Saturday 2 August 2014

பாதல் சர்கார்....

மே மாதம் 2014 பனுவலில் நடந்த திரையிடலைப் பற்றி எழுதியது...

பார்வையாளர்களை இருட்டில் வைத்துக் கொண்டு, நீங்கள் வெளிச்சத்தில் நின்று நடித்தால் எப்படி அது பார்வையாளர்களுக்கு அதிர்வைக் கொடுக்கும் ? எனற கோட்பாட்டைத்தான் பாதல் சர்கார் வலியுறுத்துகிறார்.

அந்த பாதல் சர்காரைப் பற்றி அம்ஷன் குமார் இயக்கிய ஆவணப்படத்தை  பனுவலில் கண்டேன்.

இந்த ஆவணப்படம் பாதல் சர்க்காரின் வாழ்க்கை வரலாறு,அவர் வளர்ந்த இடம்,படித்த இடம் என்று எதையும் பேசவில்லை.நேரடியாக அவர் செயல்முறைப்படுத்திய  மூன்றாவது அரங்கு நாடகமுறையைப்  ( Third theater ஐ இப்படியா சொல்ல வேண்டும்.சரியாத் தெரியல) பற்றி மட்டும் பேசுகிறது.

Second Theater என்றால் மேடை மேலே இருக்கும்.பார்வையாளர்கள் கிழே இருப்பார்கள்.மேடை வெளிச்சமாக இருக்கும்.பார்வையாளர்கள் இருட்டில் இருப்பார்கள்.ஆனால் மூன்றாம் அரங்கு நாடகமுறையில் அப்படியில்லை.பார்வையாளர்களும் கூடவே நிற்பார்கள்.பார்வையாளர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள்.ஏனென்றால் மூன்றாம் அரங்கு நாடகமுறையில் நாடகம் பொதுவெளியில் எந்த செலவும் இல்லாமல்,ஆனால் மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி நடத்தப்படும்.இதை முதன் முதலில் பரவலாக்கம் செய்தவர் பாதல் சர்க்கார்.

இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.இவரைப் பேட்டி காண்பதே ஆவணப்படம்.அடுத்து இவரின் கருத்தை ஒருவர் விமர்சிக்கிறார்.அந்த விமர்சனமும், இன்னொருவர் ஆதரிக்கிறார்.அவருடைய வாதமும் ஆவணப்படம் நெடுக வருகின்றன.ஆக ஆவணப்படம் பாதல் சர்க்காரை தூக்கியோ துதிபாடியோ இருக்கவில்லை.

ஆனால் அவர் சொல்ல வந்த கோட்பாட்டை பார்வையாளர்களுக்கு புரியவைக்கிறது.பாதல் சர்க்கார் தன் பொதுவெளி நாடகம் மூலம் என்ன சொல்ல நினைத்தாரோ, கிட்டத்தட்ட அதே பாணியில் அம்ஷன் குமாரும் ஆவணப்படத்தைக் கொண்டு போகிறார்.

1994 யில் பாதல் சர்க்காரிடம் சென்று அவர் நடைபாதையில் நடத்திய மூன்றாவது அரங்கு நாடக விழாவை  மையப்படுத்தி இந்த ஆவணப்படத்தை எடுக்கிறார்.பாதல் சர்க்கார் பேட்டியில் இப்படி சொல்கிறார்.

-நாடகம் பார்க்க வருபவர்கள் எந்த டிக்கட்டையும் எந்த பணத்தையும் செலவழிக்க தேவையில்லை.நாங்களும் நாடகத்துக்காக எந்த பணத்தையும் செலவுசெய்யவில்லை.இதனால் பார்வையாளர்களுக்கும் நாடகம் நடத்துபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.ஒருவிதமான நட்பு வந்து விடுகிறது.

-நாங்கள் ஒப்பனை இல்லாமல்,பொருட்கள் இல்லாமல் நாடகம் நடத்தப் படும் சிரமத்தை பார்வையாளர்களும் பார்க்கிறார்கள்.அதுவே நாடகத்துக்கு சிறப்பாக அமைந்து விடுகிறது.

-எங்களோடு நிற்கிறார்கள் பார்வையாளர்கள்.அவர்களுக்கு எங்கள் மொழியை எளிதாக புரியவைக்க முடிகிறது.நாங்கள் சொல்ல வந்த சமூக மாற்றம் பற்றிய கருத்தைப் பற்றிய அதிர்வை எளிதாக உருவாக்கமுடிகிறது.நாடகத்தின் நோக்கம் அதுதானே.

-ஒருமுறை நாடகம் போடும் போது விளக்கு வசதியில்லாமல் போய்விட்டது.அப்போது பார்க்க வந்தவர்கள் “நாங்கள் சுற்றி நின்று மெழுகுவர்த்திகளைப் பிடித்துக் கொள்கிறோம்.நீங்கள் நடத்துங்கள்” என்றார்கள்.அப்படியே நடந்தது நாடகம்.

பாதல் சர்க்காரின் மேலுள்ள விமர்சனம்,ஆதரவு என்று 51 நிமிடத்தில் அம்ஷன் குமார் பல சிந்தனைகளை தூண்டி விடுகிறார்.

