Sunday 3 August 2014

இச்சையும் காதலும் துரோகமும் - சலோமி...

ஆஸ்கர் வைல்டு எழுதிய “சலோமி” என்ற சர்ச்சைக்குரிய குட்டி நாடகத்தை அகிலன் “தாகம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

படிக்க நல்ல அனுபவமாக இருந்தது.அதன் கதைச் சுருக்கத்தை சொல்ல விரும்புகிறேன். வைல்டு இதை கற்பனைக் கதையாகவே எழுதியுள்ளார்.

ஹெராட் மன்னன்,ஆளும் நாட்டின் பேரழகியாக இருக்கிறார்  இளம்பெண் சலோமி.

ஹெராட் சலோமியின் அப்பாவான, தன்” சொந்த அண்ணனை” சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அண்ணன் மனைவியான ஹெரோதியஸை திருமணம் செய்து கொள்கிறான்.

ஹெரோதியஸும்  ஹெராட் மன்னனை காதலிக்கவே செய்கிறாள். ஹெரோதியஸின் ஒரே கவலை தன்னுடைய பேரழகு மகள் சலோமி மேல்தான்.

சலோமியின் அழகைப்பற்றி தேசமே பேசுகிறது. ஹெராட் சலோமியின் சிற்றப்பன் ஆனாலும் சலோமியின் அழகு அவனை ஈர்க்கிறது.

சலோமி மேல் காதல் கொள்கிறான்.ஆனால் ஹெரோதியஸுக்காக அதை வெளிப்படுத்தாமல் எரிச்சலுடன் இருக்கிறான்.

ஹெராட் கொடுக்கோல் ஆட்சி செய்கிறான்.மக்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று விடுகிறான்.

அப்படி அவனை கடுமையாக எதிர்த்து, கொல்லப்படாமல் இருக்கும் ஒரே மனிதர் ஞானி மற்றும் தீர்க்கதரிசி ஜோகனான். ஜோகனானுக்கு ஹெராட்டைப் பற்றிய எல்லா ரகசியங்களும் தெரியும்.

ஹெராட் தன் அண்ணனை சதி செய்து அண்ணியை திருமணம் செய்து கொண்டது பற்றி ஜோகனான் கோபமாக எதிர்ப்பை தெரிவித்து சிறையில் இருக்கிறார். ஹெராட் அவரைக் கொல்ல பயப்படுகிறான்.

அவரிடம் இருக்கும் ஞானத்தன்மை பற்றிய பயமோ மரியாதையோ அவனை கொல்லவிடாமல் செய்கிறது. ஆனால் ஜோகனான் சிறையில் இருந்து விடாமல் ஹெரோதியஸை சாடுகிறார் ஜோகனான். யூதர்கள் அவரை தங்கள் ஆசானாக பார்க்கிறார்கள்.

ஜோகனான் விடாமல் சொல்கிறார் “என்னைவிட அறிவிலும் தீர்க்கதரிசனத்திலும் சத்தியத்திலும் சிறந்தவன் வரவிருக்கிறான். அப்போது என்ன செய்வீர்கள் பதர்களே “ என்று.

ஹெரோதியஸுக்கு இது பிடிக்கவே இல்லை. எப்படியாவது ஜோகனானை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள்.ஆனால் அவளால் அது முடியவில்லை.

சலோமிக்கு ஞானி ஜோகனானைப் பார்க்க ஆசை.ஆனால் ஹெராட்டின் கண்காணிப்பில் அது முடியவில்லை. தன்னை காதலிக்கும் “நாராபாத்” என்ற சிரிய நாட்டு இளைஞனிடம் காதல் வசனம் பேசி அவனை தூண்டி, ஜோகனானைப் பார்க்கும் தன் ஆசையைச் சொல்கிறாள். நாராபாத்தினால் சலோமியின் ஆசையைத் தட்ட முடியவில்லை. மிகுந்த பிரயத்தனப்பட்டு சலோமியை பாதாளச் சிறைக்கு கூட்டிச் செல்கிறாள்.சலோமி ஜோகனானைப் பார்க்கிறாள்.

ஜோகனானின் அழுக்கும் ஞானமும் அவளை ஈர்க்கின்றன. ஜோகனான் மேல் மிக மிஞ்சி வெறுப்பும், மிக மிஞ்சிய காமமும் காதலும் விநாடிக்கு விநாடிக்கு மாறி மாறி  வருவதை உணர்கிறாள் சலோமி. சலோமியால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் காதலை ஜோகனானிடம் சொல்கிறாள்.

