Monday 30 March 2015

பெற்றதும் இழந்ததும்...

மரத்தடியில் மூன்றாமவன் அமர்ந்திருந்தான்.
முதலாமவன் எதையோ தேடிக்கொண்டே இருந்தான்.
இரண்டாமவனும் எதையே தேடிக்கொண்டே இருந்தான்.
மூன்றாமவன் இருவரையும் அழைத்தான்.தன்னருகே உட்காரவைத்தான்.குடிப்பதற்கு நீரும் உணவும் கொடுத்தான்.
”நீங்கள் இருவரும் எதையோ தேடி மரத்தை சுற்றி சுற்றி வருகிறீர்கள்.முகத்தில் பரபரப்பு தெரிகிறது.என்ன தொலைத்தீர்கள்.ஏன் இவ்வளவு பதட்டம்”
முதலாமவன் “என் பெட்டியின் சாவி தொலைந்து விட்டது அதைத்தேடுகிறேன்” என்று அழகிய பெட்டியைக் காட்டுகிறான்.
இரண்டாமவன்” என் சாவியின் பெட்டி தொலைந்துவிட்டது அதைத்தேடுகிறேன்” என்று சாவியைக் காட்டுகிறான்.
“நன்றாக யோசித்து சொல்லுங்கள்” நீங்கள் தொலைத்ததைத்தான் தேடுகிறீர்களா”
“ஆம் இதிலென்ன சந்தேகம்” என்றார்கள் முதலாமவனும் இரண்டாமவனும்.
“நான் கேட்பது என்னவென்றால் நீங்கள் இருவரும் பெட்டியையும் சாவியையும் ஒரு சேர வைத்திருந்தீர்கள்.அதில் ஒன்றை தொலைத்தீர்களா?.அதை நிச்சயமாக சொல்ல முடியுமா?”
முதலாமவனும் இரண்டாமவனும் யோசித்தபடியே இருந்தார்கள்.
முதலாமவன் பேசினான்”முதலில் என்னிடம் எதுவுமில்லை.நடந்து வரும் போது கிழே இருந்து பெட்டி கிடைத்தது.ஆனால் சாவியில்லை.அந்தச் சாவியைத் தேடுகிறேன்.திறந்தால் உள்ளே அற்புதப் பொருள் இருக்ககூடும்.”
இரண்டாமவன் பேசினான்” முதலில் என்னிடம் ஒன்றுமே இல்லை.வழியில் கிடைத்ததுதான் இந்த அழகிய வேலைபாடுள்ள சாவி.இந்த சாவியின் பெட்டி கிடைத்தால் அதனுள் அற்புதப்பொருள் இருக்ககூடும் என்று நினைத்தேன்”
மூன்றாமவன் பேசினான்
“ஆரம்பத்தில் இருவரிடமும் எதுமில்லை.காலாற நடந்திருக்கிறீர்கள்.அப்போது உங்கள் முகத்தில் மென்காற்று வீசியிருக்கிறது.
வழியில் இருவருக்கும் ஆளுக்கொரு பொருளை விதிவசத்தால் பெற்றிருக்கிறீர்கள்.பெற்றதை முழுமையடையச் செய்ய அல்லது முழுமையாக பெற பரபரப்பாகிறீர்கள்.
முதலாமவன் பெட்டியைப் பெற்றிருக்கிறான்.அவன் சாவியைத் தொலைக்கவில்லை.
இரண்டாமவன் சாவியை பெற்றிருக்கிறான்.அவன் பெட்டியைத் தொலைக்கவில்லை.
உங்கள் இருவருக்கும் ஏதோ ஒன்று கிடைத்திருக்கிறது.ஆனால் உங்கள் மனம் புதிதாய் கிடைத்ததை புதிய பொருள் என்று சிலாகிக்காமல், ஏதோ ஒன்ற தொலைத்த உணர்வை உஙகளுக்குக் கொடுக்கிறது.”
”நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.பெட்டி சாவி என்று வரும்போதுதான் இந்தப் பிரச்சனை.நேரடியாக தங்கம் கிடைத்திருந்தால்.அதை வைத்து மகிழ்ந்திருப்போம்” என்றார்கள் முதலாமவனும் இரண்டாமவனும்.
“கிழித்திருப்பீர்கள். அந்த தங்கத்தை பாதுகாப்பாக வைக்க பெட்டியும் சாவியும் இருக்கிறதா என்று இன்னும் பரபரப்பாக பதட்டமாக இருந்திருப்பீர்கள்.” என்றான் மூன்றாமவன்.
”நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்”
“கிடைத்த பொருள் தொலைத்து விட்ட உணர்வை கொடுக்கும் போது, தேவையற்ற மனநெருக்கடியை கொடுக்கும் போது, கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் இன்பத்தின் அடையாளமா? அல்லது துன்பத்தின் அடையாளமா என்று யோசித்துப் பாருங்கள்.எனக்கே அதை நினைத்து குழப்பமாக இருக்கிறது.அதனால் “
“அதனால்.... “
மூன்றாமவன் தொடர்ந்தான் “அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வழக்கமாக பெட்டியையும் சாவியையும் ஒவ்வொரு இடத்தில் போட்டு விட்டு,இதோ இந்த மரத்தில் உட்கார்ந்து விடுவேன்.உங்களைப் போல ஒவ்வொரு ஜோடியும் அதைத் தனித்தனியாக எடுத்து உங்களைப் போலவே பரபரப்பாக ஒரே மாதிரி இருக்கிறார்கள்.வித்தியாசமாக எதுவும் சொல்வதில்லை”
மூன்றாமவனிடம் பெட்டியையும் சாவியையும் ஒப்படைத்து முதலாமவனும் இரண்டாமவனும் ஊர் பார்த்துக் கிளம்பினார்கள்.

No comments:

Post a Comment