ஆவணப்படம் முடிந்ததும் கலந்துரையாடல் நடந்தது.முதலில் அம்ஷன் குமார் தன் அனுபவத்தை சுருங்கச் சொன்னார்.பாதல் சர்க்கார் இந்த நடைபாதை நாடக கொண்டாட்ட நாடகத்தையே படம் பிடிக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்.”அப்படி செய்தால் நான் ஏதோ பெரிய ஸ்டாராக தெரிவேன்.என் குழுவில் நானும் ஒருவன்.அவ்வளவுதான்” என்றாராம் பாதல்.அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக பல தகவல்களை சுவையாக சொன்னார்.

அடுத்து பிரளயன் பேசினார்.பொதுவான இந்திய நாடக போக்கு பற்றி சுருங்க சொன்னார்.பாதல் சர்க்காரின் யுத்தி பற்றி அது மக்களை எப்படி சென்றடைந்தது என்பதற்கு உதாரணமாக ஒன்று சொன்னார் “அன்று தெருவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் பார்த்தேன்.அதில் இரண்டு பேர்  கைகளை மேலே தூக்கி குவித்து சேர்த்து வைத்துக் கொண்டனர்.அதனுள்ளே இன்னொருவர் நுழைகிறார்.அதாவது வீட்டுக்குள் நுழைகிறாராம்.இதெல்லாம் பாதல் சர்க்காரின் மூன்றாம் நாடக அரங்கினால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான்.வீடு என்பதற்கு வீடு தேவையில்லை.இரண்டு மனிதர்கள் போதும் என்ற தன்மையை பரவலாக்கியவர் பாதல் சர்க்கார் என்றார்.

”தளம்” பாரவி பேசினார்.மூன்று விஷயங்கள் சென்னையில் முதன் முதலில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-நாடகங்கள் நடத்துவதற்கான,பயிற்சி செய்வதற்கான நிரந்தர அரங்கம்.
-அதே அரங்கில் நாடகம் சம்பந்தப்பட்ட நூல்கள் அடங்கிய நூல் நிலையம்.
-அங்கு வரும் நாடக கலைஞர்கள் தங்குவதற்கு குறைந்த பட்ச வசதி.
இதையெல்லாம் செய்தால் மட்டுமே நாடகம் நிலைக்கும் என்று மிக மிக உணர்ச்சிகரமாக பேசினார்.அவர் குரலில் தெரிந்த அக்கறை பார்வையாளர்களை மனதை நிச்சயமாய் தொட்டிருக்க வேண்டும்.

கலைராணி, மூன்றாம் நாடக அரங்கு கோட்பாட்டில் இருக்கும் செலவில்லை விஷயத்தை எல்லோரும் ஏற்றிப் பாடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்.நாடக கலைஞர்கள் அடையும் பணக்கஷ்டத்தை விளக்கினார்.சமீபத்தில் நடித்த நாடகம் பெரிய வசதியான அரங்கில் நடத்தப்பட்டாலும், அங்கே நாடக கலைஞர்களின் பிஸ்கட் டீ விஷயங்களை கூட அவர்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டியதிருந்தது என்றார்.முழு நேர நாடக கலைஞர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது.அப்படி முழு நேர நாடக கலைஞர்கள் இல்லாமல் நாடக கலையை எப்படி வளர்த்து விட முடியும் என்பது பற்றியும் யோசிக்க வேண்டும் என்றார்.

அடுத்து கருணா பிரசாத் மிக அருமையாக பேசினார்.நாடகம் என்பது தமிழ்நாட்டில் நிச்சயமாய் மெல்லிய நூலாகிவிட்டது என்றார்.பள்ளிக் கூடங்களில் வேறு வழியில்லாமல் ஒரு நாடகம் வைக்கிறார்கள்.அந்த நாடகத்தில் கூட குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை.ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் பள்ளி மாணவர்களில் இருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.இது மாதிரி எதாவது யோசித்தால் ஒருவேளை நாடகத்தை காப்பாற்றலாம் என்றார்.கிராம்ங்களில் கலை சடங்கு மற்றும் மத சம்பந்தப்பட்டதாக இருப்பதால்தான் இன்னும் இருக்கிறது.இல்லாவிட்டால் நம் மக்கள் என்றோ அவைகளை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள்.இதை அவர் மக்களின் கண்டுகொள்ளாமை மீது உள்ள கோபமாக முன்வைத்தார்.மதம் மற்றும் சடங்குகளை ஆதரிப்பதாக முன்வைக்கவில்லை.

இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் விவாதம் மட்டும் நடந்தது.மிக அருமையான விவாதம் இது.எல்லாவற்றையும் இங்கே எழுதினால் நிறைய வரும்.அதனால் இப்போது இது போதும்.

இதைப் படிப்பவர்கள் எல்லோரும்,தூங்கப்போவதற்கு முன்னால் Badal sarkar பற்றி விக்கிபீடியாவில் படித்து விட்டு தூங்கினால் நான் மகிழ்ச்சியடைவேன்( தெரிஞ்சவங்க இக்னோர் பண்ணிரலாம்)  :)

இன்று ஆபீசில் இருந்து அவசர அவசரமாக ஐந்தரைக்கெல்லாம் வெளியேறி, ஆட்டோ பிடித்து பனுவலுக்கு வந்து வீண்போகவில்லை.அசத்தலான அனுபவமாக ஆகிவிட்டது. :) 

No comments:

Post a Comment