Friday 31 August 2012

கதை போல ஒன்று - 44

புர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள்.

ஹைதிராபாத்தில் வேலைக்கு சேர்ந்திருந்த புதிது.

ஜே.என்.டி.யூ ஜங்சனில், ஆபீஸ் வேனில் இருந்து இறங்கவும் மழை பெய்த்தது.

சிவனின் தாண்டவத்தை போன்ற ஆவேசமான மழை.

தாவி ஒடி அந்த சூப்பர் மார்க்கட்டின் மேல் தளத்தில் உள்ள ஏ.டி.எம் செண்டர் பக்கத்தில் நின்றேன்.பலரும் மழைக்கு ஒதுங்கி நிற்க, எனக்கு நிற்க இடமே கிடைக்கவில்லை.

புர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் அருகே நின்று கொண்டேன்.

மழை விட்டபாடில்லை. மழையை பார்த்து, கூட்டத்தை பார்த்து அவளை பார்க்கிறேன். சிநேகமாக முகத்தை வைத்து “என்னிடம் தாராளாமாய் பேசலாம்” என்பது மாதிரியான சிக்னல் கொடுக்கிறேன்.

“நல்ல மழை இல்லை “என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

“ஆம் நல்ல மழை.நீங்கள் கல்லூரியா படிக்கிறீர்கள்” என்று ஆரம்பித்தேன். ஒரே மகிழ்ச்சி.

“இல்லை நான் படித்து முடித்து விட்டு வேலை தேடுகிறேன்” இப்போது முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டு பேசினாள்.இராணிய முகம். அழகுதான். சரி போற வரைக்கும் போகட்டும் என்று பேசினேன்.

”என்ன படித்திருக்கிறீர்கள்”

”பி.எஸ்.சி சுவாலஜி. நான் வேலை தேடி கொண்டிருக்கிறேன். உங்களால் உதவி செய்ய முடியுமா”?

நான் திகைத்தேன். நல்லா பேசுவேன். ஆனால் பிராக்டிக்கலா உதவின்னு யாராவது கேட்டா என்னால் அந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியாது.

“என்னால் உதவ முடியும்” என்றேன்.

கூட்டம் எங்களையே பார்த்து கொண்டிருந்தது.

ஏன் இந்த கூட்டம் பெண்ணிடம் பேசினாலே இப்படி நினைக்கிறது என்று மனதிற்குள் அங்கலாய்த்தேன். நீயும் இந்த கூட்டத்தில் இருந்தால் இப்படித்தான் இருப்பாய் என்றும் நினைத்து கொண்டேன்.

பல சமயம் பெண்களிடம் பேசுவதையையே இப்படி பெருமையாய் நினைக்கிறேன். அக்கா தங்கைகளோடு பிறக்காததினால் பெண்கள் உலகமே தெரியாமல், பெண்ணை பார்த்தாலே “ பே” என்று வாய்பிளக்கும் மனபாவம் வந்து விட்டதோ.

இதோ இவளிடம் ஏன் பேசிகொண்டிருக்கிறாய்.இவளிடம் உனக்கு என்ன வேண்டும். காதலா? காமமா? அல்லது ஒன்றிரண்டு உரசல்களா? முத்தமா?

முட்டாளா நான்?

“நீங்கள் இதை பாருங்கள்” என்று ஒரு பைலை நீட்டினாள்.

அம்பதாயிரம் பாங்க் லோன் அப்பளை செய்த ஆவணங்கள். திரும்ப அவளிடம் கொடுத்தேன்.

“நீங்கள் எனக்கு பத்தாயிரம் ருபாய் கொடுக்க வேண்டும்.ஃப்ளீஸ்”

அதிர்ந்தேன். அவள் குரலே மாறியிருந்தது. பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை பத்தாயிரம் கேட்கிறாளே. மாட்டிகொண்டோமோ. பணம் பறிப்பவளா இவள். ஹைதிராபாத்துக்கு வந்த இரண்டாம் நாளே இப்படி ஆகிவிட்டதே. சபலத்தால் மாட்டி கொண்டேனே.

ஆனால் அவள் முகத்தை பார்க்க அப்பாவியாய்தான் இருந்தது.

கையை குவித்து கேட்க ஆரம்பித்து விட்டாள்..

கூட்டம் எங்களையே பார்க்க பயம் வந்தது. இவள் எதாவது சத்தம் போட்டால் தர்ம அடி குடுப்பான்கள் இந்த தெலுங்கன்கள்.

என்ன செய்ய. யோசித்தேன்.

இப்போது அவளே ஒரு டீலுக்கு வந்தாள்.

“சரி நூறு ரூபாயாவது கொடு”

நான் கொடுக்க முடியாது என்று தலையை அசைத்தேன். அந்த தலையசைப்பிலே பலவீனம் தெரிந்தது.

”ஃப்ளீஸ் கொடு கொடு “

நான் அம்பது ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

“நீ சாப்பிட்டு விட்டாயா? காபி குடிக்கலாமா? கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா? காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா என்றாள்.

அவள் முகத்தை பதட்டமாக பார்த்தேன்.

“இந்த அம்பது ரூபாய் அம்மாவுக்கும், தம்பிக்கும் சாப்பாடு வாங்கதான் சரியாய் இருக்கும். எனக்கு பசிக்கிறது” என்றாள்.

இவளிடம் இருந்து பிரச்சனை இல்லாமல் எப்படி தப்பிப்பது என்றே யோசித்தேன். எந்த நேரமும் சட்டென்று உடைந்து அழுபவள் போன்றிருந்தது அவள் குரல்.

“இங்கு கூட்டம் அதிகமாய் இருக்கிறது. ரோட்டை கிராஸ் செய்து அந்த பக்கம் போய் நில்லு.” நான் உனக்கு சாப்பிட பணம் தருகிறேன்.இங்கு கூட்டம் நம்மையே பார்க்கிறது” என்றேன்.

“இல்லை நீ ஏமாற்றி விடுவாய்”

“சத்தியமாக நான் ஏமாற்ற மாட்டேன் நீ போ”

“நீ ஏமாற்றி விடாதே. இந்த மழைக்கு தலையை சுத்தி கொண்டு வருகிறது. பணமாக கொடுக்க முடியவில்லை என்றால் காபியாவது வாங்கி கொடு” என்றாள்.

பக்கத்தில் இருந்த கோயிலை காண்பித்து. ”அந்த சாமி மேல பிராமிஸ் நான் உன்னை ஏமாத்த மாட்டேன்”
என்றேன்.

கடைசியில் அவள் சம்மதித்து குடையை விரித்து ரோட்டை கிராஸ் செய்ய ஆரம்பித்தாள். சட்டென்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று, மழையில் நனைந்தபடியெ, இடது பக்கம் ரோட்டை அடைந்து , ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர “ஏன் மழையில் நனைந்து கொண்டு வருகிறீர்கள்” என்று ஹவுஸ் ஒனர் கேட்டார்.

வீட்டிற்கு வந்து, தலையை துவட்டி டீ போட்டு குடிக்கும் போதுதான் நிம்மதி வந்தது.

இனிமேல் புதிதாய் முன்பின் தெரியாத பெண்களிடம் ஹைதிராபாத்தில் .பேசும் போது கவனமாய் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

அன்றிரவு மூன்று மணியளவில் “நீ சாப்பிட்டு விட்டாயா? காபி குடிக்கலாமா? கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா? காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா ” என்று அவள் அப்பாவியாய் கேட்டது நினைவுக்கு வந்தது.

தூங்க முடியவில்லை.

No comments:

Post a Comment