர்வையை போர்த்தி விடும் போது அந்தப் பையன் ஞாபகம் வரும்.”ச்சே எவ்வளவு கேவலமா இருந்திருக்கிறேன்” என்ற எண்ணம் வரும்.ஒரு விநாடி மனம் சோர்வாகும்.
அந்தப் பையனையும் அவன் அம்மா அப்பா சீராட்டி வளர்த்திருப்பார்கள்.
அந்தப் பையனுக்கும் உடம்பு சரியில்லாவிட்டால் பதறிப்போய் டாக்டரிடம் கூட்டிப் போயிருப்பார்கள்.
அந்தப் பையனையும் வாஞ்சையாக அணைத்துக் கொஞ்சியிருப்பார்கள்.
அந்தப் பையனுக்கும் பால்சோறு வாயில் வழியும் போது அவன் அம்மா அதை துடைத்து விட்டிருப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு என் மகளைப் பார்த்தால், அவள் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருப்பாள்.
“ஏன் விஜய்! இவள அந்தப் பையன எழுப்புறது மாதிரி சட்டுன்னு தூக்கிவிட்டு எழுப்பேன்” என்றொரு மனசாட்சி குரல் கேட்கும்.
கறிக்கடையில் கோழியின் தலையை அறுத்து பெட்டியில் போட்டால் டப டப டப வென்று அடித்துக் கொள்ளுமே,
அது மாதிரி உள்ளம் சொல்ல முடியாத உணர்வால் அடித்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment