Saturday 2 August 2014

பஸ் ஸ்டாப் காட்சிகள்...

நேற்று பஸ்ஸ்டாப்பில் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.கையில் புத்தகமுல் இல்லை.

அதனால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சிகளில் சில...

1.-பஸ் ஸ்டாப் ஸ்டீல் பெஞ்சில் இடம் காலியாகிறது ஒரு யுவதியும் ,இளைஞனும் அந்த இடத்தில் அமர வேகமாய் வருகிறார்கள்.பையன் உட்கார்ந்து விட்டான்.யுவதி ஒரு விநாடி உட்காரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறார்.பின் அமர்கிறார்.இருவரும் அருகருகே இருந்தாலும், நாங்கள் வேறு. எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை என்ற செய்தியை தங்கள் உடல்மொழியின் மூலமாக சமூகத்திற்கு சொல்கிறார்கள்.

2.-மூன்று போலீஸ்காரர்கள் ரோட்டை கடக்கிறார்கள்.ஒருவர் கையில் துப்பாக்கி. இன்னொருவர் மாற்றுத் திறனாளி ஒருவரை கூட்டி வருகிறார்.போலீஸ் கைகாட்டியதும் சீறிவரும் வாகனங்கள் பம்மி நிற்கின்றன. ரோட்டை கடந்து முடிந்த அடுத்த விநாடி போலீஸ்காரர் அந்த மாற்றுதிறனாளியின் கைகளை உதறி வேகமாக தன் நண்பர்களோடு சென்று விடுகிறார்.அந்தக் காட்சியைப் பார்க்க வித்தியாசமானதாக இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து யோசித்தால் யார் முதலில் கையை உதறியது என்ற குழப்பம். போலீஸா ? அல்லது மாற்றுத் திறனாளியா? ஒருவேளை மாற்றுத்திறனாளியாய் இருக்க்குமோ? அது பற்றி யோசிக்க வேண்டும் போல இருந்தது.

3.-வெளிச்சமில்லாத ஒரு பக்க பஸ்ஸடாப் ஸ்டீல் பெஞ்சில் கொஞ்சம் வயதானவர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

4.-கொஞ்சம் தள்ளி ஒரு கார் நின்றது.அதிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் இறங்கினார்கள்.பையனும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணும் அழகு தேஜஸ்.அந்தப் பெண்ணின் கைகளை பிடிக்கிறான்.அவள சிரித்தபடியே நாசூக்காக எடுத்து விடுகிறார்.பின் பெண் பஸ்ஸ்டாப்பை நோக்கி வருகிறார்.பையன் பஸ் ஏற்றி விடுவதற்காக பின்னால் வருவதை அந்தப் பெண் தடுக்கிறார்.பஸ் வர பெண் பஸ்ஸைப் பிடித்து ஏறிப் போகிறார்.பையன் காரிலிருந்து அதைப் பார்த்த பிறகு காரை இயக்குகிறார்.ஒருவேளை பெண் லோயர் மிடில் கிளாஸாக இருந்து , பையன் ரொம்ப பணக்காரனாக இருந்தால், திருமணத்துக்கு பின் அந்தப் பெண் தாழ்வுமனப்பான்மையால் வாடக்கூடும் என்பது மாதிரியான சிந்தனைகள் வந்தது.

5.-மொபைல் பேசிய படி ஒரு காலேஜ் மாணவன் பைக்கை வேகமாக ஒட்டிச் சென்றார்.பஸ்ஸ்டாப்பில் நிற்கும் பஸ்ஸின் மீது கிட்டத்தட்ட மோதுவது மாதிரி உரசிச் சென்றார்.கல்லூரி மாணவர்கள் எல்லோரையும் கல்லூரி நிர்வாகங்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஜி.ஹெச் கூட்டிச் செல்ல வேண்டும்.அங்கு வரும் விபத்து கேஸ்களை பார்க்கச் செய்ய வேண்டும்.இப்படியாக எனக்கு தோன்றியது.

6.-ட்ரை சைக்கிளில் ஒருவர் சென்றார்.ட்ரை சைக்கிளைப் பார்த்ததும் ஹெச்.கோரி எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. பிரபல கிளப்பில் ட்ரை சைக்கிள் பெற வந்த மாற்றுத்திறனாளியை விருந்துக்கு கூப்பிடுவார் ஒருவர்.ஆனால் பணக்கார கிளப் மெம்பர்களுக்கு மட்டும்தான் அந்த விருந்து. பரிசுப் பெற்றவர்களுக்கு இல்லை என்ற விவாதம் நடக்கும். விவாதம் முடித்து கிழே வந்து பார்த்தால் அவர்கள் பரிசாக கொடுத்த ட்ரை சைக்கிள் அதே இடத்தில் நிற்கும்.

7.-ஒரு பெண் நைட்டி அணிந்து நின்று கொண்டிருந்தார்.மேடான வயிறு அவர் கர்ப்பத்தை சுட்டிற்று.பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்.ஒரு பஸ் வந்தது. பஸ்ஸில் இருந்து வயதான பெண் ஒருவர் கட்டை பையோடு இறங்கினார். இறங்கியதும் நைட்டிப் பெண் வேகமாக அந்த வயதானப் பெண்ணை நோக்கிப் போனார்.பின் இருவரும் பின்னால் நிற்கும் இன்னொரு பஸ்ஸை வேகமாக வழிமறித்து ஏறுகின்றனர்.பரபரப்பு.

8.-பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஒரு நாற்பது பிளஸ் குடும்பத்தலைவர், காலையில் மனைவி கொடுத்து விட்ட சுண்டலில் இருக்கும் சுண்டலை குட்டி டப்பர் வேர் டப்பாவிலிருந்து தட்டி தட்டி எடுத்து பொறுமையாக தின்று கொண்டிருந்தார்.

இப்படி எங்கேப் பார்த்தாலும் மக்கள் மக்கள் மக்கள். 

ஒவ்வொரு காரியங்களை செய்தபடி. மக்கள் மக்கள் மக்கள்.

2 comments:

  1. அழகாய் விவரித்திருக்கிறீர்கள். ஐந்தாவது நிகழ்வில் சொல்லியபடி கல்லூரிகள் செய்வது என்பது நல்ல பரிந்துரை . நன்றி

    ReplyDelete
  2. ஏன் மரப்பசு என்ற புனைப் பெயர்?

    ReplyDelete