ஜோகனான் நிராகரித்து ”தூய்மையற்றவளே “ என்று திட்டுகிறார்.சலோமி ஜோகனின் உதட்டில் ஒரே ஒரு முத்தம் கொடுக்க ஆசை கொண்டு கேட்கிறாள். ஜோகனான் சலோமியின் காதலைப் புரிந்து கொள்ளாமல் விரட்டியடிக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிரிய நாட்டு இளைஞன் நாராபாத் மனம் வேதனையுற்று தற்கொலை செய்து கொள்கிறான்.

சலோமியால் ஜோகனான் மேலிருக்கும் காதலை தட்டிவிட முடியவில்லை. தொடர்ந்து அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறாள்.

நல்ல நிலவின் குளிர்ச்சியில் ஒரு விருந்து நடக்கிறது. ஹெராட் மன்னன் சலோமியையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹெரோதியஸ் தன் மகளையும் கணவனையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

ஹெராட் சலோமியிடம் நடனம் ஆடுமாறு கெஞ்சுகிறான்.

சலோமி மறுக்கிறாள்.

ஆனால் ஹெராட்டினால் தாங்க முடியவில்லை “தயவு செய்து ஆடு சலோமி” என்று கெஞ்சுகிறான். சலோமி தான் ஆடினால் தனக்கொரு வரம் தரவேண்டுமென்று கேட்கிறாள். ஹெராட் சம்மதிக்க சலோமி தன் பேரழகு பரிமளிக்க நடனமாடுகிறாள்.

அம்மா ஹெரோதியஸ் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நடனம் முடிந்தது ஹெராட் சலோமியின் அழகால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு ”உனக்கு என்ன வேண்டும் கேள்” என்கிறான்.

சலோமி ”எனக்கு ஞானி ஜோகனானின் தலை வேண்டும்” என்று கேட்கிறாள். இதைக்கேட்டதும் ஹெராட் நடுங்குகிறான். ஆனால் அம்மா ஹெராதியஸ் மகிழ்கிறாள்.

ஹெராட் ,சலோமியிடம் கெஞ்சுகிறான்.தன் நாட்டில் பாதி கூட கொடுத்து விடுவதாக சொல்கிறான்.ஆனால் சலோமி பிடிவாதத்தை விடுவதாயில்லை. பிடிவாதமாயிருக்கிறாள். முடிவில் ஹெராட் ஜோகனான் தலையை வெட்டிக் கொண்டு வரச் சொல்கிறான்.

ஜோகானானின் துண்டித்த தலையை தட்டில் வைத்து சலோமிக்கு கொடுத்து விடுகிறார்கள்.

சலோமி அந்தத் தலையின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ”இதோ என்னுடைய காதலன். எதிர்ப்பு தெரிவிக்காத அழகன். என்ன அழகான உதடு” என்று உலகின் அத்தனை காதல் உணர்வையும் திரட்டி ஜோகானானின் வெட்டப்பட்ட தலையின் உதடுகளை சுவைக்கிறாள்.

ஹெராட்டினால் அந்தக் காட்சியை பார்க்க முடியவில்லை.

சலோமியின் தலையையும் வெட்டச் சொல்கிறான். சலோமியின் துண்டிக்கப்பட்ட தலை ஜோகானானின் தலைப் பக்கம் திரும்பி விழுகிறது.

இந்தக் நாடகத்தில் துரோகமும் காதலும் பின்னிப்பிணைந்திருப்பதைப் பார்க்கலாம்.

- ஹெரோதியஸ் தன் கணவனை சதி செய்து சிறைக்கு அனுப்பிவிட்டு கணவனின் தம்பியை திருமணம் செய்துக் கொள்கிறாள். (காதல், துரோகம்)

-சலோமி தன் சித்தப்பாவின் காதலை புறம் தள்ளவில்லை .அதை உபயோகித்து கொள்கிறாள். (காதல் துரோகம்)

-சலோமி தன்னைக் காதலிக்கு சிரிய இளவரசனை ஜோகனானைப் பார்க்க உபயோகித்துக் கொள்ளுதல் (காதல் துரோகம்)

-இப்படியாக போகும் தன்மைகளில் தன் மன்னனை விட, ஞானத்தை உடைய ஜோகனான் மீது வரும் சலோமிக்கு வரும் காதல் (காதல்)

-காதலிப்பவன் கிடைக்காவிட்டால் வரும் வெறி. அவனை கொன்றாவது அதை அடைய நினைக்கும் வெறி (காதல்,இச்சை)

இப்படி இந்த நாடகத்தைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கிறது.

மனித உணர்வுகளின் நிச்சயமற்ற தன்மையை, சுயநலத்தை, ஆழமன இயக்காங்களை ஆஸ்கர் வைல்டு கொடுத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.


No comments:

Post a Comment